என் மலர்
கோயம்புத்தூர்
- ஒவ்வொரு மாத சிவராத்திரிக்கும் தென்கைலாய பக்திப் பேரவை சிவாங்கா யாத்திரை நடத்துகிறது
- பக்தர்கள் 42 நாட்களுக்கு முன்பே பதிவு செய்துகொண்டு தங்கள் விரதத்தை துவக்குகின்றனர்.
அன்பு மிகுதியான நிலையே பக்தி. கடவுளின் மீதான அன்பு பக்தியாக மாறுவதும், அந்த பக்தி காதலாக மாறுவதும் நாம் பல பக்தர்களிடம் கண்டதும் கேள்விப்பட்டதும் உண்டு. அப்படி சிவனின் மீது காதல்கொண்ட தென் தமிழகத்தைச்சேர்ந்த ஒரு பெண், 'மணந்தால் சிவனைத் தான் மணப்பெண் இல்லையேல் உயிர் துறப்பேன்' எனத் தவமிருந்தாள். அவளது பக்தியின் தீவிரம் கண்டு மனமிறங்கிய சிவன், தென்னகத்தை நோக்கி வருகிறார். சூரிய அஸ்தமனத்திற்குள்ளாக வராவிட்டால் உயிரை மாய்த்துக்கொள்வேன் என்ற அந்தப்பெண்ணைக் காண அவர் வந்துகொண்டிருந்தபோது, சுற்றத்தார் இவளிடம் சூரிய அஸ்தமனம் ஆகிவிட்டதாக காண்பித்து உயிரை மாய்த்து கொள்ளச் செய்தார்கள்.
இத்தனை அன்பாக இருந்த ஒரு உயிர் போக காரணமாகிவிட்டோமென்ற மன வருத்தத்தில் அவர் அமர்ந்த மலை வெள்ளியங்கிரி மலை. அப்படி சிவபெருமான் அமர்ந்து சென்றதால் இந்த வெள்ளியங்கிரி மலை, 'தென்கயிலாயம்' என்றழைக்கப்பட்டு சக்திமிக்க திருத்தலமாக, திருக்கோயிலாக வீற்றிருக்கிறது.
இந்த மலைக்கு ஒவ்வொரு வருடமும் பல பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகிறார்கள். ஆனால் இத்தகைய சக்திமிக்க தலத்திற்கு சுற்றுலா செல்வதைப்போல் சென்று வராமல் தகுந்த உடல். மன நிலையோடு அருளை உள்வாங்கிக் கொள்ள ஏதுவாய் மலை ஏறி வரும்போது, தங்களின் வாழ்க்கையே மாறுகிறது என்று பலரும் ஆனந்த கண்ணீரோடு பகிர்ந்துகொள்கிறார்கள்.
ஒவ்வொரு மாத சிவராத்திரிக்கும் தென்கைலாய பக்திப் பேரவை நடத்தும் இந்த சிவாங்கா யாத்திரையில் கலந்துகொள்ள பக்தர்கள் 42 நாட்களுக்கு முன்பே பதிவு செய்துகொண்டு தங்கள் விரதத்தை துவக்குகின்றனர். இருவேளை உணவு, சிவ நமஸ்காரம் எனும் யோகப் பயிற்சிஉள்ளிட்ட செயல்முறைகளோடு மிகத் தீவிரமான பக்தியில் இருக்கின்றனர்.
வழக்கமாக புனித தலங்களுக்கு செல்லும்போது இரண்டு நாள் தினசரி வேலைகளுக்கு விடுப்பு கொடுத்து பேருந்து, கார் என எதிலாவது பயணித்து அரக்கப்பரக்க கோயில்களுக்கு சென்றுவிட்டு திரும்புவது வாடிக்கை. ஆனால் திருத்தலங்களுக்கு செல்வதற்குமுன் முறையாக விரதமிருந்து, அருளைப் பெற நம்மை நாமே தயார் செய்துகொண்டு வேலை, தொழில், குடும்பம் என எல்லோருக்கும் போல கடமைகள் இருந்தாலும், அவற்றை இரண்டாம்பட்சமாக்கி, பல நாட்கள் பாத யாத்திரையாக கோயில்களுக்கு செல்வதும் நமது கலாச்சாரத்தில் இருக்கின்றது.
