search icon
என் மலர்tooltip icon

    ஈரோடு

    • பறவை காய்ச்சல் நோய், கோழி, வாத்து, வான்கோழி, நீர்ப்பறவைகள், வனப் பறவைகளை தாக்கும்.
    • கோழி பண்ணையாளர்களுக்கு பறவை காய்ச்சல் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தியுள்ளோம்.

    ஈரோடு:

    கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் கோழிகளை தாக்கும் பறவை காய்ச்சல் உறுதியானதால் தமிழகத்தில் தொற்று பரவாமல் தடுக்க தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    கேரளா மாநில எல்லைப் பகுதிகளில் கால்நடை மருத்துவக் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணிப்புடன் கேரளாவில் இருந்து கோழிகளை ஏற்றி வரும் வாகனங்கள் மீது கிருமி நாசினி மருந்து தெளித்து தமிழகத்தில் அனுமதிக்கின்றனர்.

    தொற்று பரவக்கூடியது என்பதால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து ஈரோடு மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் பழனிவேல் கூறியதாவது:-

    பறவை காய்ச்சல் நோய், கோழி, வாத்து, வான்கோழி, நீர்ப்பறவைகள், வனப் பறவைகளை தாக்கும்.

    பறவைக் காய்ச்சல் வைரஸ் கிருமிகள் பல வகை இருந்தாலும், எச்5என்1 என்ற வகை வைரஸ் கிருமி அதிக வீரியம் வாய்ந்தது. நோய் பாதித்த பண்ணைகளில் இறந்த கோழிகள், கோழி கழிவுகள், பண்ணை உபகரணங்கள், கோழி தீவனம் மூலம் இந்நோய் பரவும். இந்நோய்க்கு சிகிச்சை இல்லை.

    நோய் வராமல் தடுக்க நோய் தடுப்பு முறைகள், உயிர் பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் 65 முட்டை கோழி பண்ணைகளில் 32.38 லட்சம் முட்டை கோழிகள், 568 கறிக்கோழி பண்ணைகளில், 27.57 லட்சம் கறிக்கோழிகள், 56 நாட்டுக்கோழி பண்ணைகளில் 2.31 லட்சம் நாட்டுக்கோழிகள் உள்ளன.

    மாவட்டத்தில் உள்ள அனைத்து கோழி பண்ணைகள் புறக்கடை கோழிகளை நேரில் ஆய்வு செய்து மாதிரிகள் சேகரித்து கண்காணிக்கிறோம். வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தை தினமும் பார்வையிட்டு, பறவைகளின் நோய் அறிகுறியை கண்காணிக்கிறோம்.

    நோய் தடுப்பு நடவடிக்கைக்காக 50 அதிவிரைவு செயலாக்க குழு அமைத்து தயார் நிலையில் வைத்துள்ளோம். கோழி பண்ணையாளர்களுக்கு பறவை காய்ச்சல் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தியுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • செக் போஸ்ட்டில் நிலை கண்காணிப்புக்குழு பழனிவேல் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • பறக்கும் படையினர் அவர் வைத்தி ருந்த ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 900ஐ பறிமுதல் செய்தனர்.

    அந்தியூர்:

    கர்நாடகா மாநில எல்லையை ஒட்டியுள்ள அந்தியூர் சட்டமன்ற தொகுதியில், கர்நாடக மாநிலத்திற்கு செல்லக்கூடிய பிரதான சாலை உள்ளது. இங்கு வரட்டுப்பள்ளம் அணை, செக் போஸ்ட் மற்றும் பர்கூர் காவல் நிலையம் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி வாகன சோதனை செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் வரட்டுப்பள்ளம் செக் போஸ்ட்டில் நிலை கண்காணிப்புக்குழு பழனிவேல் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் கொள்ளேகால் வட்டம் ஹனூர் தொடவாத்தூர் ராமாபுரம் பகுதியை சேர்ந்த பாபு மகன் மாதேவன் (வயது 32) என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி பணம் வைத்திருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து பறக்கும் படையினர் அவர் வைத்தி ருந்த ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 900ஐ பறிமுதல் செய்தனர். பின்னர் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த பணத்தை மண்டல துணை வட்டாட்சியர் ராஜ சேகரிடம் ஒப்படைத்தனர்.

