search icon
என் மலர்tooltip icon

    வேலூர்

    • 200க்கும் மேற்பட்ட மரபு காய்கறிகளினுடைய கண்காட்சி மற்றும் விற்பனையும் நடைபெற உள்ளது.
    • 10 விவசாயிகளை தேர்ந்தெடுத்து "மண்ணை காக்கும் விவசாயிகளுக்கு மண் காப்போம் விருதுகள்" வழங்கப்பட இருக்கிறது.

    ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் "பாரத பாரம்பரிய நெல் மற்றும் உணவுத் திருவிழா" எனும் பிரம்மாண்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வேலூர் மாவட்டம் ஶ்ரீபுரம் பொற்கோவிலில் அமைந்துள்ள ஶ்ரீ நாராயணி மஹாலில் வரும் ஜூலை-28 ஆம் தேதி நடைபெற உள்ள இந்நிகழ்வை பாராளுமன்ற உறுப்பினர் திரு. கதிர் ஆனந்த் தொடங்கி வைக்கிறார்.

    இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு வேலூர் முத்தண்ணா நகரில் உள்ள ஈஷா யோக மையத்தில் நடைப்பெற்றது. இதில் ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் திரு. முத்துக்குமார் அவர்கள் பங்கேற்று பேசினார்.

    அவர் பேசுகையில், " ஈஷா மண் காப்போம் இயக்கம் கடந்த 15 வருடங்களாக நம் மண்ணை காக்கும் நோக்கத்தோடு தமிழகம் முழுவதும் இயற்கை விவசாயத்தை எடுத்து சென்ற வண்ணம் உள்ளது. இவ்வியக்கத்தின் மூலம் இதுவரையில் 25,000 விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 8,000 விவசாயிகளுக்கு மேல் இயற்கை விவசாயத்திற்கு திரும்பி வெற்றிகரமாக விவசாயம் செய்து வருகின்றனர்.

    இந்திய அரசு சமீபத்திய பட்ஜெட்டில் வரும் இரண்டு ஆண்டுகளில் 1 கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்திற்கு மாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளது. ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் நோக்கமும் அது தான். எனவே இயற்கை விவசாயத்தை மென்மேலும் விரிவுப்படுத்தும் நோக்கத்தோடு ஒவ்வொரு பயிருக்கு ஏற்றவாறான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இது ஆடி பட்டம் காலம் என்பதால் நெல் விவசாயிகள் பயன்பெறும் வகையில் இந்த நெல் திருவிழா நடத்தப்படுகிறது.

    மேலும் நெல் விவசாயத்தை பல வருடம் செய்த போதிலும், போதிய வருவாய் இல்லாமல் விவசாயிகள் சோர்வாக உள்ளனர். அதே வேளையில் சில முன்னோடி விவசாயிகள் நெல் விவசாயத்தை வெற்றிகரமாகவும், லாபகரமாகவும் செய்து வருகின்றனர். நெல் விவசாயத்தை எவ்வாறு லாபகரமாக செய்ய முடியும் என்பது குறித்த தங்களின் அனுபவங்களை முன்னோடி நெல் விவசாயிகள் இந்த "பாரத பாரம்பரிய நெல் மற்றும் உணவுத் திருவிழா" வில் பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள்.

    இந்நிகழ்ச்சியில் வேளாண் வல்லுநர்கள், விஞ்ஞானிகள் மற்றும் முன்னோடி விவசாயிகள் என ஏராளமானோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் பேச உள்ளனர். குறிப்பாக மரபு வழி கால்நடை மருத்துவரானபுண்ணியமூர்த்தி, பூச்சியியல் வல்லுநர் பூச்சி செல்வம், நெல் வயலில் மீன் வளர்த்து அசத்தி வரும் விவசாயி பொன்னையா மற்றும் மதிப்பு கூட்டல் மூலம் பல லட்சங்களில் வருவாய் ஈட்டும் தான்யாஸ் நிறுவனர் திரு. தினேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள்.


