search icon
என் மலர்tooltip icon

    திருச்சிராப்பள்ளி

    • காயத்துடன் கிடந்த கண்டக்டரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • ஓடும் பஸ்சில் இருக்கை கழன்று கண்டக்டர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருச்சி:

    திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பஸ் புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பஸ், பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது.

    அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ்ஸின் கண்டக்டர் இருக்கை நெட்டு போல்டு கழன்று அதில் அமர்ந்திருந்த கண்டக்டர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட்டனர். உடனே டிரைவர் பஸ்சை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த கண்டக்டரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் அந்த பஸ்ஸில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு டவுன் பஸ்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் டிரைவர் ரோட்டில் கிடந்த இருக்கையை எடுத்து பஸ்சில் போட்டுவிட்டு பணிமனைக்கு சென்றார்.

    அதிர்ஷ்டவசமாக கண்டக்டர் தூக்கி வீசப்பட்ட நேரத்தில் அந்த வழியாக வேறு வாகனங்கள் வரவில்லை. அவ்வாறு வந்திருந்தால் நிலைமை மோசமாகி இருக்கும் என பயணிகள் அச்சம் தெரிவித்தனர்.

    ஓடும் பஸ்சில் இருக்கை கழன்று கண்டக்டர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • திருச்சி விமான நிலையத்திற்கு சிங்கப்பூரிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது.
    • விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.

    கே.கே. நகர்:

    திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் அதிக அளவில் பயணம் செய்யும் பயணிகள் தங்கத்தை மறைத்து எடுத்து வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குறைந்து இருந்த தங்கம் கடத்தல் மீண்டும் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்திற்கு சிங்கப்பூரிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது ஆண் பயணி ஒருவரின் நடத்தையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவரை தனியே அழைத்து சென்று சோதனை செய்தனர்.

    அப்போது அவர் தனது காலணியின் அடிப்பகுதியில் ரூ.28.86 லட்சம் மதிப்பிலான 401.5 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த பயணியை கைது செய்து அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • டாஸ்மாக் மதுபான கடைகளில் பீர் விற்பனை அதிகரித்துள்ளது.
    • கடந்த ஆண்டு டின் பீர் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது.

    திருச்சி:

    தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் சுட்டெரிக்கிறது. பொதுவாக அக்னி நட்சத்திரம் என அழைக்கப்படும் கத்தரி வெயில் காலமான மே மாதத்தில் தான் வெயிலின் உக்கிரம் இந்த அளவுக்கு இருக்கும். ஆனால் முன்பாகவே மேலும் தாக்கம் கடுமையாக உள்ளது.

    அதிலும் திருச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தினமும் வெயில் சதம் அடித்து வருகிறது. இதனால் வெப்ப தாக்குதலில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர்பானங்களை அதிகம் நாடி வருகின்றனர்.

    ஆனால் மது பிரியர்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க ஜில் பீர் அதிகம் குடிக்க தொடங்கியுள்ளனர். இதனால் டாஸ்மாக் மதுபான கடைகளில் பீர் விற்பனை அதிகரித்துள்ளது.

    திருச்சி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் ஜில் பீர் விற்பனை 2 மடங்காக அதிகரித்து உள்ளது. டாஸ்மாக் கடைகளில் ஜில் பீருக்காக கூட்டம் அலை மோதுகிறது.

    இதுபற்றி திருச்சி மண்டல டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறும்போது, கடந்த 2 மாதங்களில், பீர் விற்பனை 8 சதவீதம் முதல் 16 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மாயிலாடுதுறை, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய பகுதிகளில் மொத்தம் 18 ஆயிரம் பீர் பெட்டிகள் விற்பனை ஆகியுள்ளது.

    வருகிற மே மாதத்தில் விற்பனை 18 முதல் 20 சதவீதம் வரை உயரும் என எதிர்பார்க்கிறோம். மேலும், கடந்த ஆண்டு டின் பீர் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. ஆனால், தற்போது 8 டிப்போக்களிலும் தேவைக்கு ஏற்ப பீர் பாட்டில்கள் வழங்கப்படுகின்றன.

    பாராளுமன்றத் தேர்தல் கட்டுப்பாடுகள் காரணமாக சில நாட்கள் விடுமுறை விடப்பட்டதால் விற்பனை மந்தமாக இருந்தது. தற்போது விற்பனை சூடு பிடித்துள்ளது என தெரிவித்தார்.

    திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் மேற்பார்வையாளர் கூறும் போது, சமீபத்தில் சாதாரண பீர் பாட்டில்களின் விலை ரூ.170லிருந்து ரூ.230 ஆக உயர்ந்துள்ளது. விலை உயர்ந்தாலும் அது விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. பகலில் பீர் விற்பனை அதிகமாக நடக்கிறது என்றார்.

    • டாக்டர்கள் பரிசோதித்தபோது கொடிமலர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
    • கொடிமலரை கழுத்தை அறுத்து கொலை செய்தது யார்? என்று போலீசார் விசாரணை நடத்தினர்.

    ராம்ஜிநகர்:

    திருச்சி சோமரசம்பேட்டை வாசன் சிட்டி 12-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் லிங்கம்(வயது 55). இவர் நாடார் சத்திரத்தில் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி கொடிமலர்(48). இவர்களுக்கு ராஜகுமாரன்(29) என்ற மகனும், வளர்மதி(28) என்ற மகளும் உள்ளனர்.

    வளர்மதிக்கு திருமணம் ஆகிவிட்டது. ராஜகுமாரன் திருச்சி சாஸ்திரி ரோட்டில் ஒரு நகைகடையில் வேலை செய்து வருகிறார். லிங்கம் தினமும் வியாபாரத்திற்காக மார்க்கெட் சென்று பழங்கள் வாங்கி வருவது வழக்கம்.

    நேற்று இவர் வழக்கம்போல பழங்கள் வாங்க சென்றுவிட்டார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் கொடிமலர் கழுத்து அறுக்கப்பட்ட் நிலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். இதை பார்த்து அலறி துடித்த லிங்கம் மற்றும் அவரது மகன் ராஜகுமாரன் ஆகியோர் கொடிமலரின் உடலை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது கொடிமலர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி சோமரசம்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஜீயபுரம் டி.எஸ்.பி. பாலசந்தர், சோமரசம்பேட்டை இன்ஸ்பெக்டர் முகமது ஜாபர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

    கொலை செய்யப்பட்ட கொடிமலரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. கொடிமலரை கழுத்தை அறுத்து கொலை செய்தது யார்? என்று போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.

    மகன் ராஜகுமாரனே தாய் கொடிமலரை கொலை செய்துவிட்டு நாடகமாடியது தெரியவந்தது. ராஜகுமாரன் தனது தந்தை வழி உறவினர் மகளை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு கொடிமலர் எதிர்ப்பு தெரிவித்தார்.

    மேலும் தனது உறவினர் மகளைதான் திருமணம் செய்யவேண்டும் என்று ராஜகுமாரனிடம் கூறியதாக தெரிகிறது. இதனால் ராஜகுமாரன் கடந்த 6-ந்தேதி விஷத்தை குடித்துவிட்டார். உடனே அவரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் ராஜகுமாரன் வீடு திரும்பினார்.

    வீட்டுக்கு வந்தபிறகு தான் விரும்பிய பெண்ணுடன் திருமணம் செய்து வைக்குமாறு கொடிமலரிடம் வற்புறுத்தினார். அதற்கு கொடிமலர் பிடிவாதமாக மறுவிட்டார். இது ராஜகுமாரனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    நேற்று அதிகாலை லிங்கம் கடைக்கு சென்ற நிலையில் கொடிமலருக்கும், ராஜகுமாரனுக்கும் இடையே இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜகுமாரன் கத்தியால் கொடிமலரை குத்தி கொலை செய்தார்.

    பின்னர் யாரோ மர்மநபர் கொலை செய்துவிட்டதாக நாடகம் ஆடியுள்ளார். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் ராஜகுமாரனை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பள்ளியில் படிக்கும் போது துளிர்விட்ட ஜெய்ஸ்ரீயின் காதல், கல்லூரி வரை வந்து மரணத்தில் முடிந்தது ஸ்ரீரங்கம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • பொதுவாக மாடியில் இருந்து கீழே குதித்தால் தலை, கை, கால், இடுப்பு என அனைத்து இடங்களிலும் அடிபட்டிருக்கும்.

    திருச்சி:

    திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபால் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் கோபி என்கிற கோவிந்தராஜன் மகள் ஜெய்ஸ்ரீ (வயது 18). திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.ஏ. ஆங்கில பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    ஜெய்ஸ்ரீ ஸ்ரீரங்கம் வடக்கு சித்திர வீதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவருடைய மகன் கிஷோர் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கிஷோர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. மேலும் இவர் ரவுடி பட்டியலில் உள்ளார்.

