search icon
என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • வழக்கு திருச்சுழி நீதிமன்றத்தில் கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்தது.
    • தவக்கண்ணன் மீது அ.முக்குளம் போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்தது உண்மையென ஆதாரப்பூர்வமாக விசாரணையில் தெரிய வந்தது.

    திருச்சுழி:

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள சாலைமறைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் தவக்கண்ணன். டிப்ளமோ என்ஜினீயரான இவர் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வதற்காக பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்தார்.

    கடந்த 2020 மார்ச் 20-ந்தேதி பாஸ்போர்ட் விசாரணைக்காக அ.முக்குளம் போலீசார் அழைத்ததன் பேரில் தவக்கண்ணன் தனது நண்பருடன் 21-ந் தேதி காலை அ.முக்குளம் போலீஸ் நிலையம் சென்றார். அங்கு விசாரணை சரிபார்ப்பு முடிந்த நிலையில் வீடு திரும்பினார்.

    இதற்கிடையில் அ.முக்குளம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த அப்போதைய சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தனது போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியிலுள்ள கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு வாக்கி-டாக்கியுடன் பாதுகாப்பு பணிக்காக சென்று விட்டு போலீசார் குடியிருப்புக்கு திரும்பிய நிலையில் அங்கிருந்து மீண்டும் அ.முக்குளம் காவல் நிலையத்திற்கு எஸ்.ஐ.மணிகண்டன் திரும்பியுள்ளார்.

    அப்போது திடீரென அவரது வாக்கி-டாக்கி காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்த நிலையில் கடைசியாக போலீஸ் நிலையத்திற்கு பாஸ்போர்ட் விசாரணைக்காக வந்து விட்டு திரும்பிய தவக்கண்ணனை தொடர்பு கொண்டு தனது வாக்கி-டாக்கி காணாமல் போனதாகவும் அதனை நீ திருடியதாகவும் அது சம்பந்தமாக போலீஸ் நிலையத்தில் பதிவாகிய சி.சி.டி.வி. பதிவுக்காட்சிகள் ஆதாரமாக இருப்பதாகவும் கூறி விசாரணைக்காக போலீஸ் வருமாறு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் அழைத்துள்ளார்.

    அதன்பேரில் போலீஸ் நிலையத்திற்கு சென்ற தவக்கண்ணனை எஸ்.ஐ. உள்பட போலீசார் தாக்கியதாக கூறப்பட்டது. இதற்கிடையே தொலைந்து போனதாக கூறப்படும் வாக்கி டாக்கி கிடைத்து விட்ட நிலையிலும் தவக்கண்ணனை விடுவிக்காமல் வாக்கி-டாக்கியை திருடியதாக ஒப்புக்கொள்ள சொல்லி தாக்கியுள்ளனர். பலத்த காயம் அடைந்த அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    இந்த நிலையில் வாக்கி-டாக்கி விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து அ.முக்குளம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, தவக்கண்ணன் குடிபோதையில் பொது இடத் தில் ஆபாசமாக பேசியதாகவும், அரசு சொத்துக்களை சேதப்படுத்தியதாகவும் கூறி அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். குடிபோதையில் இருந்ததாக கூறப்படும் தவக்கண்ணனுக்கு மதுப்பழக்கம் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த வழக்கு திருச்சுழி நீதிமன்றத்தில் கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் அரசு தரப்பிலும், குற்றம் சாட்டப்பட்டதாக கூறப்படும் தவக்கண்ணன் தரப்பிலும் வழக்கறிஞர்கள் ஆஜராகி வழக்கில் வாதிட்டனர்.

    தவக்கண்ணன் மீது அ.முக்குளம் போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்தது உண்மையென ஆதாரப்பூர்வமாக விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து டிப்ளமோ என்ஜினீயரிங் பட்டதாரியான தவக்கண்ணனை இந்த வழக்கில் இருந்து விடுவித்து திருச்சுழி உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அபர்ணா நேற்று அதிரடியாக தீர்ப்பு வழங்கினார்.

    • மட்டிகரைப்பட்டியை சேர்ந்த 95 வயது மூதாட்டி முதுமை காரணமாக நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.
    • ஊன்றுகோல் உதவியுடன் வந்த வயதான மூதாட்டிகள் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நேற்று ஒரே கட்டமாக நடந்தது. 72 சதவீதம் வாக்குப்பதிவான நிலையில் நகர் பகுதியை விட கிராமப்புறங்களில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

    இதேபோல் 18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்களும் வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்து உற்சாகத்துடன் வாக்களித்து சென்றனர்.