    மேலும் இந்த திருவிழாவின் முக்கிய அம்சமாக பொதுமக்களையும், விவசாயிகளையும் இணைக்கும் வகையிலான விவசாயிகளின் நேரடி சந்தை நடைபெற உள்ளது. இந்த சந்தையில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் இடம்பெற உள்ளன. இதில் பாரம்பரிய அரிசி வகைகள், நாட்டு காய்கறிகள் மற்றும் அதன் விதைகள், நம் மரபு திண்பண்டங்கள் உள்ளிட்ட பல்வேறு வேளாண் விளைப் பொருட்கள் சந்தைப்படுத்தப்பட உள்ளன.

    அது மட்டுமின்றி பாரம்பரிய நெல்லை பரவலாக்கம் செய்ய உதவும் வகையில் விதை நெல்லும் இலவசமாக வழங்கப்பட இருக்கிறது. அத்துடன் நெல் விவசாயிகளுக்கு பயன்படும் எளிய கருவிகளின் கண்காட்சி மற்றும் விற்பனை, நூற்றுக்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களின் கண்காட்சி மற்றும் 200க்கும் மேற்

    பட்ட மரபு காய்கறிகளினுடைய கண்காட்சி மற்றும் விற்பனையும் நடைபெற உள்ளது.

    மேலும் கூடுதல் சிறப்பாக இத்திருவிழாவில் இயற்கை முறையில் சிறப்பாக செயல்படும் 10 விவசாயிகளை தேர்ந்தெடுத்து "மண்ணை காக்கும் விவசாயிகளுக்கு மண் காப்போம் விருதுகள்" வழங்கப்பட இருக்கிறது. இந்த பிரம்மாண்ட திருவிழாவில் 2000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    இத்திருவிழாவில் கலந்து கொள்ள விரும்புவோர் 8300093777, 9442590077 என்ற எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்." இவ்வாறு அவர் பேசினார்.

    • பெண்களில் பெரும்பாலானோர் முடி உதிர்வதை பற்றி அதிகம் கவலைப்படுகின்றனர்.
    • மன அழுத்தம் காரணமாக உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன.

    பெண்களுக்கு இளம் வயதிலேயே முடி உதிர்வது அதிகமாக காணப்படுகிறது.

    இதுகுறித்து தனியார் நிறுவனம் ஒன்று 2.8 லட்சம் பெண்களிடம் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் 71.19 சதவீதம் பேர் முடி உதிர்தல் பிரச்சனையை எதிர்கொள்வது கண்டறியப்பட்டது.

    36 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் 51 சதவீதம் பேர் முடி உதிர்தல் பிரச்சனையை சந்திக்கின்றனர்.

    மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஆகியவை முடி உதிர்வுக்கு முக்கிய காரணம். ஆண்களுக்கு நிகராக பெண்களும் பல்வேறு துறைகளில் வேலை செய்து வருகின்றனர்.

    வீட்டு வேலைகள் மற்றும் அலுவலகங்களில் ஏற்படும் அழுத்தம் காரணமாக திணறும் பெண்கள் முடி உதிர்தல் பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். பெண்களில் பெரும்பாலானோர் முடி உதிர்வதை பற்றி அதிகம் கவலைப்படுகின்றனர்.


    பொடுகு, ரத்தசோகை, ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் பிரசவத்திற்கு பிறகான பிரச்சனைகள், தூக்கம் இன்மை போன்றவையும் பெண்கள் முடி உதிர்வுக்கு காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

    மன அழுத்தம் காரணமாக உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. தூக்கமின்மை, ஊட்டச்சத்து குறைபாடு, நொறுக்கு தீனிகள் அதிக அளவில் சாப்பிடுவது, புகைப்பிடித்தல் மற்றும் மது பழக்கம் ஆகியவை முடி உதிர்வை மோசமாக்குகின்றன.

    நொறுக்கு தீனி கட்டுப்பாடு மிகவும் அவசியம். தின்பண்ட பிரியர்கள் உஷாராக இருக்க வேண்டும்.

    முடி உதிர்வை தடுக்க உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்துடன் தினமும் 30 நிமிடம் 45 நிமிடங்கள் நடைபயிற்சி, யோகா செய்ய வேண்டும். மன அழுத்தத்தை குறைக்க நல்ல புத்தகங்களை படிக்க வேண்டும். இசையை கேட்க வேண்டும்.

