என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
அரியலூர்
- ராமதாஸ் என் மூச்சு இட ஒதுக்கீடு, சமூக நீதி என்று சொன்னார். அதற்கு எதிரான பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளார்.
- தமிழ்நாட்டு மக்களுக்கு சமூக நீதிக்காக போராடும் மக்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி செய்த மிகப்பெரிய துரோகம்.
ஜெயங்கொண்டம்:
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்துக்குமான போர் இது. பாஜக தலைவர்கள் என்னென்ன சொன்னார்களோ அதில் எல்லாம் எடப்பாடி கையொப்பமிட்டுவிட்டார்.
டாக்டர் ராமதாஸ் என் மூச்சு இட ஒதுக்கீடு, சமூக நீதி என்று சொன்னார். அதற்கு எதிரான பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளார்.
வன்னியர்களுக்கு எவ்வளவு பெரிய துரோகம். பாஜக சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க கூடாது என்கிறது. மோடியின் அதையே சொல்கிறார். தமிழ்நாட்டு மக்களுக்கு சமூக நீதிக்காக போராடும் மக்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி செய்த மிகப்பெரிய துரோகம்.
மோடி கொண்டு வந்த பண மதிப்பிழப்பு எல்லா வேலைவாய்ப்பும் போயிடுச்சு. மோடி 10 ஆண்டுகள் ஆட்சியில் ஒவ்வொரு குடிமகன் தலையிலும் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடன் சுமையை வச்சிருக்கார். இந்தக் கடனை அம்பானிக்கும் அதானிக்கும் வாங்கியுள்ளார். அவர்களுக்கு இதுவரை 14 லட்சம் கோடி ரூபாயை தாரை வார்த்து கொடுத்து இருக்கிறார். தமிழ்நாட்டில் கொடுத்த ஒரு வாக்குறுதி கூட மோடி நிறை வேற்றவில்லை, திராவிட முன்னேற்றக் கழகம் கொடுத்த வாக்குறுதிகளை 80 சதவீதம் 2 ஆண்டுகளிள் நிறைவேற்றி உள்ளார்கள். சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.
- அ.தி.முக.வை யாரும் மிரட்ட முடியாது, எந்த பூச்சாண்டிக்கும் அ.தி.மு.க. பயப்படாது.
- அ.தி.மு.க.வை யார் அழிக்க நினைத்தாலும் அவர்கள் காற்றோடு கரைந்து போய் விடுவார்கள் என்றார்.
அரியலூர்:
அரியலூரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசியதாவது:
இந்த தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க., காணாமல் போகும் என சிலர் பேசுகின்றனர். ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு யார் காணாமல் போவார் என்று மக்கள் முடிவு செய்வார்கள். வெயில் காலத்தில் உஷ்ணம் அதிகமாகி விட்டதால்தான் இப்படி பேசுகின்றனர்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களை பார்க்கவே இல்லை. தேர்தல் காரணமாக தற்போதுதான் தேநீர் கடைக்கு வந்து மக்களைச் சந்தித்துள்ளார்.
சைக்கிள் ஓட்டுவது, உடற்பயிற்சி மற்றும் நடைபயணம் செய்வதை மட்டுமே முதல்வர் செய்கிறார். தி.மு.க.வினர் அராஜகத்தில் ஈடுபடுகின்றனர்.
மகளிர் உரிமைத்தொகை கிடைக்க அ.தி.மு.க. கொடுத்த அழுத்தமே காரணம்.
மக்கள் எங்கள் பக்கம் இருக்கின்றனர் என ஸ்டாலின் கூறுகிறார். ஆம் அவர்கள் பக்கம் இருக்கின்றனர். ஆனால், எங்களுக்கு ஓட்டுப் போடுவார்கள்.
எப்போதும் குடும்பத்தைப் பற்றி சிந்திக்கும் முதல்வராக ஸ்டாலின் உள்ளார். தமக்கு மக்கள் செல்வாக்கு இல்லாததால் இந்தியா கூட்டணியை ஏற்படுத்தி வாக்கு கேட்கிறார் என தெரிவித்தார்.