    இளம் வாக்காளர்களை விட எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை காட்டும் வகையில் வயதானவர்களும் வரிசையில் காத்திருந்து வாக்களித்ததை காண முடிந்தது.

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மட்டிகரைப்பட்டியை சேர்ந்த 95 வயது மூதாட்டி முதுமை காரணமாக நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். நேற்று தேர்தல் நாள்  என்பதால்தான் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் எனக்கூறிய மூதாட்டி வாக்கு மையத்திற்கு அழைத்து செல்லுமாறு வற்புறுத்தவே, உறவினர்களும் அவரை மொபட்டின் முன்புறம் அமர வைத்து வாக்கு மையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    வயது மூப்பு காரணமாக தேர்தல் அதிகாரிகள் அவரை வரிசையில் காத்திருக்க வைக்காமல் வாக்களிக்க அனுமதித்தனர். இதையடுத்து 95 வயது மூதாட்டி நடக்க முடியாத சூழ்நிலையிலும் அவர் தனது வாக்குப்பதிவை செலுத்தினார்.

    இதேபோல் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியிலும் நடக்க முடியாத சூழ்நிலையில் மூதாட்டிகள் ஆர்வமாக வந்து வாக்களித்தனர். செட்டியார்பட்டியில் உள்ள மகாத்மா காந்தி வாக்குச்சாவடி மையத்திற்கு ஊன்றுகோல் உதவியுடன் வந்த வயதான மூதாட்டிகள் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

    வத்திராயிருப்பு அருகே உள்ள வ.புதுப்பட்டியை சேர்ந்த 92 வயதான மூதாட்டி ருக்மணி என்பவரும் வாக்களித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த 1962-ம் ஆண்டு முதல் தவறாமல் வாக்களித்து வருகிறேன். தற்போது எனக்கு வயது 92. வயது மூப்பு பாதிப்பு இருந்தாலும் நல்ல அரசை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்காக வாக்களித்துள்ளேன் என்றார்.

    • தொழிலாளர்கள் அங்கு இருந்த ஹீட்டர் மிஷினை சுவிட்ச் ஆப் செய்யாமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
    • தொழிற்சாலையின் கட்டிடம் இடிந்து தரை மட்டமானது.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி நேஷனல் காலனியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது47). இவருக்கு சொந்தமான கட்டிடத்தில் சந்தன மகாலிங்கம் என்பவர் பட்டாசு தயாரிக்க தேவையான அட்டைக் குழாய்களுக்கு யூ.வி. கோட்டிங் செய்யும் தொழிற்சாலை நடத்தி வருகின்றார். இங்கு வழக்கம் போல் நேற்று இரவில் வேலை நடைபெற்றது.

    அப்போது தொழிலாளர்கள் அங்கு இருந்த ஹீட்டர் மிஷினை சுவிட்ச் ஆப் செய்யாமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. இதில் அந்த தொழிற்சாலையின் கட்டிடம் இடிந்து தரை மட்டமானது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் உடனடியாக சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் இடர்பாடுகளில் வேறு யாரும் சிக்கி இருக்கிறார்களா என்று தேடிப் பார்த்தனர்.

    இந்த சம்பவத்தின்போது பக்கத்து வீட்டைச் சேர்ந்த ராணி (35) என்கிற பெண்ணிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புதிய சாலைகள் போடப்பட்டது. தி.மு.க.வினர் போட்டாலும் அந்த பணத்தை கொடுத்தது மோடிதான்.
    • அ.தி.மு.க. கூட்டணியில் யார் தலைவர், யார் பிரதமர் என்று அவர்களுக்கு தெரியாது.

    திருமங்கலம்:

    விருதுநகர் பாராளுமன்ற தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் ராதிகா சரத்குமார் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட டி.கொக்குளம், குராயூர் ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    ஜல்ஜீவன் திட்டத்தில் உங்களுக்கு பிரதமர் மோடி குடிநீர் கொண்டு வந்தார். புதிய சாலைகள் போடப்பட்டது. தி.மு.க.வினர் போட்டாலும் அந்த பணத்தை கொடுத்தது மோடிதான். அது டெல்லியில் இருந்து வந்த பணம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தி.மு.க. வினர் கொடுத்த ஒரு வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை. எனவே உங்களுக்கு பணம் கொடுத்து உங்களை ஏமாற்ற நினைப்பார்கள்.