சிவாங்கா விரதத்தில் பாதயாத்திரை என்பது கட்டாயம் இல்லை என்றாலும் பலரும் எதற்காக விரும்பி பாத யாத்திரையை தேர்ந்தெடுக்கிறார்கள்?
பாத யாத்திரை என்பது மிகுந்த தொலைவை நடந்து கடக்கும்போது ஏற்படும் உடல் வலி, 12 மணிக்கு மேல் தான், அதுவும் இருவேளை உணவுதான் உண்ணவேண்டும் ஆகிய கட்டுப்பாடுகளை பின்பற்றி பசி, வலி உள்ளிட்ட உடல் தேவைகளை தாண்டிச் செல்வது, வாழ்க்கையை முற்றிலும் வேறு பரிமாணத்தில் பார்க்க வழிசெய்கிறது.
அவர்களுக்கும் நம்மைப்போல சாதாரண வாழ்க்கை சூழல்தான் என்றாலும் 500 முதல் 700 கிலோ மீட்டர்கள் 20 நாட்கள், 30 நாட்கள் என நடந்தே வருவது. நம்மால் முடியாது என ஒரு குறுகிய வட்டத்திற்குள் இருக்கும் நம்மை மனித இனத்திற்கான உச்சபட்ச சாத்தியங்களை நோக்கி நகர்த்துகிறது இந்த ஆன்மீக சாதனை. இதுவே நமது தனிப்பட்ட வாழ்க்கையில், நமது நலம், வளம் என நமக்கு தேவையான எல்லாமே கிடைக்கவும் துணைபுரிகிறது.
நம் அன்றாட வாழ்க்கைக்காக நாம் வாழ்க்கை முழுக்க இயங்கிக்கொண்டே தான் இருக்கிறோம். அதிலேயே நமது மன நலம், உடல் நலத்தை இழந்து கடமையே என்று வாழ்ந்துவருகிறோம். அறுபது எழுபது வருடங்கள் இப்படியே ஓடியோடி இறுதியில் ஒன்றுமே கிடைக்காதைப் போல வருந்தி வாழ்க்கையை நிறைவுசெய்கிறோம்.
காலகாலமாய் கூட்டம் கூட்டமாக செய்துகொண்டிருக்கும் இந்த சடங்கு போலான சலிப்பான வாழ்க்கையிலிருந்து பாதையை மாற்றி நமது உள்நிலையை கவனித்தால்தான் புறச்சூழலும் நன்றாக அமையும் என்பதை உணர்ந்த பலரும் இந்த சிவாங்கா விரதத்தை மேற்கொண்டு, அளப்பரிய பலன்களை பெறுகிறார்கள். பல நாட்களாக இருந்த உடல் உபாதைகள், குடும்ப வாழ்வின் குழப்பங்கள், பொருளாதாரம் என எல்லாமே நமக்கு வேண்டியதைப்போல கிடைத்தன என்று பலரும் பகிர்ந்துகொள்கிறார்கள். அதனை உணர்ந்து அனுபவித்த அவர்கள் ஒவ்வொரு வருடமும் திரும்பத் திரும்ப சிவாங்கா யாத்திரை வருவதைப் பார்ப்பதே சிலிர்ப்பானதொரு பக்தி அனுபவமாக இருக்கிறது.
சிவாங்கா யாத்திரை குறித்த கூடுதல் தகவல்களுக்கு +9183000 83111 என்ற எண்ணையும், info@shivanga.org என்கிற மின்னஞ்சலையும் தொடர்பு கொள்ளலாம்
- சுந்தர மூர்த்திக்கு பேன்சி கடையில் வேலை பார்த்த இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.
- 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
கோவை,
கோவை தெலுங்குபாளையம் வேடப்பட்டி ரோட்டை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 24). இவர் சலீவன் வீதியில் உள்ள நகைப்பட்டறையில் வேலை பார்த்து வருகிறார்.