    • அணையில் இருந்து தண்ணீர் திறப்பது சாத்தியமில்லை என்று அதிகாரிகள் கூறினார்.
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக 2 லட்சம் ஏக்கர் விவசாய பாசனத்திற்கு 2 பிரிவுகளாக கீழ் பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதையடுத்து ஒரு லட்சத்து 3 ஆயிரம் ஏக்கர் பாசனத்திற்கு 5 சுற்று முறையாக தண்ணீர் திறந்து விடப்படும் என அரசாணை கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது.

    இதையடுத்து கடந்த 4-ந் தேதி 4-வது முறை தண்ணீர் திறப்பு நிறைவடைந்த நிலையில் அணையில் போதுமான தண்ணீர் இல்லை எனக்கூறி 5-வது சுற்று முறைக்கு திறக்க வேண்டிய தண்ணீரை பொதுப்பணித் துறையினர் திறக்கவில்லை.

    இதற்கிடையே பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீரை நம்பி பாசன விவசாயிகள் ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து எள், கடலை, மக்காச்சோளம், சோளம், உளுந்து போன்ற பயிர்களை பயிர் செய்துள்ளனர்.

    இந்நிலையில் பாசனத்திற்கு விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டதால் புஞ்சை பாசன பகுதியில் போதுமான தண்ணீர் இல்லாமல் பயிர் கருகும் நிலையில் உள்ளது. இதனையடுத்து தண்ணீர் திறந்து விடக் கோரி ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள நீர்வள கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை பாசன விவசாயிகள் நேற்று இரவு திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது தண்ணீர் திறந்து விடப்படும் என அரசாணை அறிவித்த பின்னர் தண்ணீர் திறந்து விடபடாது என அரசு கூறுவது ஏற்புடையதல்ல என விவசாயிகள் கூறினர். இதனால் விவசாயிகளுக்கு பாசனத்திற்கு போதுமான தண்ணீரை 10 நாட்களுக்கு திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    ஆனால் தற்போது அணையில் போதுமான அளவு தண்ணீர் இல்லாததால் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது சாத்தியமில்லை என்று அதிகாரிகள் கூறினார்.

    தொடர்ந்து விவசாயிகளிடம் நீர்வள துறை அலுவலர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் பாசன விவசாயிகள் தண்ணீர் திறந்து விடும் வரை கலைந்து செல்ல மாட்டோம் எனக்கூறி நேற்று இரவு முதல் அலுவலகத்தின் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு முழுவதும் விடிய விடிய இந்த போராட்டம் நீடித்தது.

    இதைத்தொடர்ந்து இன்று 2-வது நாளாக பாசன சபை விவசாயிகள் காத்திருக்கு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காலை 11 மணிக்கு பிறகு ஏராளமான விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தொடர்ந்து இன்றும் 2-வது நாளாக விவசாயிகளிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • கேரளாவில் 10 மாவட்டங்களுக்கு வருகிற 25-ந்தேதி வரை இந்திய வானிலை ஆய்வு மையம் உயர் வெப்பநிலை எச்சரிக்கை மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • கடந்த 19-ந் தேதி ஈரோட்டில் புதிய உச்சமாக 109 டிகிரி வெயில் கொளுத்தியது.

    ஈரோடு:

    இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது.

    வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரிக்கும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும், அதிகளவில் தண்ணீர் பருகுமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.

    கேரளாவில் 10 மாவட்டங்களுக்கு வருகிற 25-ந்தேதி வரை இந்திய வானிலை ஆய்வு மையம் உயர் வெப்பநிலை எச்சரிக்கை மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இயல்பை விட 2 டிகிரி முதல் 5 டிகிரி வரை கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன்படி கடந்த 19-ந் தேதி ஈரோட்டில் புதிய உச்சமாக 109 டிகிரி வெயில் கொளுத்தியது.

    இதைத்தொடர்ந்து நேற்றும் 2-வது முறையாக ஈரோட்டில் 109 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.

    இந்நிலையில் அதிகபட்ச வெப்பநிலையில் இந்தியாவிலேயே 3வது இடத்தை ஈரோடு பிடித்துள்ளது. நேற்று ஈரோட்டில் 109.40 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    நேற்று ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மற்றும் ஆந்திர மாநிலம் கடப்பாவில் 110.84 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி முதல் 2 இடத்தை பிடித்துள்ளது.

    • கடந்த 20 நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் திட்டத்தில் இருந்து வருகிறது.
    • முதியவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. ஒவ்வொரு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. காலை 7 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 6 மணி வரை நீடித்து வருகிறது.

