search icon
என் மலர்tooltip icon

    சென்னை

    • குழந்தை பிறந்தது முதல் ஆபரேஷன் தியேட்டரில் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவது வரை பதிவு.
    • யூடியூபில் வெளியான சர்ச்சை வீடியோவை நீக்கக்கோரி மருத்துவத்துறை சார்பில் இர்பானுக்கு கடிதம்.

    சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த ஜூலை மாதம் 24-ந் தேதி பிரபல யூடியூபர் இர்பான் மனைவிக்கு குழந்தை பிறந்தது.

    குழந்தை பிறந்தது முதல் ஆபரேஷன் தியேட்டரில் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவது வரை உள்ள காட்சியை அறுவை சிகிச்சையின்போது கேமராவில் பதிவு செய்து அதனை தனது யூடியூப் சேனலில் கடந்த 19-ந் தேதி இர்பான் பதிவு செய்தார்.

    இந்த வீடியோவில் அறுவை சிகிச்சையின்போது டாக்டர் ஒருவர் கத்தரிக்கோலை எடுத்து இர்பான் கையில் கொடுக்கிறார். அவர் தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுகிறார். இந்த காட்சி சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது.

    ஆபரேசன் தியேட்டருக்குள் கேமராக்களுடன் சென்று, குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவது மருத்துவ சட்டத்தின் படி தவறு ஆகும். இதில், எந்தவித மருத்துவ பயிற்சியும் இல்லாமல் ஒருவர் ஆபரேஷன் தியேட்டருக்குள் சென்று குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவது கடும் கண்டனத்திற்கு உரியது என டாக்டர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்த விவகாரம் விஸ்வரூபமான நிலையில், யூடியூபில் வெளியான சர்ச்சை வீடியோவை நீக்கக்கோரி மருத்துவத்துறை சார்பில் இர்பானுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

    மேலும், பிரசவம் நடந்த தனியார் மருத்துவமனையில் மருத்துவத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இர்பான் வீடியோ தொடர்பாக மண்டல சுகாதாரத்துறை அலுவலர்கள் மூலம் விசாரிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    இந்நிலையில், பிரசவத்தின் போது குழந்தையின் தொப்புள் கொடியை யூடியூபர் இர்ஃபான் வெட்டிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை 10 நாட்களுக்கு மருத்துவம் செய்ய தடை விதித்து ஊரக நலப்பணிகள் இயக்ககம் நடவடிக்கை எடுத்துள்ளது.

    மேலும், சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

    மருத்துவமனை மீது தடை இருந்தாலும், ஏற்கனவே சிகிச்சையில் இருப்பவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    • பொழிச்சலூர் தபால் நிலையத்தில் ரெஜிஸ்டர்டு தபால் அனுப்புதற்காகச் சென்றுள்ளார்.
    • 30 ரூபாயை அலுவலரிடம் கொடுத்து மீதி சில்லறை 50 பைசாவை கேட்டுள்ளார்.

    50 பைசாவை திரும்பித் தராத போஸ்ட் ஆபீசுக்கு ரூ.15,000 அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 3 அன்று சென்னையைச் சேர்ந்த நபர் ஒருவர் பொழிச்சலூர் தபால் நிலையத்தில் ரெஜிஸ்டர்டு தபால் அனுப்புதற்காகச் சென்றுள்ளார். தபால் செலவாக ரூ.29.50 பைசா வந்துள்ளது.

    ஆனால் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் Pay U யுபிஐ சேவை தொழில்நுட்ப கோளாறு காரணமாகப் பழுதடைந்தால் 30 ரூபாயை அலுவலரிடம் கொடுத்து மீதி சில்லறை 50 பைசாவை கேட்டுள்ளார். ஆனால் டிஜிட்டல் பெண்மன்ட் பழுதாகி உள்ளதால் தபால் செலவு ரவுண்டாக ரூ.30 என்று கூறி மீதி சில்லறை தர மறுத்துள்ளார்.