    கடந்த 20-ந்தேதி கிஷோரும், ஜெய்ஸ்ரீயும் நண்பரின் வீட்டு மாடியில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஜெய்ஸ்ரீ திடீரென்று மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதை தொடர்ந்து ஜெய்ஸ்ரீயை தற்கொலைக்கு தூண்டியதாக காதலன் கிஷோரை போலீசார் கைது செய்தனர். கைதான கிஷோர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    நானும் ஜெய்ஸ்ரீயும், கடந்த 5 வருடமாக காதலித்து வந்தோம். ஜெய்ஸ்ரீ பள்ளியில் படிக்கும்போது அவரை நான் விரும்பினேன். இந்த நிலையில் ஜெய்ஸ்ரீ திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார்.

    அதற்கு நான் 'நீ கல்லூரி படிப்பை முடி, நானும் ஒரு வேலை தேடிக்கொள்கிறேன். வேலை கிடைத்ததும் திருமணம் செய்கிறேன்' என்றேன். அதை ஜெய்ஸ்ரீ ஏற்றுக்கொள்ளவில்லை. இதன் காரணமாகவே எங்களுக்குள் வாக்குவாதம் எழுந்தது.

    இதற்காக அவள் தற்கொலை செய்வாள் என்று நான் சற்றும் எதிர் பார்க்கவில்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

    பள்ளியில் படிக்கும் போது துளிர்விட்ட ஜெய்ஸ்ரீயின் காதல், கல்லூரி வரை வந்து மரணத்தில் முடிந்தது ஸ்ரீரங்கம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பொதுவாக மாடியில் இருந்து கீழே குதித்தால் தலை, கை, கால், இடுப்பு என அனைத்து இடங்களிலும் அடிபட்டிருக்கும். ஆனால், ஜெயஸ்ரீக்கோ பின் தலையில் மட்டுமே காயம் ஏற்பட்டுள்ளது. மற்ற எந்த இடத்திலும் காயம் ஏற்படவில்லை. இதனால் அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

    • தினமும் இரவில் நவநாள் திருப்பலி நடைபெற்றது.
    • திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    மணிகண்டம்:

    மணிகண்டம் ஒன்றியம், நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் உள்ள அருள்நிறை அடைக்கல அன்னை ஆலய திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் இரவில் நவநாள் திருப்பலி நடைபெற்றது.

    கடந்த வெள்ளிக்கிழமை இரவு நற்கருணை பவனியும், இயேசுவின் திருப்பாடுகள் காட்சி எனப்படும் பாஸ்கா நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    நேற்று முன்தினம் இரவு தேர்பவனி நடைபெற்றது. இதையொட்டி மாலையில் திருவிழா சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது.

    நள்ளிரவில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 4 சப்பரங்களில் அருள்நிறை அடைக்கல அன்னை, செபஸ்தியார், அந்தோணியார் மற்றும் ஆவூர் தேர் என்று அழைக்கப்படும் சப்பரத்தில் உயிர் நீத்த ஆண்டவர் ஆகிய சொரூபங்கள் வைக்கப்பட்டு முக்கிய வீதிகளில் தேர்பவனி நடைபெற்றது.

    முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர் நேற்று அதிகாலை நிலையை அடைந்தது. விழாவில் நவலூர் குட்டப்பட்டு, ராம்ஜிநகர், சோமரசம்பேட்டை, புங்கனூர், மணிகண்டம், திருச்சி, அம்மாபேட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    நேற்று காலை தேரடி திருப்பலி, புது நன்மை ஆடம்பர கூட்டு திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இரவில் உபய தேர்பவனியும், கொடி இறக்குதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதையடுத்து பட்டிமன்றம் நடைபெற்றது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாக மணியக்காரர்கள் சேவியர், ஜெரின் ராஜதுரை, கொத்து மணியக்காரர்கள், கத்தோலிக்க இளைஞர் மன்றத்தினர் மற்றும் இறைமக்கள் செய்திருந்தனர்.

    • திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நாளை தேர்க்கால் பார்த்தல் மற்றும் நடராஜர் புறப்பாடு நடைபெறுகிறது.