    நம்முடைய வாழ்க்கை முறையை மாற்றி கொள்வதன் மூலம் முடி உதிர்தல் பிரச்சனையை தவிர்க்கலாம் என தெரிவித்துள்ளனர்.

    • பெண்களின் அழகுக்கு அழகு சேர்ப்பது வெட்கம்.
    • வெட்கப்படுவதற்கு இணையாக கோபப்படும் போதும் கன்னங்கள் சிவக்கின்றன.

    பெண்களின் அழகுக்கு அழகு சேர்ப்பது வெட்கம். குறிப்பாக திரைப்படங்களிலும், கதை புத்தகங்களிலும் வெட்கப்படும்போது முகம் சிவக்கும் அழகை வர்ணிக்காதவர்களே இல்லை. அதேவேளையில், வெட்கப்படுவதற்கு இணையாக கோபப்படும் போதும் கன்னங்கள் சிவக்கின்றன.

    குறிப்பாக டீன் ஏஜ் பருவம் என கூறப்படும் இளம்பெண்களுக்கு வெட்கத்தில் கன்னங்கள் சிவப்பாக மாறும். இது அவர்களின் அழகை மெருகூட்டுவதாக அமைந்துள்ளது.

    சிலருக்கு சிலரை பார்த்தால் இந்த வெட்கம் ஏற்படுகிறது. இந்த வெட்கத்தின் போது முகம் சிவப்பு நிறத்தை அடைகிறது. அது ஏன் அப்படி சிவப்பு நிறத்தை அடைகிறது என்ற ஆராய்ச்சியில் நெதர்லாந்தை சேர்ந்த அம்ஹர் டாம் பல்க லைக்கழகத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.

    40 டீன் ஏஜ் பருவ இளம் பெண்களை ஆய்விற்காக எடுத்துக் கொண்டனர். சினிமா பாடல்களை ஒளிபரப்பி அதனோடு இளம்பெண்களை பாடுமாறு கூறினார்கள். அவ்வாறு பாடும் போது அவர்களின் கன்னங்கள் வெப்பம் மற்றும் மூளையில் ஏற்பட்ட சந்தோசத்தால் சிவப்பது கண்டறியப்பட்டது. மேலும் பெண்கள் தங்களுக்குள் பாடல்களை பாடும் போது கன்னங்கள் தானாகவே சிவந்ததை கண்டனர்.

    பாடல் வரிகளை கேட்டு வெட்கத்தில் பெண்களுக்கு கன்னம் சிவப்பதையும் கண்டனர். கூச்சத்தின் முக்கிய பங்கான வெட்கத்தை கண்டு ஆராய்ச்சியாளர்கள் வியந்தனர்.

    இந்த ஆராய்ச்சியில் வெட்கத்தில் கன்னம் சிவப்பதற்கான முழுமையான காரணத்தை அவர்கள் வெளியிடவில்லை.

    • பாதுகாப்பாக அடர்ந்த வனப் பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.
    • கிராம மக்கள் கயிறு கட்டி பிடித்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஸ்ரீராம் நகர் ரெயில் நிலையத்தில் நேற்று காலை முதலை குட்டி ஒன்று புகுந்தது. பிளாட்பாரத்தில் அதிக அளவில் பயணிகள் இல்லை. இதனால் முதலை குட்டி பிளாட்பாரத்தில் ஏறி ஊர்ந்து சென்றது.

    இதனைக்கண்ட ரெயில்வே ஊழியர்கள் மற்றும் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து முதலை குட்டியை லாவகமாக பிடித்தனர்.

    இந்த குட்டிக்கு 6 மாதம் வயது என தெரிவித்தனர். முதலை குட்டியை பாதுகாப்பாக அடர்ந்த வனப் பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

    இந்த ரெயில் நிலையம் அருகே உள்ள கிராமத்தில் நேற்று மாலை 6 மணியளவில் பெரிய முதலை ஒன்று புகுந்தது. அதனை கிராம மக்கள் கயிறு கட்டி பிடித்தனர். வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று முதலையை மீட்டு வனப்பகுதியில் விட்டனர். அடுத்தடுத்து முதலைகள் புகுந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • தகாத வார்த்தைகளில் பேசுவதாகவும் தொடர் புகார்கள் வந்துள்ளது.
    • வேலூர் எஸ்.பி. மணிவண்ணன் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

    வேலூரில் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருப்பவர் ராஜா. இவர் ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க தவறியதாகவும் இன்ஸ்பெக்டர் ராஜா மீது விமர்சனங்கள் எழுந்துள்ளது.

