search icon
என் மலர்tooltip icon

    தேனி

    • சந்திரன் தனது மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு வாக்களிக்க பெயர் உள்ளது.
    • பூத் சிலீப் வழங்கப்பட்டும் அதிகாரிகள் குளறுபடியால் பெயர் இறந்ததாக கூறியதால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடியை சேர்ந்தவர் சந்திரன் (வயது 56). கூலித்தொழிலாளியான இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இன்று அப்பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு சென்ற போது அவர் இறந்துவிட்டதாக வாக்காளர் ஜாபிதாவில் இருந்துள்ளது. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சந்திரன் தனது மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு வாக்களிக்க பெயர் உள்ளது. தனது பெயர் மட்டும் எவ்வாறு விடுபட்டது? என கேள்வி எழுப்பினார்.

    நகராட்சி அலுவலகத்தில் சென்று விண்ணப்பம் அளித்து புதிதாக வாக்காளர் அட்டைக்கு மனு அளிக்குமாறு அவர்கள் தெரிவித்தனர்.

    பூத் சிலீப் வழங்கப்பட்டும் அதிகாரிகள் குளறுபடியால் பெயர் இறந்ததாக கூறியதால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    • 10 ஆண்டு சிறப்பான ஆட்சியை தந்த பிரதமர் மோடி தான் 3ம் முறையாக பிரதமராக வர வேண்டும்.
    • என்னுடைய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

    தேனி:

    இந்தியாவில் 18-வது பாராளுமன்ற தேர்தல் இன்று தொடங்கி ஜூன் மாதம் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் தேனி பெரியகுளம் பகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாக்களித்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

    கே: தேர்தல் முடிவு எப்படி இருக்கும்?

    நடைபெற்றுக்கொண்டிருக்கக்கூடிய இந்திய தேசத்தினுடைய தலைவிதியை யார் நிர்ணயிக்கின்ற தேர்தலாக பாராளுமன்ற தேர்தல் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

    10 ஆண்டு சிறப்பான ஆட்சியை தந்த பிரதமர் மோடி தான் 3ம் முறையாக பிரதமராக வர வேண்டும் என்று இந்தியா முழுவதும் உள்ள பொதுமக்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். உறுதியாக 3ம் முறையாக பிரதமர் மோடிதான் வருவார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    கே: உங்களது வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

    என்னுடைய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. உறுதியாக நான் வெற்றி பெறுவேன் என்று கூறினார்.

    • பாராளுமன்ற தேர்தலில் தங்களது வாக்குகளை வீணடிக்காமல் என்னை போல் வெளிநாட்டில் பணிபுரியும் தமிழர்கள் வாக்களிக்க வேண்டும்.
    • தமிழக அரசு அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மூலம் வாக்களிப்பது அவசியம் குறித்து பல்வேறு வகையான விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது வரவேற்கத்தக்கது.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் தேரடி தெருவை சேர்ந்த பால சுப்பிரமணி மற்றும் சுமதி தம்பதியின் மகன் நாக அர்ஜூன் (வயது 23). இவர் அமெரிக்காவில் மெக்சிகோ பகுதியில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தற்போது 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தனது வாக்குரிமையை செலுத்த வேண்டும் என்பதற்காக தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலில் தங்களது வாக்குகளை வீணடிக்காமல் என்னை போல் வெளிநாட்டில் பணிபுரியும் தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் எனவும், தற்போது தமிழக அரசு அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மூலம் வாக்களிப்பது அவசியம் குறித்து பல்வேறு வகையான விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது வரவேற்கத்தக்கது எனவும் கூறினார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்,

    இந்தியாவில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக அமெரிக்காவில் இருந்து வந்துள்ளேன். என்னுடன் இந்தியாவை சேர்ந்த பலரும் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் சிலர் என்னுடன் வந்தனர். மேலும் பலர் அந்தந்த மாநிலங்களில் நடைபெறும் வாக்குப்பதிவு நாளில் வருகை தர உள்ளனர்.

