என் மலர்
திருவண்ணாமலை
- கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது வீராவுக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார்.
- நீண்ட நேரம் தேடியும் சிறுவன் கிடைக்காததால் செய்யாறு தீயணைப்பு துறையினருக்கும், அனக்காவூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
செய்யாறு:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் கோவிந்தன். கூலி தொழிலாளி. இவரது மனைவி ஜோதி. இவர்களுக்கு வீரா (வயது 16), சிவா என 2 மகன்களும், செம்பருத்தி என்ற மகளும் உள்ளனர்.
வீரா 10-ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெறவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இவர்கள் குடும்பத்துடன் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த குளம் மந்தை பகுதியில் உள்ள உறவினர் வீட்டு கிரகப்பிரவேசத்தில் கலந்து கொள்வதற்காக வந்தனர். நேற்று காலை கிரகப்பிரவேசம் முடிந்து அனைவரும் அருகே உள்ள விவசாய கிணற்றில் குளிப்பதற்காக சென்றனர்.
கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது வீராவுக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார். இதனைக் கண்ட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து தண்ணீரில் மூழ்கிய வீராவை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
நீண்ட நேரம் தேடியும் சிறுவன் கிடைக்காததால் செய்யாறு தீயணைப்பு துறையினருக்கும், அனக்காவூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி கிணற்றிலிருந்து சிறுவனை பிணமாக மீட்டனர்.
பின்னர் போலீசார் வீராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது.
- பேனில் புடவையைக் கொண்டு தூக்கில் தொங்கியபடி கிடந்தார்
- போலீசார் விசாரணை
செய்யாறு:
செய்யாறு அடுத்த நெடுங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 30). இவர் செய்யாறு சிப்காட் கம்பெனியில் பஸ் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி ரேவதி (26) மற்றும் மகள்கள் மோனிஸ்ரீ (6), ரக்சயா(3) உள்ளனர்.
நேற்று காலை சிலம்பரசன் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது குழந்தைகள் மட்டும் வெளியே தனியாக விளையாடிக் கொண்டிருந்தனர். குழந்தைகளிடம் அம்மா எங்கே என கேட்டதற்கு, உள்ளே தூங்குவதாக தெரிவித்தனர்.
பின்னர் சிலம்பரசன் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது, பேனில் புடவையைக் கொண்டு ரேவதி தூக்கில் தொங்கியபடி கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த அனக்காவூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
பின்னர் ரேவதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
செங்கம்:
செங்கம் பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. செங்கம் பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் சாதிக்பாஷா தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் லோகநாதன் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்வில் செங்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் செயல்படுத்த வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும், குடிநீர், கழிவுநீர்கால்வாய், தெருவிளக்குகள், சாலை வசதிகள் உட்பட அடிப்படை தேவைகள் நிறைவேற்றுவது குறித்தும் ஆலோசனைகள் நடைபெற்றது.
வளர்ச்சி திட்ட பணிகளுக்கான 24 தீர்மானங்கள் இந்த கவுன்சில் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இந்த நிகழ்வில் பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் முடிவில் இளநிலை எழுத்தர் பிரசாந்த் நன்றி கூறினார்.
- நிலைத்தடுமாறி மின்கம்பத்தில் மோதியது
- போலீசார் விசாரணை
செய்யாறு:
மத்திய பிரதேசம் மாநிலம், சி.ப. மாவட்டம் பஜ்வாய் கிராமத்தைச் சேர்ந்தவர் தீபக்சிங் (வயது 28). இவர் வெம்பாக்கம் அடுத்த திருப்பனமூர் கிராமத்தில் உள்ள தனியார் ஜல்லி அரவை கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவரும், இவருடன் வேலை செய்யும் ஓம்பிரகாஷ் (20) ஆகிய 2 பேரும் நேற்று வெம்பாக்கம் பகுதிக்கு பைக்கில் வந்தனர். அங்கிருந்து மீண்டும் திருப்பனமூருக்கு சென்றனர்.
அப்போது பைக் நிலைத்தடுமாறி சாலை ஓரம் இருந்த மின் கம்பத்தில் மோதியது.
இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். தீபக்சிங் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். படுகாயம் அடைந்த ஓம்பிரகாஷை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த தகவல் அறிந்த பிரம்மதேசம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தீபக்சிங் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்
- பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்
செங்கம்:
செங்கம் அடுத்த புதுப்பாளையம் பேரூராட்சியில் ரூ.10.88 கோடி மதிப்பீட்டில் புதுப்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து தெருக்களுக்கும் குடிநீர் வழங்கும் வகையில் அம்ரூத் 2.0 திட்டத்தை பொதுப்பணிதுறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, பாராளுமன்ற உறுப்பினர்.