    குறிப்பாக காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருக்கிறது. இந்த நேரத்தில் முடிந்த அளவு கர்ப்பிணிகள், முதியவர்கள் வெளியே வர வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

    கடந்த 20 நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் திட்டத்தில் இருந்து வருகிறது. முதலில் 104 டிகிரி, அதன் பின்னர் 107 டிகிரி வரை வெயில் பதிவானது. இதனால் பொதுமக்கள், குழந்தைகள், முதியவர்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    தொடர்ந்து இயல்பை விட 2 டிகிரி முதல் 5 டிகிரி வரை வெப்பம் கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன்படி கடந்த 19-ந் தேதி ஈரோட்டில் புதிய உச்சமாக 109 டிகிரி வெயில் கொளுத்தியது. தமிழகத்தில் வேறு எங்கும் பதிவாகாத அளவு இது.

    இதைத்தொடர்ந்து நேற்றும் 2-வது முறையாக ஈரோட்டில் 109 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. அனல் காற்றுடன் வெயில் வாட்டி வதைத்து வருவதால் குழந்தைகளுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது.

    இதேப்போல் முதியவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. வீட்டை விட்டு வெளியே செல்லும் பெண்கள் குடை, முகத்தில் துணியால் மூடிக்கொண்டு வெளியே சென்று வருகின்றனர். பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரை முக்கிய சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

    வீட்டில் 24 மணி நேரமும் மின்விசிறி இயங்கினாலும் வெப்பம் காரணமாக புழுக்கம் நிலவி வருகிறது. இரவு நேரங்களில் வீட்டுக்குள் வெப்பம் இறங்குவதால் ஈரோடு மக்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தூக்கத்தை தொலைத்து திணறி வருகின்றனர்.

    வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர்பானங்கள், கரும்பு சாறு, இளநீர், மோர், நுங்கு, தர்பூசணி ஆகியவற்றை விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். இன்னும் இயல்பைவிட வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் ஈரோடு மக்கள் அச்சமடைந்துள்ளனர். 

    • கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்களை தேர்தல் பிரிவினரே நேரடியாக விசாரிக்கின்றனர்.
    • ஓட்டுப்பதிவு நிறைவு பெற்றதால் வாக்காளருக்கு பணம் கொடுத்தல் பணம் கொண்டு செல்லுதல் போன்ற புகார்கள் வருவது நின்றுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்காக தேர்தல் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. டோல் பிரி எண் மூலமும், சி-விஜில் ஆப் மூலமும் இதுவரை புகார்களை அனுப்பி வருகின்றனர்.

    கடந்த 19-ந்தேதி ஓட்டுப்பதிவு நடந்ததால் அன்று இரவு வரை தேர்தலுக்கான பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழுவினர் செயல்பட்டனர். பொதுமக்கள் வாக்காளர்களிடம் இருந்து வரப்பெற்ற புகார்களை அக்குழுவினருக்கு தெரிவித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டனர்.

    தேர்தலில் ஓட்டுப்பதிவு நிறைவு பெற்றதும், ஈரோடு மாவட்டத்தை ஒட்டிய கர்நாடக மாநில எல்லையான பர்கூர் மற்றும் பண்னாரி, திம்பம் சோதனை சாவடியை ஒட்டிய பகுதியில் மட்டும் தலா 3 பறக்கும் படையினர் செயல்பட்டு வருகின்றனர். மற்ற அனைத்து குழுக்களும் 20-ந் தேதி கலைக்கப்பட்டு அவரவர் பணிக்கு திரும்பினர்.

    இதனால் கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்களை தேர்தல் பிரிவினரே நேரடியாக விசாரிக்கின்றனர். ஓட்டுப்பதிவு நிறைவு பெற்றதால் வாக்காளருக்கு பணம் கொடுத்தல் பணம் கொண்டு செல்லுதல் போன்ற புகார்கள் வருவது நின்றுள்ளது.