    எனவே இதனை எதிர்த்து அந்த நபர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகார் அளித்த நிலையில் இதுதொடர்பான விசாரணையில் தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதாவது, தனது சொந்த பணமான 50 பைசாவை இழந்து பாதிக்கப்பட்டவருக்கு நஷ்டஈடாக ரூ.15,000 வழங்கும்படி போஸ்ட் ஆபீசுக்கு அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    • அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன்கள் பிரபு, சண்முக பிரபு உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு.
    • அடுக்குமாடி குடியிருப்புக்கான அனுமதி வழங்க சுமார் ரூ. 27 கோடி லஞ்சம் பெற்றதாகவும் புகார்.

    சென்னை எழும்பூரில் உள்ள சிஎம்டிஏ அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளது.

    சிஎம்டிஏ அலுவலகத்தில் 5 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், சிஎம்டிஏ அலுவலகத்திலும் சோதனை நடத்தப்படுகிறது.

    அமைச்சர் வைத்திலிங்கம் கடந்த 2011 முதல் 2016 வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில், வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர்.

    அவர், அமைச்சர் பதவியில் இருந்தபோது 1058% வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், தாம்பரத்துக்கு அருகே உள்ள பெருங்களத்தூரில் தனியார் அடுக்குமாடி குடியிருப்புக்கான அனுமதி வழங்க சுமார் ரூ. 27 கோடி லஞ்சம் பெற்றதாகவும் புகார் எழுந்தது.

    அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன்கள் பிரபு, சண்முக பிரபு உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்நிலையில், லஞ்சம் பெற்ற பணத்தை சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபடுத்தியதாகக் கூறி, வைத்திலிங்கத்துக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, மாநாட்டுப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
    • மாநாட்டிற்கு வரும் கழகத் தோழர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்கள் மற்றும் சட்டரீதியிலான உதவிகளை மேற்கொள்வார்கள்.

    சென்னை :

    தமிழக வெற்றிக்கழகத் தலைமை நிலைமை செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆணைக்கிணங்க, வரும் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் நடைபெற உள்ள வெற்றிக் கொள்கைத் திருவிழாவிற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, மாநாட்டுப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், நமது கழகத்தின் சார்பில், கழகத் தலைவரின் ஒப்புதலோடு. மாநாட்டில் பங்கேற்கும் கழகத் தோழர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் சட்ட ரீதியில் உதவிடும் வகையில் தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் மாநாட்டிற்கான தற்காலிகத் தொகுதிப் பொறுப்பு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    இந்தத் தற்காலிகத் தொகுதிப் பொறுப்பு வழக்கறிஞர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சட்டமன்றத் தொகுதிகளிலும், அதனை ஒட்டியுள்ள சட்டமன்றத் தொகுதிகளிலும், மாநாட்டிற்கு வரும் கழகத் தோழர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்கள் மற்றும் சட்டரீதியிலான உதவிகளை மேற்கொள்வார்கள்.

    • இது தொடர்பான அரசாணையும் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டின் எம்.எம்.ஆர்.
    • ஒரு லட்சம் பிறப்புகளில் 54 ஆக உள்ளது.

    மகப்பேறு இறப்புகளை தடுக்கும் வகையில் அவசர கால கட்டுப்பாட்டு அறை (வார் ரூம்) அமைக்கும் பணியை தமிழக சுகாதாரத்துறை தொடங்கியுள்ளது. மகப்பேறு இறப்பு விகிதத்தை (எம்.எம்.ஆர்.) குறைக்க இந்த ஆண்டு அக்டோபரில் அமைக்கப்பட்ட மாநில அளவிலான பணிக்குழுவின் முதல் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    தமிழ்நாடு தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பணிக்குழு தரவுகளை ஆய்வு செய்து, பிரசவத்திற்குப் பிந்தைய காலத்தில் 74.25% தாய் இறப்புகள் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

    விரிவான பிறப்புக்கு முந்தைய திட்டமிடல் முறையை கொண்டு வரவும், ஒரு கட்டுப்பாட்டு அறையை அமைக்கவும், பெரிய அளவிலான திறன் வளர்ச்சி சார்ந்த பயிற்சி முகாம்களை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு லட்சம் உயிருள்ள பிறப்புகளுக்கு எம்.எம்.ஆர். 54 க்கு மேல் இருக்கும் வழிகாட்டுதல் திட்டத்தை கொண்டு வரவும் பணிக்குழு முடிவு செய்தது.

