search icon
என் மலர்tooltip icon

    தேனி

    • பொதுமக்கள் கூடலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
    • கொலை செய்யப்பட்ட நாயின் உடல் பிரேத பரிசோனைக்கு பின் புதைக்கப்பட்டது.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கருநாக்கமுத்தன்பட்டியை சேர்ந்தவர் கிரண் (வயது26). இவர் தேங்காய் வெட்டும் வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில் கைதாகி தற்போது நிபந்தனை ஜாமீனில் உள்ளார். இவர் அதே பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது சாலையில் சுற்றித்திரிந்த நாயை பிடித்து தரையில் அடித்து கொன்றுள்ளார்.

    இதனை தட்டிக்கேட்ட அப்பகுதி மக்களையும் கத்தியை காட்டி மிரட்டி நான் ஏற்கனவே கொலை வழக்கில் உள்ளே சென்று வந்தவன் என மிரட்டி உள்ளார். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூடலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    விசாரணையில் கிரண் சிறைச்சாலையில் இருக்கும்போது அந்த நாய் அவரது தாயை கடித்ததாவும் இதனால் ஆத்திரத்தில் இருந்த தான் அந்ததெருநாயை தேடி பிடித்து அடித்து கொன்றதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் கொலை செய்யப்பட்ட நாயின் உடல் பிரேத பரிசோனைக்கு பின் புதைக்கப்பட்டது.

    • திராட்சை தோட்டங்கள், பழியன்குடி மலை அடிவாரப்பகுதி என சுற்றிக்காட்டி வருகின்றனர்.
    • மாட்டு வண்டி சுற்றுலாவை தமிழக வனத்துறையின் ஆசியோடு செய்து வருகின்றனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்ட எல்லையையொட்டி கேரளாவில் பெரியாறு புலிகள் காப்பகம் உள்ளது. இந்த காப்பகம் மூலம் தேக்கடியில் யானை சவாரி, படகு சவாரி, டிரக்கிங் ஆகியவை இயக்கப்பட்டு வருகிறது.

    இதன்மூலம் அம்மாநில அரசுக்கு ஆண்டுக்கு ரூ. பல கோடி வருவாய் கிடைக்கிறது. மேலும் வருவாயை பெருக்கும் வகையிலும், வடமாநில, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையிலும், மாட்டு வண்டி சவாரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

    இதற்கான அலுவலகத்தை தமிழக பகுதியான லோயர்கேம்ப் அருகே காஞ்சிமரத்துறையில் தொடங்கி மாட்டு வண்டி மூலம் திராட்சை தோட்டங்கள், பழியன்குடி மலை அடிவாரப்பகுதி என சுற்றிக்காட்டி வருகின்றனர். கேரளாவில் உள்ள பெரியாறு புலிகள் காப்பகம் எவ்வித அனுமதியின்றி தமிழக பகுதியில் கிளை அலுவலகத்தை செயல்படுத்த வருவதற்கு தமிழகத்தை சேர்ந்த வனத்துறை அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர் என்று விவசாயிகள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம் தெரிவிக்கையில், கேரளாவை மையமாக கொண்ட பெரியாறு புலிகள் காப்பக்கம் அத்துமீறி தமிழக பகுதியில் 2 கட்டிடங்களை கட்டி அங்கு கேரள ஊழியர்களையும் தங்க வைத்துள்ளது. பெரியாறு அணைக்கு செல்லும் வழியான தேக்கடி மற்றும் வல்லக்கடவில் கேரள வனத்துறை சோதனைச்சாவடி அமைத்து அனுமதியின்றி உள்ளே நுழைய முடியாத வகையில் கெடுபிடி செய்கின்றனர். அதே வேளையில் தமிழக பகுதிக்குள் எவ்வித அனுமதியின்றி கட்டிடங்களை கட்டி மாட்டு வண்டி சுற்றுலாவை தமிழக வனத்துறையின் ஆசியோடு செய்து வருகின்றனர்.

    எனவே இந்த அலுவலகத்திற்கு உடனடியாக சீல் வைக்கா விட்டால் விவசாயிகள் சங்கத்தினர் மாபெரும் போராட்டத்தில் ஈடுபடும் நிலை ஏற்படும் என்றார்.

    • ராயன் திரைப்படம் ஜூலை மாதம் 26-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இப்படத்திற்கு தணிக்கை குழு A சான்றிதழை அளித்துள்ளனர்.

    நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வரும் ராயன் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை எகிரச் செய்துள்ளது. அவரின் 50 ஆவது படமான இதை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிசன், துஷாரா விஜயன் என நட்சத்திர பட்டாளத்தையே களமிறக்கியுள்ளார் தனுஷ்.

    ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது. படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    இதற்கிடையில் கடந்த ஜூலை 16 ஆம் தேதி படத்தின் அதிரடியான டிரைலர் வெளியானது. கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி உள்ள இப்படம் ஜூலை மாதம் 26-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்திற்கு தணிக்கை குழு A சான்றிதழை அளித்துள்ளனர்.

    இந்நிலையில் 'ராயன்' திரைப்படம் வரும் 26ம் தேதி வெளியாவதை ஒட்டி, ஆண்டிப்பட்டியில் உள்ள குலதெய்வ கோயிலில் நடிகர் தனுஷ் தனது குடும்பத்துடன் இன்று  சாமி தரிசனம் செய்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஆடி மாதத்தில் வரும் முதல் சனிக்கிழமை தொடங்கி 5 வாரங்கள் சனிக்கிழமைகளில் ஆடிப்பெருந்திருவிழா நடைபெறும்.
    • பக்தர்களுக்கு வசதியாக சிறப்பு பஸ் வசதியும் செய்யப்பட்டிருந்தது.

    தேனி மாவட்டம் சின்னமனூர் அருகில் உள்ள குச்சனூரில் பிரசித்தி பெற்ற சனீஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு கட்டுப்பட்ட இந்த கோவில் சனி பரிகார தலமாக உள்ளது.

    இந்த கோவிலுக்கு முன்பு செல்லும் சுரபி நதிக்கரையில் பக்தர்கள் நீராடி எள்சாதம், நெய் தீபம் ஏற்றி கருப்பு வேட்டி, பூமாலை, பழம், படையல் செய்து வழிபாடு நடத்தினால் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இதற்காக ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்த கோவிலில் முக்கிய திருவிழாவாக ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் வரும் முதல் சனிக்கிழமை தொடங்கி 5 வாரங்கள் சனிக்கிழமைகளில் ஆடிப்பெருந்திருவிழா நடைபெறும்.


    இந்த திருவிழாவின் போது சனீஸ்வரர் திருக்கல்யாணம், துணை சன்னதியான கருப்பணசாமி கோவிலில் பொங்கல் வைத்தல், மதுபான படையல், ஆடு, கோழிகளை பலியிட்டு விருந்து வைத்தல் ஆகிய வழிபாடுகள் நடைபெறும். அதன்படி ஆடி மாதத்தின் முதல் சனிக்கிழமையான இன்று குச்சனூர் சனீஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் வருகை தந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து தங்கள் நேர்த்தி கடனை நிறைவேற்றி சென்றனர். பக்தர்களுக்கு வசதியாக சிறப்பு பஸ் வசதியும் செய்யப்பட்டிருந்தது.

    நடப்பாண்டில் குச்சனூர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக ரூ.1 கோடியில் துணை சன்னதிகளான விநாயகர், முருகன், கருப்பணசாமி, பலிபீடம், கொடி மரம் உள்ளிட்ட 14 இடங்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக இந்த வருடம் ஆடிப்பெருந்திருவிழா நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காலை, பகல், இரவு ஆகிய 3 கால பூஜைகள் வழக்கம்போல் தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 40 சதவீத பணிகள் முடிந்துள்ள நிலையில் இன்னும் சில மாதங்களில் பணிகள் அனைத்தும் முடிவடைந்து கும்பாபிஷேகம் நடைபெறும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்துக்காக 869 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 2317 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.
    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 46 அடியில் நீடிக்கிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 118.57 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    கேரளாவில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் சாலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக முல்லைப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

    நேற்று முன்தினம் 121.05 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 3 அடி உயர்ந்து 124.10 அடியாக இருந்தது. இன்று காலை மேலும் 1 அடி உயர்ந்து 125.10 அடியாக காணப்படுகிறது. அணைக்கு நீர் வரத்து 5395 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1267 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    அணையில் 3640 மி.கன அடி இருப்பு உள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 52.36 அடியாக உள்ளது. அணைக்கு 1671 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்துக்காக 869 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 2317 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 46 அடியில் நீடிக்கிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 118.57 அடியாக உள்ளது.

