search icon
என் மலர்tooltip icon

    சென்னை

    • தமிழகத்தின் வளர்ச்சிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் முட்டுக்கட்டை போடுகிறார்.
    • அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு மட்டுமே அறிவாலயம் முன்னுரிமை அளிக்கிறது

    தமிழக பாஜக சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

    மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் 2024-ல், தமிழகத்திற்கு எந்த நலத்திட்டங்களும் இல்லை, அவ்வளவு ஏன்? தமிழ்நாடு என்ற பெயரே பட்ஜெட்டில் இல்லை என்ற தனது கம்பிக் கட்டும் கதையை உண்மையாக்கும் நோக்கில், பிரதமர் தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    நாட்டின் சுமூகமான நிர்வாகத்திற்கு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கிடையேயான ஒத்துழைப்பும் கூட்டுறவும் மிக அவசியம். இரு தரப்பினரின் கூட்டுறவையும் மாநிலங்களின் சமூக பொருளாதரத்தையும் மேம்படுத்தும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக மு.க ஸ்டாலின் கூறுவது ஏற்புடையதல்ல.

    தங்களுக்கு ஓட்டுப்போட்ட தமிழக மக்களின் பிரதிநிதியாக அக்கூட்டத்தில் பங்கேற்று, தமிழக மக்களின் தேவைகளை எடுத்துரைக்க மறுப்பதன் மூலம், தமிழகத்தின் வளர்ச்சிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் முட்டுக்கட்டை போடுகிறார்.

    காரணம், நிதி ஆயோக் மூலம் தமிழகம் எண்ணற்ற நன்மைகளைப் பெற்றுள்ளது. உதாரணமாக,

    *  தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் தளமாக செயல்படும், அடல் (ATAL) சமூக கண்டுபிடிப்பு மையம் தமிழகத்தில் துவங்கப்பட்டது.

    * 2021-ல் நிதி ஆயோக் நகர்ப்புற பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கான மாநாட்டை நடத்தியது.

    * தமிழகத்தின் சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்தும் நோக்கத்தில், நிதி ஆயோக்குடன் இணைக்கப்பட்ட வளர்ச்சிக் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு அலுவலகம் (DMEO) ஆகியவற்றுடனான அறிக்கையில் கையெழுத்திடப்பட்டுள்ளது.

    இவ்வாறு தமிழகத்திற்கு பல நலன்கள் கிடைக்கும் நிதிஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதன் மூலம், மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் நலன்களை விட, அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு மட்டுமே அறிவாலயம் முன்னுரிமை அளிக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகிறது என்று கூறப்பட்டுள்ளது.

    • கோவையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுகுறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
    • மின் கட்டண உயர்வை திரும்ப பெறாவிட்டால் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்படும்.

    சென்னை:

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * கோவையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுகுறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

    * கடந்த 2 ஆண்டுகளில் 3 முறை மின் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தி உள்ளது.

    * மின் கட்டண உயர்வை திரும்ப பெறாவிட்டால் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்படும்.

    * மின் கட்டண உயர்வால் தமிழகத்தின் அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    * காவிரி நீரை சேமித்து வைக்க தமிழக அரசிற்கு தெரியவில்லை என்று கூறினார்.

    • பரபரப்பாக இயங்கும் சென்னையில் மக்கள் அதிகம் கூடும் மெட்ரோ ரயிலில் கஞ்சா பயன்படுத்திய இளைஞர்.
    • உணவு டெலிவரி ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயிலில் கஞ்சா பயன்படுத்தியதாக உணவு டெலிவரி ஊழியர் புவனேஷ் எனும் இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    மெட்ரோ ரெயிலில் கஞ்சா பயன்படுத்தியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிவிட்டிருந்த நிலையில் தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

    முன்னதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ் தளத்தில்,

    பரபரப்பாக இயங்கும் சென்னையில் மக்கள் அதிகம் கூடும் மெட்ரோ ரயிலில் கஞ்சா பயன்படுத்திய இளைஞர்.

    தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்ட போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்து சட்டம் ஒழுங்குக்கு சவால் விடும் போதை ஆசாமிகள்.

    கஞ்சா 2.0, 3.0, 4.0 என வெற்று விளம்பரம் மட்டுமே செய்யும் ஸ்டாலின், இனிமேலாவது சட்டம் ஒழுங்கு மீது கவனம் செலுத்துவாரா? என்று தெரிவித்து இருந்தார்.

    • மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு சிறப்பு நிதி வழங்காததை கண்டித்து தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
    • திருச்சியில் கிழக்கு மாநகர செயலாளர் மதிவாணன் தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    சென்னை:

    மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு சிறப்பு நிதி வழங்காததை கண்டித்து தி.மு.க. சார்பில் இன்று மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    மத்திய பாஜக அரசை கண்டித்து சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    கலெக்டர் அலுவலகம் அருகே மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னை மேயர் உட்பட ஏராளமானவர்கள் பங்கேற்றுள்ளனர்.

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் திமுக தொண்டர்கள் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

    திருச்சியில் கிழக்கு மாநகர செயலாளர் மதிவாணன் தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    மதுரையில் மாவட்ட செயலாளர் கோ.தளபதி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கண்டன முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்களுடன் ஐ.லியோனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இந்த ஆர்ப்பாட்டங்களில் மாவட்டக் கழக செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள், மகளிரணியினர் திரளாக பங்கேற்றுள்ளனர்.

    • தண்ணீர் திறந்து விட்டாலும் கூட போதிய பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்படுவது சாத்தியமற்றதாகி விடும்.
    • சம்பா சாகுபடி பணிகளைத் தொடங்க குறைந்தது ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வரை செலவாகும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    காவிரி நீர்ப்படிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகள் நிரம்பி வழிவதால் மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 80 ஆயிரம் கன அடியாக அதிகரித்திருக்கிறது. அணையின் நீர்மட்டம் 100 அடியைத் தாண்டி விட்ட நிலையில், அடுத்த சில நாட்களில் அணை நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கும் கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்படும் நிலையில், வெள்ள ஆபத்தை தடுக்கும் வகையிலும், காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்கான முன்னேற்பாடுகளை தொடங்கும் வகையிலும், அணை நிரம்பும் வகையில் காத்திருக்காமல் உடனடியாக தண்ணீர் திறக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

    கர்நாடக அணைகளில் இருந்து கடந்த ஜூலை 16-ஆம் நாள் வரை தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. அதன் பின், அடுத்த இரு வாரங்களில் அணை நிரம்பும் சூழல் உருவாகும்; அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படும் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை. அதனால், குறுவை சாகுபடிக்கே தண்ணீர் இல்லாமல் தவித்த காவிரி பாசன மாவட்ட உழவர்கள், சம்பா சாகுபடியை தொடங்குவது குறித்து நினைத்துக் கூட பார்க்கவில்லை. மேட்டூர் அணை அடுத்த ஓரிரு நாட்களில் திறக்கப்படவுள்ள நிலையில், அதை பயன்படுத்தி காவிரி பாசன மாவட்டங்களில் மிக அதிக பரப்பளவில் சம்பா சாகுபடி செய்வதற்கான வசதிகளை தமிழக அரசு செய்து தர வேண்டும்.

    காவிரி பாசன மாவட்டங்களில் மட்டும் குறைந்தது 13 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதற்குத் தேவையான உரம், விதை நெல் உள்ளிட்ட இடுபொருட்கள் வேளான் துறை அலுவலகங்களிலோ, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலோ போதிய அளவில் இருப்பு இல்லை. காவிரி பாசனக் கால்வாய்கள் முழுமையாக தூர்வாரப்படாததால், கடைமடை பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் சென்று சேருவதற்கும் வாய்ப்பில்லை. அதனால், தண்ணீர் திறந்து விட்டாலும் கூட போதிய பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்படுவது சாத்தியமற்றதாகி விடும்.

    இவை அனைத்துக்கும் மேலாக சம்பா சாகுபடி பணிகளைத் தொடங்க குறைந்தது ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வரை செலவாகும். ஆனால், கடந்த ஆண்டு சம்பா, குறுவை ஆகிய இரு பருவங்களிலும் நெல் சாகுபடி தோல்வியடைந்ததால், பெரும்பான்மையான உழவர்களிடம் பணம் இல்லை. இதையும் தமிழக அரசு கருத்தில் கொள்ள வேண்டும். காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடி செய்யப்படுவதற்கு வசதியாக வேளாண் துறை அலுவலகங்கள் வாயிலாக விதை நெல்கள், கூட்டுறவு சங்கங்கள் மூலமாக உரங்கள் மற்றும் பயிர்க்கடன் கிடைப்பதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.
    • ஒரு கிராம் வெள்ளி ரூ.89-க்கும் பார் வெள்ளி ரூ.89ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை :

    பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதனால் கடந்த 4 நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.