- ஜூன் 4-ந்தேதிக்குப்பின் யார் காணாமல் போவார்கள் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.
- அதிமுக பொன்விழா கண்ட கட்சி. 50 ஆண்டுகள் நிறைவு செய்த கட்சி.
சிதம்பரம் தொகுதி வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
2024-க்குப் பிறகு அதிமுக கட்சி இருக்காது என சிலர் கூறுகிறார்கள். வேறு எங்கு போகும்?. அதிமுக இங்கேதான் இருக்கும். ஜூன் 4-ந்தேதிக்குப்பின் யார் காணாமல் போவார்கள் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். அதிமுக பொன்விழா கண்ட கட்சி. 50 ஆண்டுகள் நிறைவு செய்த கட்சி.
மதுரையில் பிரமாண்டமாக மாநில மாநாடு நடத்தினோம். அந்த மாநாடு இந்தியாவே திரும்பிப்பார்க்கும் மாநாடாக அமைந்தது. அது சில பேருக்கு புரியாமல்... வெயில் காலத்தில் உஷ்ணம் அதிகமாகிவிட்டது போலிக்கிறது. அதனால் இப்படி மாறிமாறி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அதிமுக-வை தோற்றுவித்தவர் எம்.ஜி.ஆர். அதை கட்டிக்காத்தவர் புரட்சித்தலைவி அம்மா. இருபெரும் தலைவர்களும் தெய்வமாக விளங்கிக் கொண்டிருக்கிறார்கள். தெய்வத்தின் அருள் ஆசியுடன் இருக்கக் கூடிய கட்சி அதிமுக என்பதை மறந்து கொண்டி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இது தெய்வ சக்தி உள்ள கட்சி. அழிக்க நினைத்தாலோ, முடக்க நினைத்தாலோ காற்றோடு காற்றாக கரைந்து போய் விடுவார்கள். இதுதான் வரலாறு. இந்த கட்சியை எத்தனையோ பேர் எதிர்த்தார்கள். அவர்கள் இருக்கும் இடம் தெரிகிறதா? எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை.
சிலர் பலத்தை தூக்கிக்கொண்டு திரிகிறார்கள். அவர்கள் யார் என்று நீங்களே தெரிந்து கொள்ளுங்கள். அதிமுக-வை நம்பியவர்கள் கெட்டுப்போன சரித்திரம் கிடையாது. அதிமுக-வை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போனதுதான் வரலாறு. அதிமுக-விடம் பூச்சாண்டி காட்டுவதை நிறுத்திவிடுங்கள். அதிமுக உழைப்பை நம்பி இருக்கின்றன கட்சி.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தேர்தலுக்குப் பிறகு அதிமுக அழிந்து போகும் எனத் தெரிவித்திருந்தார். மேலும், ஜூன் 4-ந்தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக இருக்காது. உண்மையான தலைவர்கள் கைக்கு கட்சி வந்துவிடும் எனத் தெரிவித்திருந்தார். அதற்கு தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
- செந்துறை போலீசார் ஒலி பெருக்கியின் மூலம் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும் பொதுமக்கள் யாரும் வெளியில் வரவேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர்.
- முந்திரி காட்டில் சிறுத்தையை தேடுதல் பணிகள் நடைபெற்று வருகிறது.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பொன்பரப்பி பகுதியில் 1000 ஏக்கர் பரப்பளவு உள்ள அரசு முந்திரிக் காட்டில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொன்பரப்பி கிராம மக்கள் சிலர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் தலைமையில் வனத்துறையினர் பொன்பரப்பி கிராமத்திற்கு சென்று கிராம மக்கள் கூறிய சிறுத்தையின் கால் தடம் மற்றும் அடையாளங்கள் குறித்து விசாரணை நடத்தினர்.
நேற்று நள்ளிரவு நெருக்கமான குடியிருப்புகள் மற்றும் ஆட்கள் நடமாட்டம் மிகுந்த செந்துறை அரசு மருத்துவமனைக்குள் சிறுத்தை புகுந்துள்ளது.
