search icon
என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புதிய ஆலையில் வைத்து எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி.
    • புதிய ஆலை 500 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது.

    டாடா மோட்டார்ஸ் மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவர் உற்பத்தி ஆலை தமிழகத்தின் ராணிப்பேட்டையில் அமைகிறது. இதற்கான திட்டத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் துவங்கி வைக்கிறார். இந்த ஆலையில், ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் தனது ஆடம்பர கார் மாடல்களை முதல் முறை இந்தியாவிலேயே உற்பத்தி செய்யும்.

    தற்போது வரை ஜாகுவார் நிறுவனம் தனது ஆடம்பர கார் மாடல்களை பிரிட்டன் ஆலையில் உற்பத்தி செய்து, அதன் பாகங்களை இந்தியாவுக்கு இறக்குமதி செய்து பூனே ஆலையில் வைத்து அசெம்பில் செய்து வருகிறது. டாடா மோட்டார்ஸ்-இன் ஜாகுவார் லேண்ட் ரோவர் ராணிப்பேட்டையில் அமைய இருக்கும் புதிய ஆலையில் வைத்து எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய இருக்கிறது.

    இதுதவிர ஏராளமான இதர கார் மாடல்களையும் டாடா மோட்டார்ஸ் உற்பத்தி செய்ய இருக்கிறது. இதில் ஹைப்ரிட் மாடல்களும் அடங்கும்.

    டாடா மோட்டார்ஸ்-இன் புதிய ஆலை 500 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது. சிப்காட் தொழிற்பேட்டையில் இந்த ஆலை அமைய இருக்கிறது. இதற்காக ரூ. 9 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட உள்ளது. இதன் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்க முடியும்.

    • தண்ணீரை வித்தியாசமாக குடிப்பது போன்று சேட்டைகள் செய்ய ஆரம்பித்தார்.
    • மேஜையின் அடியில் படுத்துக்கொண்டார்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் ரெயில் நிலையத்தில் நேற்று வட மாநில வாலிபர் ஒருவர் அங்கும் இங்கும் சுற்றி திரிந்தார்.

    திடீரென விலங்குகள் நடப்பது போன்று நடைமேடையில் நடந்தார். பின்னர் நாய் போல குரைத்தார். குழாயில் வந்த தண்ணீரை வித்தியாசமாக குடிப்பது போன்று சேட்டைகள் செய்ய ஆரம்பித்தார்.

    இதனை வேடிக்கை பார்த்த பயணிகள் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் வட மாநில வாலிபர் செயலைப் பார்த்து அச்சமடைந்தனர்.

    வட மாநில வாலிபர் எங்கே நம்மிடம் வந்து விடுவாரோ என்று எண்ணி பயணிகள் மெல்ல மெல்ல நகர்ந்தனர்.

    ரெயில்வே போலீசார் அவரது அருகே சென்றனர். கையில் லத்தியுடன் வருவதை பார்த்த வட மாநில வாலிபர் ஓட்டம் பிடித்தார். மேலும் ரெயில்வே அதிகாரி அலுவலகத்திற்குள் புகுந்தார். அங்கிருந்த பெட் துணி போடப்பட்டிருந்த மேஜையின் அடியில் படுத்துக்கொண்டார்.

    பின்னர் அந்த துணியை விலக்கி விலக்கி பார்த்தார். இதனால் சந்தேகம் அடைந்த ரெயில்வே போலீசார் வட மாநில வாலிபரிடம் இருந்த பையை ஆய்வு செய்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

    அவரிடம் இருந்த ஒரு சீட்டில் செல்போன் எண் ஒன்று இருந்தது. அதனை ரெயில்வே போலீசார் தொடர்பு கொண்டனர்.

    செல்போனில் பேசியவர் வடமாநில வாலிபர் தனது தம்பி என்று கூறினார். இதனையடுத்து ரெயில்வே போலீசார் அவரை சம்பவ இடத்திற்கு வரும்படி கூறினர்.

