search icon
என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    • கடந்த 2005-ம் ஆண்டில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் நக்கீரனும், அதே கிராமத்தை சேர்ந்த சேகர் என்பவரும் போட்டியிட்டனர்.
    • தேர்தலில் தங்களுக்கு எதிராக செயல்பட்டதால் குலசேகரன் தரப்பினரை கொலை செய்ய நக்கீரன் தரப்பினர் திட்டம் தீட்டினர்.

    விழுப்புரம்:

    தமிழகத்தையே உலுக்கியுள்ள இந்த பரபரப்பான தீர்ப்பு பற்றிய விவரம் வருமாறு:-

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரை அடுத்த கண்ணாரம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் மகன் குலசேகரன் (வயது 40). இவர் விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார்.

    இவருடைய குடும்பத்திற்கும், அதே கிராமத்தை சேர்ந்தவரும், தி.மு.க. கிளைச்செயலாளராக இருந்தவருமான நக்கீரன் (48) குடும்பத்திற்கும் அரசு புறம்போக்கு இடத்தை சொந்தம் கொண்டாடுவது சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.

    மேலும் கடந்த 2005-ம் ஆண்டில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் நக்கீரனும், அதே கிராமத்தை சேர்ந்த சேகர் என்பவரும் போட்டியிட்டனர். இத்தேர்தலில் சேகருக்கு ஆதரவாக குலசேகரன் தரப்பினர் செயல்பட்டனர். இதன் காரணமாக ஏற்பட்ட முன்விரோதத்திலும் இரு தரப்பினரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் குலசேகரன் தரப்பினர் மீது நக்கீரன் தரப்பினருக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டது.

    அரசு புறம்போக்கு நிலத்தை சொந்தம் கொண்டாடுவதற்கு தடையாக இருப்பதோடு, தேர்தலிலும் தங்களுக்கு எதிராக செயல்பட்டதால் குலசேகரன் தரப்பினரை கொலை செய்ய நக்கீரன் தரப்பினர் திட்டம் தீட்டினர்.

    கடந்த 4.11.2005 அன்று காலை 6 மணியளவில் அதே கிராமத்தில் உள்ள ஒரு டீக்கடையில் குலசேகரன் டீ குடித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வீச்சரிவாள், கொடுவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் திபுதிபுவென வந்த நக்கீரன் தரப்பினர், குலசேகரனை சரமாரியாக வெட்டினர்.

    இதை தடுக்க வந்த குலசேகரனின் நண்பர் காத்தவராயன் (50) என்பவரையும் அவர்கள் சரமாரியாக வெட்டினர். இதில் குலசேகரன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். பலத்த காயம் அடைந்த காத்தவராயன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே நக்கீரன் தரப்பினர் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

    தகவல் அறிந்ததும் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த காத்தவராயனை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவரும் இறந்தார்.

    இந்த பயங்கர இரட்டைக்கொலை குறித்து குலசேகரனின் அண்ணன் திருநாவுக்கரசு, திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் நக்கீரன், கோவிந்தராஜ் (70), தமிழ்மணி (27), அ.தி.மு.க. முன்னாள் கிளை பிரதிநிதி சிவபூஷணம் (64), ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் புகழேந்தி (77), மணவாளன் (74), ராஜேந்திரன் (64), குமரவேல் (52), மார்க்கண்டேயன் (64), சுதாகர் (45), பழனிவேல் (38), முரளி (43), தமிழ்செல்வன் (35), அருள் (24), அ.தி.மு.க. முன்னாள் கிளை மேலவை பிரதிநிதி கனகராஜ் (74), மோகன் (46), சிவநாதன் (44), பிரபு (44), காளிபசுபதி (72), அர்ஜூனன் (76), மணி (76), பாரி (49), பார்த்திபன் (44), சபரிநாதன் (49), கண்ணன் (64), மாதவன் (49) ஆகிய 26 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அனைவரையும் கைது செய்தனர்.