    தொடர் மழை காரணமாக பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவி, கம்பம் அருகே உள்ள சுருளி அருவி, ஆண்டிபட்டி அருகே உள்ள மேகமலை அருவி ஆகியவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. மேலும் வறண்டு கிடந்த கொட்டக்குடி, மூல வைகை ஆறு, வராக நதி ஆகியவற்றில் நீர்வரத்து அதிகரித்தது. குறிப்பாக குரங்கணி, கொட்டக்குடி, பீச்சாங்கரை, முட்டம், சென்ட்ரல் ஸ்டேஷன், டாப் ஸ்டேஷன் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைப்பிள்ளையார் தடுப்பணையில் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ அனுமதி வழங்கப்படவில்லை. இப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு அங்கு வரும் சுற்றுலா பயணிகளை திருப்பி அனுப்பி வருகின்றனர்.

    பெரியாறு 30.8, தேக்கடி 18.6, கூடலூர் 6.2, உத்தமபாளையம் 7.6, வைகை அணை 0.4, சோத்துப்பாறை 2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியம் வெள்ளிமலை வனப்பகுதியில் மூல வைகை ஆறு உற்பத்தியாகிறது.
    • பெரியாறு 98.4, வைகை அணை 3.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

    வருசநாடு:

    தேனி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் சாரல் மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் 4 மணி நேரத்துக்கும் மேலாக மழை கொட்டித் தீர்த்தது.

    தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியம் வெள்ளிமலை வனப்பகுதியில் மூல வைகை ஆறு உற்பத்தியாகிறது. கடந்த சில மாதங்களாக வனப்பகுதியில் போதிய அளவில் மழை இல்லாத காரணத்தால் வைகை ஆற்றில் நீர்வரத்து குறைந்து வந்தது. மேலும் கடந்த சில நாட்களாக கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. அதே நேரம் மாலை நேரங்களில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனால் கிராமங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் அவதியுற்று வந்தனர். இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியது. அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வந்ததால் கிராமங்களில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

    தொடர் சாரல் மழையின் காரணமாக கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில் நேற்று இரவு வெள்ளிமலை வனப்பகுதியில் 4 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. அதன் காரணமாக இன்று காலை வைகை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வெள்ளிமலை வனப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வரும் நாட்களில் வெள்ளப்பெருக்கு மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. எனவே கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ வேண்டாம் என அந்தந்த ஊராட்சி நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    வைகை அணையில் இருந்து தற்போது திண்டுக்கல், மதுரை மாவட்ட பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர் மட்டம் குறைந்தது. ஆனால் தற்போது பெய்து வரும் மழை காரணமாகவும், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பின் காரணமாகவும், மீண்டும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 51.90 அடியாக உள்ளது. வரத்து 1000 கன அடி. திறப்பு 869 கன அடி. இருப்பு 2250 மி.கன அடி.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 123.30 அடி. வரத்து 6264 கன அடி. திறப்பு 1178 கன அடி. இருப்பு 3281 மி.கன அடி.

    பெரியாறு 98.4, வைகை அணை 3.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

    • தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக கிராம நிர்வாக அலுவலர் தங்கமாரிமுத்து புகார் அளித்தார்.
    • கள்ளச்சாராய விற்பனையிலும் வியாபாரிகள் கைது செய்யப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக உள்ள மலை கிராமங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. குறிப்பாக திருமணம் உள்ளிட்ட விசேஷ நாட்களில் அந்த குடும்பத்தினரே சாராயம் வாங்கி சப்ளை செய்து வந்ததாகவும் புகார்கள் வந்தன.

    கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு பிறகு கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும் சாராயம் காய்ச்சுபவர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் உடனடியாக தெரிவிக்கவும், டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டு இருந்தது.

    ஆண்டிபட்டி அடுத்துள்ள மேய்க்கிலார்பட்டி ஈஸ்வரன் கோவில் அருகே பழனிக்குமார் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக கிராம நிர்வாக அலுவலர் தங்கமாரிமுத்து புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது கள்ளச்சாராயம் காய்ச்சிக் கொண்டு இருந்த அதே ஊரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (47), கிழக்குத் தெருவைச் சேர்ந்த பொன் இருளன் (40) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 30 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டதுடன் ஊறல்களையும் போலீசார் அழித்தனர்.