    இந்நிலையில் புகார் அளிக்க வரும் பொதுமக்களை தகாத வார்த்தைகளில் பேசுவதாகவும் தொடர் புகார்கள் வந்துள்ளது.

    இதையடுத்து வேலூர் சத்துவாச்சாரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜா மீது அடுக்கடுக்காக புகார் எதிரொலி காரணமாக இன்ஸ்பெக்டர் ராஜாவை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து வேலூர் எஸ்.பி. மணிவண்ணன் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

    • கூட்டணி என்பது வேறு காவிரி பிரச்சினை என்பதும் வேறு.
    • நிரந்தர தீர்வை உச்சநீதிமன்றம் தான் தர வேண்டும்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், காட்பாடி கிறிஸ்டியான் பேட்டையில் உள்ள தனியார் நிதிஉதவி பெறும் பள்ளியில் முதல் அமைச்சரின் காலை உணவு திட்டத்தை நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார்.

    அப்போது அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

    காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழு தினசரி தமிழகத்திற்கு ஒரு டி.எம்,சி தண்ணீரை திறக்க உத்தரவிட்டது. ஆனால் கர்நாடக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி 8 ஆயிரம் கன அடி தண்ணீர் தான் விடப்படும் என்று கூறுகிறார்கள்.

    கோர்ட்டு உத்தரவிட்ட பின்னரும் அவர்கள் தண்ணீரை தர மறுக்கி றார்கள். முதலமைச்சருடன் கலந்து பேசி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவதா? அல்லது கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதுவதா? என்பதை இன்று முடிவு செய்வோம். கூட்டணி என்பது வேறு காவிரி பிரச்சனை என்பதும் வேறு.

    அ.தி.மு.க ஆட்சியில் இருந்த போது மட்டும் அவர்களுக்கு கர்நாடக அரசு தண்ணீரை திறந்தாவிட்டது. இது காலம்காலமாக உள்ள பிரச்சனை. தற்போது இதுகுறித்து கவனம் செலுத்தி வருகிறோம்.

    எடப்பாடி பழனிசாமிக்கு இதுபற்றி எல்லாம் எதுவும் தெரியாது. கர்நாடகத்தில் தற்போது 4 அணைகளிலும் போதிய நீர் இருப்பு இருந்தும் அவர்கள் அலட்சியம் காட்டுகிறார்க்ள். இதற்கு நிரந்தர தீர்வை உச்சநீதிமன்றம் தான் தர வேண்டும். ஆனாலும் நீதிமன்ற தீர்ப்பை கர்நாடகா மதிக்கமாட்டேன் என்கிறார்கள் என்ன செய்வது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தி.மு.க. தமிழ்நாட்டு மக்களையும் தமிழக விவசாயிகளையும் பற்றி கவலைப்படவில்லை.
    • மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை கைப்பற்றும் போது சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நடைபெற்றதாக சொல்கிறார்கள்.

    வேலூர்:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று காலை வேலூர் மாவட்டம் காட்பாடி வந்தார். ரெயில் மூலம் வந்த அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    விக்கிரவாண்டி தேர்தலை பொருத்தவரை ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை. பண பலம், அதிகார பலத்தால் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.

    கர்நாடக அரசு தமிழகத்திற்கு வர வேண்டிய தண்ணீரை வழங்க வேண்டும். ஆனால் இன்றைக்கு அவர்கள் கூட்டணியில் இடம் பெற்றுள்ள தி.மு.க. அதைப் பற்றி எல்லாம் பேசுவது கிடையாது.

    தி.மு.க. தமிழ்நாட்டு மக்களையும் தமிழக விவசாயிகளையும் பற்றி கவலைப்படவில்லை. உச்சநீதிமன்ற உத்தரவின்படி நமக்கு வழங்க வேண்டிய தண்ணீரை தான் நாம் கேட்கிறோம்.