    சமயபுரம்:

    மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடந்தது. 18-ந்தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், 19-ந் தேதி திருக்கல்யாணமும் நடைபெற்றது. நேற்று இரவு தங்கக்குதிரை வாகனம், காமதேனு வாகனத்தில் சாமி, அம்பாள் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 5.30 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் மேஷ லக்னத்தில் சுவாமி தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு மேல் தேர்க்கால் பார்த்தல் மற்றும் நடராஜர் புறப்பாடு நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு கேடயத்தில் சாமி புறப்பாடு நடைபெறுகிறது. 24-ந் தேதி இரவு 7 மணிக்கு முத்துப்பல்லக்கும், 25-ந் தேதி இரவு பஞ்சபிரகார புறப்பாடும் நடைபெறுகிறது. 26-ந் தேதி காலை 7 மணிக்கு விடையாற்றி மற்றும் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

    • நேற்று வேப்பிலை மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
    • வேப்பிலை மாரியம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

    மணப்பாறை:

    மணப்பாறை நகரின் மையப்பகுதியில் சுமார் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வேப்பிலை மாரியம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் நேற்று வேப்பிலை மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதையொட்டி காலையில் வேப்பிலை மாரியம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

    பின்னர் மாலையில் கோவில் பரம்பரை அறங்காவலர் ஆர்.வீ.எஸ். குடும்பத்தினர் சார்பில் முதல் தட்டு பூ அம்மனுக்கு செலுத்தப்பட்டது.

    இதைத்தொடர்ந்து ஏராளமான பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் பூத்தட்டுகளை ஏந்தி வந்து அம்மனுக்கு சாற்றி வழிபட்டு சென்றனர். மேலும் மணப்பாறை நகரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இருந்து அலங்கரிக்கப்பட்ட ரதங்களில் பூக்கள் எடுத்து வரப்பட்டு, ரதங்கள் அனைத்தும் முனியப்பன் கோவில் முன்பிருந்து ஒன்றன் பின் ஒன்றாக புறப்பட்டு வேப்பிலை மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது.

    இதைத்தொடர்ந்து வேப்பிலை மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் இருந்து இரவு நேரங்களிலும் தாரை, தப்பட்டை முழங்க ரதங்கள் வந்த நிலையில் மணப்பாறை பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது. இதையடுத்து சித்திரை திருவிழா வருகிற 28-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது.

    பின்னர் மே மாதம் 12-ந் தேதி பால்குட விழாவும், 13-ந் தேதி காலையில் பொங்கலிடுதல், மாவிளக்கு, அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்தி வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மாலையில் அம்மன் திருவீதி உலா வரும் வேடபரி நடக்கிறது.

    15-ந் தேதி காப்பு கலைதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. பூச்சொரிதல் மற்றும் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ஆர்.வீ.எஸ்.வீரமணி, செயல் அலுவலர் அன்பழகன் தலைமையில் செய்து வருகின்றனர்.

    • விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
    • காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

    திருச்சி:

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சி ஜங்சன் ரெயில் நிலையத்தில் இருந்து நிஜாமுதீன் சம்பர் க்ராந்தி விரைவு ரெயிலில் நேற்று அதிகாலை டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.

    இவர்கள் விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும், விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு மாத ஓய்வூதியம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும், காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

    உச்சநீதிமன்ற உத்தரவுபடி காவிரியில் கர்நாடக அரசு மாதா மாதம் தண்ணீர் திறக்க வேண்டும். கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளனர்.

    • திருத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
    • நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    திருச்சி:

    மலைக்கோட்டை தாயுமானவ சாமி கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 14--ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

     அன்று முதல் ஒவ்வொரு நாளும் சுவாமி அம்பாளுக்கு பகலில் சிறப்பு அபிஷே கமும், இரவில் சிறப்பு அலங்காரத்துடன் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடைபெற்று வருகிறது. இதில் 5-ம் நாள் அன்று சிவபக்தியில் சிறந்த செட்டிப் பெண் ரத்தினா வதிக்கு அவளது பேறுகா லத்தில் தாய் வர முடியாத காரணத்தால், அவளது தாயாக சிவபெருமான் வந்து பேறுகாலத்தில் மருத்துவம் பார்த்த ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது.

     6-ம் நாள் நிகழ்ச்சியாக சுவாமி-அம்பாளுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து 9-ம் நாளான இன்று அதிகாலை 4.30 மணிக்கு மேல் மேஷ லக்கனத்தில் சுவாமி-அம்பாள் கோவி லில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடு செய்யப்பட்டு மலைக்கோட்டை உள் வீதி வழியாக 5.40 மணிக்கு தாயுமானவ சாமி உடனுறை மட்டுவார் குழலம்மை பெரிய தேரிலும், தாயார் சிறிய தேரிலும் எழுந்தருளினர். பின்னர் 6.10 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடை பெற்றது.