சிறுத்தை மருத்துவமனை சாலையின் குறுக்கே வந்து கம்பி வேலியை தாண்டி செல்லும் காட்சிகள் மருத்துவமனையில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது. இதனையடுத்து செந்துறை போலீசார் வாகனத்தில் சென்றபடி ஒலி பெருக்கியின் மூலம் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும் பொதுமக்கள் யாரும் வெளியில் வரவேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து மருத்துவமனையில் இருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளைப் பார்த்து இது சிறுத்தை தான் என்று உறுதி செய்தனர். அதனைத் தொடர்ந்து ஏற்கனவே மயிலாடுதுறையில் சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த சிறப்பு பிரிவு வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அவர்கள் விரைந்து வந்து தெர்மல் டிரோன் கேமராவை வைத்து சிறுத்தையை இருக்கும் இடத்தை கண்காணித்தனர். ஆனால் விடிய விடிய தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை முதல் சிமெண்ட் ஆலை சுரங்கம் மற்றும் முந்திரி காட்டில் சிறுத்தையை தேடுதல் பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் செந்துறை, பொன்பரப்பி ஆகிய ஊர்களில் முந்திரி காடுகள், நீர்நிலைகளில் கேமராக்கள் பொருத்தி கண்காணித்து வருகின்றனர். 3 பிரிவுகளாக பிரிந்து வனத்துறை அதிகாரிகள் கேமராக்களை பொருத்தினர்.
இந்நிலையில் சிறுத்தை நடமாட்டத்தால் ஏற்பட்ட அச்சம் காரணமாக அரியலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா உத்தரவிட்டுள்ளார்.
பள்ளி சென்ற மாணவர்கள் மதியம் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள் என மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
- செந்துரை அரசு மருத்துவமனைக்குள் சிறுத்தை செல்லும் சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது.
- பல்வேறு இடங்களில் சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மயிலாடுதுறை கூறைநாடு செம்மங்களம் பகுதியில் கடந்த 2-ம் தேதி இரவு சிறுத்தை நடமாட்டம் இருந்ததை பொதுமக்கள் பார்த்துள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்த வனத்துறை, தீயணைப்பு துறை, காவல் துறையினர் சிறுத்தையை தேடும் பணியை தொடங்கினர்.
இன்றுடன் 10 நாட்களாக அப்பகுதிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.
சிறுத்தையின் நடமாட்டம் பெரும்பாலும் ஆறு மற்றும் ஓடைகள் வழியாகவே இருக்கிறது.
நேற்று முன்தினம் காலை காஞ்சிவாய் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களை வனத்துறையினர் ஆய்வு செய்தனர். மேலும் சிறுத்தை பிடிப்பதற்காக வைக்கப்பட்ட கூண்டுகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று மதியம் முதல் சிறுத்தையின் நடமாட்டம் குறித்து எந்த தகவலும் பதிவாகவில்லை என வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதனால் சிறுத்தை மயிலாடுதுறை நகரை விட்டு வெளியேறி விட்டதோ? என்ற சந்தேகமும் எழுந்தது.
இந்நிலையில் மயிலாடுதுறையை தொடர்ந்து, அரியலூரிலும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
செந்துரை அரசு மருத்துவமனைக்குள் சிறுத்தை செல்லும் சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில்பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, பல்வேறு இடங்களில் சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
- வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லாத போது, வீட்டின் முன்புறம் செல்வேந்திரனின் பேரக்குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.
- வெளியே சென்றிருந்த செல்வேந்திரன் குடும்பத்தினர் வந்தபோது நடந்த விவரத்தை குழந்தைகளிடம் கேட்டு அறிந்தனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த கழுவன்தோண்டி கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் செல்வேந்திரன்-சாந்தி தம்பதியினர். இவர்கள் தங்களது மூத்த மகன் கலைவாணன், 2-வது மகன் கணேஷ் ஆகியோர்களுடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகின்றனர்.