    தங்கம் இன்று கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,465-க்கும் சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.51,720-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.89-க்கும் பார் வெள்ளி ரூ.89ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    • முதற்கட்ட விசாரணையில் 189 பேராசிரியர்கள் பல கல்லூரிகளில் பணிபுரிந்தது கண்டறியப்பட்டது.
    • அடுத்த வாரத்தில் இந்த முறைகேட்டில் ஈடுபட்ட பேராசிரியர்களை இந்த குழு நேரில் அழைத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளது.

    சென்னை:

    அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் இணைப்பு என்ஜினீயரிங் கல்லூரிகளில் பேராசிரியர்கள் ஆதார் எண்ணை முறைகேடாக பயன்படுத்தி சேர்ந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவம் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் 189 பேராசிரியர்கள் பல கல்லூரிகளில் பணிபுரிந்தது கண்டறியப்பட்டது.

    இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகம் தமிழ்நாடு அரசுக்கு தகவல் தெரிவித்த நிலையில், இதை விசாரிக்க அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் பேராசிரியர் குமாரவேல், தொழில்நுட்ப கல்வி இயக்கக கமிஷனர் ஆபிரகாம், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் சார்பில் தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (என்.ஐ.டிடி.டி.ஆர்.சி.) இயக்குனர் உஷா நடேசன் ஆகிய 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து தமிழ்நாடு கவர்னரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி, அண்ணா பல்கலைக்கழகத்திடம் விளக்கம் கேட்டு இருந்தார். அதன் அடிப்படையில் பேராசிரியர்கள் முறைகேடாக பணிபுரிந்தது தொடர்பான விளக்கங்களை, கவர்னர் ஆர்.என்.ரவியிடம், அண்ணா பல்கலைக்கழகம் சமர்ப்பித்துள்ளது.

    மேலும் 3 பேர் கொண்ட குழு இந்த முறைகேடு தொடர்பான விசாரணையில் தீவிரமாக இறங்கி இருக்கிறது. இதற்கான ஆவணங்கள் அனைத்தையும் அண்ணா பல்கலைக்கழகம், குழுவிடம் வழங்கியிருக்கிறது.

    அடுத்த வாரத்தில் இந்த முறைகேட்டில் ஈடுபட்ட பேராசிரியர்களை இந்த குழு நேரில் அழைத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளது. அதன் பின்னர், முறைகேடு தொடர்பான அறிக்கையை இந்த குழு தயாரிக்கும் எனவும், அனேகமாக இன்னும் ஒரு வார காலத்துக்குள் இந்த பணிகள் நிறைவு பெற வாய்ப்பு உள்ளது எனவும் அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர். குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் முறைகேட்டில் ஈடுபட்ட பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    • அதிமுக இணையாமல் எந்த தேர்தலிலும் வெற்றி பெற முடியாது.
    • தொண்டர்கள் என்ன பதவி கொடுத்தாலும் அந்த பதவியை ஏற்பேன்.

    சென்னை:

    அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு நிர்வாகிகள் கூட்டம் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர் மனோஜ் பாண்டியன், அமைப்பு செயலாளர் வெல்லமண்டி நடராஜன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, "சிலர் கூட்டத்தில் பேசும்போது தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். ஆனால், தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் எனக்கு இல்லை. அதிமுக என்பது எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் சொத்து. அதன் 1½ கோடி தொண்டர்களின் உரிமையை மீட்டுக்கொடுப்பது தான் எனது கடமை'' என்று பேசினார்.

    பின்னர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் இந்தியாவிலேயே அதிக வாக்குகள் பெற்ற சுயேச்சை வேட்பாளராக மக்கள் என்னை தேர்ந்து எடுத்தார்கள்.

    இதன் மூலம் அதிமுகவின் தொண்டர்கள் எங்கள் பக்கம் இருப்பதை நிரூபித்து இருக்கிறார்கள். சி.வி.சண்முகமும் அதிமுக ஒருங்கிணைவதை விரும்புவதாக சொல்கிறார்கள். அவர் அதிமுக இணையாமல் எந்த தேர்தலிலும் வெற்றி பெற முடியாது என்று சொல்லி இருக்கிறார். பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு காரணமே அதிமுக ஒருங்கிணையாதது தான். இரட்டை இலை சின்னம் இதுவரை இதுபோன்ற தோல்வியை கண்டது இல்லை. அதிமுகவை பதவிக்காக ஒருங்கிணைக்க விரும்பவில்லை. தொண்டர்கள் என்ன பதவி கொடுத்தாலும் அந்த பதவியை ஏற்பேன்.