     


    நோய்த்தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், பரிந்துரைகள், பாதுகாப்பான கருக்கலைப்பு நடைமுறைகள், துறைகளுக்கு இடையே தடையற்ற ஒருங்கிணைப்பு போன்ற பரிந்துரைகளும் வழங்கிப்பட்டது. இந்த கூட்டத்திற்கு சுகாதாரத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு தலைமை தாங்கினார். இது தொடர்பான அரசாணையையும் துறை வெளியிட்டுள்ளது.

    வெளியீட்டின் படி, 2014-2024 வரையிலான தரவுகளின்படி, 72% இறப்புகள் கிராமப்புறங்களில் நிகழ்ந்தன, மீதமுள்ள 28% நகர்ப்புறங்களில் நிகழ்ந்தன. தஞ்சாவூர், திண்டுக்கல், மயிலாடுதுறை, தேனி, நாமக்கல், திருவாரூர், புதுக்கோட்டை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் எம்எம்ஆர் பாதிப்பு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் எம்.எம்.ஆர். ஒரு லட்சம் பிறப்புகளுக்கு 55க்கு மேல் இருப்பது கண்டறியப்பட்டது.

    சமீபத்திய மாதிரிப் பதிவு முறை (சாம்பில் ரெஜிஸ்டிரேஷன் சிஸ்டம்) தரவுகளின்படி, தமிழ்நாட்டின் எம்.எம்.ஆர். ஒரு லட்சம் பிறப்புகளில் 54 ஆக உள்ளது. தேசிய சராசரி ஒரு லட்சம் பிறப்புகளில் 97 ஆக உள்ளது. இது கேரளாவில் 19, மகாராஷ்டிராவில் 33, தெலுங்கானா 43, ஆந்திரா 45, ஜார்கண்ட் 130 மற்றும் குஜராத்தில் 57 ஆக உள்ளது. 

    • தற்போது கிடைக்கின்ற 12,500 ரூபாய் குறை ஊதியத்தால் பெரும் பொருளாதார நெருக்கடியில் பகுதிநேர ஆசிரியர்கள் சிக்கித்தவித்து வருகின்றார்கள்.
    • நவம்பர் மாத ஊதியம் மற்றும் விழாக்கால ஊக்கத்தொகையை தீபாவளிக்கு முன்பே வழங்க வேண்டுமென இவ்வறிக்கையின் வாயிலாக வலியுறுத்துகிறேன்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி, திமுக அரசு பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்திருந்தால், தற்போது இதர அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்குக் கிடைக்கின்ற அனைத்து உரிமைகளும் பகுதிநேர ஆசிரியர்களுக்கும் கிடைத்து இருக்கும்.

    ஆனால் ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகளைக் கடந்தும் திமுக அரசு பணி நிரந்தரம் செய்ய மறுப்பது பகுதி நேர ஆசிரியர் பெருமக்களுக்குச் செய்கின்ற பெருந்துரோகமாகும். அதனால் தற்போது கிடைக்கின்ற 12,500 ரூபாய் குறை ஊதியத்தால் பெரும் பொருளாதார நெருக்கடியில் பகுதிநேர ஆசிரியர்கள் சிக்கித்தவித்து வருகின்றார்கள்.