    தேனி மாவட்டத்தில் தொடர்ந்து கஞ்சா, அதிநவீன போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து வரும் நிலையில் கள்ளச்சாராய விற்பனையிலும் வியாபாரிகள் கைது செய்யப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • ஈழத் தமிழர்கள் குறித்து பேசி இளைஞர்களின் உணர்வுடன் சீமான் விளையாடி வருகிறார்.
    • தமிழ்நாடு வரலாறு மற்றும் தமிழ் சமூகம் குறித்து சீமான் தெரிந்து கொள்ள வேண்டும்.

    கூடலூர்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட தி.மு.க. சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவுநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க.வின் வெற்றி, மதவாதத்தை பற்றி பேசும் பா.ஜ.க., சாதி பிரிவினையை பற்றி பேசும் பா.ம.க ஆகிய கட்சிகளுக்கு தகுந்த பாடத்தை கற்பித்துள்ளது.

    இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடந்த 13 சட்டமன்ற இடைத்தேர்தல்களில் இந்தியா கூட்டணி கட்சிகள் 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாராளுமன்ற தேர்தலைத் தொடர்ந்து சட்டமன்ற இடைத் தேர்தலிலும் பா.ஜ.க. கடும் பின்னடைவை சந்தித்து வருவது அரசியல் மாற்றத்துக்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

    ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டு இருப்பது போலீசார் எடுத்த நடவடிக்கையாகும். சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைவதை தமிழ்நாடு அரசும், போலீசாரும் கைகட்டி வேடிக்கை பார்க்க மாட்டார்கள்.

    பெரியார், அண்ணா, கருணாநிதி போன்ற திராவிட தலைவர்களை தொடர்ந்து சீமான் அவதூறாக பேசி வருவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இது வரை பல தேர்தல்களை சந்தித்த சீமான் ஒரு தேர்தலிலாவது முழுமையான டெபாசிட் வாங்க முடிந்ததா? முதலில் தன் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை டெபாசிட் வாங்க வைத்து விட்டு பின்னர் தி.மு.க. தலைவர்கள் குறித்து பேசட்டும்.

    ஈழத் தமிழர்கள் குறித்து பேசி இளைஞர்களின் உணர்வுடன் சீமான் விளையாடி வருகிறார். ஈழத்தின் வரலாற்றை கற்றுக் கொள்வதற்கு முன்பு தமிழ்நாடு வரலாறு மற்றும் தமிழ் சமூகம் குறித்து சீமான் தெரிந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியில் நீடிக்கிறது.
    • அணைக்கு வரும் 46 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது.

    கூடலூர்:

    பருவமழை தொடங்கிய போதும், முல்லைப்பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதியில் போதிய அளவு மழைப்பொழிவு இல்லாததால் அணையின் நீர்மட்டம் உயர்வதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து 991 கன அடியாக அதிகரித்தது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 120.95 அடியாக உள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1100 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 51.86 அடியாக உள்ளது. 838 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்துக்காக 869 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியில் நீடிக்கிறது.

    அணைக்கு வரும் 46 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 119.22 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    அரண்மனைப்புதூர் 1.6, வீரபாண்டி 4.8, பெரியகுளம் 2, மஞ்சளாறு 2, சோத்துப்பாறை 3, வைகை அணை 2.4, போடி 2.2, உத்தமபாளையம் 1.4, கூடலூர் 4.2, பெரியாறு 24.4, தேக்கடி 17, சண்முகாநதி அணை 2.6 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளதால் அதற்கான ஆவணங்களையும் போலீசார் சரிபார்த்தனர்.
    • 3 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதியில் 2 எண் இணை சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு நேற்று காலை முதல் அதிக அளவில் பத்திரப்பதிவு நடைபெறுவதாக தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதனடிப்படையில் தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. சுந்தர்ராஜன், இன்ஸ்பெக்டர்கள் ராமேஸ்வரி, ஜெயப்பிரியா தலைமையிலான போலீசார் சார்பதிவாளர் அலுவலகத்தில் நுழைந்து சோதனை நடத்தினர்.

    மாலை 4 மணிக்கு தொடங்கிய சோதனை 6 மணி நேரத்துக்கு மேலாக நீடித்தது. இதில் கணக்கில் வராத ரூ.87,500யை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர். அதிக அளவில் பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளதால் அதற்கான ஆவணங்களையும் போலீசார் சரிபார்த்தனர்.