    உள்ளூரில் இருந்தால்கூட நாம் வாக்களித்து என்ன மாற்றம் வந்துவிட போகிறது என்று சிலர் நினைத்து வீட்டிலேயே இருந்து விடுகின்றனர். இது தவறான செயலாகும். என்னைப்போல வேலை நிமித்தமாக வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்களும் சொந்த நாட்டிற்கு வந்து தங்கள் வாக்குரிமையை செலுத்த நான் முன்மாதிரியாக இருக்க விரும்புகிறேன் என்றார்.

    வாக்குப்பதிவிற்காக அமெரிக்காவில் இருந்து வந்த நாக அர்ஜூனனை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினார்கள். 

    • பஸ் நிலையத்தில் போதிய அளவில் இடவசதி இல்லை.
    • புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு தகுந்த இடம் கிடைக்கவில்லை.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருசநாடு கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு பஸ் நிலையம் கட்டப்பட்டது. அப்போதைய காலத்தில் வருசநாடு பகுதிக்கு குறைந்த அளவிலான பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டது. இதனால் குறைந்த அளவிலான இடத்தில் பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வருசநாட்டில் இருந்து நாள்தோறும் 30-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

    இதனால் பஸ் நிலையத்தில் போதிய அளவில் இடவசதி இல்லை. எனவே பஸ் நிலையத்தை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு தகுந்த இடம் கிடைக்கவில்லை. அதேபோல வருசநாடு கிராமத்தில் புதிய அரசு அலுவலகங்கள் கட்டுவதற்கும் இடங்கள் கிடைக்காத நிலை இருந்து வந்தது.

    இந்த நிலையில் சின்னமனூரைச் சேர்ந்த பரமசிவம் என்ற விவசாயி தாமாக முன்வந்து வருசநாடு கிராமத்தில் பஸ் நிலையம் மற்றும் அரசு அலுவலகங்கள் கட்டுவதற்காக தனக்குச் சொந்தமான 2.36 ஏக்கர் நிலத்தை தானமாக ஆளுநர் பெயருக்கு பத்திரம் பதிவு செய்து வழங்கினார். அதற்கான ஆவணங்களை வருசநாடு ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்துவிடம் வழங்கினார். பஸ் நிலையம் அமைக்க இடம் தானமாக வழங்கிய பரமசிவத்தின் செயலைக்கண்டு அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டு தெரிவித்தனர்.

    • வழிபாடு நடத்தி விவசாய பணிகளை தொடங்குவதே இந்த விழா.
    • நாட்டார்கள் கூடி வெற்றிலைப்பிரி விழா கொண்டாடுவது வழக்கம்.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே வெள்ளலூர் கிராமத்தை தலைமையாக கொண்டு சுற்றி உள்ள 58 கிராமங்கள் இணைந்து வெள்ளலூர் நாடு என பல நூறு ஆண்டுகளாக அழைக்கப்படுகிறது. இந்த வெள்ளலூர்நாடு வெள்ளலூர், அம்பலகாரன்பட்டி, உறங்கான்பட்டி, குறிச்சிப்பட்டி, மலம்பட்டி என 5 மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

    இப்பகுதியில் மூண்டவாசி, வேங்கைப்புலி, சமட்டி, நைக்கான், சாவடைதாங்கி, வெக்காளி, சலிப்புளி, திருமான், செம்புலி, நண்டன்கோப்பன், பூலான் மலவராயன் என 11 கரைகளாக மக்கள் வாழ்கின்றனர்.

    ஆண்டுதோறும் இங்கு தமிழ்ப்புத்தாண்டான சித்திரை 1-ந்தேதி வெள்ளலூர் கருங்கல் மந்தையில் நாட்டார்கள் அனைவரும் கூடி வெற்றிலைப்பிரி விழா கொண்டாடுவது வழக்கம். அதாவது வீடுதோறும் வெற்றிலைகளை வழங்கி அதை வைத்து வழிபாடு நடத்தி விவசாய பணிகளை தொடங்குவதே இந்த விழாவாகும்.