    ஆகவே, 13 ஆண்டுகளாகப் பணிநிரந்தரம் கேட்டு போராடி வருகின்ற 12000க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கையை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றுவதோடு, நவம்பர் மாத ஊதியம் மற்றும் விழாக்கால ஊக்கத்தொகையை தீபாவளிக்கு முன்பே வழங்க வேண்டுமென இவ்வறிக்கையின் வாயிலாக வலியுறுத்துகிறேன்.

    • பிரியங்கா காந்தி, இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
    • சனாதன தர்மம் என்பது தமிழ் கலாச்சாரத்தை பின்பற்றும் தமிழர்களால் பின்பற்றப்படும் வாழ்க்கை முறை.

    வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் பிரியங்கா காந்தி, இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    இந்நிலையில், வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடுவது குறித்து பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அப்போது இதுகுறித்து தமிழசை கூறுகையில், " உண்மையில் ராகுல் காந்தி வயநாடு மக்களை ஏமாற்றிவிட்டார்.

    பிரியங்கா காந்தி போட்டியிடுவதன் மூலம், இது வாரிசு அரசியல் என்பது தெளிவாக தெரிகிறது. பாஜக ஒரு இளம் பெண் வேட்பாளரைத் தொகுதியில் நிறுத்தியுள்ளது. வயநாட்டில் ஏற்பட்ட பேரழிவிற்குப் பிறகு ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியின் பங்களிப்பு என்ன? எனவே இனி மக்கள் முடிவு செய்வார்கள்" என்றார்.

    மேலும், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் குறித்து பேசியது குறித்து அவர் கூறுகையில், "சனாதன ஒழிப்பு மாநாட்டில் அவர் பங்கேற்றார்.

    அந்த மாநாட்டின் பெயர் 'சனாதன தர்மத்தை ஒழித்தல். அப்படியென்றால், அவருடைய வார்த்தைகள் திரிக்கப்பட்டவை என்று எப்படிச் சொல்ல முடியும்? டெங்குவை ஒழிப்பது போல் சனாதன தர்மமும் ஒழிக்கப்பட வேண்டும் என்று தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.

    அவர், சனாதன தர்மத்தை பாகுபாடு என்றும், எஸ்டி/எஸ்சி மற்றும் சமூக நீதிக்கு எதிராகவும் தவறாக விளக்குகிறார்.

    சனாதன தர்மம் என்பது தமிழ் கலாச்சாரத்தை பின்பற்றும் தமிழர்களால் பின்பற்றப்படும் வாழ்க்கை முறை. அவர்கள் மக்களிடையே வேறுபாடு காட்ட விரும்புகிறார்கள். இது கண்டிக்கப்பட வேண்டும்" என்றார்.

    • நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    நேற்று மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று மாலை 17.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றது. மேலும் இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (23.10.2024) காலை 05.30 மணி அளவில் புயலாக (டானா) வலுபெற்று, காலை 08.30 மணி அளவில் அதே பகுதிகளில் பாரதீப்பிற்கு (ஒரிசா) தென்கிழக்கே 520 கிலோமீட்டர் தொலைவிலும், சாகர் தீவுகளுக்கு (மேற்கு வங்காளம்) தெற்கு- தென்கிழக்கே 600 கிலோமீட்டர் தொலைவிலும், கேப்புப்பாராவிற்கு (வங்கதேசம்) தெற்கு- தென்கிழக்கே 610 கிலோமீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

    இது மேலும், வடமேற்கு திசையில் நகர்ந்து, 24-ஆம் தேதி அதிகாலை வாக்கில் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தீவிர புயலாக வலுபெறக்கூடும்.

    இது, வடக்கு ஒரிசா - மேற்கு வங்காள கடற்கரை பகுதிகளில், பூரி சாகர் தீவுகளுக்கு இடையே, தீவிர புயலாக 24ஆம் தேதி இரவு 25ஆம் தேதி காலை கரையை கடக்கக்கூடும். அச்சமயத்தில் அப்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதனால் இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    25-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34°-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26°-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35°-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26°27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்திலும், 23-ஆம் தேதி மாலை முதல் 24 ஆம் தேதி காலை வரை மணிக்கு 70 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • தீபாவளிக்கான தனியார் பஸ் ஒன்றுக்கு 1 கி.மீ.-க்கு ரூ.51.25 கொடுக்க அரசு திட்டமிட்டுள்ளது.
    • கிடைக்கும் வருவாயை விட ரூ.3000 வரை தனியாருக்கு கூடுதலாக கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?