இவர்கள் டெஷண்ட் வகையைச் சேர்ந்த நாயை 11 வருடங்களுக்கு முன்பு குட்டியாக எடுத்து வந்து ஹென்றி என்ற பெயர் வைத்து வளர்த்து வந்துள்ளனர். ஹென்றியின் பாசத்தால் அன்பால் தங்களது குடும்பத்தில் ஒரு மகனாக செல்வேந்திரன் குடும்பத்தினர் வளர்த்து வந்துள்ளனர்.
சுப நிகழ்ச்சிகளில் கூட ஒரு போட்டோ எடுப்பதாக இருந்தால் நாயுடன் தான் போட்டோ எடுத்துக்கொள்வார்கள். அந்த அளவிற்கு குடும்பத்தினருடன் ஒட்டி உறவாடி அன்புடன் 11 வருடங்களாக பழகி வந்துள்ளது நாய் ஹென்றி.
தீபாவளியில் அதிக சத்தத்துடன் பட்டாசு வெடித்தால் நாய் பயப்படும் என்பதால் சிறிய ரக சத்தம் குறைவான பட்டாசுகளையே செல்வேந்திரன் குடும்பத்தினர் வெடிப்பார்கள். அந்த அளவிற்கு குடும்பத்தில் ஒருவராக இருந்தது.
இந்நிலையில் வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லாத போது, வீட்டின் முன்புறம் செல்வேந்திரனின் பேரக்குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அருகில் உள்ள முந்திரி தோப்பில் இருந்து பாம்பு வந்தது.
இதை பார்த்த நாய் குலைத்து சத்தம் எழுப்பியத்துடன் குழந்தைகளை தன் காலால் தள்ளி பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தியது. பின்னர் வீட்டை நோக்கி வந்த பாம்பை உள்ளே விடாமல் போராடியது. அப்போது பாம்பு நாயை கடித்தது. எனினும் கவலைப்படாமல் பாம்பை நாய் குதறியது. இதில் பாம்பு செத்தது. பாம்பின் விஷத்தால் நாய் ஹென்றி மயங்கி விழுந்தது.
இதனிடையே வெளியே சென்றிருந்த செல்வேந்திரன் குடும்பத்தினர் வந்தபோது நடந்த விவரத்தை குழந்தைகளிடம் கேட்டு அறிந்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் நாயை தூக்கிக்கொண்டு கால்நடை மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து ஏற்கனவே பாம்பின் விஷத்தால் நாய் இறந்து விட்டதை தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வேந்திரன் குடும்பத்தினர் தங்கள் குடும்பத்தின் உறுப்பினர் ஒருவரை இழந்த தூக்கத்தில் குழந்தைகளை காப்பாற்றி வீரமரணம் அடைந்த நாய்க்கு டிஜிட்டல் பேனர் வைத்து கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களை ஒட்டி, உறவினர்கள், நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து உறவினர்கள், நண்பர்கள் அப்பகுதி பொதுமக்கள் முன்னிலையில் இறுதிச் சடங்கு செய்து அடக்கம் செய்தார்கள். மேலும் குடும்ப உறுப்பினர் இறந்தால் அனுசரிக்கப்படும் 14 நாள் துக்கம் அனுசரித்து சடங்குகள் செய்து வருகின்றனர்.
எஜமானரின் பேரக்குழந்தைகளை காப்பாற்ற நாய் போராடி உயிர்விட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- தமிழகத்தில் இன்னமும் பழைய கலாசாரம் கட்டி காக்கப்பட்டு வருகிறது.
- மருந்து உற்பத்தியில் 138 சதவீதம் இந்தியா வளர்ச்சி பெற்று உள்ளது.
அரியலூர்:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அந்த கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சிதம்பரம், கரூர் , விருதுநகர் தொகுதிகளில் இன்று பிரசாரம் செய்தார். இதற்காக நேற்று இரவு அவர் விமானம் மூலம் திருச்சிக்கு வந்தார். 3 தொகுதிகளுக்கும் அவர் ஹெலிகாப்டரில் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.
சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட அரியலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஜே.பி.நட்டா கலந்துகொண்டார்.
தமிழகத்தில் இன்னமும் பழைய கலாசாரம் கட்டி காக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பண்பாடு, சனாதன தர்மம் காப்பாற்றப்பட்டு வருகிறது. ஆனால் எதிரணியில் உள்ள தி.மு.க.வினர் சனாதனத்தையும், கலாசாரத்தையும் எப்படி ஒழிப்பது என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேலை பார்த்து வருகிறார்கள்.
பாராளுமன்றத்தில் மோடி தமிழகத்திற்கு திட்டங்களை கொண்டு வர நினைக்கும் போதெல்லாம் தி.மு.க.வும், காங்கிரசாரும், அவரை பேசவிடாமல் செய்து விடுகிறார்கள். ஆகவே தமிழக கலாசாரம், பண்பாடு, மொழியை பாதுகாக்க பா.ஜ.க. பாடுபட்டு கொண்டிருக்கிறது.
மோடி ஆட்சிக்கு வந்த பிறகு 2019-ம் ஆண்டு பொருளாதாரத்தில் உலக அளவில் 11-வது இடத்தில் இந்தியா இருந்தது. கொரோனா காலகட்டத்தில் அனைத்து நாடுகளும் பொருளாதாரத்தில் தோற்றுபோனாலும் கூட, மோடி அவர்கள் நிர்வாகத்தை திறமையாக கையாண்டதினால், இந்தியா பொருளாதாரத்தில் மிகப்பெரிய வளர்ச்சி பெற்று இந்தியா 5-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
2024-ம் ஆண்டு பா.ஜ.க. வெற்றி பெற்று, 3-வது முறையாக மோடி பிரதமரானால் பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடத்திற்கு முன்னேறும் என்பதில் சந்தேகம் இல்லை. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியா பொருளாதாரத்தில் 6 மடங்கு வளர்ச்சி பெற்று உள்ளது. 2014-ல் இந்தியாவில் பயன்பாட்டில் இருந்த செல்போன்களில் 97 சதவீதம் சீனாவில் தயாரிக்கப்பட்டதாக இருந்தது.
ஆனால் தற்போது 97 சதவீதம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மேட் இன் இந்தியா செல்போன்களே பயன்பாடடில் உள்ளது. அதற்கு காரணம் பா.ஜ.க.வின் தெளிவான பொருளாதார கொள்கைதான். கார் உற்பத்தியில் ஜப்பான் முதலிடத்திலும், அமெரிக்கா 2வது இடத்திலும் இருந்தது. தற்போது இந்தியா 2வது இடத்திற்கு வந்து விட்டது.
இதற்கு முன்பாக வெளிநாடுகளில் இருந்து மருந்து இறக்குமதி செய்யப்பட்டு கொண்டிருந்தது. தற்போது தரமான மருந்து உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து வருகிறோம். மருந்து உற்பத்தியில் 138 சதவீதம் இந்தியா வளர்ச்சி பெற்று உள்ளது. பெட்ரோலிய துறையிலும் 106 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளோம். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அனைத்து துறையிலும் நாடு முன்னேறும்.
ஏழை மக்களின் வளர்ச்சி, பெண்களுக்கு அதிகாரம், படித்த இளைஞர்களின் உயர்வு, விவசாயிகளின் பாதுகாப்பு, பட்டியலின மக்களின் வாழ்க்கை தரம் உயர்வு ஆகியவற்றில் அதிக கவனம் எடுத்த மோடி செயல்பட்டு வருகிறார். ஏழ்மையை அகற்றி வலிமையான இந்தியாவாக உருவாக்க அவர் பாடுபட்டு கொண்டிருக்கிறார்.
80 கோடி மக்களுக்கு 5 கிலோ அரிசி, அல்லது 5 கிலோ கோதுமை, ஒரு கிலோ பருப்பு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் இந்தியாவில் 25 சதவீத மக்கள் வறுமை கோட்டிற்கு மேல் வந்து விட்டனர் என்று உலக வங்கி கூறுகிறது.