    அதன்படி நேற்று வெற்றிலைப்பிரி விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி கருங்கல் மந்தை முன்பு நாட்டார்கள் வழிபாடு செய்தனர். பின் அருகில் உள்ள சுனை பாறையில் தமிழ் எழுத்து ப வடிவில் அம்பலகாரர்களும், இளங்கச்சிகளும், பொதுமக்களும் அமர்ந்தனர்.

    குவித்து வைக்கப்பட்ட வெற்றிலை கட்டுகளை பிரித்து முதலில் விவசாய பணிகளில் முக்கிய உதவிகள் செய்பவர்களுக்கு வெற்றிலைகள் வழங்கப்பட்டன. பின்னர் பாரம்பரிய வழக்கப்படி 11 கரையினருக்கும், 5 மாகாணத்திற்கும் வெற்றிலை கட்டுகள் வழங்கப்பட்டு அந்த வெற்றிலைகள் ஆங்காங்கே தனித்தனியாக 56 கிராமத்தினர்களும் வெற்றிலைகளை வாங்கி சென்றனர்.

    ஒவ்வொரு குடும்பத்தினரும் அந்த வெற்றிலைகளை தங்களுடைய வீட்டின் பூஜை அறையில் வைத்து வணங்கி கலப்பை, மண்வெட்டி, நெல் அளக்க பயன்படும் மரக்கால், கடப்பாரை ஆகியவற்றின் முன்பு வைத்து வழிபட்டனர். பின்னர் வீடுகளில் சேமித்து வைக்கப்பட்ட இயற்கை உரங்களை எடுத்து அவரவர்களின் வயல்களில் கொட்டி நிலத்தை உழுது விவசாய பணிகளை தொடங்கினர். இவ்வாறு செய்வதால் ஆண்டுதோறும் மழை பெய்து, செல்வம் செழித்து விவசாயம் நன்றாக நடைபெறும் என்பது இப்பகுதி மக்களின் பாரம்பரிய நம்பிக்கை ஆகும்.

    • தர்ஹா கடந்த 1950-ம் ஆண்டு கட்டப்பட்டது.
    • முஸ்லிம்கள் மட்டுமல்லாது அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த ஆண், பெண்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

    கம்பம்:

    ஆந்திர மாநிலம் நகரி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் நடிகையும், அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சருமான ரோஜா தனது கணவருடன் தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள தர்ஹாவில் சிறப்பு தொழுகை நடத்தினார்.

    கம்பம் கம்பமெட்டுச் சாலையில் கல்வத் நாயகம், அம்பாநாயகம் அடக்கம் செய்யப்பட்ட இடம் உள்ளது. இந்த தர்ஹா கடந்த 1950-ம் ஆண்டு கட்டப்பட்டது. இங்கு முஸ்லிம்கள் மட்டுமல்லாது அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த ஆண், பெண்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஆந்திர மாநில சுற்றுலா மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் ரோஜா தனது கணவரும் சினிமா இயக்குநருமான ஆர்.கே. செல்வமணியுடன் கம்பம் தர்ஹாவிற்கு வந்து சுமார் 15 நிமிடம் வழிபாடு செய்தனர். செல்வமணி இஸ்லாமிய முறைப்படி தலையில் கைக்குட்டையை கட்டிக்கொண்டு தொழுகை நடத்தினார். பின்னர் அவர்கள் காரில் புறப்பட்டு சென்றனர்.

    இது குறித்து தர்ஹாவை சேர்ந்தவர்கள் கூறுகையில், ரோஜா ஆந்திர மாநில சுற்றுலா மற்றும் இளைஞர் நலத்துறை மந்திரியாக உள்ளார். தற்போது ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபைத் தேர்தலும் வருகிறது. இதில் ரோஜா மீண்டும் நகரி பகுதியில் சட்டசபை உறுப்பினருக்கு போட்டியிடுகிறார். தேர்தலில் வெற்றி பெறவும், ஜெகன்மோகன்ரெட்டி மீண்டும் முதல் மந்திரியாக ஆக வேண்டும் என்பதற்காக சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.