    தி.மு.க.க்கு கூட்டணி தான் முக்கியம். ஆட்சி அதிகாரம் தான் முக்கியம். இந்தியா கூட்டணியில் தான் காங்கிரஸ் உள்ளது. தமிழக முதலமைச்சர் காவிரி தண்ணீருக்காக எந்தவித குரலையும் கொடுக்கவில்லை.

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சுட்டுக்கொல்லப்பட்ட திருவேங்கடம் என்ற நபர் ஏற்கனவே சரண் அடைந்தவர். சரணடைந்தவரை அதிகாலையிலேயே வேக வேகமாக அழைத்துச்சென்றது ஊடகத்தின் மூலமாக பார்த்து தெரிந்து கொண்டேன்.

    அவர் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை எடுப்பதற்காக அழைத்துச் சென்றதாக தெரிகிறது. அப்படி அழைத்துச் சென்றவரை கை விலங்கு போட்டு தான் அழைத்துச் செல்ல வேண்டும்.

    மேலும் பாதுகாப்பாக சென்று இருக்க வேண்டும். மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை கைப்பற்றும் போது சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நடைபெற்றதாக சொல்கிறார்கள்.

    ஏன் அவர் அவசர அவசரமாக சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.

    இதில் சந்தேகம் இருப்பதாக தெரிகிறது. ஆம்ஸ்ட்ராங்கின் உறவினர்கள் மற்றும் கட்சியை சேர்ந்தவர்கள் உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என கூறி வருகிறார்கள்.

    இந்த நிலையில் இப்போது செய்யப்பட்ட என்கவுண்டர் மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஏரிகளில் இலவசமாக களிமண் மற்றும் வண்டல் மண் எடுத்துக்கொள்ள அரசு அனுமதி வழங்கி உள்ளது.
    • காட்பாடி ரெயில்வே மேம்பாலத்தின் அருகே புதிய மேம்பாலம் கட்டுவதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.

    காட்பாடி:

    வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா சேவூர் கிராமத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஏரிகளில் இலவசமாக களிமண் மற்றும் வண்டல் மண் எடுத்துக்கொள்ள அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதன் மூலம் ஏரி மற்றும் குளங்களில் தண்ணீர் தேக்கப்படும். மேலும் ஏரி மற்றும் குளங்களில் மண் எடுக்கும் போது ஆங்காங்கே எடுக்க விடாமல் அதை முறைப்படி எடுக்க அதிகாரிகள் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் மண் எடுப்பவரும், விவசாயிகளும் பயனடைவார்கள்.

    கிரானைட் முறைகேடு தொடர்பாக அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. தற்போது தான் அந்த அறிக்கை எனக்கு வந்துள்ளது. படித்துப் பார்த்த பிறகுதான் முறைகேடு குறித்து தெரியவரும்.

    ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பதவி ஏற்றபின்னர் முதன்முறையாக குப்பம் தொகுதியில் பேசும்போது பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட ஆந்திர அரசு முயற்சிகள் மேற்கொண்டால் அதனை தடுக்க தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும்.

    காட்பாடி ரெயில்வே மேம்பாலத்தின் அருகே புதிய மேம்பாலம் கட்டுவதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

    இதனால் காட்பாடி பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும். காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் பகுதியில் மழைநீரை தேங்க விடாமல் தடுக்க, ஆங்காங்கே தேங்கி இருக்கும் குப்பைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தேவை என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறியுள்ளார். இது தொடர்பாக எல்லோருமே தான் கேட்டு வருகிறார்கள். அதேபோல தான் மாயாவதியும் கேட்டுள்ளார். கொலைச் சம்பவம் எல்லா நாட்களிலும் எல்லா இடங்களிலும் நடைபெற்று தான் வருகிறது. தனிப்பட்ட விரோதத்தின் காரணமாக கொலைகள் நடைபெறுகிறது. இதற்கும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனைக்கும் சம்பந்தம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆகஸ்டு 15-ந் தேதிக்குள் அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வத்தை இணைக்க வேண்டும் என்று பா.ஜனதாவை சேர்ந்த பியூஸ்கோயல் கூறியிருந்தது பற்றி கேட்டதற்கு, 'அதெல்லாம் வெளிநாட்டு செய்தி' என தனக்கே உரிய பாணியில் பதில் அளித்தார்.