    இந்த அலுவலகத்தில் 2 ஆண்டுகளாக தாமரைக்குளம் தாசில்தார் நகரை சேர்ந்த பரமேஸ்வரி (வயது56) என்பவர் பணிபுரிந்து வருகிறார். அவரிடம் போலீசார் பத்திரப்பதிவுகள் குறித்த விபரங்கள் குறித்து கேட்டறிந்தனர். மேலும் இது தொடர்பாக ஆவணங்களையும் சேகரித்தனர். சோதனையின் போது அலுவலகத்தில் பத்திரப்பதிவுக்காக வந்திருந்த பொதுமக்கள் வெளியேற்றப்பட்டன. மேலும் இணை சார்பதிவாளர் பரமேஸ்வரி, அலுவலக உதவியாளர்கள் உள்பட 3 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கஞ்சா வியாபாரிகள் தாக்கியதில் காயம் அடைந்த செல்வமும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
    • சின்னமனூர் போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் கருங்கட்டான் குளம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 55). இவர் அதே பகுதியில் சிறிய அளவில் ஓட்டல் கடை நடத்தி வருகிறார்.

    நேற்று தனது மோட்டார் சைக்கிளில் சீப்பாலக்கோட்டை மெயின்ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது மின்னல் வேகத்தில் பைக்கில் வந்த 2 வாலிபர்கள் அவர் மீது மோதி கீழே விழ வைத்தனர். அதற்கு செல்வம் பார்த்து வரக்கூடாது என கேட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர்கள் செல்வத்தை தரக்குறவைான வார்த்ததைகளால் திட்டி தாக்க முயன்றனர்.

    அவர் தடுத்தபோதும் பைக்கில் விழுந்தவரை காப்பாற்றாமல் சரமாரியாக தாக்கினர். அப்போது அவர்கள் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கஞ்சா பொட்டலங்கள் கீழே விழுந்தது. இதை பார்த்ததும் அங்கிருந்த பொதுமக்கள் கஞ்சா வாலிபர்களை பிடித்து தடுத்தனர். மேலும் இது குறித்து சின்னமனூர் போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.

    பைக்கில் இருந்து தவறி விழுந்ததாலும் பொதுமக்கள் தாக்கியதாலும் கஞ்சா வாலிபர்களுக்கும் காயம் ஏற்பட்டது. போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் கே.கே.பட்டி மந்தயம்மன் கோவில் தெருவை சேர்ந்த விக்னேஷ் (22), கிருஷ்ணன் வாத்தியார் தெருவை சேர்ந்த நவீன் (22) என தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் அவர்களை மருத்துவ பரிசோதனைக்காக தேனி க.விலக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 100 கிராம் கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    கஞ்சா வியாபாரிகள் தாக்கியதில் காயம் அடைந்த செல்வமும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதனிடையே கஞ்சா வியாபாரிகள் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.
    • ஆதரவு கேட்டு கடந்த 2 நாட்களாக பிரசாரம் செய்தனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தமிழ்நாடு கள்ளர் பள்ளிகளின் சீரமைப்பு மற்றும் பெயர் மாற்றம் குறித்து முன்னாள் நீதிபதி சந்துரு தனது அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்தார்.

    இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஜாதிப் பெயரை நீக்க வேண்டும். ஆதிதிராவிடர், கள்ளர் சீரமைப்பு உள்ளிட்ட பெயர்களை மாற்ற வேண்டும் என்ற கருத்துக்களை தெரிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    தமிழக பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு மற்றும் பார்வர்டு பிளாக் கட்சியினர் இன்று மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.

    இதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடமும், பொதுமக்களிடமும் ஆதரவு கேட்டு கடந்த 2 நாட்களாக பிரசாரம் செய்தனர்.

    இன்று தேனி மாவட்டத்தில் உள்ள கள்ளர் பள்ளிகளை பூட்டி அவர்கள் போராட்டம் நடத்தினர். தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் வருவதற்கு முன்பாகவே பள்ளிக்கு விடுமுறை என கூறி வந்த மாணவர்களையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

    இதனால் தங்களுக்கு பள்ளி விடுமுறை என நினைத்து மாணவர்கள் உற்சாகமாக திரும்பினர். அதன்பிறகு கள்ளர் பள்ளிகளை பெயர்மாற்றம் செய்யும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    ×