    இந்தியாவிலேயே பா.ஜ.க. மட்டும் தான் ஊழல் இல்லாத ஆட்சி. தி.மு.க.வில் இருப்பவர்கள் மாமியார் வீட்டிற்கு செல்வது போல் ஜெயிலுக்கு சென்று வருகிறார்கள். அ.தி.மு.க. கூட்டணியில் யார் தலைவர், யார் பிரதமர் என்று அவர்களுக்கு தெரியாது. குரல் கொடுப்போம் என்கிறார்கள். ஆனால் நாங்கள் செய்யும் இடத்தில் இருக்கிறோம்.

    தமிழ் மொழி, தமிழ் மண்ணுக்காக கொடுக்கிற பிரதமர் இருக்கிறார். நான் உங்கள் பிரதிநிதியாக, ஆனால் நேரடியாக உங்களுக்கு வேண்டியதை செய்யச் சொல்வேன். இங்கு அதிகமாக மல்லிகை சாகுபடி செய்யப்படுகிறது. இளைஞர்களுக்கு வேலையும் வேண்டும் என்பதால் நறுமண தொழிற்சாலை கொண்டு வருவதற்கு முயற்சிப்பேன். அதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம். இதனால் இளைஞர் மற்றும் பெண்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    • கூட்டணி தர்மத்தை மதித்து மொத்தம் உள்ள 40 தொகுதிகளிலும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றேன்.
    • கேப்டன் இல்லை என்று யாரும் வருத்தப்பட வேண்டாம். அவரது ஆசியால்தான் நான் இயங்கி வருகிறேன்.

    சிவகாசி:

    விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் விஜயகாந்த் மகனை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    உங்கள் அண்ணன் மகனுக்கு நீங்கள் பெருவாரியான வாக்குகளை அளிக்க வேண்டும். 32 வயதில் படித்து முடித்துவிட்டு எத்தனையோ கனவுகள் இருந்தாலும் அதை தூக்கி எறிந்து விட்டு தந்தையின் வழியில் மக்கள் சேவை செய்ய இந்த தொகுதியில் அவர் போட்டியிடுகின்றார். உங்கள் எல்லாருக்கும் தெரியும் தம்பிக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகவில்லை. இந்த விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற பின்னர் இந்த தொகுதி மக்களின் தலைமையில் தான் அவருக்கு திருமணம் நடக்கும்.

    கூட்டணி தர்மத்தை மதித்து மொத்தம் உள்ள 40 தொகுதிகளிலும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றேன். எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரதமராகும் வாய்ப்பு இருப்பதாகவும் அனைத்து கணிப்புகளும் தெரிவிக்கின்றன. இந்த தொகுதியில் தே. மு.தி.க. வெற்றி பெற்றவுடன் அவர் பல நல்ல திட்டங்களை இந்த தொகுதியில் அறிவித்து செயல்படுத்த உள்ளார். அதில் சிலவற்றை என்னிடம் கூறினார். அதை நான் உங்களிடம் கூறுகின்றேன்.

    விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் கேப்டன் பிறந்தநாள் அன்று 60 பெண்களை தேர்வு செய்து பெண்கள் நாட்டின் கண்கள் திட்டத்தின் மூலம் எங்களது சொந்த நிதியிலிருந்து அவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்க உள்ளார். ஆண்டுதோறும் 6 லட்சம் வீதம் 5 வருடத்தில் ரூ.30 லட்சம் வரை பெண்களுக்கு நிதி உதவி வழங்க உள்ளார்.

    தொகுதி முழுவதிலும் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையம் தொடங்கப்படும். இலவச தையல் பள்ளிகள், இலவச நீட் கோச்சிங் சென்டர், படித்த படிக்காத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, தையல் பயிற்சி பெற்ற பெண்களுக்கு இலவச தையல் மிஷின்கள் வாங்கி கொடுத்து அவர்கள் வாழ்வாதாரம் உயர நடவடிக்கை, 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 150 நாளாக உயர்த்தவும் கூலித் தொகையை ரூ.500 ஆக அதிகரிக்கவும் பாராளுமன் றத்தில் கோரிக்கை வைப்பார்.