அப்போது சுந்தர மூர்த்திக்கு ராஜவீதியில் உள்ள பேன்சி கடையில் வேலை பார்த்த செல்வபுரத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது.கடந்த டிசம்பர் 25-ந் தேதி வேலைக்கு சென்ற இளம்பெண் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவர் தனது தாயின் செல்போனுக்கு நான் சுந்தரமூர்த்தி என்பவரை காதலித்ததாகவும், அவருடன் வந்துவிட்டதாகவும் தன்னை யாரும் தேட வேண்டாம் என மெசேஜ் அனுப்பினார்.
இளம்பெண்ணை சுந்தரமூர்த்தி அழைத்து சென்றார். பின்னர் 10 நாட்களுக்கு பின்னர் 2 பேரும் கோவை க்கு திரும்பினர். இருவரும் தங்களது வீட்டுகளுக்கு தனித்தனியாக சென்றனர். வீட்டுக்கு சென்ற இளம்பெண் தனது பெற்றோரிடம் சுந்தரமூர்த்தியை அவர் திருமணம் செய்ய வில்லை என்று கூறியதாக தெரிகிறது. இதையடுத்து இளம்பெண் மீண்டும் பேன்சி கடைக்கு வேலைக்கு சென்றார்.
ஆனால், சுந்தரமூர்த்தி இளம்பெண்ணை பின்தொடர்ந்து தன்னுடன் வருமாறு அழைத்தார். ஆனால் அவர் செல்ல மறுத்து விட்டார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
சம்பவத்தன்று சுந்தரமூர்த்தி தனது நண்பர் ஹரிஹரன் (23) என்பவருடன் காதலி வீட்டுக்கு சென்று இளம்பெண்ணின் தாயாரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கினார். அப்போது அங்கு வந்த இளம்பெண்ணின் உறவினர் செல்வின் (19) அவரது நண்பர் மெக்கானிக் பிரகாஷ் (19) ஆகிய இருவரும் சேர்ந்து சுந்தரமூர்த்தியை தாக்கி கத்தியால் குத்தினர். ஹரிஹரனையும் தாக்கி மிரட்டல் விடுத்தனர்.
கத்தி குத்தில் காயமடைந்து உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இது குறித்து இருதரப்பினரும் செல்வபுரம் போலீசில் அளித்தனர்.
புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோதலில் ஈடுபட்டு கத்தியால் குத்திய செல்வின், பிரகாஷ், ஹரிஹரன் ஆகிய 3 பேரை கைது செய்தனர், பின்னர் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். மேலும் சுந்தரமூர்த்தி மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- ஊடுருவிய மரத் தாவர மேலாண்மை குறித்து சர்வதேச அளவிலான 2 நாள் கருத்தரங்கு நேற்று தொடங்கியது.
- வனத்தில் பரவும் உன்னி செடிகளால் வன உயிரினங்களுக்கு எந்த பயனும் இல்லை. அதுமட்டுமில்லாமல் அது வனத்திற்கும் கேடு விளைவித்து மண் வளத்தை பாதிக்கிறது.
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ஊடுருவிய மரத் தாவர மேலாண்மை குறித்து சர்வதேச அளவிலான 2 நாள் கருத்தரங்கு நேற்று தொடங்கியது.
மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி முதல்வர் பார்த்திபன் தலைமை தாங்கினார். கருத்தரங்கில் தமிழ்நாடு வனத்துறை முதன்மை தலைமை வன பாதுகாவலர் சுப்ரத்மொகபத்ரா, மாநில திட்டக்குழு உறுப்பினர் சுல்தான் இஸ்மாயில், சுதா ஐ.எப்.எஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
தொடர்ந்து மாநில முதன்மை தலைமை வன பாதுகாவலர் சுப்ரத்மொகபத்ரா, மாநில திட்டக்குழு உறுப்பினர் சுல்தான் இஸ்மாயில் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அப்போது அவர் கூறியதாவது:-
நாட்டில் உள்ள வனப்பகுதியில் கருவேல மரங்கள், உன்னி செடிகள், பார்த்தீனியம் உள்ளிட்ட ஏராளமான அந்நிய தாவரங்களால் இயற்கை வளம் பாதிக்கப்படுகிறது.
குறிப்பாக வனத்தில் பரவும் உன்னி செடிகளால் வன உயிரினங்களுக்கு எந்த பயனும் இல்லை. அதுமட்டுமில்லாமல் அது வனத்திற்கும் கேடு விளைவித்து மண் வளத்தை பாதிக்கிறது.