     இந்த தேரோட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் புறப்பாடு சிறிய சப்பரத்தில் முன்னே செல்ல, அதை தொடர்ந்து கோவில் யானை லட்சுமியும் செல்ல, பெரிய தேரையும், சிறிய தேரையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

    இதில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட னர். பல்வேறு வகையான மேளதாளங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் வெகு விமரிசையாக தேரோட்டம் நடைபெற்றது.

    இந்த சித்திரை திருவிழாவில் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி யில் ஆரவா ரத்துடன் கலந்து கொண்டு சிவ சிவா, தாயுமான ஈசா, ஆரூரா என்ற கோஷங்களை எழுப்பினர். மேலும் தேர் செல்லும் பாதைகளில் ஆங்காங்கே பக்தர்களுக்கு பாலும், குளிர்பானங்களும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

    • காயமடைந்த அருண்ராஜ் சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    • கொலை சம்பவம் லால்குடி பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    லால்குடி:

    திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நன்னி மங்கலம் மாதாகோயில் தெரு சேர்ந்தவர் அருண்ராஜ் (வயது 41). இவர் ஜல்லிக்கட்டு வீரர். இவருக்கு லாரன்ஸ் மேரி என்ற மனைவியும் 15 வயதுக்குட்பட்ட 2 மகன்களும் உள்ளனர். அருண்ராஜ் ஜல்லிக்கட்டு வீரர் என்பதால் ஜல்லிக்கட்டு காளை அடக்குவது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த தயாளன் உள்ளிட்டோர் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

    இது தொடர்பான முன் விரோதத்தில் கடந்த பிப்ரவரி மாதம் லால்குடி மாரியம்மன் கோவில் திருவிழாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டின் போது அருண்ராஜை தயாளன் தரப்பினர் தாக்க முயன்றனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த பகுதியில் பாராளுமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்தது. நன்னிமங்கலம் கிராமத்தில் உள்ள வாக்கு சாவடிக்கு அருண்ராஜ் வாக்கு செலுத்த சென்றார். அப்போது அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே உள்ள பாசன வாய்க்கால் கரையில் மது அருந்தி கொண்டிருந்த தயாளன், ஹானஸ்ட்ராஜ், பிரபு, சங்கர், அலெக்ஸ் உள்ளிட்டோர் அருண் ராஜை வழிமறித்து கட்டையால் தலையில் தாக்கினர்.

    இதில் அருண்ராஜ் பலத்த காயம் அடைந்தார். உடனே தயாளன் உள்ளிட்ட் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. காயமடைந்த அருண்ராஜ் சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அருண்ராஜின் மனைவி லாரன்ஸ் மேரி கொடுத்த புகாரின்பேரில் தயாளன், ஹானஸ்ட்ராஜ், பிரபு, சங்கர், அலெக்ஸ், அலெக்சின் சகோதரர் ஆகிய 6 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர்.

    இதனிடையே திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த அருண்ராஜ் உடல்நிலை இன்று காலை மோசமானது. இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அருண்ராஜ் உயிரிழந்தார். இது தொடர்பாக லால்குடி போலீசார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரித்து வருகி றார்கள்.கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கொலை சம்பவம் லால்குடி பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தமிழ்நாட்டு மக்கள் முழுவதுமாக முதலமைச்சரின் பின்னால் இருக்கிறார்கள்.
    • பா.ஐ.க. டெபாசிட் இழக்குமா என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள்.

    திருச்சி:

    திருச்சி தில்லைநகர் மக்கள் மன்றத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும், தி.மு.க. முதன்மை செயலாளருமான கே.என். நேரு தனது வாக்கை பதிவு செய்தார். அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை விட, யார் அமைக்க கூடாது என்பதை கருத்தில் கொண்டு வாக்களிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பிரசாரத்தின் போது பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.

    தற்போது இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் என்கிற நிலை வந்துள்ளது. தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அமோகமாக வெற்றி பெறுவார்கள்.

    மத்திய அரசின் அதிகாரத்தைக் கொண்டு பா.ஜ.க. மீண்டும் ஆட்சி அமைப்போம் என கூறுகிறார்கள் அவ்வாறு எல்லாம் நடக்காது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க கூடிய அளவிற்கு பெரும்பான்மை பெறும்.

    தமிழ்நாட்டு மக்கள் முழுவதுமாக முதலமைச்சரின் பின்னால் இருக்கிறார்கள். சேலத்தில் வெற்றி பெறப்போவது செல்வ கணபதி தான்.

    பா.ஐ.க. டெபாசிட் இழக்குமா என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள்

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×