    நமது வேட்பாளர் வயதில் சின்னவர் என்று நினைக்காதீர்கள். அவர் நல்ல அறிவாளி, உலகம் முழுவதும் சுற்றி வந்துள்ளார். பல்வேறு மொழிகளை பேசும் திறமை கொண்டவர். பாராளுமன்றத்தில் உங்கள் பிரச்சனைகளை எழுப்பி அதற்கு தீர்வு காணும் வல்லமை அவரிடம் உள்ளது. குணத்திலும், பழகுவதிலும் கேப்டனின் மறு உருவம். 34 வருடம் கேப்டனுக்கு மனைவியாக வாழ்ந்தும், அவருக்கு தாயாக இருந்தும் சேவை செய்திருக்கிறேன். கேப்டன் இல்லை என்று யாரும் வருத்தப்பட வேண்டாம். அவரது ஆசியால்தான் நான் இயங்கி வருகிறேன்.

    இவர் அவர் பேசினார்.

    • பெண்களுக்கு தகப்பனாராகவும், சகோதரராகவும் திட்டதை நமது முதல்வர் கொண்டு வந்துள்ளார்.
    • ராகுல் காந்தியும் இந்தியாவில் மகாலட்சுமி திட்டத்தை அறிவித்துள்ளார்.

    சிவகாசி:

    விருதுநகர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து சிவகாசி அருகே உள்ள தாயில் பட்டியில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், மக்களிடம் ஓட்டு கேட்க தி.மு.க.வுக்கு அதிக உரிமை உள்ளது. வானம் பார்த்த பூமியான விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழில் பிரதானமாக உள்ளது. மத்தியில் ஆட்சி அமைக்கும், அதில் மாணிக்கம் தாகூர் அமைச்சராக பொறுப்பேற்பார். அப்போது பட்டாசு பிரச்சனைக்கு நிரந்தரமாக தீர்வு காணப்படும்.

    காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 100 நாள் வேலையை 150 நாட்களாகவும், சம்பளம் 400 ஆகவும் உயர்த்தி தரப்படும். தேர்தல் முடிந்த பின்னர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மகளிர் உரிமை திட்டம் இந்தியாவில் தமிழ் நாட்டில் மட்டும் தான் செயல்படுகிறது. பெண்களுக்கு தகப்பனாராகவும், சகோதரராகவும் திட்டதை நமது முதல்வர் கொண்டு வந்துள்ளார்.

    அதனைப் போன்று ராகுல் காந்தியும் இந்தியாவில் மகாலட்சுமி திட்டத்தை அறிவித்துள்ளார். அதில் பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் வழங்கப்படும். அதற்காக பத்திரம் ஒன்று எழுதி உறுதி கொடுத்துள்ளார் என்றார். பிரசாரத்தில் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் கைச்சின்னத்தில் வாக்களித்து சமூக வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    • தேர்தலில் நீங்கள் அளிக்கும் வாக்கு என்பது இந்தியாவினுடைய பிரதமரை தீர்மானிக்கின்ற வாக்கு.
    • கப்பலூர் டோல்கேட்டை பலமுறை அகற்றக்கோரி போராட்டம் நடத்தினோம்.

    விருதுநகர்:

    இந்தியா கூட்டணி சார்பில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் திருமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட புளியங்குளம், செக்கானூரணி, கிண்ணிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை தீவிர வாக்கு சேரித்தார். செக்காலூ ரணியில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலையணிவித்து அவர் பேசியதாவது:-