    பின்னர் இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விழுப்புரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இவ்வழக்கு விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே குற்றம் சாட்டப்பட்டவர்களில் தமிழ்மணி, பழனிவேல், தமிழ்செல்வன், அருள், அர்ஜூனன், கண்ணன் ஆகிய 6 பேரும் உடல்நலக்குறைவால் இறந்தனர்.

    இந்த வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று மாலை தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ராஜசிம்மவர்மன், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் உயிரிழந்த 6 பேரை தவிர மற்ற அனைவருமே குற்றவாளிகள் என்று அறிவித்தார்.

    மேலும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நக்கீரன், கோவிந்தராஜ், சிவபூஷணம், புகழேந்தி, மணவாளன், ராஜேந்திரன், குமரவேல், மார்க்கண்டேயன், சுதாகர், முரளி, கனகராஜ், மோகன், சிவநாதன், பிரபு, காளிபசுபதி, மணி, பாரி, பார்த்திபன், சபரிநாதன், மாதவன் ஆகிய 20 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.50 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், கொலை செய்யப்பட்ட குலசேகரன், காத்தவராயன் ஆகிய இருவரின் குடும்பத்திற்கும் தலா ரூ.5 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதி ராஜசிம்மவர்மன் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

    இதையடுத்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 20 பேரும், விழுப்புரம் கோர்ட்டில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் போலீஸ் வேன்களில் ஏற்றப்பட்டு, கடலூரில் உள்ள மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்டு அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சுப்புராயலு ஆஜரானார்.

    இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர்களில் கோவிந்தராஜ் தற்போது வக்கீலாகவும், மோகன் கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராகவும், சபரிநாதன் பொதுப்பணித்துறையில் தற்காலிக தொழில்நுட்ப உதவியாளராகவும் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஏரிக்கரை பகுதியில் இருந்து விஷ தேனீக்கள் திடீரென நீதிமன்ற வளாகத்திற்குள் வந்தது.
    • 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு முதல் உதவி சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் அமைந்துள்ளது.

    நீதிமன்றத்திற்கு அருகில் உள்ள ஏரிக்கரை பகுதியில் இருந்து விஷ தேனீக்கள் திடீரென நீதிமன்ற வளாகத்திற்குள் வந்தது. அங்கிருந்த வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள், போலீசார் மற்றும் பொதுமக்களை விரட்டி விரட்டி கொட்ட தொடங்கியது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். இதில் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு முதல் உதவி சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்த சம்பவத்தால் நீதிமன்ற வளாகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தேனீ கூட்டை மர்ம நபர்கள் கல்லால் அடித்ததால், அங்கிருந்த தேனீக்கள் பறந்து நீதிமன்றத்திற்குள் வந்து அனைவரையும் கொட்டியது தெரிய வந்தது.

    • நேற்று வழக்கம்போல் மேய்ச்சலுக்கு மாடுகள் சென்றன.
    • மாட்டின் உரிமையாளர் சுதாகர், மரக்காணம் போலீஸ் நிலையம் மற்றும் விழுப்புரம் விலங்கு நல வாரியத்தில் புகார் கொடுத்துள்ளார்.

    மரக்காணம்:

    மரக்காணம் அருகே காக்காபாளையம் கிராமம் மேட்டு தெரு பகுதியில் வசிப்பவர் சுதாகர் (வயது 45). விவசாயி. இவர் தனது வீட்டில் பசு மாடுகளை வளர்த்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று வழக்கம்போல் மேய்ச்சலுக்கு மாடுகள் சென்றன. இதில் இரவு வெகுநேரமாகியும் ஒரு மாடு வீடு திரும்பவில்லை.