எனவே இதனை களையெடுக்க தமிழகத்தில் தற்போது மாநில திட்ட கமிஷன் நிதியுதவியுடன் புதிய திட்டம் ஏற்படுத்தப்படுகிறது. வனத்தில் உன்னி செடிகளை அகற்றி நாட்டு மரங்களை அதிகளவில் ஏற்படுத்துவதால் வனவிலங்குகளுக்கான உணவு சங்கிலி பாதுகாக்கப்படும்.
எனவே அதனை விரைந்து செயல்படுத்த 5 மாநில வன அதிகாரிகள் கருத்தரங்கில் வலியுறுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதில் சென்னை மாநில திடட கமிஷன் உறுப்பினர்கள் டி.ஆர்.பி ராஜா, சீனிவாசன் கருத்தரங்கை தொடங்கி வைத்தனர். இதில் தமிழ்நாடு, கேரளா, மராட்டியம், உத்தராஞ்சல், கர்நாடகா மாநில வனபாதுகாப்பு அலுவலர்கள், விஞ்ஞானிகள், ஆராய்ச்சி மாணவர்கள், தொண்டு நிறுவனங்கள், தொழில் முனைவர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட பயனாளிகளான மாநில திட்டக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலை பேராசிரியர் முனைவர் சேகர் நன்றி கூறினார்.
- சாக்கு மூட்டையை தூக்கிக்கொண்டு ஒருவர் சென்று கொண்டிருந்தார்.
- அந்த நபரை பிடித்து சூலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
சூலூர்,
சூலூர் அருகே பட்டணத்தில் செல்போன் டவர் ஒன்று அமைந்துள்ளது. இங்கு செல்போன் டவர்களை கண்காணிக்கும் பணியினை தங்கராஜ் கவனித்து வருகிறார். இவர் வழக்கம்போல் செல்போன் டவர்களை பார்த்துவிட்டு பட்டணம் வந்தபோது அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் சாக்கு மூட்டையை தூக்கிக்கொண்டு ஒருவர் சென்று கொண்டிருந்தார்.
உடனே அவரை நிறுத்தி சாக்கு மூட்டையில் என்ன இருக்கிறது என சோதனை செய்தார். சோதனையில் செல்போன் டவரில் பயன்படுத்தப்படும் பேட்டரிகளை திருடி சாக்கு மூட்டையில் வைத்திருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து அந்த நபரை பிடித்து சூலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் பேட்டரி திருடியவரை சூலூர் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர் தேனி தென்கரை மாதா கோயில் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் ஜெட்லி (வயது27) என தெரிய வந்தது. இதனையடுத்து சூலூர் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
தொடர்ந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
- விவேகானந்தகுமார் கடந்த 1 வருடமாக மது அருந்தி விட்டு அப்பகுதி பொதுமக்களிடம் அடிக்கடி பிரச்சினை செய்து வந்தார்
- விவேகானந்தகுமாரை கைது செய்தனர்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே நெல்லித்துறை பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் சீனிவாசன் (வயது49). இவர் தனது விவசாய நிலத்தில் குடும்பத்துடன் தங்கி விவசாயம் செய்து வருகிறார். இவர் நெல்லித்துறை ஊராட்சியின் முன்னாள் தலைவராக பதவி வகித்தவர்.இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த ரங்கசாமி மகன் விவேகானந்தகுமார் (வயது48). இவர் கடந்த 1 வருடமாக மது அருந்தி விட்டு அப்பகுதி பொதுமக்களிடம் அடிக்கடி பிரச்சினை செய்து வந்தார். இதுகுறித்து சீனிவாசன் அவரை கூப்பிட்டு அறிவுரை கூறியுள்ளார். இதனையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று சீனிவாசன் தனது மொபட்டில் தங்கவேல் என்பவரது தோட்டத்திற்கு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அப்போது அவரை வழிமறித்த விவேகானந்தகுமார் தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதோடு மொபட்டையும் சேதப்படுத்தியுள்ளார்.