    ஆனாலும் தேர்தல் தொடர்பான சந்தேகங்கள், புகார்களை தெரிவித்து வருகின்றனர். நேற்று வரை சி-விஜில் ஆப் மூலம் 78 புகார், கட்டுப்பாட்டு அறை எண்ணுக்கு 170 புகார் என மொத்தம் இதுவரை 248 புகார்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • ஆசாரிமேடு என்ற பகுதியில் சென்றபோது பூமணிக்கு பிரசவ வலி அதிகரித்தது.
    • நிலைமையை புரிந்து கொண்ட ஓட்டுனர் உதயகுமார் ஆம்புலன்சை பாதுகாப்பாக ஓரமாக நிறுத்தினார்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் தாலுக்கா, டி.என்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி பூமணி (29 வயது). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பூமணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

    இதை அடுத்து அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். டி.என்.பாளையம் 108 ஆம்புலன்ஸ் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பூமணியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபி செட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

    ஆசாரிமேடு என்ற பகுதியில் சென்றபோது பூமணிக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையை புரிந்து கொண்ட ஓட்டுனர் உதயகுமார் ஆம்புலன்சை பாதுகாப்பாக ஓரமாக நிறுத்தினார். அவசரகால மருத்துவ உதவியாளர் பவித்ரா, கர்ப்பிணி பூமணிக்கு பிரசவம் பார்த்தார்.

    இதில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பிறகு தாய் மற்றும் குழந்தைக்கு முதலுதவியளித்து கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    மருத்துவமனையில் தாயும், சேயும் நலமாக உள்ளனர். தக்க நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் அவசரகால மருத்துவ உதவியாளர் பவித்ரா மற்றும் அவசர சிகிச்சை வாகன ஓட்டுனர் உதயகுமார் ஆகியோரின் இந்த செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

    • தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • ராமபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் கடந்த மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் விலைக்கு அப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக்காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

    சூறைக்காற்றால் வாழை மரங்களும் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்து தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்ட காஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது.

    சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் உள்ள விவசாயி தீபு (வயது 35) என்பவரின் 700 நேந்திரம் வாழைகள், சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழைகள், ராசு என்பவரின் 1000 வாழைகள், தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின் 1000 வாழைகள் என மொத்தம் 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது.

    அதேபோல தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கு சென்ற நெடுஞ்சாலைத்துறையினர் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். அதேபோல் ராமபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது.

    அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலை பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    ஒருபுறம் மழை வந்து சந்தோசம் இருந்த போதும் சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதம் அடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    மேலும் கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ.20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் மாவட்ட எல்லை பகுதியான தாளவாடி சுற்று வட்டார பகுதியில் கடந்த 2 நாட்களாக சூறைகாற்றுடன் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • பவானிசாகர் அணை பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால் அணை மீதும் நீர்த்தேக்க பகுதி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் இன்னும் சில நாட்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்படும் சூழல் உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை நீர்தேக்கப் பகுதியில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த டணாய்க்கன் கோட்டை மாதவராய பெருமாள் கோவில், சோமேஸ்வரர் மற்றும் மங்களாம்பிகை கோவில்கள் உள்ளன. இக்கோவில்கள் அணை கட்டுமான பணிக்கு முன்னதாக அப்பகுதியில் வசித்து வந்த மக்களின் வழிபாட்டுத் தலமாக திகழ்ந்தன.

    பணி தொடங்கிய போது நீர்த்தேக்க பகுதியில் வசித்த கிராம மக்கள் பவானிசாகர் சுற்றுவட்டாரத்தில் குடியேறினர். கோவிலில் இருந்த சிலைகளை எடுத்து வந்து பவானிசாகரில் கீழ்பவானி வாய்க்கால் கரையோரம் கோவில் கட்டி பிரதிஷ்டை செய்தனர்.

    கடந்த 1955-ம் ஆண்டு கட்டுமான பணிகள் முடிந்த பின் முழுவதும் கற்களால் கட்டப்பட்ட கோவில் மற்றும் மண்டபங்கள் அணை நீரில் மூழ்கின. காலப்போக்கில் சிதிலமடைய தொடங்கியது. அணை நீர்மட்டம் 50 அடிக்கு கீழ் குறையும் போது டணாய்க்கன்கோட்டை மாதவராய பெருமாள் கோவில், சோமேஸ்வரர் மற்றும் மங்களாம்பிகை கோவில்கள் வெளியே தெரியும்.

    கடந்த 2018-ம் ஆண்டு நீர்மட்டம் குறைந்த போது இந்த கோவில்கள் வெளியே தெரிந்தன. அதன் பிறகு 6 ஆண்டுகளாக நீர்மட்டம் குறையாததால் கோவில்கள் தெரியவில்லை. தற்போது நீர்மட்டம் 46 அடியாக சரிந்துள்ளதால் டணாய்க்கன் கோட்டை மாதவராய பெருமாள் கோவில் முழுவதுமாக வெளியே தெரிகிறது.