    இதனால் சுதாகர் அவரது மாட்டை தேடிச் சென்றுள்ளார். அப்போது அவரது பசு மாடு குடல் சரிந்த நிலையில் இருந்தது. மர்ம நபர் யாரோ மாட்டின் வயிற்றில் குத்தியதால் குடல் வெளியில் வந்திருக்கும் என்று சந்தேகம் அடைந்த சுதாகர், மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி மாடு உயிரிழந்தது.

    இதுகுறித்து மாட்டின் உரிமையாளர் சுதாகர், மரக்காணம் போலீஸ் நிலையம் மற்றும் விழுப்புரம் விலங்கு நல வாரியத்தில் புகார் கொடுத்துள்ளார். இச்சம்பவம் மாடு வளர்ப்போரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • திருமண பத்திரிகையில் திருமணம் நடக்கும் மண்டபத்திலேயே ரத்த தான முகாம் நடைபெறும் என்றும் அச்சிடப்பட்டிருந்தது.
    • ரத்த தானம் வழங்கிய அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    செஞ்சி:

    திருமணம் நடந்த இடத்திலேயே ரத்த தான முகாம் நடத்தி மணமக்களும் ரத்த தானம் வழங்கிய வித்தியாசமான நிகழ்ச்சி செஞ்சி அருகே நடைபெற்றது.

    செஞ்சியை அடுத்த நரசிங்கராயன் பேட்டையை சேர்ந்த பொறியாளர் ஸ்ரீ கேசவ பிரகாஷ். இவருக்கும் ராணிப்பேட்டை மாவட்டம் மாந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த யோகா மருத்துவர் சோனியா ஆகியோருக்கு நேற்று காலை செஞ்சியை அடுத்த அப்பம்பட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.

    திருமண பத்திரிகையில் திருமணம் நடக்கும் மண்டபத்திலேயே ரத்த தான முகாம் நடைபெறும் என்றும் அச்சிடப்பட்டிருந்தது. அதன்படி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் மனிதம் காப்போம் தன்னார்வலர்கள் குழு இணைந்து நடத்திய ரத்த தான முகாம் திருமண மண்டபத்தின் ஒரு பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    அதன்படி நேற்று காலை திருமணம் முடிந்தவுடன் 8 மணி அளவில் மணமக்கள் ஸ்ரீ கேசவ பிரகாஷ்-சோனியா ஆகியோர் ரத்த தானம் வழங்கினார்கள். இதனைப் பார்த்த திருமணத்திற்கு வந்திருந்த அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 15-க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் வழங்கினார்கள்.

    ரத்த தானம் வழங்கிய அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ரத்த தானத்தை ஊக்குவிக்கும் வகையில் இதுவரை எங்கும் நடைபெறாத வகையில் திருமணம் மண்டபத்திலேயே முகாம் நடத்தி மணமக்கள் உள்பட பலர் ரத்த தானம் வழங்கிய நிகழ்ச்சி இப்பகுதி மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. 

    • 3 பேரும் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியில் புதுச்சேரி-திண்டிவனம் 4 வழிச்சாலை உள்ளது. இந்த சாலையில் திண்டிவனத்தில் இருந்து தைலாபுரத்திற்கு ஒரு காரில் 3 பேர் இன்று காலை வந்து கொண்டிருந்தனர். அப்போது புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 3 பேர் மற்றொரு காரில் சென்று கொண்டிருந்தனர்.