நாடு முழுவதும் 11.78 கோடி விவசாயிகளுக்கும், அதில் தமிழகத்தில் 30 லட்சம் விவசாயிகளுக்கு வருடத்திற்கு கவுரவ நிதியாக 6 ஆயிரம் ரூபாய் பணம் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. சிதம்பரம் தொகுதியில் மட்டும் 2.5 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
10 கோடி பெண்களுக்கு இந்தியாவில் இலவச கேஸ் இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் தமிழகத்தில் 40 லட்சம் பேருக்கும், சிதம்பரம் தொகுதியில் 2.5 லட்சம் இலவச கேஸ் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் இந்தியாவில் 4 கோடி வீடுகள் கட்டப்பட்டு உள்ளது. இதில் 16 லட்சம் தமிழகத்திலும், 43 ஆயிரம் வீடுகள் சிதம்பரம் தொகுதியிலும் கட்டப்பட்டு உள்ளது.
ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் இந்தியாவில் 11.4 கோடி குடிநீர் இணைப்பும், இதில் தமிழகத்தில் 80 லட்சம், சிதம்பரத்தில் 4 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தின் மீது பிரதமர் மோடிக்கு தனி கவனம் உள்ளது. அதற்கு உதாரணம் தமிழகத்தின் வருவாய் 3 மடங்காக உயர்ந்துள்ளது.
மத்திய அரசு நிதியானது 4 மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. சுகாதாரத்துறைக்கு ரூ.1650 கோடி வழங்கப்பட்டு உள்ளது. கிராமபுற சாலை திட்டங்களுக்கு ரூ.630 கோடி வழங்கப்பட்டு உள்ளது. ஜல் ஜீவன் திட்டத்திற்காக ரூ.822 கோடி தமிழகத்திற்கு வழங்கப்பட்டு உள்ளது. கிராம வளர்ச்சிக்காக ரூ.10,800 கோடி வழங்கப்பட்டு உள்ளது.
ரெயில்வே திட்டங்களுக் 7 மடங்கு அதிகமாக தமிழகத்திற்கு வழங்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு தளவாடங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் சென்னை, திருச்சி, ஓசூர், கோவை, சேலம் உள்ளது. இதன் மூலம் ரூ.12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்துள்ளோம், 11 ஸ்மார் சிட்டி தமிழகத்திற்கு மோடி தந்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தின் மீது மோடிக்கு மிகப்பெரிய பாசம் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
ஊழலை ஒழிப்பேன் என்று மோடி சபதம் ஏற்று உள்ளார். இந்தியா கூட்டணியோ ஊழல்வாதிகளை காப்பாற்ற வேண்டும் என்று சபதமேற்று வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
வாரிசு அரசியல், பணம் கொள்ளை யடித்தல், கட்டப்பஞ்சாயத்து என்று தி.மு.க. குடும்ப ஆட்சியின் கூடாரமாக இருந்து வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக கூட்டத்தில் பங்கேற்பதற்காக திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக அரியலூர் அருகே தாமரைக்குளம் கிராமத்தில் உள்ள தனியார் சிமெண்ட் ஆலை மைதானத்துக்கு வந்தார். பின்பு அங்கிருந்து கார் மூலமாக செந்துறை ரோடு அமீனாபாத், இறைவன் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்ட மேடைக்கு வந்தார்.
இந்த பிரசார கூட்டத்தில் பா.ஜ.க., பா.ம.க., த.மா.கா, ஐ.ஜே.கே., அ.ம.மு.க. உட்பட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி முக்கிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். பாஜக தேசிய தலைவர் நட்டா வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
- தேர்தலில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 92 வயது முதியவர் முதல் முறையாக வாக்களிக்க இருக்கிறார்.
- “வருகிற பாராளுமன்ற தேர்தலில் நான் முதல் முறையாக வாக்களிக்க உள்ளேன்” என்றார்.
