search icon
என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • ஆஸ்டர், மேரி கோல்டு, பேன்சி வகைகள், பெட்டுன்னியா, குட்டை ரக சால்வியா, கேலண்டுல்லா, பிளாக்ஸ், டேலியா மற்றும் ரோஜா உள்ளிட்ட பூக்கள் ம‌ல‌ர் ப‌டுகைக‌ளில் பூக்க‌த் தொடங்கியுள்ளது.
    • சுற்றுலா பயணிகள் பிரையண்ட் பூங்காவில் பூத்துக்குலுங்கும் பல வண்ண மலர்களை ஆர்வமுடன் கண்டு ரசித்து அதன் அருகில் நின்று புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் ஏப்ரல், மே மாதங்கள் சீசன் காலங்களாகும். இந்த காலக்கட்டத்தில் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளை மகிழ்விக்க நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள பிரையண்ட் பூங்காவில் மே மாதம் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெறுவது வழக்கம்.

    இந்த வருடம் 61வது மலர்கண்காட்சி நடைபெற உள்ளதால் பூங்கா நிர்வாகத்தினர் அதற்கான பராமரிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு 3 கட்டமாக ஊட்டி, பெங்களூரு, கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட முக்கிய பெருநகரங்களில் சுமார் 2½ லட்சம் மலர் நாற்றுகள் வரவழைக்கப்பட்டு நடவு செய்யப்பட்டது. அந்த நாற்றுகள் தற்போது பூக்கள் பூக்கத் தொடங்கியுள்ளது. இதில் சால்வியா,பாப்பி, டெல்பினியம், ஆஸ்டர், மேரி கோல்டு, பேன்சி வகைகள், பெட்டுன்னியா, குட்டை ரக சால்வியா, கேலண்டுல்லா, பிளாக்ஸ், டேலியா மற்றும் ரோஜா உள்ளிட்ட பூக்கள் மலர் படுகைகளில் பூக்கத் தொடங்கியுள்ளது.

    இது பார்ப்பவர்களின் கண்களை கவரும் வகையிலும் அமைந்துள்ளது. மேலும் வரும் வாரங்களில் லட்சக்கணக்கான பூக்கள் பூத்து குலுங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பல வண்ணங்களில், பல்வேறு வகைகளில் பூக்கள் பூத்து குலுங்க தொடங்கியுள்ளது. கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் பிரையண்ட் பூங்காவில் பூத்துக்குலுங்கும் பல வண்ண மலர்களை ஆர்வமுடன் கண்டு ரசித்து அதன் அருகில் நின்று புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

    மேலும் மலர்கண்காட்சி நடைபெறும் தேதி அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும் என தோட்டக்கலை துறை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

    • பறவைகளுக்கும் குடிநீர் மற்றும் அவை தங்கி இளைப்பாறும் இடங்களில் போதிய வசதிகள் செய்து தர உத்தரவிடப்பட்டுள்ளது.
    • தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் கோவில் யானை கஸ்தூரி தினமும் 2 வேளை குளிக்க வைக்கப்படுகிறது.

    பழனி:

    தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவாக இந்தியாவிலேயே அதிகபட்ச வெப்பநிலை தமிழகத்தில் பதிவாகி உள்ளது. இது மட்டுமின்றி மேலும் 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்து வருகின்றனர். மக்களுக்கே இந்த நிலை என்றால் விலங்குகள் மற்றும் பறவைகளின் நிலை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. எனவே வனப்பகுதியில் உள்ள விலங்குகளுக்கு கோடை காலம் முடியும் வரை போதிய அளவு தண்ணீர் மற்றும் இரை வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதே போல் பறவைகளுக்கும் குடிநீர் மற்றும் அவை தங்கி இளைப்பாறும் இடங்களில் போதிய வசதிகள் செய்து தர உத்தரவிடப்பட்டுள்ளது.

    பழனி முருகன் கோவிலில் கஸ்தூரி என்ற யானை உள்ளது. இந்த யானை தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற திருவிழா நாட்களின் போது பக்தர்களுக்கு ஆசி வழங்குவது மற்றும் தேரை பின்னால் இருந்து தள்ளுவது போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படும். மற்ற நாட்களில் இந்த யானை காரமடை தோட்டத்தில் வைத்து பராமரிக்கப்படுகிறது.