    இந்த தேர்தலில் நீங்கள் அளிக்கும் வாக்கு என்பது இந்தியாவினுடைய பிரதமரை தீர்மானிக்கின்ற வாக்கு. இந்தியாவின் பிரதமராக யார் வரவேண்டும். யார் வரக்கூடாது தீரமானிக்கும் தோதல். 100 நாள் வேலை திட்டத்தை காப்பாற்றும் பிரதமர் வேண்டுமா? அல்லது 100 நாள் வேலையை முடித்து வைக்கிற பிரதமர் வேண்டுமா? என்பதை பொதுமக்கள் யோசித்து பார்க்க வேண்டும். சிலிண்டர் விலை 2000 ரூபாய் உயர்த்தும் பிரதமர் வேண்டுமா? இல்லை ஆயிரம் ரூபாயிலிருந்து 500 ரூபாயாக குறைக்கும் பிரமர் வேண்டுமா? என்று பார்க்க வேண்டும். பிரதமர் மோடி 100 நாள் வேலையை கொஞ்சம் கொஞ்சமாக விஷம் கொடுத்து கொன்று வருகிறார். தேர்தல் மூலம் மோடிக்கு நீங்கள் வழியனுப்பு விழா நடத்த வேண்டும். அதற்காக வரும் 19ந் தேதி நீங்கள் கை சின்னத்துக்கு ஓட்டு போடணும். ராகுல் காந்தி பிரதமர் ஆனால் மகளிருக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கும் மகாலட்சுமி திட்டத்தை செயல்படுத்துவார். இந்த திட்டம் மூலம் ஒவ்வொரு குடும்ப தலைவிக்கும் ரூ. 1 லட்ச ரூபாய் ஆண்டுக்கு கிடைக்கும். 10 கோடி பெண்களுக்கு இந்த திட்டம் கொடுக்க போகிறார். இந்த திட்டத்தில் பெண்கள் திரளாக சேர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து கப்பலூர் அருகே உச்சப்பட்டியில் மாணிக்கம் தாகூர் பிரசாரம் மேற்கொண்டு பேசுகையில், கப்பலூர் டோல்கேட்டை பலமுறை அகற்றக்கோரி போராட்டம் நடத்தினோம்.

    டோல்கேட்டால் இப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் கப்பலூர் டோல்கேட் மூடப்படும் அல்லது வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • நூறு நாள் வேலைத் திட்டம் காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்டது. ஆனால் தற்போது மோடி அந்த திட்டத்தை நிறுத்த நினைக்கிறார்.
    • மோடி அரசானது பணக்காரர்களுக்கான அதானி, அம்பானி அரசாக உள்ளது.

    விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தமிழக வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமசந்திரன் இன்று அருப்புக் கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குள்பட்ட சூலக்கரை, சின்னவள்ளி குளம், மாசி நாயக்கன்பட்டி குல்லூர் சந்தை, ராமசாமிபுரம் பால வநத்தம், கோவிலாங்குளம், பாளையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், மகளிர் உரிமைத் தொகை கிடைக்கப் பெறாதவர்கள் தேர்தல் முடிந்ததும் மனு செய்தால், உடனடியாக வழங்கப்படும். நூறு நாள் வேலைத் திட்டம் காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்டது. ஆனால் தற்போது மோடி அந்த திட்டத்தை நிறுத்த நினைக்கிறார் . இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நூறு நாள் வேலை 150 நாட்களாகவும், சம்பளத்தை 400 ஆக உயர்ததவும், நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பின்னர் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் பேசுகையில், இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தவுடன், மகளிருக்கு ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் வழங்கும் மகாலட்சுமி திட்டம் செயல்படுத்தப்படும்.

    இதன் மூலம் அவர்களின் குடும்ப வாழ்வு வளம் பெறும். மோடி அரசானது பணக்காரர்களுக்கான அதானி, அம்பானி அரசாக உள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க எனக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் எனப் பேசினார். பிராசரத்தில் கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

    • ராகுல் காந்தி பிரதமரானால் பட்டாசு தொழில் பாதுகாக்கப்படும்.
    • பிரதமர் மோடி அரசு 112 பணக்காரர்களுக்கு மட்டும் செயல்படுகிறது.

    விருதுநகர்:

    விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் சிவகாசி அருகே வெம்பக்கோட்டை யூனியனில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    பட்டாசு தொழில் தொடங்கி 100 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் பட்டாசு தொழில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. பட்டாசு தொழிலை பாதுகாக்க வேண்டும். அதே நேரத்தில் இந்த தொழில் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். அதற்கு மத்திய அரசு ஆதரவு தேவை.

    ராகுல் காந்தி பிரதமரானால் பட்டாசு தொழில் பாதுகாக்கப்படும். இந்தியாவில் 10 கோடி பெண்களுக்க வருடந்தோறும் ரூ.1 லட்சம் வழங்கும் மகாலட்சுமி திட்டம் செயல்படுத்தப்படும். பெண்களிடம் பணம் இருந்தால் குடும்பம். ஊர், மாவட்டம், மாநிலம், நாடு நன்றாக இருக்கும்.