சாஹிப்கஞ்ச்:
நாட்டின் 18-வது பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்படுகின்றன.
இந்த தேர்தலில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 92 வயது முதியவர் முதல் முறையாக வாக்களிக்க இருக்கிறார்.
ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இருந்து சுமார் 450 கி.மீ. தொலைவில் உள்ள சாஹிப்கஞ்ச் மாவட்ட வாக்குச்சாவடி மையங்களில் மாநில தலைமை தேர்தல் ஆணையர் ரவிக்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பல்வேறு கிராமங்களுக்கு சென்று அங்கு வசிக்கும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளிடம் தேர்தல் நடைமுறையில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், சவால்கள் குறித்து ரவிக்குமார் கேட்டறிந்தார்.
அப்போது ராஜ்மகால் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பத்கோரி கிராமத்தில் வசிக்கும் முதியவரான அன்சாரியிடம் நீங்கள் வாக்காளரா? எனத் தேர்தல் ஆணையர் கேட்டார்.
அதற்கு பதில் அளித்த அன்சாரி, 'வாக்காளர் பட்டியலில் எனது பெயர் இல்லாததால் நான் இதுவரை வாக்களித்தது இல்லை' என்றார்.
இதைக் கேட்டு ஆச்சரியம் அடைந்த தேர்தல் ஆணையர் ரவிகுமார், அன்சாரியின் பெயரை வாக்காளர் பட்டியலில் உடனடியாக சேர்க்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தேர்தல் ஆணையருக்கு நன்றி தெரிவித்த அன்சாரி, "வருகிற பாராளுமன்ற தேர்தலில் நான் முதல் முறையாக வாக்களிக்க உள்ளேன்" என்றார்.
- பறக்கும் படையினர் வாகனத்தை சோதனையிட்டனர்.
- திருமாவளவன் வாகனத்தை பறக்கும் படையினர் சோதனை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் செந்துறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து அவரது சொந்த ஊரான அங்கனூர் அருகே பிரசார வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த தேர்தல் பறக்கும் படையினர் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ய வேண்டும் என்றனர்.
இதனை கேட்ட திருமாவளவன் தாராளமாக உங்கள் கடமையை செய்யுங்கள் என்று கூறி அதிகாரிகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கினார்.
இதனை தொடர்ந்து பறக்கும் படையினர் வாகனத்தை சோதனையிட்டனர். வாகனத்தின் முன்புறம், உள்புறம் ஆகியவற்றை சோதனையிட்டனர். வாகனத்தில் எதுவும் இல்லாததால் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
பின்னர் திருமாவளவன் மீண்டும் வாகனத்தில் ஏறிச் சென்று அங்கனூருககு புறப்பட்டு சென்றார். திருமாவளவன் எம்.பி.யின் வாகனத்தை பறக்கும் படையினர் சோதனை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பா.ம.க. பிரமுகர் பிரபு மீது அரியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பிரமுகர் சுதாகர் மீது வழக்கு பதிவு செய்து ஆண்டிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அரியலூர்:
சிதம்பரம் மக்களவை தொகுதி தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. அரசியல் கட்சியினர் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சரும் அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளருமான எஸ்.எஸ்.சிவசங்கர் குறித்து முகநூலில் தவறான செய்தி வெளியிட்டதாக கூறப்படுகிறது. இது பற்றி தி.மு.க. வக்கீல் அன்பரசு கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதி, ஓலைப்பாடி கிராமத்தை சார்ந்த பா.ம.க. பிரமுகர் பிரபு மீது அரியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனை போல, தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து முகநூலில் தவறான செய்தி வெளியிட்டதாக தி.மு.க. வக்கீல் ராஜசேகர் கொடுத்த புகாரின் பேரில், அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், கொலையனூர் கிராமத்தை சார்ந்த அ.தி.மு.க. பிரமுகர் திருமுருகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடத்தில் அனுமதி இல்லாமல் சுவர் விளம்பரம் செய்ததாக பெரிய கிருஷ்ணாபுரம் கிராம நிர்வாக அதிகாரி பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில், பள்ள கிருஷ்ணாபுரத்தை சார்ந்த அ.தி.மு.க. பிரமுகர் சுதாகர் மீது வழக்கு பதிவு செய்து ஆண்டிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- 10 வருடம் ஆண்ட பிரதமர் எத்தனை முறை தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார்.