சி.என்.அண்ணாதுரை, கலெக்டர் பா.முருகேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பிரியதர்ஷினி, மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், எம்.எல்.ஏ.க்கள் பெ.சு.தி.சரவணன் (கலசப்பாக்கம்), மு.பெ.கிரி (செங்கம்), வேலூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அம்சா, புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சி.சுந்தரபாண்டியன், புதுப்பாளையம் பேரூராட்சி மன்ற தலைவர் செல்வபார திமனோஜ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிர்மலா, கோபு, புதுப்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் உஷ்னாபீ, உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- பவுர்ணமியன்று பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம்.
- கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் இங்குள்ள மகா தீபமலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். மேலும் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம். அதன்படி வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 11.16 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 9.11 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்லலாம்.
மேலும் பவுர்ணமியை முன்னிட்டு கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் 2 நாட்கள் அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருவதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional
- போலீசார் தீவிர விசாரணை
- கிணற்றில் வீசப்பட்ட துப்பாக்கியை மீட்க நடவடிக்கை எடுத்தனர்
வாணாபுரம்:
திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டு அருகே மண லூர்பேட்டை - திருவண்ணா மலை சாலை பா.வு.ச.நகர் அங்கன்வாடிமையம் அருகே வாலிபர் ஒருவர் பலத்த வெட்டு காயத்துடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
விசாரணையில் அவர் தேவனூர் பகுதியை சேர்ந்த காசி என்பவரின் மகன் அருள்குமார் (வயது 35) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அப்பகுதியில் தலைமறைவாக இருந்த மாமலைவாசன் (31) மற்றும் அவருடைய கூட்டாளிகளை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அருள்குமாருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள முருக்கம்பாடிடம் ஆத்தியந்தல் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் மாம்லைவாசன் என்பவருக்கும் கந்து வட்டி தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இதன் காரணமாக அருள்குமாரை கொலை செய்ய திட்டமிட்ட மாமலைவாசன் அதற்காக 2 மாதங்களாக பல்வேறு இடங்களில் சென்று திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அருள்குமார் மணலூர்பேட்டை பகுதியில் இருந்து திருவண்ணாமலைக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
இதனையறிந்த மாமலை வாசன் மற்றும் அவரது நண்பர்களான தேவனூர் பகுதியைச் சேர்ந்த இளங்கோவன் (37), கள்ளக்குறிச்சி மாவட் ஆதிதிருவரங்கம் பகுதியை சேர்ந்த சூர்யா (22) ஆகிய 3 பேரும் அருள்குமாரை மோட்டார்சைக்கிளில் பின் தொடர்ந்து சென்றனர்.
அப்போது மாமலைவாசன் பின்னால் வேகமாக துரத்தி சென்று அருள்குமாரை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அருள்குமாரை இளங்கோவன், சூர்யா,மாமலைவாசன் ஆகிய 3 பேரும் சேர்ந்து கத்தியால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.
இதனையடுத்து கொலை செய்வதற்கு பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் கத்திகளை அப்பகுதியில் உள்ள கிணறு மற்றும் ஏரிகளில் வீசிவிட்டு சென்று விட்டனர்.
இதைத்தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் கொலை நடை பெற்ற இடத்தில் ஆய்வு செய் தார். மேலும் அவர்கள் எந்த வகையான துப்பாக்கியை பயன்படுத்தினார்? என்று விசாரணை நடத்தினர்.
கிணற்றில் வீசப்பட்ட துப்பாக்கியை மீட்க நடவடிக்கை எடுத்தனர். அவர்களுக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது, கொடுத்தது யார்? என விசாரித்து வருகின்றனர்.
- ரூ.57 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்
- பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகாவில் ஜமாபந்தி நிறைவு விழா மற்றும் விவசாயிகள் மாநாடு நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஜமாபந்தி அலுவலர் சிப்காட் நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத் தலைமை வகித்தார். தாசில்தார் கி.வெங்கடேசன் வரவேற்றார்.
மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், நகர மன்ற தலைவர் மோகனவேல், நகர மன்ற உறுப்பினர் விஸ்வநாதன், விவசாய சங்க பிரிதிநிதிகள் புருஷோத்தமன், கிரண் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஒ.ஜோதி எம்.எல்.ஏ கலந்துகொண்டு 109 நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா, 16 பேருக்கு பட்டா மாறுதல் சான்று, 31 பேருக்கு உட்பிரிவு பட்டா மாறுதல் சான்று, 23 பேருக்கு சமூக பாதுகாப்பு திட்ட ஓய்வூதியம், 10 பேருக்கு புதிய குடும்ப அட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 15 பேர் உள்ளிட்ட 204 பேருக்கு ரூபாய் 57 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் வருவாய்த்துறை சங்கப் பிரதிநிதிகள் பாஸ்கரன், ஸ்ரீதர், ரமேஷ் மற்றும் திமுக ஒன்றிய செயலாளர்கள் தினகரன், ஞானவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் எஸ். ராஜலட்சுமி நன்றி கூறினார்.