    பவானிசாகர் அணை பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால் அணை மீதும் நீர்த்தேக்க பகுதி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாதவராய பெருமாள் கோவிலுக்கு சிலர் பரிசல்களில் திருட்டுத்தனமாக சென்று வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் அதை பதிவிட்டு உள்ளனர்.

    இன்னும் சிலர் அந்தப் பகுதியில் மது அருந்தியும் சென்று வருகின்றனர். இதைதொடர்ந்து நீர்வளத்துறை அதிகாரிகள் சார்பில் அந்தப் பகுதியில் எச்சரிக்கை பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதில் பவானிசாகர் அணை நீர் பிடிப்பு பகுதியில் தெரியும் டணாய்க்கன்கோட்டைக்கு பரிசல் மற்றும் எந்திர படகில் பார்வையாளர்களை ஏற்றி செல்ல அனுமதி இல்லை.

    அப்பகுதியில் முதலை நடமாட்டம் உள்ளது. இதை மீறி சென்றால் பரிசல் பறிமுதல் செய்யப்படும். அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கையும் பாயும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்நிலையில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் இன்னும் சில நாட்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்படும் சூழல் உள்ளது.

    • வெயில் தாக்கத்திலிருந்து தப்பிக்க குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
    • விவசாயிகளின் தோட்டத்தில் பயிர் செய்திருந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்தன.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வருகிறது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சம் அடைந்து வருகின்றனர். நேற்று முன் தினம் ஈரோடு மாவட்டத்தில் தமிழகத்தில் இதுவரை பதிவாகாத 109 டிகிரி வெயில் பதிவாகி புதிய உச்சத்தை தொட்டது. வெயில் தாக்கத்திலிருந்து தப்பிக்க குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியான தாளவாடி மலை பகுதியில் நேற்று மதியம் தூரல் மழையாக ஆரம்பித்து தாளவாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளான இக்கலூர், சிக்கள்ளி, நெய்தாள புரம் திகினாரை, கும்டாபுரம், தொட்டகாஜனூர் உள்ளிட்ட கிராமங்களில் 20 நிமிடங்கள் பலத்த மழை பெய்தது.

    சிக்கள்ளி பகுதியில் விவசாய தோட்டத்தில் மழைநீர் தேங்கி அங்கு சிறு ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதே போல் தாளவாடி அருகே பனகள்ளி கிராமத்தில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. பலத்த சூறைக்காற்று வீசியதில் பனஹள்ளி கிராம த்தில் உள்ள ஆசீப் (வயது 35), பிரகாஷ் (45), சிக்கராஜ் (48), வரதராஜ் (51), திகனாரை ஜோரகாடு சித்தராஜ் (40) என 5-க்கும் மேற்ட்ட விவசாயிகளின் தோட்டத்தில் பயிர் செய்திருந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்தன.

    அறுவடைக்கு சில நாட்களே இருந்த நிலையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அதே போல் பனஹள்ளியில் இருந்து பையணாபுரம் செல்லும் சாலையில் உள்ள புளியமரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிபட்டனர்.

    சுமார் 3 மணிநேரத்திக்கு பிறகு நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மரத்தை வெட்டி அகற்றினர். பின்னர் போக்குவரத்து சீரானது. சேதமடைந்த வாழைகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    தாளவாடி பகுதியில் மழை பெய்த அதே நேரத்தில் ஈரோடு மாநகர பகுதி பிறப்பகுதியில் வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. நேற்று ஈரோடு மாவட்டத்தில் 106 டிகிரி வெயில் பதிவானது.

    மாவட்டத்தில் ஒரு புறம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மற்றொரு புறம் தாளவாடி பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. ஒரே நாளில் இரு வேறுபட்ட காலநிலை மாற்றத்தால் ஒரு பகுதி மக்கள் கவலையும், இன்னொரு பகுதி மக்கள் மகிழ்ச்சியும் அடைந்தனர். 

    • வீடியோ கண்காணிப்பு குழு, நிலை கண்காணிப்பு குழு ஆகியவற்றை தேர்தல் ஆணையம் கலைக்க உத்தரவிட்டது.
    • ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, கோபி, பவானி சட்டசபை தொகுதிகளில் குழுக்கள் கலைக்கப்பட்டன.

    ஈரோடு:

    பாராளுமன்றத் தேர்தல் நடத்தை விதிகளின்படி ஈரோடு மாவட்டத்தில் ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் தலா 3 பறக்கும் படைகள் வீதம் 8 சட்டசபை தொகுதிக்கும், 24 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன. இது தவிர ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கூடுதலாக ஒரு பறக்கும் படை குழு இயங்கியது.