    இதற்காக அங்கு புல், தீவனம் போன்ற உணவு வழங்கப்படுகிறது. கோவில் யானைக்கு என இங்கு பிரத்யேக நீச்சல் குளம் மற்றும் ஷவர் பாத் எடுக்கும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் கோவில் யானை கஸ்தூரி தினமும் 2 வேளை குளிக்க வைக்கப்படுகிறது. காலையில் ஷவர் பாத்தும், மாலையில் நீச்சல் தொட்டியில் ஆனந்த குளியலும் போட்டு வருகிறது. நீச்சல் தொட்டிக்குள் இறங்கி சிறு குழந்தைப்போல 1 மணி நேரத்துக்கும் மேலாக கோவில் யானை கஸ்தூரி ஆனந்தமாக குளித்து வருவதாகவும், இதனால் இரவில் நீண்ட நேரம் தூங்கி ஓய்வெடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலுக்கு நேற்று இரவு வந்தடைந்த பெருமாள் அங்கேயே தங்கி இன்று அதிகாலை சுவாமி புறப்பாடு நடைபெற்றது.
    • இன்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அடுத்த தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் குடகனாற்றில் இறங்கும் வைபவம் நடந்தது. அதனை தொடர்ந்து மண்டூக முனிவருக்கு பாவ விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதன் பின் பக்தர்களுக்கு அருளாசி வழங்கும் நிகழ்ச்சிக்காக பல்வேறு மண்டகப்படிகளில் பெருமாள் கள்ளழகராக எழுந்தருளினார்.

    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலுக்கு நேற்று இரவு வந்தடைந்த பெருமாள் அங்கேயே தங்கி இன்று அதிகாலை சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இன்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதனால் தங்க குதிரையில் பெருமாள் குடை பிடித்தபடி எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தார். அப்போது ஏராளமான பக்தர்கள் அவரை தரிசனம் செய்தனர்.

    • பிரியதர்ஷினி நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார்.
    • 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என கருதினர்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கொக்குபட்டியை சேர்ந்தவர் அருண்பாண்டி (வயது21). இவர் பெயிண்டிங் காண்டிராக்ட் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள ரெட்டிசந்தூர் பகுதியை சேர்ந்த பிரியதர்ஷினி (20) என்பவருக்கும் இன்ஸ்டா கிராமம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. பிரியதர்ஷினி நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார்.

    நாளடைவில் இது காதலாக மாறி கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என கருதினர். இதனால் அவர்கள் நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் தஞ்சம் அடைந்தனர்.

    போலீசார் இருவரின் பெற்றோரையும் வரவழைத்தனர். இதில் பிரியதர்ஷினியின் பெற்றோர் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அருண்பாண்டியின் குடும்பத்தினர் சம்மதித்ததால் போலீஸ் நிலையம் அருகில் உள்ள கோவிலில் அருண்பாண்டி மற்றும் பிரியதர்ஷினிக்கு திருமணம் நடைபெற்றது. இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பபடி செல்லலாம் என போலீசார் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

    • ஆண்டு முழுவதும் அருவியில் தண்ணீர் கொட்டுவது இதன் சிறப்பாகும்.
    • சுற்றுலா தலமாக மாறினால் இப்பகுதி மக்கள் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைவார்கள் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மலைப்பகுதியில் உள்ள பரப்பலாறு அணையில் பாச்சலூர், பன்றிமலை, வடகாடு பகுதியில் உற்பத்தியாகும் நீரோடைகள் ஒரே இடத்தில் சங்கமிக்கின்றன. அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் விருப்பாச்சி மலைக்குன்று வழியாக தலையூத்தில் அருவியாக கொட்டுகிறது.

    பல அடி உயரத்தில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவது காண்போரை மிகவும் ஆச்சரியப்படுத்தி வருகிறது. விருப்பாச்சியில் இருந்து 2 கி.மீ தூரம் பயணித்தால் மலையடிவாரத்தில் பெருமாள் கோவிலை சென்றடையலாம். அங்கிருந்து சிறிது தூரம் சென்றால் நல்காசி விருப்பாச்சி ஈஸ்வரர் கோவிலின் முன் பகுதியில் இந்த அருவியை காண முடியும்.