- எல்லாம் தேர்தல் தோல்வி பயம்
ஜெயங்கொண்டம்:
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஜெயங்கொண்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
கொரோனா பெருந்தொற்று இரண்டாவது அலையின் போது பிரதமர் உங்களை சந்தித்தாரா தொலைக்காட்சியில் அவ்வப்போது பேசுவார் அவ்வளவுதான்.
அப்போது அவர் நீங்கள் யாரும் வீட்டை விட்டு வரக்கூடாது வீட்டை பூட்டிக் கொண்டு உள்ளே இருங்கள் வேலை வெட்டிக்கு செல்லாதீர்கள் வியாபாரமோ விவசாயமோ பண்ண வேண்டாம் என்று கூறினார்.
வெளியே வந்து விளக்கேற்றுங்கள். கையில் தட்டு வைத்து சத்தம் எழுப்புங்கள். இதன் மூலம் கொரோனா ஒழிந்து விடும் என்று கூறி மக்களை ஏமாற்றினார்.
ஆனால் நமது முதல்வர் கோவையில் கொரோனா தொற்று பாதித்தவர்களை உயிரை பணயம் வைத்து கவச உடைய அணிந்து சென்று பார்த்து ஆறுதல் கூறி உயரிய சிகிச்சை அளிக்க செய்தார்.
10 வருடம் ஆண்ட பிரதமர் எத்தனை முறை தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார். இப்போது 10 தினங்களாக தமிழ்நாட்டிற்கு வருகிறார். எல்லாம் தேர்தல் தோல்வி பயம். நான் சவால் விடுகிறேன் 10 நாள் அல்ல ஒரு மாதம் முழுவதும் தமிழ்நாட்டில் தங்கி இருந்தாலும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது டெபாசிட் இழப்பார்கள்.
நாற்பதிலும் நாம் வெற்றி பெற்றால் மத்திய பிரதமராக மு.க.ஸ்டாலின் கூறுபவரே பிரதமர் ஆவார்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
- தி.மு.க. கூட்டணியை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் பிரசாரம் செய்தார்.
- அமைச்சர் சிவசங்கர் கார் சோதனை செய்யப்பட்டதால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெயங்கொண்டம்:
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைத்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இன்று தி.மு.க. கூட்டணியை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் பிரசாரம் செய்தார்.
இதில் பங்கேற்பதற்காக அரியலூரில் இருந்து அமைச்சர் சிவசங்கர் காரில் புறப்பட்டு சென்றார். கார் ஜெயங்கொண்டம் அருகே அசினாபுரம் பகுதியில் சென்ற போது அங்கு பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இந்த வேளையில் அந்த வழியாக வந்த அமைச்சர் சிவசங்கரின் காரையும் பறக்கும் படையினர் நிறுத்துமாறு கூறினர். இதையடுத்து டிரைவர் காரை நிறுத்தினார். அதில் அமைச்சர் சிவசங்கர் இருப்பதை பார்த்த அதிகாரிகள் காரை சோதனையிட வேண்டும் என்றனர்.
அதற்கு தாராளமாக உங்கள் கடமையை செய்யுங்கள் என்றவாறு காரை விட்டு இறங்கினார். சிறிது நேர சோதனைக்கு பின்னர் காரில் எதுவும் இல்லாததால் அமைச்சரின் காரை அதிகாரிகள் அனுப்பிவைத்தனர்.
அமைச்சர் சிவசங்கர் கார் சோதனை செய்யப்பட்டதால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் தேர்தல் அதிகாரிகளின் நடவடிக்கைக்கு வழிவிட்டு ஒத்துழைப்பு கொடுத்த அமைச்சர் சிவசங்கரை அந்த பகுதியினர் பாராட்டினார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்