    எனவே தான் ராகுல் காந்தி இந்த திட்டத்தை அறிவித்துள்ளார். பிரதமர் மோடி அரசு 112 பணக்காரர்களுக்கு மட்டும் செயல்படுகிறது. அவர்களுக்கு ரூ.17 லட்சம் கோடி கடனை மோடி அரசு தள்ளுபடி செய்துள்ளது. அதானி, அம்பானி போன்றவர்களுக்காக பாஜக செயல்படுகிறது.

    இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஏழை தாய்மார்களின் அரசாக இருக்கும். எனவே என்னை கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • காங்கிரஸ் கட்சி டெல்லியில் குடும்ப ஆட்சி நடத்துகிறது, தி.மு.க. தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடத்துகிறது.
    • இரண்டு கட்சிகளும் சேர்ந்து இந்தியா கூட்டணியை ஆரம்பித்துள்ளது.

    ராஜபாளைம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தென்காசி பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் ஜான்பாண்டியனை ஆதரித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    முன்னதாக அவர் ராஜபாளையத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் வந்திறங்கினார். பின்னர் தென்காசி சாலையில் உள்ள சொக்கர் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு அங்கிருந்து தென்காசி சாலையில் காந்தி கலை மன்றம், பி.எஸ்.கே.பூங்கா, காந்தி சிலை ரவுண்டானா வரை ரோடு-ஷோ நடத்தினார். தொடர்ந்து பழைய பஸ் நிலையம் அருகே பிரசார வாகனத்தில் வாக்கு சேகரித்தார்.

    தொடர்ந்து ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தின் முன்பு வந்து பொது மக்களிடையே பேசியதாவது:-

    தமிழகத்தில் தென்காசி பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. கூட்டணியில் போட்டியிடும் ஜான்பாண்டியனை ஆதரித்து பிரசாரம் செய்ய மோடி உத்தரவின் பேரில் இங்கு வந்துள்ளேன். பா.ஜ.க. கூட்டணியில் போட்டியிடும் ஜான்பாண்டியன் இந்த பகுதியில் முக்கிய நபராக இருந்து வருகிறார். இவருக்கு நீங்கள் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.


    இந்த தொகுதியில் பிரச்சனைகள் அனைத்து சரி செய்யப்படும். காங்கிரஸ் கட்சிக்கும், தி.மு.க. கட்சிக்கும் ஒரே வித்தியாசம் தான். அது, காங்கிரஸ் கட்சி டெல்லியில் குடும்ப ஆட்சி நடத்துகிறது, தி.மு.க. தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடத்துகிறது. இந்த இரண்டு கட்சிகளும் சேர்ந்து இந்தியா கூட்டணியை ஆரம்பித்துள்ளது.

    இதற்கு முன்னால் உலக நாடுகள் இந்திய நாட்டின் பேச்சை காது கொடுத்து கேட்டதில்லை. இப்போது மோடி ஆட்சியில் உலக நாடுகள் இந்தியா சொல்வதை கேட்கின்றன. காங்கிரஸ் ஆட்சியில் இந்தியா பொருளாதாரத்தில் 11-வது இடத்தில் இருந்தது, தற்போது மோடி ஆட்சியில் 5-ம் இடத்திற்கு வந்துள்ளது.

    மேலும் நீங்கள் தொடர்ந்து வாக்களித்து வெற்றி பெற செய்தால் இந்தியாவின் பொருளாதார நிலையை டாப் 3 இடத்திற்கு முன்னேற்றி கொண்டு வருவோம். மோடியின் ஆட்சியில் எல்லையில் தாக்கி வந்த எதிரி நாடுகளை ஒடுக்கி இந்தியா பலவீனமான நாடு அல்ல, பலமான நாடு என்று உலக நாடுகளுக்கு காட்டி வருகிறார்.