    ஆண்டு முழுவதும் அருவியில் தண்ணீர் கொட்டுவது இதன் சிறப்பாகும். மலையடிவாரத்தில் இன்னொரு அருவியாகவும், தலையூத்து அருவி கொட்டுகிறது. இதனை கீழ் தலையூத்து அருவி என்று அழைக்கின்றனர். மலையடிவாரத்தில் இருந்து பல கி.மீ தூரத்துக்கு இது நங்காஞ்சியாறாக ஓடுகிறது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த அருவி இருக்கும் இடம் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

    அருவி பகுதியில் நீர் சுழல் மற்றும் சில இடங்களில் ஆழம் அதிகமாக இருப்பதால் பாதுகாப்பு கருதி இங்கு யாரையும் குளிக்க அனுமதிப்பது கிடையாது. இருந்தபோதும் உள்ளூர் மக்களும், அருவி பகுதியில் உள்ள கோவிலுக்கு செல்பவர்களும் அவ்வப்போது இந்த அருவியில் ஆனந்த குளியல் போட்டுச் செல்கின்றனர். தற்போது தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையிலும் தலையூத்து அருவியில் தண்ணீர் வற்றாத ஜீவநதி போல வருகிறது. இதனைப் பார்த்து பொதுமக்கள் ரசித்தும், புகைப்படம் எடுத்தும் செல்கின்றனர். ஒட்டன்சத்திரம் பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் பரப்பலாறு அணை மற்றும் தலையூத்து அருவியை சுற்றுலா தலமாக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனை ஏற்று ரூ.8.22 கோடி நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இருந்தபோதும் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்து சுற்றுலா தலமாக மாறினால் இப்பகுதி மக்கள் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைவார்கள் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

    • மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூம்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை கண்டு ரசித்தனர்.
    • தங்கள் பணி பாதிக்கப்படும் என்ற போதும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தன்னார்வலராக பணியாற்றி வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மலை ஸ்தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

    கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்ததால் பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக கொடைக்கானலுக்கு வந்தனர். மேலும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்ததால் நகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    முக்கிய சுற்றுலா இடங்களான குணா குகை, பைன் பாரஸ்ட், மோயர் பாயிண்ட் தூண்பாறை, பசுமை பள்ளத்தாக்கு, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, வெள்ளி நீர் வீழ்ச்சி, கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    மேலும் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகு சவாரியும், ஏரிச்சாலையில் சைக்கிள் மற்றும் குதிரை சவாரியும் செய்து மகிழ்ந்தனர். இதே போல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூம்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று இயற்றை எழில் கொஞ்சும் காட்சிகளை கண்டு ரசித்தனர்.

    சீசன் காலங்களில் போக்குவரத்து நெரிசல் வழக்கமான ஒன்றாக உள்ளது. குறிப்பாக கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில் வாகன நெரிசலால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் தவிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

    கொடைக்கானலில் மல்டி லெவல் பார்க்கிங் கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்று வரை அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில் போதிய அளவு போலீசார் பணியில் இல்லாததால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் முக்கிய சாலை சந்திப்புகளில் அடிக்கடி வாகனங்கள் அணிவகுத்து நிற்பது தொடர்கதையாகி உள்ளது. அப்பகுதியில் உள்ள டாக்சி டிரைவர்கள் தாங்களாகவே முன் வந்து போக்குவரத்தை சீரமைத்து வருகின்றனர். தங்கள் பணி பாதிக்கப்படும் என்ற போதும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தன்னார்வலராக பணியாற்றி வருகின்றனர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில் கொடைக்கானலில் போதுமான போக்குவரத்து போலீசாரை பணியமர்த்தி போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கொடைக்கானலில் உயர்தர மற்றும் நட்சத்திர அந்தஸ்து கொண்ட விடுதிகள் அதிக அளவில் உள்ளன.
    • வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் முதல் தர விடுதிகளில் இடம் கிடைக்காவிட்டால் மற்ற இடங்களை தேடி செல்வது வழக்கம்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு வருடந்தோறும் சுற்றுலா பயணிகள் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள்.

    தற்போது கோடை வெயில் அதிகரித்து வருவதாலும் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

    இந்நிலையில் கடந்த 2 வாரங்களாக தேர்தல் பணி காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை குறைவாகவே காணப்பட்டது. சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது அரசியல் கட்சியினர் தங்கள் ஆதரவாளர்களுடன் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

    தற்போது தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்து விட்டதால் ஓய்வுக்காக கொடைக்கானலை நோக்கி படையெடுக்க தொடங்கி உள்ளனர்.