    தீபாவளியையொட்டி தனியார் பஸ்களையும் வாடகைக்கு எடுத்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து உள்ளார்.

    தீபாவளியை முன்னிட்டு தேவைக்கேற்ப தனியார் பஸ்களை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது.

    அரசின் இந்த முடிவிற்கு சிஐடியூ, அண்ணா தொழிற்சங்கம், பாட்டாளி தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

    இதுதொடர்பாக சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராசன் கூறுகையில்,

    * தீபாவளிக்கான தனியார் பஸ் ஒன்றுக்கு 1 கி.மீ.-க்கு ரூ.51.25 கொடுக்க அரசு திட்டமிட்டுள்ளது.

    * அனைத்து இருக்கைகளும் நிரம்பினாலும் இல்லாவிட்டாலும் ரூ.51.25 கொடுக்க வேண்டும்.

    * அரசு பஸ் ஒன்று 1 கி.மீ. ஓடினால் சராசரியாக ரூ.32 வருவாய் கிடைக்கும்.

    * அரசு பஸ் வருவாய் ரூ.32, தனியார் பஸ் செலவு ரூ.51.25.

    * அரசு பஸ்சை ஒப்பிடுகையில் தனியாருக்கு கூடுதலாக ரூ.19 அரசு கொடுக்கிறது.

    * சென்னை-திருச்சிக்கு அரசு பஸ் முழுவதும் நிரம்பினால் ரூ.28,600 வருவாய் கிடைக்கும்.

    * தனியார் பஸ் ஒன்றுக்கு அரசு கொடுக்க உள்ள தொகை ரூ.32,000.

    * கிடைக்கும் வருவாயை விட ரூ.3000 வரை தனியாருக்கு கூடுதலாக கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?

    * தனியார் நிறுவனங்கள், கூடுதல் பஸ்களை இயக்கவே அதிக வாய்ப்பு உள்ளது.

    * தனியார் பஸ்களில் பயணிகள் இருந்தாலும் இல்லை என்றாலும் தனியாருக்கு பணம்.

    * சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பும்போது கூட்டம் இல்லை என்றால் என்ன நிலை?

    * தனியாருக்கு கொடும் பணத்தை அரசு பஸ்களுக்கு கொடுத்தால் என்ன?

    அரசிடம் கூடுதல் பஸ்கள் இருக்கும்போது தனியார் பஸ்கள் ஏன்? என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

    • சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக தோல்வியடைந்தது.
    • புதுவை பாஜக தலைவரை மாற்றுவது குறித்து முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை ராஜ்யசபா எம்.பி. செல்வகணபதி, கடந்த ஆண்டு செப்டம்பர் 25-ந் தேதி புதுவை மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார்.

    சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக தோல்வியடைந்தது. இதனால் பாஜக தலைவர் மாற்றப்படுவார் என கூறப்பட்டது.

    இந்த நிலையில் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் ரூ.4 கோடி ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக தலைவர் செல்வ கணபதிக்கு சி.பி.சி.ஐ.டி. சம்மன் அனுப்பியுள்ளது. நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) அவர் ஆஜராக வேண்டும்.

    இந்நிலையில் பாஜக-வின் தேசிய தலைவர் நட்டா அவசர அழைப்பின் பேரில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் டெல்லி சென்று அவரை சந்தித்துள்ளார்.

    இந்த சந்திப்பில் புதுவை பாஜக தலைவரை மாற்றுவது குறித்து முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் புதிய புதுவை மாநில பாஜக தலைவர் விரைவில் அறிவிக்கப்படுவார் என கட்சியினரிடையே தகவல் பரவி வருகிறது.