    பிரதமர் நரேந்திர மோடியின் பார்வையில் 2047-ம் ஆண்டில் இந்தியா வல்லரசாக மாறும். பிரதமராக மோடி 3-வது முறையாக பதவி ஏற்பார். அப்போது உலகின் சூப்பர் பவராக இந்தியா மாறும். அதனால் மோடியின் ஆட்சி மீண்டும் மத்தியில் அமைய வேண்டும். எங்கள் கூட்டணி வேட்பாளர் ஜான்பாண்டியனுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • எடப்பாடி பழனிசாமிக்கு ஜென்ம சனி பிடித்துள்ளது.
    • பிரதமர் மோடி ஒரு அரசியல் கட்சித் தலைவரை கட்டிப்பிடித்தால் அந்தக் கட்சியே இரண்டாகி விடும்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல்லில் விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவரும், பட்டிமன்ற பேச்சாளருமான திண்டுக்கல் ஐ. லியோனி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    டெல்லியிலிருந்து ஒரு தாடிக்காரர் தமிழ்நாட்டிற்கு 5 தடவை வந்து, ஐந்து காசுக்கு பிரயோஜனம் இல்லாத லேகியம் விற்றதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். எடப்பாடி பழனிசாமி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை ராசி இல்லாதவர், அவருக்கு கட்டம் சரியில்லை என்கிறார். எடப்பாடி பழனிசாமி கடப்பாறையை முழுங்கிவிட்டு சுக்கு கசாயம் குடித்தால் பிரச்சனை தீராது.

    எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்ற பிறகு அ.தி.மு.க. தொடர்ந்து தேர்தல்களில் தோல்வியை தான் சந்தித்து வருகிறது. அ.தி.மு.க.வினர் தோல்வியால் சோகப்பாடல் பாடிக் கொண்டு இருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி போர்டு இல்லாத பஸ் டிரைவர். எந்த ஊருக்கு எங்கு போகிறோம் என்று தெரியாமலே, அதனை ஓட்டி சென்று கொண்டிருக்கிறார்.


    மூன்று முறை தமிழக முதலமைச்சராக இருந்த ஓ.பி.எஸ். இன்று ராமநாதபுரத்தில் பலாப்பழம் விற்றுக் கொண்டிருக்கிறார். இ.பி.எஸ்.சும், ஓ.பி.எஸ்.சும் சேர்ந்து ஒரு கட்சியை நாசப்படுத்தி விட்டனர். பிரதமர் மோடி ஒரு அரசியல் கட்சித் தலைவரை கட்டிப்பிடித்தால் அந்தக் கட்சியே இரண்டாகி விடும்.

    தற்போது பா.ம.க. கட்சியை சேர்ந்த ராமதாசை கட்டிப்பிடித்திருக்கிறார். அரசியலை விட்டுவிட்டு எடப்பாடி பழனிசாமி இலந்தைப் பழம் விற்க போகலாம். எடப்பாடி பழனிசாமிக்கு ஜென்ம சனி பிடித்துள்ளது. அது சாகும்வரை அவரை விடாது.

    இந்த தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு மக்கள் ஆதரவு தராவிட்டால் எடப்பாடி பழனிசாமி அரசியலை விட்டு போய்விடுவாரா? பா.ஜ.க. வேட்பாளர் ராதிகா நல்ல நடிகை. முக்கா துட்டுக்கு பிரயோஜனம் இல்லாத அவரை பார்க்க வேண்டும் என்று சென்னைக்கு போனால், ஆறு காவலாளிகளை கடந்து தான் அவரையே பார்க்க முடியும். மறைந்த விஜய காந்திற்கு அரசு மரியாதை கொடுத்து நல்லடக்கம் செய்த தி.மு.க.வுக்கு தான் மனசாட்சி உள்ள தே.மு.தி.க.வினர் ஆதரவு கொடுப்பார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் பிரசாரத்தில் அவர் பேசுகையில், பெண்களுக்காக தி.மு.க. அரசு பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது குறிப்பாக மகாலட்சுமி என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தி பெண்கள் வாழ்வில் வளம் சேர்க்க உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி நேரத்துக்கு நேரம்நிறம் மாறும் பச்சோந்தி ஆவார். அவர் எல்லோருக்கும் துரோகம் செய்தவர். மோடி தேர்தலுக்கு தேர்தல் தமிழ்நாட்டுக்கு வந்து கூளை கும்பிடு போடுவார் அவரை நம்பா தீர்கள் என்றார்.

    • விபத்தில் சிக்கிய, 19 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
    • போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை.

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நள்ளிரவில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து கோர விபத்து ஏற்பட்டுள்ளது.

    தென்காசியில் இருந்து கோவை நோக்கி சென்ற ஆம்னி பேருந்து தற்காலிக பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.

    இந்த கோர விபத்தில், இருவர் உயிரிழந்த நிலையில், 19 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

    மேலும், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×