இதனால் சீனிவாசனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் முருகநாதன் வழக்குப்பதிவு செய்து விவேகானந்தகுமாரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- காளிமுத்து குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் காவ லாளியாக வேலை பார்த்து வந்தார்.
- காளிமுத்துவும், அவரது மனைவி பிரியாவும் வாயில் இருந்து நுரை தள்ளியபடி அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.
கோவை,
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 57). இவரது மனைவி பிரியா (45). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
காளிமுத்து கோவில்பா ளையம் அருகே உள்ள பண்ணாரியம்மன் நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். அவரது குடும்பத்தினரும் இங்கேயே வசித்து வந்தனர்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த காளிமுத்துவும், அவரது மனைவி பிரியாவும் வாயில் இருந்து நுரை தள்ளியபடி அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த தகவல் கிடைத்ததும் கோவில்பாளையம் போலீசார் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் காவலாளி காளிமுத்துவின் நடவடிக்கைகள் சரியில்லாததால் அவரை கடந்த 23-ந் தேதி முதல் வேலையை விட்டு நிறுத்தி உள்ளனர். மேலும் அவர் குடும்பத்துடன் குடியிருந்து வரும் வீட்டை காலி செய்யுமாறு கூறி உள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த காளிமுத்து மனைவியுடன் தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. விஷத்தை குழம்பில் கலந்து 2 பேரும் சாப்பிட்டுள்ளனர். இதில் தான் அவர்கள் மயங்கி விழுந்தது தெரியவந்தது.
இது குறித்து கோவில்பா ளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லை.
- அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோவையை அடுத்த மருதமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூச திருவிழா வெகுவிமா்சையாக நடைபெறும். இந்்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் சுவாமிக்கு பல்வேறு பூஜைகள் நடைபெற்று வந்தன. விழாவையொட்டி சுப்பிரமணியசுவாமி கோவில் வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. கொரோனா காலத்திற்கு பிறகு தேரோட்டம் நடைபெறுவதால் அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தைப்பூச தேரோட்டத்தையொட்டி மருதமலை கோவிலில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த பணிகளை பார்வையிட கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் நேற்று மருதமலை கோவிலுக்கு வந்தார்.
தொடர்ந்து வாகன நிறுத்தும் இடம், பக்தர்கள் பாதுகாப்பாக பாதயாத்திரை வருவதற்கான வழிப்பாதைகள், மலைப்பாதை, மலைக்கோவில் மீது சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வழிகள், தேர் சுற்றி வரும் கோவில் வளாகம், ராஜகோபுர பகுதி ஆகியவற்றை பார்வையிட்டார். பின்னர் அங்கு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கோவில் நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.
தைப்பூச திருவிழாவையொட்டி மலைக்கோவிலுக்கு செல்ல இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லாததால், மருதமலை அடிவாரப்பகுதியில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் இருந்து கோவில் சார்பில் மினி பஸ்கள் அங்கேயே நிறுத்தப்பட்டு பக்தர்களை மலைக் கோவிலுக்கு ஏற்றி செல்லும்படி கோவில் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் பக்தர்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பிட வசதி மற்றும் பாதுகாப்பாக சென்று தரிசனம் செய்யும் வசதி ஆகியவற்றை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோவில் நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது பேரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜபாண்டியன், வடவள்ளி இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை ஆகியோர் உடன் இருந்தனர்.
- திருமண ஆசை காட்டி சிறுமியை ஏமாற்றிய அவரது காதலன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
- போலீசார் தேடுவதால் காதலன் தலைமறைவாகி விட்டார்.
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி.
இவர் பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-
நான் பிளஸ்-2 வரை படித்து முடித்து விட்டு பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தேன். அப்போது அந்த நிறுவனத்தின் உரிமையாளரின் 27 வயது மகனுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் எங்களது காதலை வளர்த்து வந்தோம். இந்த காதல் விவகாரம் எங்களது பெற்றோருக்கு தெரிய வரவே எதிர்ப்பு கிளம்பியது.
இந்தநிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 7-ந்தேதி நாங்கள் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறினோம். பின்னர் என்னை எனது காதலன் தர்மபுரிக்கு அழைத்து சென்றார். கணவன்-மனைவி என கூறி பஸ் நிலையம் அருகே உள்ள வீட்டில் குடியிருந்தோம். பின்னர் அந்த பகுதியில் உள்ள துணிக்கடையில் வேலைக்கு சேர்ந்தோம்.