    • திமுக கூட்டணி கட்சிகளுக்குள் விவாதம் தான் உள்ளதே தவிர விரோதம் இல்லை.
    • மழை வந்தபோது சேலத்திற்கு ஓடி பதுங்கியவர் எடப்பாடி பழனிசாமி.

    சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏ வேணுவின் இல்லத் திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * திமுகவின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர் முன்னாள் எம்எல்ஏ கி.வேணு.

    * திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளுடன் கூறாத நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.

    * தேர்தலுக்காகவோ, பதவிக்காகவோ உருவாகாமல் கொள்கைக்காக உருவாக்கப்பட்டது திமுக கூட்டணி.

    * திமுக கூட்டணி கட்சிகளுக்குள் விவாதம் தான் உள்ளதே தவிர விரோதம் இல்லை.

    * திமுக ஆட்சியை நினைத்து எடப்பாடி பழனிசாமிக்கு பொறாமை.

    * செல்லா காசாக உள்ள எடப்பாடி பழனிசாமி பொறாமையில் தான் திமுக அரசு சரிந்து கொண்டிருக்கிறது என கூறுகிறார்.

    * மழை வந்தபோது சேலத்திற்கு ஓடி பதுங்கியவர் எடப்பாடி பழனிசாமி.

    * திமுக கூட்டணி உடைந்துவிடும் என எடப்பாடி பழனிசாமி ஜோசியம் கூறுகிறார்.

    * தனது கட்சியில் உள்ள குழப்பங்களை சரிசெய்ய முடியாமல் திமுகவை குறை கூறுகிறார் இபிஎஸ்

    * கனவு காண வேண்டாம், 2026ல் மட்டுமல்ல அதனை தொடர்ந்து வரும் அத்தனை தேர்தல்களிலும் திமுக வெற்றி பெறும் என்று கூறினார்.

    • தங்கம் விலை ரூ.58 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சியை கொடுத்துவிட்டது.
    • வெள்ளி விலை உயர்ந்து உள்ளது.

    தங்கம் விலை கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வந்தது.

    தங்கம் விலை மார்ச் மாதம் சவரனுக்கு ரூ.50 ஆயிரத்தை கடந்த நிலையில், 2 மாத இடைவெளியில், அதாவது மே மாதத்தில் ரூ.55 ஆயிரம் என்ற நிலையையும் கடந்து புதிய உச்சத்தை தொட்டது.

    தங்கம் விலை ஏறுமுகத்தில் காணப்பட்டு, ரூ.56 ஆயிரம் என்ற நிலையையும் கடந்தது. இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து ரூ.56 ஆயிரம் முதல் ரூ.57 ஆயிரம் வரையில் ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வந்தது.

    இந்த ஏற்ற, இறக்கத்துக்கு கடந்த 16-ந் தேதி ஒரு முற்றுப்புள்ளி வைத்தது போல, ஒரு சவரன் ரூ.57 ஆயிரத்தை கடந்தது. ரூ.57 ஆயிரத்தை கடந்த 3-வது நாளில் ரூ.58 ஆயிரத்தையும் தங்கம் விலை தாண்டி அதிர்ச்சியை கொடுத்துவிட்டது.

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை நேற்று சவரன் ரூ.58 ஆயிரத்து 400-க்கு விற்பனையானது.

    இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.58 ஆயிரத்து 720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.7,340-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையும் இன்று உயர்ந்து உள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.112-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    22-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,400

    21-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,400

    20-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,240

    19-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,240

    18-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,௯௨௦

     

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    22-10-2024- ஒரு கிராம் ரூ. 110

    21-10-2024- ஒரு கிராம் ரூ. 109

    20-10-2024- ஒரு கிராம் ரூ. 107

    19-10-2024- ஒரு கிராம் ரூ. 107

    18-10-2024- ஒரு கிராம் ரூ. 105

    ×