    அப்போது டி.எம்.கதிர்ஆனந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன், அமலுவிஜயன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • தமிழகத்தில் திமுகவுக்கு மாற்றாக பலம் வாய்ந்த கட்சியாக அதிமுக உள்ளது.
    • அனைவரும் ஒன்றிணைந்தால், எதிர்வரும் தேர்தலில் அதிமுக ஆட்சியை பிடிக்கலாம்.

    அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைவரும் ஒன்றிணைந்தால், எதிர்வரும் தேர்தலில் அதிமுக ஆட்சியை பிடிக்கலாம் என கே.வி.குப்பம் எம்எல்ஏ ஜெகன் மூர்த்தி கருத்து தெரிவித்துள்ளார்.

    அதிமுக கூட்டணியில் உள்ள ஜெகன் மூர்த்தி, கடந்த சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    இந்நிலையில், அதிமுக குறித்து மேலும் அவர் கூறுகையில், " தமிழகத்தில் திமுகவுக்கு மாற்றாக பலம் வாய்ந்த கட்சியாக அதிமுக உள்ளது.

    தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க பரிசீலனை செய்ய வேண்டும்.

    அவ்வாறு செய்தால், எதிர்வரும் தேர்தலில் அதிமுக ஆட்சியை பிடிக்கலாம்" என்றார்.

    • பாரம்பரிய வினோத காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
    • காளைகளை தழுவி ஓட விட்டு விளையாடினர்.

    ஒடுகத்தூர்:

    வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்ட தொங்குமலை கிராமத்தில் 350-கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடும்பங்களாக வசித்து வருகின்றனர்.

    இங்கு 100 ஆண்டுகள் கடந்த பாரம்பரிய வினோத காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.

    கடந்த 48 நாட்களுக்கு முன்பு இருந்து அப்பகுதி மக்கள் காளியம்மனுக்கு காப்பு கட்டி விரதம் இருந்து மலைவாழ் மக்களின் பாரம்பரிய முறைப்படி ஊர் சீதனம் கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு வழிப்பட்டனர்.

    மேலும் தொடந்து, மலைவாழ் மக்களின் முன்னோர்கள் வழிபட்டு வந்த 'ஜாலாமரம்' என்றழைக்கப்படும் மரம், முன்னோர்கள் வைத்து வழிபட்டு வந்த கயிறு, மரக்கட்டையாலான கத்திகள், தோலால் செய்யப்பட்ட மேளம் வைத்து ஊர் பெரியோர்கள் முன்னிலையில் ஒரு வாரமாக பல்வேறு தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

    அதன் தொடர்ச்சியாக நேற்று மதியம் 12 கிராமங்களின் பாரம்பரிய திருவிழாவான எருது கட்டும் திருவிழா தொங்குமலை கிராமத்தில் கொண்டாடப்பட்டது. இதற்காக, சுற்றியுள்ள மலை கிராமங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட காளைகளை அங்கு அமைக்கப்பட்டிருந்த 4 பெரிய மந்தையில் அடைத்து வைத்திருந்தனர்.

    பின்னர், 12 கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் ஊர் பெரியோர்களின் காலில் விழுந்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, பாரம்பரிய முறையில் மந்தையில் அடைத்து வைத்திருந்த காளைகளை ஒவ்வொன்றாக கயிறுகட்டி மைதானத்திற்கு அழைத்து வந்து காளைகளை தழுவி ஓட விட்டு விளையாடினர்.

    இந்த விழாவினைக் காண பீஞ்சமந்தை, சின்ன எட்டிபட்டு, கட்டியப்பட்டு, தேந்தூர், பெரியபணப்பாறை, பலாம்பட்டு, ஜார்தான்கொல்லை, எல்லுப்பாறை உள்ளிட்ட ஏராளமான மலை கிராமங்களில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டனர்.

    ஆண்களுக்காக 5 நாள் ஒதுக்கப்பட்டு பெண்களுக்கு என்று கடைசியாக ஒரு நாள் திருவிழா நடைபெறுகிறது.

    இந்த திருவிழாவின் மங்கையர்களுக்காக கொடுக்கப்படும் மகத்துவமான மரியாதை என கூறி வருகின்றனர்.