    இதற்கிடையில் அந்த வாலிபர் மனநலம் பாதிக்கப்பட்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு இருக்கலாம் என கருதி ரெயில்வே டாக்டரை வரவழைத்து பரிசோதனை செய்தனர்.

    ரெயில்வே டாக்டர் போலீசாரிடம் வட மாநில வாலிபருக்கு ஒன்றும் இல்லை நன்றாக தான் உள்ளார் என்று கூறினார். ஏதோ விரக்தியில் இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார் என்று கூறினார்.

    வாலிபரின் அண்ணனிடம் நடந்தவைகள் பற்றி ரெயில்வே போலீசார் கூறினர். அந்த வாலிபர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரபு குமார் ஷர்மா என்றும், தற்போது இவருக்கு வேலை இல்லாததால் அண்ணனைத் தேடி வந்ததும் தெரியவந்தது.

    ஏன் இப்படி இவர் செய்கிறார் என்று ரெயில்வே போலீசார் கேட்டபோது தனக்கு தெரியவில்லை என்று வாலிபரின் அண்ணன் கூறினார்.

    இதனையடுத்து கடிதம் மூலம் எழுதி வாங்கிக்கொண்டு ரெயில்வே போலீசார் அவர்களை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் போலீசார் மற்றும் பயணிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பொதுமக்கள் உடனடியாக போலீசார் மற்றும் ராணிப்பேட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • கண்டெய்னர் லாரியின் முன்பக்க கேபினில் மின் கசிவு காரணமாக தீப்பிடித்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    ராணிப்பேட்டை:

    மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் பகுதியில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு செல்வதற்காக விலை உயர்ந்த 8 சொகுசு கார்களை ஏற்றி கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று இன்று காலை வந்தது.

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த அம்மணதாங்கல் பகுதியில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பெட்ரோல் பங்க் அருகில் டிரைவர் சோனு யாதவ் லாரியை நிறுத்திவிட்டு சாப்பிட சென்றுள்ளார்.

    அப்போது கண்டெய்னர் லாரியின் முன்பக்க கேபினில் திடீரென தீ பிடித்து எஞ்சின் முழுவதும் தீ மளமளவென பரவி எரியத் தொடங்கியது.

    இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உடனடியாக போலீசார் மற்றும் ராணிப்பேட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் ராணிப்பேட்டை உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கண்டெய்னர் லாரியின் முன்பக்கம் எரிந்த தீ மேலும் பரவி விடாமல் அணைத்தனர்.

    கண்டெய்னர் லாரியில் முன்பக்கத்தில் எரிந்த தீ உரிய நேரத்தில் அணைக்கப்பட்டதால் பின்பக்கம் இருந்த பல லட்சம் மதிப்பு உள்ள சொகுசு கார்கள் எந்தவித சேதமும் இன்றி தப்பின.

    கண்டெய்னர் லாரியின் முன்பக்க கேபினில் மின் கசிவு காரணமாக தீப்பிடித்திருக்கலாம் என கூறப்படுகிறது. பெட்ரோல் பங்க் அருகில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் உடனடியாக தீயணைக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதமும் தவிர்க்கப்பட்டது.

    தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • அபிராமி அளித்த புகாரின் பேரில் அரக்கோணம் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து நாகராஜை கைது செய்தனர்.

    அரக்கோணம்:

    திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியை சேர்ந்தவர் அபிராமி. இவர்கடந்த வாரம் ஆவடியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்தார்.

    அங்கிருந்து திருத்தணி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். பின்னர் சாமி தரிசனம் முடித்துவிட்டு திருத்தணியில் இருந்து ஆவடி செல்வதற்கு மின்சார ரெயிலில் இரவு வந்து கொண்டிருந்தார். அப்போது ரெயில் அரக்கோணம் அருகே வந்த போது சிக்னலுக்காக நின்றது.

    திடீரென மர்ம நபர் ஒருவர் திடீரென அபிராமி கழுத்தில் இருந்த 7 பவுன் தாலிசெயினை பறித்துக் கொண்டு ரெயிலில் இருந்து குதித்து தப்பி ஓடினார்.