    இதனால் அனைத்து விடுதிகளும் நிரம்பி உள்ளது. கொடைக்கானலில் உயர்தர மற்றும் நட்சத்திர அந்தஸ்து கொண்ட விடுதிகள் அதிக அளவில் உள்ளன. இந்த விடுதிகளை எங்கிருந்த நிலையிலும் ஆன்லைன் மூலமே புக்கிங் செய்து கொள்ளலாம். அதன்படி தேர்தல் முடிந்த 20-ந்தேதி முதல் பேக்கேஜ் விடுமுறையாக ஒருவாரம் வரை பலர் புக்கிங் செய்துள்ளனர். இதனால் அனைத்து விடுதிகளிலும் நிரம்பி விட்டது. இவற்றை தவிர நடுத்தர விடுதிகள் மற்றும் ஏராளமான காட்டேஜ்களும் உள்ளன. வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் முதல் தர விடுதிகளில் இடம் கிடைக்காவிட்டால் மற்ற இடங்களை தேடி செல்வது வழக்கம்.

    எனவே முதல் தர விடுதிகள் நிரம்பி விட்டதால் மற்ற விடுதிகளை நோக்கி அவர்கள் படையெடுத்து வருகின்றனர். தற்போது தொடர் விடுமுறை என்பதால் அரசியல் கட்சியினர் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் கொடைக்கானலில் குவிய தொடங்கி உள்ளனர்.

    கொடைக்கானலில் அவ்வப்போது சாரல் மழை பெய்தாலும் பகல் பொழுதில் வெப்பம் நிலவி வருகிறது. மாலை மற்றும் இரவு நேரங்களில் வெப்பத்தின் தாக்கம் இல்லாத அளவுக்கு ரம்யமான சீதோசனம் காணப்படுகிறது. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

    கடந்த சில நாட்களாக வெறிச்சோடி காணப்பட்ட சுற்றுலா தலங்களில் மீண்டும் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் சுற்றுலா தொழிலை நம்பி உள்ள டாக்சி டிரைவர்கள், வழிகாட்டிகள், ஓட்டல் உரிமையாளர்கள், சாலையோர வியாபாரிகள் உள்பட அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • நத்தம் அருகே ஊராளிபட்டி ஊராட்சிக்குட்பட்டது சீரங்கம்பட்டி கிராமம். இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
    • சீரங்கம்பட்டியில் இருந்து எட்டையம்பட்டிக்கு செல்லும் சாலை கடந்த 20 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ளது.

    பழனி:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ஆயக்குடி டி.கே.என். புதூர் 2-வது வார்டு பகுதியில் சுமார் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை எனக்கூறி தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர். அதிகாரிகள் வந்து சமாதானம் செய்து சென்ற நிலையில் இன்று தாங்கள் யாரும் வாக்களிக்க செல்ல மாட்டோம் என கூறி ஊரின் முன்பு தேர்தல் புறக்கணிப்பு பதாகையை வைத்தனர். மேலும் வீடுகள் தோறும் கருப்பு கொடி கட்டி தாங்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்தனர்.

    யாரும் ஊருக்குள் வர வேண்டாம் எனவும் அவர்கள் தெரிவித்ததால் பரபரப்பான சூழல் நிலவியது.

    நத்தம் அருகே ஊராளிபட்டி ஊராட்சிக்குட்பட்டது சீரங்கம்பட்டி கிராமம். இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் 450 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரப்படவில்லை என கூறி பேனர்கள் வைத்து தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வீடுகளில் கருப்பு கொடி கட்டியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி கிராம மக்கள் கூறுகையில்.

    சீரங்கம்பட்டியில் இருந்து எட்டையம்பட்டிக்கு செல்லும் சாலை கடந்த 20 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ளது. இதை சரி செய்ய மாவட்ட, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் இன்னும் சாலை வசதி அமைத்து தரவில்லை. மேலும் கிராம மந்தைக்கு வண்ணக்கல் பதிக்க கோரிக்கை வைத்தோம். அதுவும் நிறைவேற்றப்படவில்லை. எங்கள் பகுதிக்கு பகுதி நேர ரேசன் கடை கேட்டு மனு கொடுத்தோம். இதுவரை கடை அமைத்து தரவில்லை. மேலும் எங்கள் பல கோரிக்கைகளை நிறைவேற்றாததால் இந்த தேர்தலை புறக்கணிக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