நாங்கள் 2 பேரும் திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் வசித்து வந்தோம். அப்போது எனது காதலன் என்னிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தார்.
கடந்த சில நாட்களாக எங்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக எனது காதலன் என்னிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன் பின்னர் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அவர் வேலை செய்யும் துணிக்கடைக்கு சென்று கேட்ட போது கணக்கை முடித்து பணத்தை வாங்கி சென்று விட்டதாக கூறினார்.
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று 5 மாதம் என்னை பலாத்காரம் செய்து விட்டு ஏமாற்றி சென்ற எனது காதலன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.
புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். சிறுமியை போலீசார் பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து திருமண ஆசை காட்டி சிறுமியை ஏமாற்றிய அவரது காதலன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் தேடுவதால் அவர் தலைமறைவாகி விட்டார்.
- என்.ஐ.ஏ. அதிகாரிகள் இந்த வழக்கில் முகமது அசாருதீன், அப்சர்கான் உள்பட 11 பேரை கைது செய்தனர்.
- என்.ஐ.ஏ. அதிகாரிகள் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை:
கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி கார் வெடிப்பு நிகழ்ந்தது.
இதில் காரில் இருந்த ஜமேஷா முபின் உயிரிழந்தான். போலீசாரின் விசாரணையில், ஜமேஷா முபின் கோவையில் மிகப்பெரிய நாசவேலைக்கு திட்டமிட்டதும், அதில் சிக்கி அவரே இறந்ததும் தெரியவந்தது.
மேலும் இதுபோன்று கோவையில் பல இடங்களில் நாசவேலையை அரங்கேற்ற திட்டமிட்ட தகவலும் தெரியவந்தது.
இதற்கிடையே இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் இந்த வழக்கில் முகமது அசாருதீன், அப்சர்கான் உள்பட 11 பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அனைவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தி பல்வேறு தகவல்களை சேகரித்தனர். மேலும் அவர்களை காவலில் எடுத்து கோவை, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் அழைத்து வந்தும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அவர்களின் வீடு, அவர்கள் சந்தித்துக்கொண்ட இடங்களுக்கு எல்லாம் அழைத்து சென்று விசாரித்தனர்.
இந்த நிலையில் முகமது அசாருதீன், அப்சர்கான், பெரோஸ்கான், முகமது தவுபிக், ஷேக் இதயத்துல்லா, சனோபர் அலி, முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 7 பேரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு என்.ஐ.ஏ. அதிகாரிகள் பூந்தமல்லி என்.ஐ.ஏ. கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதி 7 பேரையும் 7 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தார்.
அதனை தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் 7 பேரையும் நேற்று கோவைக்கு அழைத்து வந்தனர்.
பின்னர் அவர்களை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
தொடர்ந்து, கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் நள்ளிரவு முதல் விடிய விடிய விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது முபின் குறித்தும், இவர்கள் வேறு எங்கு எல்லாம் இதுபோன்ற செயலை அரங்கேற்ற திட்டம் தீட்டினர், வேறு யாருக்காவது இதில் தொடர்பு உள்ளதா? முபின் உங்களிடம் கூறிய தகவல் என்ன? என்பது உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் கூறிய தகவல்களை அதிகாரிகள் வீடியோ மற்றும் ஆடியோவாக பதிவு செய்து கொண்டனர்.
தொடர்ந்து அவர்களை வீடுகள் மற்றும் அவர்கள் சந்தித்து பேசிய இடங்களுக்கும் நேரில் அழைத்து சென்று விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
மேலும் இவர்கள் கூட்டம் நடத்தியதாக கூறப்படும் சத்தியமங்கலம் பகுதிக்கு அழைத்து சென்று விசாரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
தற்போது என்.ஐ.ஏ. அதிகாரிகள் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வழக்கில் இதுவரை கிடைத்த தகவல்களை அனைத்தையும் ஆவணங்களாக தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் அவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள், வீடுகளில் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள், போலீசார் விசாரணையின்போது கொடுத்த ஆவணங்கள், முபின் வீட்டில் கைப்பற்றப்பட்ட பல்வேறு பொருட்களையும் ஆதாரமாக சேர்த்து குற்றபத்திரிகையினை தயாரித்து வருகின்றனர்.