    இதுகுறித்து அபிராமி அளித்த புகாரின் பேரில் அரக்கோணம் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மேலும் டி.எஸ்.பி கர்ணன் தலைமையில், இன்ஸ்பெக்டர் பத்மநாபன், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் அரக்கோணம் ரெயில் நிலைய 4-வது பிளாட்பாரத்தில் போலீசுக்கு சந்தேகம் அளிக்கும் வகையில் நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

    அதில் திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் நேரு நகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் நாகராஜ் (வயது 35) என்பதும், அவர் ரெயிலில் பெண் பயணிகளிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

    போலீசார் வழக்கு பதிவு செய்து நாகராஜை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 11 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.

    • ரெயிலில் படுத்திருந்ததால் வாலிபர் அங்கும் இங்கும் உருண்டு கொண்டிருந்தார்.
    • பயணிகள் கழிவறைக்கு செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    அரக்கோணம்:

    சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு செல்லும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று சென்டிரலில் இருந்து புறப்பட்டது.

    இந்த ரெயிலில் ஏ.சி.பெட்டியின் கழிவறை அருகே வாலிபர் ஒருவர் படுத்திருந்தார். ஓடும் ரெயிலில் படுத்திருந்ததால் வாலிபர் அங்கும் இங்கும் உருண்டு கொண்டிருந்தார்.

    இதனால் பயணிகள் கழிவறைக்கு செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். ரெயில் பயணிகள் வாலிபரை எழுப்ப முயன்றனர். முடியாததால் இதுகுறித்து டிக்கெட் பரிசோதகரிடம் பயணிகள் புகார் அளித்தனர்.

    டிக்கெட் பரிசோதகர் வாலிபரை எழுப்ப முயன்றார். அப்போது தான் அவர் மது போதையில் படுத்திருந்தது தெரிந்தது.

    இதையடுத்து டிக்கெட் பரிசோதகர் அரக்கோணம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். ரெயில் அரக்கோணம் வந்ததும், தயாராக இருந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் கழிவறையின் அருகே படுத்திருந்த போதை வாலிபரை தூக்கி வெளியே இழுத்து பிளாட்பாரத்தில் போட்டனர்.

    இதனால் ரெயில் பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். போதை வாலிபர் எழுந்திருக்க முடியாமல் பிளாட்பாரத்திலும் படுத்துக்கொண்டு உருண்டார்.

    மேலும் அந்த நபர் யார்? எங்கிருந்து பயணம் செய்கிறார் என்பது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கண்ணாடி உடைக்கப்பட்டது அறிந்த ரெயில்வே அதிகாரிகள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • போலீசார் ரிஸ்வானிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரக்கோணம்:

    அரக்கோணத்தில் இருந்து காட்பாடி நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது.

    இதில் ரிஸ்வான் (வயது 22) என்பவர் பொதுப்பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார். சிக்னல் காரணமாக மேல்பாக்கத்தில் ரெயில் நின்றது.

    வெகு நேரமாக ரெயில் செல்லாததால் பொதுப் பெட்டியில் பயணம் செய்த ரிஸ்வான் ரெயிலில் இருந்து கீழே இறங்கினார். பின்னர் முன்பதிவு செய்த பெட்டியின் அருகே சென்றார்.

    ரெயில் அங்கிருந்து செல்லாததால் ஆத்திரம் அடைந்த ரிஸ்வான் கீழே இருந்த கல்லை எடுத்து முன்பதிவு பெட்டியின் கழிவறையின் கண்ணாடி மீது வீசியதாக கூறப்படுகிறது. இதில் கழிவறையின் கண்ணாடி உடைந்தது.