    இதேபோல் திண்டுக்கல் மாநகராட்சி 10-வது வார்டுக்குட்பட்ட சின்ன அய்யன்குளம் பகுதியில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை என கூறி அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகள் முன்பு கருப்பு கொடி ஏற்றி தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • சின்னமலையூரில் ஆண் வாக்காளர்கள் 116 பேர், பெண் வாக்காளர்கள் 109 பேர் என மொத்தம் 225 வாக்காளர்கள் உள்ளனர்.
    • வாக்குப்பெட்டிகள் தாசில்தார் சுகந்தி மேற்பார்வையில் மலைக்கிராமங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதியில் 327 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் மலைப்பகுதி கிராமங்களான எல்லைப்பாறை மலை அடிவாரத்திலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் லிங்கவாடி-மலையூர் மலை உச்சியில் உள்ளது. இங்கு வருடந்தோறும் பாதை வசதி இல்லாமல் கரடு முரடான கற்கள் நிறைந்த பாதையை கடந்து செல்ல வேண்டும். அதன்படி நாளை நடைபெறும் தேர்தலுக்காக இன்று காலை குதிரைகளில் 2 ஓட்டுப்பெட்டிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள், எழுதுபொருட்கள் அடங்கிய பெட்டிகளும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் 3 குதிரைகளில் அனுப்பி வைக்கப்பட்டது.

    மேலும் இந்த மலையூரில் ஒரே ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது. 4 தேர்தல் உதவி அலுவலர்களும், 4 காவல்துறையை சேர்ந்தவர்களும் இதற்காக சென்றுள்ளனர். இதில் ஆண் வாக்காளர் 237 பேரும், பெண் வாக்காளர்கள் 247 பேரும் மொத்தம் 484 வாக்காளர்களும் உள்ளனர். இதைபோலவே நத்தம் அருகே குட்டுப்பட்டி அருகில் கரந்தமலை மலை உச்சியில் அடிவாரத்திலிருந்து சுமார் 10கி.மீ தொலைவில் பெரிய மலையூர், சின்னமலையூர் மற்றும் வலசு ஆகிய 3 மலை கிராமங்கள் உள்ளது. இங்கு 3 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது. இதில் பெரிய மலையூரில் ஆண் வாக்காளர்கள் 340 பேர், பெண் வாக்காளர்கள் 320 பேர் என மொத்தம் 660 வாக்காளர்கள் உள்ளனர்.

    சின்னமலையூரில் ஆண் வாக்காளர்கள் 116 பேர், பெண் வாக்காளர்கள் 109 பேர் என மொத்தம் 225 வாக்காளர்கள் உள்ளனர். வலசையில் ஆண் வாக்காளர்கள் 181 பேர், பெண் வாக்காளர்கள் 179 பேர் என மொத்தம் 360 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு மினி பிக்-அப் வேனில் வைத்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் மலை கிராமங்களுக்கு ஓட்டுப் பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டது. இதில் 4 காவல்துறை அதிகாரிகள், தேர்தல் உதவி அலுவலர்கள், தேர்தல் பார்வையாளர்கள், வனத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட 25 பேர் குழுவினர் 3 வாக்குச்சாவடிகளுக்கும் பிரித்து அனுப்பப்பட்டுள்ளனர்.

    இந்த வாக்குப்பெட்டிகள் தாசில்தார் சுகந்தி மேற்பார்வையில் மலைக்கிராமங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் டி.எஸ்.பி. உதயகுமார், நத்தம் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி உள்பட 500க்கும் மேற்பட்ட போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    • தாத்தா, அப்பா, கணவர், மகன், பேரன், என 5 தலைமுறையினர் மதுவுக்கும், போதைக்கும் அடிமையாகி விட்டனர்.
    • தமிழக மக்களிடம் தற்போது மவுன அலைவீசி வருகிறது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் திலகபாமாவை ஆதரித்து நடந்த பொதுக்கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்த தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி 3வது முறையாக பதவியேற்பது முடிவாகி விட்டது. எனவே தமிழக மக்கள் சிந்தித்து தங்கள் வாக்கை செலுத்த வேண்டும். கடந்த தேர்தலில் தகுதி இல்லாதவரை தேர்வு செய்ததால் மக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இதே போல் இந்த முறையும் தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்து உங்கள் வாக்கை வீணடிக்க வேண்டாம்.