    ரோஜா வருகை குறித்து போலீசாருக்கு எவ்வித தகவலும் தெரிவிக்க வில்லை. அவர் வந்து சென்ற பிறகே இது குறித்த தகவல் அப்பகுதி மக்களிடம் பரவியது. 

    • பெரியாறு புலிகள் சரணாலய பிரச்சினையிலும், தமிழக உரிமையை காவு கொடுத்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி.
    • எதற்காக தேர்தலில் நிற்கிறோம் என்றே தெரியாமல் எடப்பாடி பழனிச்சாமி களம் காண்கிறார். யார் பிரதமர் என்று தெரியாது.

    தேனி:

    தேனி பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர் டி.டி.வி. தினகரனை ஆதரித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று தேனியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது,

    தமிழக உரிமைகளை காவுகொடுத்த தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் டி.டி.வி. தினகரனை குறிவைத்து பிரசாரம் செய்து வருகின்றனர். அப்போதிலிருந்தே இவரது வெற்றி உறுதியாகிவிட்டது என்று தெரிந்து கொள்ளலாம்.

    முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 152 அடியாக உயர்த்த முயற்சி மேற்கொண்டவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. இந்த அணை பிரச்சினையில் கேரள அரசு தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாடை எடுத்தபோது அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி போராட்டம் நடத்த போவதாக கூறினார்.

    ஆனால் அப்போது மத்தியில் இருந்த காங்கிரஸ் மந்திரி ஜெயராம் ரமேஷ் போராட்டம் நடத்தினால் 2ஜி வழக்கில் கனிமொழி, ராசா ஆகியோர் கைது செய்யப்படுவார்கள் என எச்சரித்ததால் அமைதியாகிவிட்டார். இதேபோல் பெரியாறு புலிகள் சரணாலய பிரச்சினையிலும், தமிழக உரிமையை காவு கொடுத்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி.


    மு.க.ஸ்டாலின் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.1000 ஊக்கத்தொகை கொடுக்கப்படும் என்றார். இதுவரை எந்த குடும்பத்திற்காவது அவர் பணம் கொடுத்தாரா?. ஆனால் தேர்தலுக்காக ரூ.500 முதல் ரூ.1000 வரை பணம் கொடுக்க தி.மு.க.வினர் வருவார்கள். அப்போது வாக்காளர்களாகிய நீங்கள் கஞ்சா விற்ற பணம் எங்களுக்கு வேண்டாம் என கூறவேண்டும்.

    தி.மு.க. மீண்டும் பழைய புராணத்தை பாடி வருகிறது. வடக்கு வாழ்கிறது. தெற்கு தேய்கிறது என்கிறார்கள். 50 வருடமாக ஆட்சி செய்த காங்கிரஸ்தான் இதற்கு காரணம். தற்போது அந்த கட்சியுடன்தான் கூட்டணி வைத்துள்ளனர். தமிழகத்திற்கு எதுவுமே மத்திய அரசு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை தி.மு.க. வைக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு மட்டும் ரூ.10 லட்சத்தி 76 ஆயிரம் கோடி நிதி தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    மத்திய பா.ஜ.க. ஆட்சியில் தான் சிலிண்டருக்கு மானியம், முத்ரா கடன் திட்டம், ஆவாஜி யோசனா திட்டம் மூலம் குடும்பத்திற்கு நேரடியாக நிதிஉதவி அளித்து வருகிறது. அந்த நிதியை தி.மு.க. அரசு எங்களுக்கு தெரியாமல் எப்படி கொடுக்கலாம் என தடுக்கப் பார்க்கின்றனர். தமிழகத்திற்கு 15 மருத்துவ கல்லூரிகளை கொடுத்துள்ளோம். இதையெல்லாம் மக்களிடமிருந்து மறைத்து தி.மு.க. பொய் பிரசாரம் செய்து வருகிறது.