    சிறிது நேரத்திற்கு பின்பு ரெயில் அங்கிருந்து புறப்பட்டது. கண்ணாடி உடைக்கப்பட்டது அறிந்த ரெயில்வே அதிகாரிகள் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் ரிஸ்வானை பிடித்து அரக்கோணம் ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    ரெயில்வே போலீசார் ரிஸ்வானிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டிற்கு சென்ற பிறகு தான் அவர்களுக்கு நகை கொள்ளை போனது தெரியவந்தது.
    • ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    அரக்கோணம்:

    திருவள்ளூரை சேர்ந்தவர் மணிவண்ணன் இவருடைய மனைவி பிரித்தி (வயது 26). கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்கள் ஐதராபாத் சென்றனர். அங்கிருந்து தனது தாத்தா பாட்டி ஆகியோருடன் புறப்பட்டு வந்தனர்.

    அவர்கள் கச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தனர். ரெயிலில் வந்த போது மர்மநபர்கள் அவர்கள் பெட்டியில் வைத்திருந்த 20 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை திருடினர்.

    இதனை அறியாத மணிவண்ணன் குடும்பத்தினர் அரக்கோணம் வந்ததும் ரெயிலில் இருந்து கீழே இறங்கினர். பின்னர் அவர்கள் கார் மூலம் திருவள்ளூர் சென்றனர். வீட்டிற்கு சென்ற பிறகு தான் அவர்களுக்கு நகை கொள்ளை போனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து அரக்கோணம் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    அப்போது தங்கள் பயணம் செய்த பெட்டியில் வட மாநில வாலிபர்கள் 4 பேர் இருந்தனர். அவர்கள் எங்களோடு பேசிக்கொண்டு வந்தனர். எங்கள் கவனத்தை திசை திருப்பி அவர்கள் நகையை கொள்ளையடித்திருக்கலாம் என போலீசாரிடம் தெரிவித்தனர்.

    கொள்ளை நடந்த ரெயில் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்த பயணிகள் விவரங்களை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாராளுமன்ற தேர்தல் மிக முக்கியமான தேர்தல் தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் நடக்கின்ற ஒரு போர்.
    • தமிழ்நாட்டில் இப்படி கஞ்சா புழக்கத்தை பார்த்தது இல்லை.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டில், அரக்கோணம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து தே.மு.தி.க. பொது செயலாளர் பிரேமலதா பிரசாரம் செய்தார்.

    இந்த பாராளுமன்ற தேர்தல் மிக முக்கியமான தேர்தல் தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் நடக்கின்ற ஒரு போர்.

    தேர்தலில் ஆட்சி பலம், அதிகார பலம் பண பலம் பெற்று நம்மை எதிர்நோக்கி இருக்கும் மத்திய, மாநில அரசுகளின் வேட்பாளர்களை தர்மத்தின் பக்கம் நியாயத்தின் பக்கம் நிற்கும் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி, புரட்சி கலைஞர் ஆசீர்வாதம் பெற்று எளியவராக நிற்கும் வேட்பாளருக்கு பெருவாரியான வெற்றியை தரவேண்டும்.

    2011-ல் இந்த கூட்டணி எப்படி ஒரு மகத்தான வெற்றியை பெற்றதோ அதேபோல 2024-ல் எடப்பாடி பழனிசாமியும், நானும் இணைந்து இந்த மெகா கூட்டணியை அமைத்திருக்கிறோம் .

    இது மக்கள் விரும்பும், தொண்டர்கள் விரும்பும், தமிழக மக்கள் ஏற்றுக் கொண்ட ஒரு கூட்டணி என்பதை வருங்கால தேர்தலில் நிருபிப்போம்.

    பாராளுமன்ற தேர்தலில் மிக முக்கியமான கட்டத்தில் உள்ளோம் . இந்த தேர்தலில் நாம் பெறும் வெற்றி வருகிற 2026-தேர்தல் வெற்றிக்கு அச்சாரமாக இருக்கும்.


    பாலாறு மாசடைய காரணமாக ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் குவிந்துள்ள குரோமிய கழிவுகளை உடனடியாக தமிழக அரசும், மத்திய அரசும் போர்க்கால அடிப்படையில் அகற்றவேண்டும்.