    பொதுக்குழு தொடர்பான 6 வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டு வரை சென்றது. அதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு 6 வழக்குகளையும் சென்னை ஐகோர்ட்டு விசாரித்து தீர்ப்பு வழங்கும் என்று தெரிவித்து உள்ளது. அந்த தீர்ப்பு தான் இறுதியானது என்று சொல்லி இருக்கிறது.

    எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராக இருந்தார். நான் ஒருங்கிணைப்பாளராக இருந்தேன். இணை ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் எப்போது பொதுச்செயலாளர் ஆனார் என்று நீதிபதி கேட்டு இருக்கிறார். பதில் சொல்ல முடியவில்லை. உடனே வாபஸ் வாங்கிவிட்டு மன்னிப்பு கேட்டு இருக்கிறார்.

    • ஒரு நல்ல அரசு என்பது வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்த மக்களுக்கும் சேர்ந்தே பாடுபட வேண்டும்.
    • தமிழகத்தை பா.ஜ.க. புறக்கணித்தால் மேலும் தோல்வியை பா.ஜ.க. சந்திக்கும்.

    சென்னை:

    நிதி ஆயோக் கூட்டம் புறக்கணிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது:-

    மத்திய பா.ஜ.க. அரசின் மாற்றந்தாய் மனப்பான்மை கொண்ட நிதிநிலை அறிக்கையால் நீதி கேட்டு மக்கள் மன்றமான உங்கள் முன் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. திராவிட மாடல் அரசு கடந்த மூன்றாண்டு காலமாக எத்தகைய முற்போக்கு மற்றும் தொலைநோக்குத் திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டு வருவது தெரியும்.

    தமிழ்நாடு அரசின் திட்டங்களின் பயன்கள், ஒவ்வொரு குடும்பத்துக்கும்- ஒவ்வொரு குடிமகனுக்கும் நேரடியாகக் கிடைக்கிறது.

    தமிழ்நாடு அரசின் எண்ணங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்களை மத்திய அரசு தொடர்ந்து செய்து கொண்டு வருகிறது. ஒரு அரசு எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கான இலக்கணத்தை நான் அடிக்கடி சொல்லிக்கொண்டு வருகிறேன்.

    ஒரு நல்ல அரசு என்பது வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்த மக்களுக்கும் சேர்ந்தே பாடுபட வேண்டும்.

    மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு வருவதற்கு முன்பு இருந்த எல்லா மத்திய அரசுகளும் கூட அப்படித்தான் இருந்தன. ஆனால் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு மட்டும் தான் அரசியல் நோக்கத்துடன் அரசை நடத்துகிறார்கள். 3-வது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள பா.ஜ.க. அரசுக்கு மக்கள் பெரும்பான்மை அளிக்கவில்லை.

    ஒட்டுமொத்த இந்திய மக்களுக்காகவும் உருவாக்க வேண்டிய பட்ஜெட்டை 'இந்தியா' கூட்டணிக்கு வாக்களித்த மக்களைப் பழிவாங்க உருவாக்கி இருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த பட்ஜெட்டிலாவது வெள்ள நிவாரண அறிவிப்பு வெளியாகுமெனக் காத்திருந்தோம். ஆனால் தங்களின் பதவி நாற்காலிக்கு, கால்களாக இருக்கும் மாநிலங்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடிக்கும் மேல் நிதியை அள்ளி வழங்கியுள்ளார் நிதி அமைச்சர். தமிழ்நாட்டுக்கென எந்த சிறப்புத் திட்டத்தையும் கொடுக்காமல், தமிழ்நாட்டு மக்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க வேண்டும் என எப்படித்தான் எதிர்பார்கிறார்களோ தெரியவில்லை. தமிழகத்திற்கு எந்த திட்டத்தையும் வழங்காமல் வாக்குகளை மட்டும் பா.ஜ.க. எதிர்பார்க்கிறது. மேலும் தமிழகத்தை பா.ஜ.க. புறக்கணித்தால் மேலும் தோல்வியை பா.ஜ.க. சந்திக்கும்.

    பட்ஜெட்டில் தமிழ்நாடு பெயரும் இல்லை, குறளும் இல்லை. திருவள்ளுவர் பா.ஜ.க.வுக்கு கசந்துவிட்டார். இதுபோன்ற பட்ஜெட்டில் திருக்குறள் இடம் பெறாதது நிம்மதி அளிக்கிறது.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.


    • தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இவருடைய சிகிச்சைக்காக 5 லட்சம் கொடுத்து உதவினார்.
    • சவுந்தர்யா மறைவுக்கு தொலைக்காட்சி ஊழியர்கள் மற்றும் செய்தித் துறையை சேர்ந்தவர்கள் இரங்கல்.

    தனியார் செய்தி தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்தவர் சவுந்தர்யா.

    கள்ளக்குறிச்சியை சேர்ந்த சவுந்தர்யா செய்தித் துறையின் மீது கொண்ட ஆர்வத்தால் மீடியாவில் இணைந்தார்.

    இவருடைய கணீர் குரலும், தமிழ் உச்சரிப்பும் ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியதோடு, பிரபலமடைந்தார்.

    இந்நிலையில், கடந்த ஆண்டு சவுந்தர்யாவுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உடல்நிலை சீராகாததை அடுத்து, புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    இதன் முடிவில் சவுந்தர்யாவுக்கு புற்றுநோய் இருப்பது உறுதியானது. மேலும், 4வது ஸ்டேஜில் இருப்பதும் கண்டறியப்பட்டது.

    தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் பலரும் இவருடைய சிகிச்சைக்கு நிதியுதவி வழங்கினர். தமிழக

    முதல்வர் முக ஸ்டாலின் இவருடைய சிகிச்சைக்காக 5 லட்சம் கொடுத்து உதவினார்.

    கடந்த 6 மாதமாக சவுந்தர்யா சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் செய்தித்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இவருடைய மறைவுக்கு தொலைக்காட்சி ஊழியர்கள் மற்றும் செய்தித் துறையை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    • நடிகர் விஷாலுக்கு எதிராக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் நடவடிக்கை.
    • நடிகர் விஷாலை வைத்து படம் எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

    தென் இந்திய தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவராக நடிகர் விஷால் இருந்தபோது சங்கத்தின் பணத்தில் முறைகேடு செய்ததாக எழுந்த விவகாரத்தில் நடிகர் விஷாலுக்கு எதிராக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

    அதன்படி, நடிகர் விஷாலை வைத்து படம் எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    இனி விஷாலை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், சங்கத்தை கலந்தாலோசிக்க வேண்டும் என சங்கம் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளது.

    சங்கத்தில் இருந்து முறைகேடாக ரூ.12 கோடி செலவழித்த தொகையை திரும்ப அளிக்குமாறு பலமுறை கூறியும் விஷால் பதில் அளிக்கவில்லை என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் விஷால் நடிக்கும் புதியப் படங்களுக்கு கட்டுப்பாடுகள் அறிவித்துள்ளது.

    இந்நிலையில், தொடர்ந்து படங்களில் நடிப்டேன், முடிந்தால் தடுத்து பாருங்கள் என நடிகர் விஷால் தமிழ்த் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு சவால் விடுத்துள்ளார்.

    இரட்டை வரி விதிப்பு, தியேட்டர் பராமரிப்பு கட்டணம் என பல விஷயங்கள் தீர்க்கப்பட வேண்டியவை என விஷாயல் தெரிவித்துள்ளார்.

    உங்கள் வேலையை சரியாக செய்யுங்கள், தொழிலுக்கு உழைக்கு நிறைய இருக்கிறது என நடிகர் விஷால் காட்டமாக தெரிவித்துள்ளார்.

    • சம்பவ இடம் சென்ற போலீசார் உயிரிழந்த வாலிபர் உடலை மீட்டனர்.
    • இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    கிண்டி அருகிலுள்ள கத்திப்பாரா பாலத்தில் இருசக்கர வாகனத்தில் 24 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வந்தார். இன்று காலை 10.15 மணியளவில் தனது வாகனத்தில் இருந்து இறங்கிய அவர், மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த மவுண்ட் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடம் விரைந்து உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    விசாரணையில், உயிரிழந்த மாணவர் விருகம்பாக்கம் கிருஷ்ணா நகர் 6-வது பிரதான சாலை பகுதியை சேர்ந்த சாமுவேல் ராஜ் என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், கத்திப்பாரா பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சாமுவேல் ராஜ் கிரிக்கெட் வீரர் எனவும், டி.என்.பி.எல். தொடரில் விளையாட வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார் என தகவல்கள் வெளியாகின.

    ×