    இவ்விரு கார்களும் மொளச்சூர் பகுதியில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் தைலாபுரம் செல்லும் காரில் வந்த ஒருவரும், தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த காரில் வந்த ஒருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். படுகாயமடைந்த 4 பேரையும், அவ்வழியே சென்றவர்கள் மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் தெலுங்கானாவை சேர்ந்த பெண் சிகிச்சை பலனின்றி பலியானார். தொடர்ந்து மீதமிருந்த 3 பேரும் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான 3 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், 4 வழிச்சாலையில் நேருக்கு நேர் மோதி விபத்து நடந்தது எப்படி? இறந்தவர்கள் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனியாருக்கு சொந்தமான மருத்துவ கழிவு அரவை தொழிற்சாலை உள்ளது.
    • மக்கள் சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலை புறக்கணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் அருகே வேடம்பட்டில் மருத்துவ கழிவு தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறிய விஷக்காற்றால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 20 பெண்கள் உட்பட 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    விழுப்புரம் அடுத்த வேடம்பட்டில் தனியாருக்கு சொந்தமான மருத்துவ கழிவு அரவை தொழிற்சாலை உள்ளது. இன்று அதிகாலை 1 மணி அளவில் இப்பகுதியில் இருந்து வெளியேறிய நச்சு காற்றால் அருகில் இருந்த வேடம்பட்டு காலனி பொதுமக்கள் இக்காற்றை சுவாசிக்கும் போது மூச்சு திணறல் ஏற்பட்டு அதிகாலை 1 மணி முதல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் வேடம்பட்டை சேர்ந்த அங்காளவள்ளி, ஜெயலட்சுமி, சவுமியா, மாரியம்மாள், சுசிலா, ரேணுகா, மதன், கடலூர் சுரேஷ், உள்ளிட்ட 17 பேரும், காணை அரசு மருத்துவமனையில் 13 பேர்களும் என மொத்தம் 20 பெண்கள் உள்பட 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதனால் வேடம்பட்டு கிராமத்தில் பதட்டம் அதிகரித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட காவல்துறை சார்பில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே இப்பிரச்சனை தொடர்பாக வேடம்பட்டு காலனி மக்கள் சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலை புறக்கணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையான வாக்கினை செலுத்தி வருகின்றனர்.
    • வாக்கு சாவடியில் அவரது மகள் சமியுத்தா, சங்கமித்ரா, சஞ்சித்ரா ஆகியோர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

    திண்டிவனம்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் விறுவிறுப்பாக தொடங்கி காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையான வாக்கினை செலுத்தி வருகின்றனர்.

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், அவரது குடும்பத்தினருடன் தனது சொந்த ஊரான திண்டிவனம் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள மரகதாம்பிகை பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார். இதே வாக்கு சாவடியில் அவரது மகள் சமியுத்தா, சங்கமித்ரா, சஞ்சித்ரா ஆகியோர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமர் ஆக வேண்டும். அதுவே இந்திய நாட்டுக்கு நன்மை பயக்கும்.
    • அனைவரும் சமத்துவம், சகோதரத்துவத்துடன் வாழ தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும் .

    திண்டிவனம்:

    திண்டிவனம் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள ஸ்ரீமரகதாம்பிகை அரசு உதவி பெறும் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று காலை 8 மணிக்கு தனது வாக்கைப்பதிவு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அதனால் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும். நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமர் ஆக வேண்டும். அதுவே இந்திய நாட்டுக்கு நன்மை பயக்கும். அனைவரும் சமத்துவம், சகோதரத்துவத்துடன் வாழ தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும் .

    பேட்டியின் போது மயிலம் தொகுதி எம்.எல்.ஏ. சிவக்குமார், பா.ம.க. விழுப்புரம் கிழக்கு மாவட்டச் செயலாளர் ஜெயராஜ், முன்னாள் நகர செயலர் சண்முகம், வக்கீல் பாலாஜி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • நாங்கள் எல்லோரும் கடமையை கண்ணாக செய்து கொண்டுள்ளோம்.
    • எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

    திண்டிவனம்:

    திண்டிவனம், ரொட்டிக்கார தெருவில் உள்ள ஸ்ரீ மரகதாம்பிகை நிதி உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தர்மபுரி தொகுதியில் பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் போட்டியிடும் பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி குடும்பத்துடன் வாக்களித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மிக முக்கியமான நாள் இது. என் ஓட்டுரிமையை திண்டிவனத்தில் வாக்களித்த பின் தர்மபுரி தொகுதிக்கு செல்கிறேன். எங்கள் கூட்டணி வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தேர்தல் நியாயமான முறையில் நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவரிடம் உங்கள் உடன்பிறந்த சகோதரர் வாழ்த்து தெரிவித்தாரா? என்ற கேள்விக்கு எல்லா தொகுதிகளிலும் என் உடன்பிறந்த சகோதரர்கள்தான் போட்டியிடுகிறார்கள். நாங்கள் எல்லோரும் கடமையை கண்ணாக செய்து கொண்டுள்ளோம். மகளிர் என் மேல் அன்புடன் உள்ளனர். எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

    உள்ளூர் வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்று பா.ம.க.தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளாரே என்ற கேள்விக்கு அது முன்னாள் முதல்வரின் கருத்து. நீங்கள் நேரடி அரசியலுக்கு வருவீர்கள் என்று எதிர்பார்த்தீர்களா என்ற கேள்விக்கு நான் ஏற்கனவே அரசியலில்தான் உள்ளேன். தேர்தல் களத்தில் பிரசாரமெல்லாம் செய்துள்ளேன். தேர்தல் எனக்கு புதிதல்ல என்றார்.

    அப்போது சிவகுமார் எம்எல்.ஏ., மாவட்ட செயலாளர் ஜெயராஜ், முன்னாள் நகர செயலாளர் சண்முகம், வக்கீல் பாலாஜி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி விளையாட்டுத்தனமாக உள்ளார்.
    • திமுகவும், அதிமுகவும் இணைந்து சண்டை மூட்டி விட்டார்கள்.

    விழுப்புரம் மாவட்டத்தில், விக்கிரவாண்டியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர், விழுப்புரம் தொகுதி பாமக வேட்பாளர் முரளி சங்கரை ஆதிரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    அப்போது அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-

    திமுக, அதிமுக வேண்டாம். மாற்றம் வேண்டுமென மக்கள் நினைக்கின்றனர்.

    தமிழகத்தில் போதைப் பொருளால் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆளும் கட்சி வேண்டாம். ஆண்ட கட்சி வேண்டாம் என மக்கள் முடிவு செய்துவிட்டனர்.

    ரவிக்குமார் எம்.பி., தொகுதி மக்களுக்கு என்ன செய்தார் ? ரவிக்குமார் தொகுதிக்கு எதுவும் செய்யாமல் மீண்டும் வாக்கு கேட்டு வருகிறார்.

    பாமக வேட்பாளர் முரளி சங்கரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

    அதிமுக, திமுக என இருவரும் நம்மை ஏமாற்றிவிட்டார்கள். கல்வி, வேலை வாய்ப்பிற்காக பல ஆண்டுகளாக போராடி வருகிறோம்.

    விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி விளையாட்டுத்தனமாக உள்ளார்.

    தேர்தல் வந்தால் தான் திமுகவிற்கு மக்கள் நியாபகம் வருகிறது. திமுகவில், விசிகவுக்கு பொது தொகுதி கொடுக்காதது ஏன் ?

    சமூக நீதி வழங்கி கொண்டிருக்கும் ஒரே கட்சி பாமக. திமுகவும், அதிமுகவும் இணைந்து சண்டை மூட்டி விட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சமூகத்தில் வாழும் அனைவரும் சமம் என்பதை வலியுறுத்துவதே திராவிடம்.
    • பெண்கள் பள்ளிக்குச் செல்வதும், அனைத்து மக்களும் கோவிலுக்குள் நுழைவதும் தான் திராவிடம்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாரங்கியூர், ஏனாதிமங்கலம், சிறுவானூர், சிறுமதுரை, ஏமப்பூர், திருவெண்ணெய்நல்லூர் காந்தி நகர், சின்னசெவலை, டி.எடையார் பகுதியில் தேர்தல்பிரசாரம் மேற்கொண்டார்.