    நிலத்தடி நீர் பாதித்து புற்று நோய் உள்பட பல்வேறு நோய்கள் ஏற்படுத்தும் அபாயகரமானதாக உள்ளது. அதை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    1000 ரூபாய் தருவதாக ஏமாற்றிய, கஞ்சா புழக்கத்தை கொண்டு வந்து எங்கு பார்த்தாலும் டாஸ்மாக் கடை திறந்துள்ள தி.மு.க.விற்கு பாடம் புகட்டுவீர்களா, நெசவும், விவசாயமும் அழிந்ததற்குகாரணம் இந்த அரசுஎன்பதை உணறுகிறீர்களா?

    வேலை வாய்ப்பு இல்லை, வறுமை, பாலியல் கொடுமை, சட்டம் ஒழுங்குசீர்கேடு உள்ள இந்த ஆட்சிக்கு பாடத்தை கொடுத்தால் தான் மீதமுள்ள ஆட்சி காலத்தில் நல்லது செய்வார்கள்.

    மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வுஇல்லை. இதுவா மக்கள் ஆட்சி என்பதை சிந்திக்க வேண்டும். இதுவரை தமிழ்நாட்டில் இப்படி கஞ்சா புழக்கத்தை பார்த்தது இல்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது மக்களின் குறைகளை பெட்டி வைத்து வாங்கி சென்றவர்.
    • 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு கொண்டு வந்தது அதிமுகதான்.

    ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த பாண்டியநல்லூரில் அரோக்கணம் அதிமுக வேட்பாளர் ஏ.எல்.விஜயனை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார்.

    அதிமுக ஆட்சியில் ராணிப்பேட்டையில் நிறைவேற்றப்பட்ட பணிகளை பட்டியலிட்டு வாக்கு சேகரிக்கப்பட்டது.

    அப்போது அவர் பேசியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் தோல்வி பயத்தில் உள்ளனர். அவர்கள் இருவரும் கண்ட கனவு மாறிவிட்டது.

    மக்களை ஏமாற்றியே திமுக ஆட்சிக்கு வந்தது. தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை.

    வாரிசு அரசியலுக்கு இந்த தேர்தலில் மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள். உருட்டல், மிரட்டலுக்கு எல்லாம் அதிமுக அஞ்சாது. அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடுவது வாடிக்கையாகிவிட்டது.

    எங்கள் ஆட்சியில் திமுக மீது வழக்கு போவில்லை. மக்கள் பணியாற்றினோம். திமுக எந்த திட்டங்களையும் கொண்ட வரவில்லை. திட்டங்களை கொண்டு வந்தால் தானே, நாங்கள் குறை கூற முடியும்.

    விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. மக்களை பற்றி சிந்திக்காத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கிடைக்கும் நேரத்தில் மக்களக்கு பணியாற்ற வேண்டும்.

    எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது மக்களின் குறைகளை பெட்டி வைத்து வாங்கி சென்றவர். பெட்டி தொலைந்துவிட்டதா அல்லது சாவி இல்லையா ?

    எதிர்க்கட்சியாக இருந்து எப்படி மத்திய அரசை எதிர்க்க முடியும். ஆட்சியில் இருந்தால் மக்களுக்கு எதிரான திட்டங்களை கண்டித்து குரல் கொடுப்போம். காவிரி நதிநீர் விவகாரத்தில் 22 நாட்கள் அவையை அதிமுக முடக்கியது.

    7.5 சதவீத உள் இடஒதுக்கீடு கொண்டு வந்தது அதிமுகதான். நீட் விவகாரத்தில் பாராளுமன்றத்தில் அழுத்தம் கொடுத்திருந்தால் தீர்வு கிடைத்திருக்கும். ஆனால், நீட் விவகாரத்தில் திமுக அரசியல் செய்கிறது.

    நாங்கள் கட்டிய பாலத்தை ரிப்பன் வெட்டி திறப்பவர் முதல்வர் ஸ்டாலின். எங்கு பார்த்தாலும் போதைப் பொருள். தமிழகம் போதைப் பொருட்கள் விற்கும் மாநிலமாக மாறிவிட்டது. சட்டம் ஒழுங்கு முழுவதும் சீர்குலைந்துவிட்டது.