    இது தவிர வீடியோ கண்காணிப்பு குழு, நிலை கண்காணிப்பு குழு, பார்வையாளர்கள் உள்ளிட்டோருக்கு தனியாக குழு என 144 குழுக்கள் செயல்பட்டன. ஓட்டு பதிவு நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்ததால் நேற்று காலை முதல் பறக்கும் படை, வீடியோ கண்காணிப்பு குழு, நிலை கண்காணிப்பு குழு ஆகியவற்றை தேர்தல் ஆணையம் கலைக்க உத்தரவிட்டது.

    அதன்படி ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, கோபி, பவானி சட்டசபை தொகுதிகளில் குழுக்கள் கலைக்கப்பட்டன. அதேசமயம் பவானிசாகர் தொகுதிக்குட்பட்ட தாளவாடி, அந்தியூர் தொகுதிக்குட்பட்ட பர்கூர் ஆகியவை கர்நாடகா மாநிலத்தை ஒட்டி உள்ளது.

    கர்நாடகாவில் இன்னும் தேர்தல் முடியாததால் மாநில எல்லையை கண்காணிக்கும் வகையில் அந்தியூர் தொகுதியில் 3 பறக்கும் படை, பவானிசாகர் தொகுதியில் 3 பறக்கும் படையினர் மற்றும் எல்லைப் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபடுவார்கள் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சிக்கள்ளி பகுதியில் விவசாய தோட்டத்தில் மழைநீர் தேங்கி அங்கு சிறு ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
    • ஒரே நாளில் இரு வேறுபட்ட காலநிலை மாற்றத்தால் ஒரு பகுதி மக்கள் கவலையும், இன்னொரு பகுதி மக்கள் மகிழ்ச்சியும் அடைந்தனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வருகிறது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சம் அடைந்து வருகின்றனர். நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டத்தில் தமிழகத்தில் இதுவரை பதிவாகாத 109 டிகிரி வெயில் பதிவாகி புதிய உச்சத்தை தொட்டது. வெயில் தாக்கத்திலிருந்து தப்பிக்க குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியான தாளவாடி மலை பகுதியில் நேற்று மதியம் தூரல் மழையாக ஆரம்பித்து தாளவாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளான இக்கலூர், சிக்கள்ளி, நெய்தாளபுரம் திகினாரை, கும்டாபுரம், தொட்டகாஜனூர் உள்ளிட்ட கிராமங்களில் 20 நிமிடங்கள் பலத்த மழை பெய்தது.

    சிக்கள்ளி பகுதியில் விவசாய தோட்டத்தில் மழைநீர் தேங்கி அங்கு சிறு ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதே போல் தாளவாடி அருகே பனகள்ளி கிராமத்தில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. பலத்த சூறைக்காற்று வீசியதில் பனஹள்ளி கிராமத்தில் உள்ள ஆசீப் (வயது 35), பிரகாஷ் (45), சிக்கராஜ் (48), வரதராஜ் (51), திகனாரை ஜோரகாடு சித்தராஜ் (40) என 5-க்கும் மேற்ட்ட விவசாயிகளின் தோட்டத்தில் பயிர் செய்திருந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்தன.

    அறுவடைக்கு சில நாட்களே இருந்த நிலையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அதே போல் பனஹள்ளியில் இருந்து பையணாபுரம் செல்லும் சாலையில் உள்ள புளியமரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிபட்டனர்.

    சுமார் 3 மணிநேரத்திக்கு பிறகு நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மரத்தை வெட்டி அகற்றினர். பின்னர் போக்குவரத்து சீரானது. சேதமடைந்த வாழைகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    தாளவாடி பகுதியில் மழை பெய்த அதே நேரத்தில் ஈரோடு மாநகர பகுதி பிறப்பகுதியில் வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. நேற்று ஈரோடு மாவட்டத்தில் 106 டிகிரி வெயில் பதிவானது.

    மாவட்டத்தில் ஒரு புறம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மற்றொரு புறம் தாளவாடி பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. ஒரே நாளில் இரு வேறுபட்ட காலநிலை மாற்றத்தால் ஒரு பகுதி மக்கள் கவலையும், இன்னொரு பகுதி மக்கள் மகிழ்ச்சியும் அடைந்தனர்.

    ×