    அவரது சொந்த ஊரான டி.எடையார் பகுதியில் கூடியிருந்த மக்களிடம் வாக்கு சேகரித்த போது பேசிய அமைச்சர் பொன்முடி, ஒரு காலத்தில் பெண்கள் படிக்க நினைத்தாலும் பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்து விடுவார்கள். ஆனால் இன்று நீங்கள் படிக்காவிட்டாலும் உங்கள் குழந்தைகளை படிக்க வேண்டும் என கண்டித்து பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் அனுப்பி வைப்பதற்கு காரணம் திராவிடம்.

    ஏனெனில் பெண்கள் படிக்க வேண்டும் என்பதைத்தான் பெரியாரும் அண்ணாவும் திரும்பத் திரும்ப இந்த சமூகத்திற்கு கூறினார்கள். சமூகத்தில் வாழும் அனைவரும் சமம் என்பதை வலியுறுத்துவதே திராவிடம். பெண்கள் பள்ளிக்குச் செல்வதும், அனைத்து மக்களும் கோவிலுக்குள் நுழைவதும் தான் திராவிடம்.

    ஆனால் எல்லோரும் சமம் என்பதை ஏற்காத பா.ஜ.க.வோடு பா.ம.க. கூட்டணி அமைத்துள்ளது. பா.ஜ.க. சமூகநீதிக்கும், இட ஒதுக்கீட்டுக்கும் எதிரான கட்சி. அதனால் தான் மோடி யாரும் வளரக்கூடாது என எண்ணுகிறார். குறிப்பாக தமிழர்கள் முன்னேற அவருக்கு விருப்பமில்லை. எனவே சென்ற முறை எனக்கு உதயசூரியனில் வாக்களித்தது போல இந்த முறை என் சகோதரர் ரவிகுமாருக்கு பானை சின்னத்தில் வாக்களியுங்கள் என்றார்.

    தொடர்ந்து கூட்டத்தில் இருந்த பெண்களிடம் பேசினார். அதன் பின்னர் பிரசார வாகனத்தில் பானை சின்னம் பாடல் இசைக்கப்பட்டபோது அமைச்சர் பொன்முடி நடனமாடினார். இந்த வீடியோ சமூக வலைதளங்கில் வைரலாக பரவி வருகிறது.

    • ஊஞ்சல் உற்சவம் முடிந்து அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது.
    • லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.

    மேல்மலையனூர்:

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று இரவு பங்குனி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடை பெற்றது.

    இதை முன்னிட்டு நேற்று அதிகாலை மூலவர் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கும் சிவபெருமானுக்கும் பால், தயிர், மஞ்சள், குங்குமம், விபூதி, சந்தனம் இளநீர் பஞ்சாமிர்தம், தேன், பன்னீர் உள்ளிட்ட பூஜைப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து வெள்ளிக்க வசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து உற்சவர் அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு பலவித மலர்களை கொண்டு சர்வ லோகேஸ்வரி அலங்காரம் செய்யப்பட்டு உட்பிர காரத்தில் அருள்பாலித்தார். இரவு 11 மணிக்கு மேள தாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக உற்சவர் அங்காளபரமேஸ்வரி அம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார்.

    அப்போது ஊஞ்சல் மண்டபம் எதிரில் இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அங்காளம்மா, அங்காளம்மா, என கரகோஷத்துடன தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து கோவில் பூசாரிகள் அங்காள பரமேஸ்வரி அம்மனை வாழ்த்தி தாலாட்டு பாடல்கள் பாடினர்.

    இரவு ஊஞ்சல் உற்சவம் முடிந்து அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து உற்சவர் அங்காள பரமேஸ்வரி அம்மனை கோவில் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.

    ஊஞ்சல் உற்சவத்தில் விழுப்புரம், கடலூர், சேலம், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, ஆகிய மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், புதுச்சேரியில் இருந்தும் மேல் மலையனூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    ×