    தமிழகத்தில் கொலை, கொள்ளை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இந்தியாவிலேயே அதிக கடன் பெற்ற மாநிலம் தமிழ்நாடு. விலைவாசி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, ஆனால் நீங்கள் நலமா ? என்கிறார் முதல்வர்.

    விவசாயிகளை பற்றி கவலைப்படாதவர்கள் திமுகவினர். அதிமுக ஆட்சியில் இருமுறை விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • அமைச்சர் காந்தி வாகனத்தில் ஏறி நிற்க கூடியிருந்த ஒரு பகுதியினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
    • அங்கு கூடி இருந்தவர்களிடம் உதயநிதி ஸ்டாலின் நான் பேசத் தேவையில்லை இல்லையா? அமைச்சரை பார்த்து விட்டீர்கள் அல்லவா, நான் கிளம்பட்டுமா, என்று கேட்டு ஷாக் கொடுத்தார்.

    அரக்கோணம்:

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரக்கோணம் பழைய பஸ் நிலையம் அருகே பிரசாரம் செய்தார்.

    முன்னதாக கட்சியினர் உதயநிதி ஸ்டாலினுக்கு வீரவாள் வழங்கினர். அதை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டு வெள்ளி வீரவாளை அசைத்துக்காட்ட அங்கிருந்த தொண்டர்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர்.

    அதனை தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச தொடங்கினார்.

    அப்போது உதயநிதி ஸ்டாலின் பிரசார வாகனத்தில் அமைச்சர் காந்தி ஏற முற்பட்டார்.

    இதனால் பேச்சை நிறுத்திய உதயநிதி ஸ்டாலின் அவர் வாகன த்தில் ஏறி நிற்கும் வரை காத்திருந்தார்.

    தொடர்ந்து அமைச்சர் காந்தி வாகனத்தில் ஏறி நிற்க கூடியிருந்த ஒரு பகுதியினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

    அப்பொழுது அங்கு கூடி இருந்தவர்களிடம் உதயநிதி ஸ்டாலின் நான் பேசத் தேவையில்லை இல்லையா? அமைச்சரை பார்த்து விட்டீர்கள் அல்லவா, நான் கிளம்பட்டுமா, என்று கேட்டு ஷாக் கொடுத்தார். அங்கு கூடி இருந்த பெண்கள் உட்பட அனைவரும் வேண்டாம் நீங்கள் பேசுங்கள் என கூறினர். அதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் தன் பேச்சை தொடர்ந்தார்.

    இதனால் கூட்டத்தில் கலகலப்பு ஏற்பட்டது.

    • நாம் கட்டும் வரி ஒரு ரூபாயில் 29 பைசா தருவதால் மோடி பிரதமர் அல்ல மிஸ்டர் 29 பைசா.
    • தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர்.

    ராணிப்பேட்டை:

    அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரசாரம் செய்தார். ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா, ஆகிய இடங்களில் வாக்கு சேகரித்தார்.

    ஆற்காட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    ஆற்காட்டில் புதிய பஸ் நிலையம், காவனூர் மருத்துவமனை, வணிகவளாகம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.

    சோளிங்கர் பனப்பாக்கத்தில் 400 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சிப்காட் தொழிற்சாலை கூடிய விரைவில் திறக்கப்படும்.

    திண்டிவனம்-நகரி ரெயில் பாதை விரைந்து அமைக்கப்படும், விளாப்பாக்கம் கூட்டுறவு வங்கி, ஆற்காட்டில் அரசு கல்லூரிகள் அமைக்கப்படும்.

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்காததை கேட்டால் மத்திய அரசு நிதியில்லை என்று சொல்கிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு கோபம் வருகிறது.

    நாம் கட்டும் வரி ஒரு ரூபாயில் 29 பைசா தருவதால் மோடி பிரதமர் அல்ல மிஸ்டர் 29 பைசா.