    காமராஜர், அண்ணா காலத்தில் நேர்மையானவர்களை வேட்பாளர்களாக நிறுத்தினர். அதனால் வேட்பாளர்களை பார்க்காமல் சின்னத்தை பார்த்து வாக்களிக்கும் நிலை அப்போது இருந்தது. தற்போது நல்லவர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவதில்லை என்பதால் சின்னத்தை பார்த்து வாக்களிக்கும் பழக்கத்தை மக்கள் கைவிட வேண்டும்.

    கடந்த 57 ஆண்டுகளாக தி.மு.க., அ.தி.மு.க. என 2 கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்து தமிழகத்தை நாசமாக்கி விட்டன. தாத்தா, அப்பா, கணவர், மகன், பேரன், என 5 தலைமுறையினர் மதுவுக்கும், போதைக்கும் அடிமையாகி விட்டனர். இந்த 2 கட்சிகள் ஆட்சிக்கும் முடிவு கட்ட 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைப்போம். அதற்கான முன்னோட்டம்தான் இந்த பாராளுமன்ற தேர்தல்.

    இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவிக்க காரணமாக இருந்த காங்கிரசோடு தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது. இது கொள்கை கூட்டணியா? எங்களைப் பார்த்து கொள்கை இல்லாத கூட்டணி என கூறுகின்றனர். தி.மு.க.வும், காங்கிரசும் சேர்ந்து கச்சத்தீவை தாரை வார்த்தது. இதனால் இதுவரை 800 மீனவர்கள் இறந்துள்ளனர். 6100 பேர் கைதாகி 1250 படகுகள் பறிபோய் உள்ளது. பா.ஜ.க. கச்சத்தீவு பற்றி பேசுவதை குறைகூறும் தி.மு.க., காங்கிரஸ் இதுவரை அந்த பிரச்சனையில் மவுனமாக இருப்பது ஏன்? கச்சத்தீவை மீட்க பிரதமர் மோடியால்தான் முடியும்.

    தி.மு.க.விற்கு உழைத்தவர்கள் புறக்கணிக்கப்பட்டு இருக்கின்றனர். 34 அமைச்சர்களில் பட்டியல் இன சமுதாயத்தைச் சேர்ந்த 3 பேர் உள்ளனர். சி.வி.கணேசன், மதிவேந்தன், கயல்விழி ஆகிய 3 பேருக்கும் அமைச்சரவை வரிசையில் முறையே 30, 33, 34-வது இடம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் சமூக நீதி பேசுவதற்கான தகுதியே இல்லாதவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். தி.மு.க. சார்பில் திண்டுக்கல் மாவட்டத்துக்கு 29 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அதில் ஒன்றைக்கூட மு.க.ஸ்டாலின் நிறைவேற்றவில்லை. அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் உள்பட 5 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 7 மாநிலங்களில் புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு ஊழியர்களையும் வஞ்சித்து விட்டது தி.மு.க. அரசு. அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் யார் பிரதமர் என்றே சொல்ல முடியாத அளவுக்கு பிரசாரம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு அளிக்கும் வாக்கு வீண். இந்த 2 கட்சிகளுமே சமூக நீதி பற்றி பேச தகுதி இல்லாதவை. தமிழக மக்களிடம் தற்போது மவுன அலைவீசி வருகிறது. இது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக வாக்குகளாக மாறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஒவ்வொரு துறையிலும் இந்தியா முன்னேறி உள்ளது என்றால் அதற்கு அடிப்படை காரணமாக தமிழகம் உள்ளது.
    • நம்மிடம் இருந்து பணத்தை வாங்கி அதானிக்கும், அம்பானிக்கும் வழங்கும் முறைதான் வழிப்பறியாகும்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் தொகுதி சி.பி.எம். வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து திண்டுக்கல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில் திராவிட இயக்க தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன் பேசியதாவது:-

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ரம்ஜான் பண்டிகையை இஸ்லாமியர்கள் கொண்டாடினார்கள். தப்பித் தவறி மோடிக்கு வாக்களித்தால் இனி ரம்ஜான் கொண்டாட முடியாது. அடுத்த தலைமுறையினர் தேர்தலை பார்க்கவே முடியாது. எனவே பா.ஜ.க.வுக்கு வாக்களித்து இன்னொரு ஹிட்லரை உருவாக்கிட வேண்டாம்.