விரைவில் இந்த வழக்கு சம்பந்தமாக குற்றப்பத்திரிகையை தயாரித்து என்.ஐ.ஏ. கோர்ட்டில் தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 112 அடியில் ஆதியோகியின் மார்பளவு திருவுருவம் 2017-ம் ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.
- மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஆண்டுதோறும் ஆதியோகி ரத யாத்திரை நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட மக்களும் தங்கள் ஊர்களிலேயே ஆதியோகியை தரிசித்து அவரின் அருளை பெற வாய்ப்பளிக்கும் ஆதியோகி ரத யாத்திரை மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த யாத்திரையின் மூலம் ஒவ்வொரு ஊரிலும் ஆயிரக்கணக்கான மக்கள் ஆதியோகியை நேரில் தரிசனம் செய்து வருகின்றனர்.
உலகில் தோன்றிய முதல் யோகியான சிவன் சப்தரிஷிகளுக்கு (அகத்தியர் உள்ளிட்ட 7 ரிஷிகளுக்கு) யோக விஞ்ஞானம் முழுவதையும் பரிமாறினார். சப்தரிஷிகள் ஒவ்வொருவரும் அந்த விஞ்ஞானத்தை மிகுந்த அர்ப்பணிப்புடன் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்து சென்றனர். இது ஆன்மீகத்தில் மாபெரும் அமைதி புரட்சி நிகழ அடித்தளமாக அமைந்தது.
யோக கலாச்சாரம் உலகம் முழுவதும் பரவுவதற்கு முழுமுதற்காரணமாக இருக்கும் ஆதியோகி சிவனுக்கு நன்றியை வெளிப்படுத்தும் விதமாக கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் 112 அடியில் ஆதியோகியின் மார்பளவு திருவுருவம் சத்குரு அவர்களால் 2017-ம் ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையடுத்து, ஆதியோகியை தரிசித்து அவரின் அருளை பெறுவதற்காக தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் வருகை தருகின்றனர்.
இந்நிலையில், கோவையில் செயல்படும் தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் மஹாசிவராத்திரியை முன்னிட்டு ஆண்டுதோறும் ஆதியோகி ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, கோவைக்கு வந்து ஆதியோகியை தரிசிக்க இயலாமல் இருக்கும் மக்கள் தங்கள் ஊர்களிலேயே அவரை தரிசிப்பதற்கு இந்த யாத்திரை வாய்ப்பளிக்கிறது.
அதன்படி, 7 அடி உயரமுள்ள ஆதியோகி திருவுருவத்துடன் கூடிய இந்த ரதங்கள் தமிழகத்தின் 4 திசைகளிலும் பயணித்து கொண்டு இருக்கின்றன. கோவையில் இருந்து கடந்த மாதம் புறப்பட்ட 5 ஆதியோகி ரதங்கள் 30-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் சுமார் 25 ஆயிரம் கி.மீ பயணித்து மஹாசிவராத்திரியன்று மீண்டும் கோவைக்கு திரும்பும் வகையில் இந்த யாத்திரை திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த யாத்திரையில் பிப்ரவரி 18-ம் தேதி கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்திலும், அந்தந்த மாவட்டங்களிலும் நடைபெறும் ஈஷா மஹாசிவராத்திரி விழாவிற்கு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.
- விவசாயம், புத்தகம் படிப்பது, வாழ்க்கையில் எவ்வாறு முன்னேறுவது என செயல்முறை வடிவில் பயிற்சி அளிப்பதற்காக அழைத்து சென்றனர்.
- மாணவர்களின் கல்வி வளர்ச்சியும், மூளைத்திறனும் அதிகரிக்கும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
வடவள்ளி:
கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ளது பொம்மனாம்பாளையம் கிராமம்.
இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் பொம்மனாம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இந்த பள்ளியில் படிக்கும் 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கல்வியை மட்டும் கற்பித்தால் போதாது அவர்களுக்கு வாழ்க்கையில் பல விஷயங்களை கற்று கொள்வதற்காக ஊக்கம் ஏற்படுத்தும் வகையில் ஒரு நாள் கல்வி சுற்றுலா அழைத்து செல்ல பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர்களான யுவராணி மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர் முடிவு செய்தனர்.
சுற்றுலா என்றவுடன் எங்காவது பூங்கா, சுற்றுலா தலங்கள், கண்காட்சி உள்ளிட்டவற்றிற்கு அழைத்து செல்வதை பார்த்திருப்போம்.
ஆனால் இந்த ஆசிரியர்கள் இருவரும் மாணவர்களை அப்படி அழைத்து செல்லாமல் விவசாயம், புத்தகம் படிப்பது, வாழ்க்கையில் எவ்வாறு முன்னேறுவது என செயல்முறை வடிவில் பயிற்சி அளிப்பதற்காக அழைத்து சென்றனர்.
இதற்காக ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படித்து வரும் 1 முதல் 3-ம் வகுப்பு மாணவ, மாணவிகளை தேர்வு செய்தனர். இதற்கு கிராம கல்வி சுற்றுலா என பெயரிட்டு மாணவர்களை அந்த பகுதியில் உள்ள அனைத்து இடங்களுக்கு அழைத்து சென்றனர்.
முதலில் அந்த பகுதியில் உள்ள நூலகத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு நூலகத்தில் வைக்கப்பட்டுள்ள நூல்கள் குறித்தும், அதன் நோக்கம் மற்றும் அதனை எழுதியவர்கள் குறித்து விரிவாக எடுத்து கூறினர்.
மேலும் மாணவர்கள் புத்தகம் படிப்பதன் மூலம் அவர்களது அறிவாற்றால் பெருகும், புதிய சிந்தனைகள், எண்ணங்கள் தோன்றும். மாணவர்களை அது நல்வழிப்படுத்தும் என்பது குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விளக்கினர்.
தொடர்ந்து அவர்களை பொம்மனாம்பாளையம் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு அழைத்து சென்றனர். அங்கு என்னென்ன பயிர்கள் பயிரிடப்படுகின்றன. எத்தனை நாளில் அறுவடை செய்யலாம். அறுவடை செய்த பொருளை எப்படி சந்தை படுத்துவது, பொருட்களுக்கு சந்தையில் கிடைக்கும் விலை இப்படி பல்வேறு விஷயங்களை விவசாயிகள் மாணவர்களுக்கு கூறினர்.
மாணவர்களும், அவர்கள் கூறியவற்றை ஆர்வமுடன் கேட்டு கொண்டனர். பின்னர் அங்கிருந்து நேராக அந்த பகுதியில் நியாய விலைக்கடையில் மாணவர்களுக்கு செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.
ரேஷன் கடையில் உள்ள பொருட்கள், அவை எப்படி கொடுக்கப்படுகின்றன என்பது குறித்து விளக்கப்பட்டது. மேலும் ஸ்மார்ட் கார்டு என்றால் என்ன?
ஸ்மார்ட் கார்டில் குடும்பத்தில் உள்ளவர்கள் பெயரை எப்படி இணைப்பது குறித்தும் விளக்கப்பட்டது. மேலும் அருகே உள்ள மளிகை கடைக்கு அழைத்து சென்று, நியாய விலைக்கடைக்கும், மளிகை கடைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தையும் எடுத்து கூறினர்.
இறுதியாக மாணவர்களை குமாரசாமி நகரில் உள்ள பூங்காவுக்கு அழைத்து சென்றனர். அங்கு மாணவர்கள், விளையாடி மகிழ்ந்து புகைப்படமும் எடுத்து கொண்டனர்.
இந்த ஒரு நாள் பயிற்சி என்பது மாணவர்களின் அறிவாற்றலை வளர்ப்பதுடன், அவர்கள் வருங்காலத்தில் என்ன ஆக விரும்புகிறார்களோ, அதனை அவர்களே சுயமாகவே முடிவு எடுத்து கொள்ளவும் உதவும். மேலும் மாணவர்களின் கல்வி வளர்ச்சியும், மூளைத்திறனும் அதிகரிக்கும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.