    கவர்னர் ஆர்.என்.ரவி அல்ல, ஆர்.எஸ்.எஸ்.ரவி, வின்னர் படத்தில் வரும் கைப்புள்ள கதாப்பாத்திரம் போன்றவர் கவர்னர் ஆர்.என்.ரவி.

    தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர்.

    இவ்வாறு அமைச்சர் உதயநிதி பேசினார்.

    உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசார கூட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • இந்திய விண்வெளி திட்ட ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளுக்கான அதிநவீன உந்துவிசை தொழில்நுட்பம் மகேந்திரகிரியில் உருவாக்கப்படுகிறது.
    • காஞ்சிபுரம் சாலையில் சுமார் 3 மணி நெரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அரக்கோணம்:

    அரக்கோணம் சிட்கோ தொழிற் பேட்டையில் பிரபல தனியார் நிறுவனத்தின் கனரக லாரி தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது.

    இந்த தொழிற்சாலையில் தற்போது திருநெல்வேலி மாவட்டம், மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோவிற்கு தேவைப்படும் அதிநவீன கனரக லாரியை தயாரித்து சாலை மார்க்கமாக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து தொழிற்சா லையின் தலைமை செயல் அலுவலர் தெரிவித்தாவது:-

    இந்திய விண்வெளிதிட்ட ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளுக்கான அதிநவீன உந்துவிசை தொழில்நுட்பம் மகேந்திரகிரியில் உருவாக்கப்படுகிறது.

    அதன் பிறகு அவற்றை இஸ்ரோவின் ஏவுதளமான ஸ்ரீஹரி கோட்டாவுக்கு கொண்டு செல்ல இந்த பிரம்மாண்ட லாரி பயன்படும்.

    லாரியின் விலை ரூ.1.40 கோடி ஆகும். இந்த லாரி 74 அடிநீளமும், 17.5 அடி அகலமும் 17 அடி உயரமும் கொண்டது. இதன் மேற்புரம் தானாக திறந்து கொள்ளும் வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

    மேலும் இந்த வாகனம் எந்த பக்கமும் தானே திரும்பிக்கொள்ளும் சிறப்பு ஸ்டேரிங் வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த வாகனத்தின் மூலம் மகேந்திரகிரியில் தயாராகும் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகளை மிகுந்த பாதுகாப்புடன் ஸ்ரீஹரி கோட்டாவுக்கு அனுப்ப முடியும்.

    மழை உள்ளிட்ட அனைத்து வித பாதிப்புகளையும் தாங்கி உள்ளே இருக்கும் ராக்கெட்டை பாதுகாப்புடன் கொண்டுச் செல்வதற்காக முழுவதும் இந்திய தொழில்நுட்பத்துடன் இந்த வாகனம் தயாரிக்கப்பட்டுள்ளது.

    இதற்கு முன் பெங்களூருவில் உள்ள இஸ்ரோவிற்கு இரு சிறிய ரக லாரிகளை அனுப்பி வைத்தோம். தற்போது மகேந்திரகிரிக்கு மிகவும் நவீன முறையில் தயார் செய்யப்பட்ட பிரம்மாண்ட லாரியை உருவாக்கி அனுப்பி வைத்துள்ளோம்.

    மேலும் திருவனந்தபுரம் தும்பாவில் உள்ள இஸ்ரோ தளத்திற்கு ஒரு லாரி தயாரிக்கும் ஒப்பந்தம் பெறப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்ப ட்டுள்ளன என்றார்.

    இந்நிலையில் லாரி அரக்கோணத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வழியாக மகேந்திரகிரிக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது.

    அதன்படி லாரி நேற்று மாலை அரக்கோணம்-காஞ்சிபுரம் சாலையில் சென்றது. லாரி மிகவும் நீளமாகவும், அகலமாகவும் இருந்ததால் அந்த வழியில் நெரிசல் ஏற்பட்டது.

    இதனால் காஞ்சிபுரம் சாலையில் சுமார் 3 மணி நெரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×