    இன்று நடைபெறும் பெண்களுக்கான திருவிழாவில் ஆண்கள் யாரும் பங்கேற்க கூடாது அப்படி பங்கேற்றால் சாமி அவர்களை சும்மா விடாது என்று, அருள் வந்து ஆடிடும் பெண்கள் ஆண்களை ஓட ஓட விரட்டி அடிப்பது இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. 

    • மாணவர் திட்டங்களுக்கு வழிகாட்டுவார்கள்.
    • புதிய ஆய்வு துறைகளில் கவனம் செலுத்தும்.

    வேலூர்:

    வி.ஐ.டி. பல்கலைக்கழகம் நோக்கியாவுடன் 5ஜி மற்றும் அடுத்த தலைமுறை செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங் பற்றி கூட்டு ஆராய்ச்சி தொடர ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

    வி.ஐ.டி. நிறுவனர் வேந்தர் டாக்டர். ஜி.விசுவநாதன், வி.ஐ.டி. துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன் மற்றும் டாக்டர் ஜி.வி. செல்வம் முன்னிலையில் விஐடி பதிவாளர் டாக்டர் டி.ஜெயபாரதி மற்றும் நோக்கியா பெங்களூரு பல்கலைக்கழக ஒத்துழைப்புத் தலைவர் பொன்னி ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

    விஐடி துணைவேந்தர் டாக்டர் வி.எஸ். காஞ்சனா பாஸ்கரன், இணை துணைவேந்தர் டாக்டர் பார்த்த சாரதி மல்லிக், எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் துறை டீன் டாக்டர்.எஸ்.சிவானந்தம் மற்றும் நோக்கியா லேப்ஸ் தலைவர் எஸ்.மீனாட்சி, நோக்கியா விஐடி புரிந்துணர்வு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் க. கோவர்தன் ஆகியோர் உடனிருந்தனர்.

    இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், விஐடி மற்றும் நோக்கியா ஆகியவை 5ஜி, செயற்கை நுண்ணறிவு (ஏ1உ) மேம்படுத்தப்பட்ட தகவல் தொடர்பு, டிஜிட்டல் ட்வின், ரேடியோ அடிப்படையிலான உணர்திறன், இணைக்கப்பட்ட வான்வழி வாகனங்கள், மின்னணு ஆரோக்கியம் மற்றும் ஆட்டோமேஷன் போன்ற புதிய ஆய்வு துறைகளில் கவனம் செலுத்தும்.

    நோக்கியாவின் வல்லுநர்கள் விஐடியின் பாடத்திட்டக் குழுவில் உறுப்பினர்களாக இருப்பார்கள், கற்றல், முன்மாதிரி மற்றும் மாணவர் திட்டங்களுக்கு வழிகாட்டுவார்கள்.

    நோக்கியா விஐடி மாணவர்களுக்கான கற்றல் வாய்ப்புகளை வழங்கும் மற்றும் குறுகிய கால தொடர் கல்வி திட்டங்களை கூட்டாக ஏற்பாடு செய்யும் என தெரிவித்தனர். 

    • வேலூர் அடுத்த மோட்டூர் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது.
    • விபத்தில் சிக்கி மாணவி இறந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    வேலூர்:

    சென்னை நெற்குன்றத்தை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 19) ஈக்காட்டுத்தாங்களை சேர்ந்தவர் டிராவிட் (21). ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்தவர்கள் அஸ்வதி (21) மற்றும் சக்தி (21).

    இதில் விஷ்ணுவும், அஸ்வதியும் சென்னையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்கள் 4 பேரும் திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலைக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். அதன்படி இன்று காலை சென்னையில் இருந்து காரில் புறப்பட்டனர்.

    வேலூர் அடுத்த மோட்டூர் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் சாலையில் தாறுமாறாக ஓடி தடுப்பு கம்பியில் மோதியது. இதில் கார் உருண்டு சென்று லாரியின் மீது மோதியது. காரின் முன் பகுதி முழுவதும் சேதமானது.

    காரில் இருந்த இளம்பெண் உட்பட 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இவர்களது அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் விபத்து குறித்து விரிஞ்சிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் சிக்கி இருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அஸ்வதி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏலகிரிக்கு சுற்றுலா சென்ற போது விபத்தில் சிக்கி மாணவி இறந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    ×