- கலெக்டர் உள்பட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்
- அனைத்து உட்கட்டமைப்புகளுடன் பாதிப்பு இல்லாத வகையில் அங்கேயே குப்பை கிடங்கு அமைக்கப்படும்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருகே புனல்காடு கிராமத்தில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அண்ணா நுழைவு வாயில் பகுதியில் இருந்து ஊர்வலமாக செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் கலெக்டர் அலுவலகம் அருகே மீண்டும் அவர்களை தடுக்க முயன்றதால் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அவர்கள் முன்னேறிச் சென்று கலெக்டர் அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர். இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அமைச்சர் எ.வ.வேலு, கலெக்டர் முருகேஷ், போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகளும் பொதுமக்கள் தரப்பை சேர்ந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சண்முகம், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சிவக்குமார் மற்றும் பொதுமக்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தை குறித்து பொதுமக்கள் தரப்பை சேர்ந்தவர்கள் கூறியதாவது:-
வேறு இடத்தில் குப்பை கிடங்கு அமைக்க தயாராக இருப்பதாகவும், இதற்காக இடங்கள் தேடும் பணியை வருவாய்த்துறையினர் மேற்கொள்வார்கள் என்று ஆலோசிக்கப்பட்டது.
அதேவேளையில் வேறு இடம் இருந்தால் கூறலாம் என்றும் எங்களிடமும் யோசனை கேட்டுள்ளனர்.
ஒருவேளை இடம் கிடைக்காத பட்சத்தில் பாதுகாப்பான முறையில் தேவையான அனைத்து உட்கட்டமைப்புகளுடன் பாதிப்பு இல்லாத வகையில் அங்கேயே குப்பை கிடங்கு அமைக்கப்படும் என்றும் இதுதொடர்பாக எங்களின் கருத்துகளும் பரிசீலிக்கப்படும் என்றும், அதுவரை 10 நாட்களுக்கு அந்த பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெறும் நிறுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- உரிமையாளரின் மனைவியை தாக்க முயற்சி
- வாக்குவாதம் முற்றியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை வேங்கிக்காலில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கிளைகளை தொடங்கி பொதுமக்களிடம் சீட்டு நடத்தி பணம் பெற்று வந்தனர்.
நிறுவனத்தில் அதிகப்படியான மக்களை சேர்ப்பதற்காக தையல் பயிற்சி, அழகுகலை பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் நடத்தி பெண்களிடம் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவற்கான ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளனர்.
மேலும் பலரை பல்வேறு மாவட்டங்களில் ஒருங்கிணைப்பா ளர்களாகவும், முகவர்களாகவும் நியமித்து பொதுமக்களிடம் பணத்தை பெற்றுள்ளனர்.
ரூ.50 முதல் ரூ.300 வரை செலுத்தினால் தங்கமூக்குத்தி, அதற்கு மேல் செலுத்தினால் புடவை, ஆடுகள் உள்ளிட்ட வழங்குதவது போன்ற பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளனர்.
அதன்படி முகவர்கள் மூலம் பொதுமக்களிடம் இருந்து அதிகப்படியான பணத்தை பெற்றனர். முகவர்கள் தங்கள் பகுதியை சேர்ந்த ஏராளமானவர்களை இத்திட்டத்தில் சேர்த்து பணத்தை பெற்றனர்.
திடீரென நிதி நிறுவனத்தை நடத்தி வந்த நிர்வாகி தலைமறைவாகி விட்டார். பணத்தை கொடுத்த பொதுமக்களும், வாங்கிக்கொடுத்த முகவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். பணத்தை செலுத்திய பொதுமக்கள் முகவர்களிடம் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் அந்த நிறுவனத்தை நடத்தி வந்தவரின் மனைவி மற்றும் உறவுக்கார பெண் ஆகியோர் திருவண்ணாமலை உள்ளதாக முகவர்களுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் நேற்றுமுன்தினம் முகவர்கள் நிறுவன உரிமையாளர் மனைவி மற்றும் உறவுக்கார பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டனர்.
இதனால் அவர்கள் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு புகார் அளித்தனர். போலீசார் இது தொடர்பாக விசாரணை செய்ய தாலுகா போலீசாருக்கு அறிவுறுத்தினர். அதன்படி போலீசார் விரைந்து சென்று நிதி நிறுவன உரிமையாளரின் மனைவி மற்றும் உறவுக்கார பெண் ஆகியோரை மீட்டு கிரிவலப்பாதையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
இந்த தகவல் அறிந்ததும் ஈரோடு, திண்டுக்கல் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து முகவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையம் முன்பு குவிந்தனர்.
அப்போது முகவர்கள் அனைவரும், நிதி நிறுவன உரிமையாளரின் மனைவி மற்றும் உறவுக்கார பெண்ணிடம் பணத்தை திருப்பி தர கேட்டனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.