    சமத்துவம் பெருக சமூக நீதி மண்ணில் இருக்க ஜாதி மதங்களை கடந்து மக்கள் வாழ்க்கை முன்னேற வேண்டுமானால் இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். பிரதமர் மோடி நெல்லையில் நடந்த கூட்டத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் கனவை நனவாக்குவேன் என்றார். ஜெயலலிதாவின் இலக்கு மோடியா, லேடியா என்பதுதான். மோடியை தமிழகத்தில் இருந்து அகற்றுவதுதான் இலக்காக கொண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    ஜி.எஸ்.டி. என்பது வரி இல்லை. வழிப்பறி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் சி.ஏ.ஏ. சட்டத்தை ஆதரித்த அ.தி.மு.க.வுடன் எஸ்.டி.பி.ஐ. கூட்டணி வைத்துள்ளது. இது உங்களுக்கு உறுத்தலாக இல்லையா?

    ஒவ்வொரு துறையிலும் இந்தியா முன்னேறி உள்ளது என்றால் அதற்கு அடிப்படை காரணமாக தமிழகம் உள்ளது. மக்கள் மீது வரியை சுமத்தும் மத்திய அரசு வங்கி கடன்களில் வராக்கடன் என ரூ.66 லட்சம் கோடியை அறிவித்துள்ளது. இதில் ரூ.14 லட்சம் கோடியை அதானி, அம்பானி மற்றும் கார்ப்பரேட் நிறுவன முதலாளிகளுக்கு தள்ளுபடி செய்துள்ளது.

    நம்மிடம் இருந்து பணத்தை வாங்கி அதானிக்கும், அம்பானிக்கும் வழங்கும் முறைதான் வழிப்பறியாகும். மொத்த உற்பத்தியில் தமிழ்நாடு 5-வது இடத்தில் உள்ளது. அதே நேரம் தனி நபர் வருமானத்தில் 121-வது இடத்தில் உள்ளது. இந்தியா பணக்கார நாடாக இருந்த போதிலும், இந்திய மக்கள் ஏழைகளாக உள்ளனர். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தனி நபர் வருமானம் அதிகரிக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் செந்தில்குமார் எம்.எல்.ஏ. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • நட்சத்திர ஏரியில் படகு சவாரி.
    • பொழுதை கழிக்கும் சுற்றுலா பயணிகள்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலுக்கு கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோடை வெயில் காரணமாகவும், பள்ளி, கல்லூரி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாலும் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருகின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் தங்கள் முக்கிய பொழுதுபோக்கு இடமாக நட்சத்திர ஏரியை தேர்வு செய்து அங்கு ஆனந்தமாக படகு சவாரி செய்து மகிழ்ந்து வருகின்றனர்.

    கொடைக்கானலில் நகர் பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி ஏரியைச்சுற்றி ஒரு சில இடங்களில் உள்ளது.இதில் தமிழ்நாடு அரசு இல்ல படகு குழாம், நகராட்சி படகுக்குழாம் என இரு வேறு படகுக் குழாம்கள் இயங்கி வருகிறது. இதில் கே.ஆர்.ஆர். கலையரங்கம் பகுதியை ஒட்டிய ஏரிப்பகுதியில் ஒரு நகராட்சி படகு குழாம் உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகளை கவரும் விதமாகவும் நட்சத்திர ஏரிக்குள் சென்று படகில் ஏறி சவாரி செய்யும் விதமாகவும் அனைவரையும் ஈர்க்கும் விதமாக மிதவை நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது.

    பயணிகள் ஓய்வறை, பாதுகாப்பான நடைமேடை, சுற்றுலா பயணிகள் நெரிசல் இல்லாமல் உள்ளே செல்லும் வகையில் வழித்தடங்கள் என சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நட்சத்திர ஏரிக்குள் அமைக்கப்பட்டிருக்கும் நடைமேடையில் சுற்றுலா பயணிகள் அச்சமின்றி நடக்கும் விதமாக தார்பாய்கள் அமைத்து பயணிகள் பாதுகாப்பை நகராட்சி உறுதிப்படுத்தியுள்ளது. நடைமேடையில் பயணித்து நட்சத்திர ஏரியினுள் குறுகிய தூரம் வரை சென்று படகில் ஏறி சவாரி செய்வது மிகுந்த உற்சாகத்தை தருவதாக சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர்.

    ×