    எதற்காக தேர்தலில் நிற்கிறோம் என்றே தெரியாமல் எடப்பாடி பழனிச்சாமி களம் காண்கிறார். யார் பிரதமர் என்று தெரியாது. யார் ஆட்சி அமைக்கிறார்களோ அவர்களிடம் தமிழக உரிமையை வலியுறுத்துவதாக கூறுகிறார். தற்போது அ.தி.மு.க.வில் உண்மையான தொண்டர்களுக்கு சீட்டு வழங்கப்படவில்லை. கான்ட்ராக்டர்களுக்கும், ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கும் தான் சீட் வழங்கப்படுகிறது. அவர் கட்சி நடத்துவதே கான்ட்ராக்டர்களுக்காக தான். ஜூன் 4ம் தேதி டி.டி.வி. தினகரன் வெற்றி பெற்ற பின்பு உண்மையான அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் இவரது பின்னால் வருவார்கள்.

    தமிழகத்தில் 11 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு உள்ளது. இவர்கள் அனைவரும் போட்டிபோட்டு லஞ்சம் வாங்கி அதனை கப்பம்கட்டி வருகின்றனர். ரூ.30 ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளதாக பி.டி.ஆர். பழனிவேல் ராஜனே கூறியுள்ளார். எனவே அந்த பணத்தை வைத்து தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளனர். யார் பிரதமர் என்பதே தெரியாமல் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க போகிறோம் என்கிறார்கள்.

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மன்மோகன்சிங் என்ற பொம்மை பிரதமரை அமர்த்தி ரூ.12 லட்சம் கோடி கொள்ளையடித்ததை போல மீண்டும் ஒரு கொள்ளையை அரங்கேற்ற இந்த கூட்டணி தயாராகி வருகிறது. எனவே மக்கள் எச்சரிக்கையுடன் இருந்து தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    • ஆர்.கே.நகர் தொகுதி மக்களை ஏமாற்றியதைப் போல தேனி மக்களையும் ஏமாற்ற பிரசாரம் செய்து வருகிறார்.
    • அருணாச்சல பிரதேசத்தில் சீனா ஆக்கிரமித்து வருவதை பற்றி பேச மோடிக்கு மனமில்லை.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் இன்று போடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    ஆர்.கே.நகர் சட்டமன்ற தேர்தலில் அப்பகுதி மக்களுக்கு 20 ரூபாய் டோக்கன் கொடுத்து தான் வெற்றி பெற்றவுடன் பெரியதொகை தருவதாக ஏமாற்றிச் சென்றவர்தான் இங்கு போட்டியிடும் டி.டி.வி. தினகரன்.

    ஆர்.கே.நகர் தொகுதி மக்களை ஏமாற்றியதைப் போல தேனி மக்களையும் ஏமாற்ற பிரசாரம் செய்து வருகிறார். அவரை வாக்காளர்கள் நம்ப மாட்டார்கள். மத்தியில் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள் இயற்றப்பட்டபோதும் சரி தொழிலாளர்கள், பள்ளி மாணவர்களுக்கு எதிரான சட்டங்கள் இயற்றப்பட்ட போதும் மத்திய அரசுக்கு துணையாக இருந்தது அ.தி.மு.க. அரசு. தற்போது கூட்டணியில் இருந்து விலகி விட்டதாக நாடகமாடி வருகின்றனர்.

    இவர்கள் கபட கூட்டணியை மக்கள் நம்ப மாட்டார்கள். திருவிழாவில் புகுந்து கொள்ளும் திருடன் தான் நகையை திருடி விட்டு திருடன் ஓடுகிறான்... திருடன் ஓடுகிறான்... என்று சத்தம் போடுவான். பொதுமக்கள் அவனை பிடிக்க செல்லும் போது இந்த திருடன் தப்பித்து ஓடி விடுவான். அதே போல்தான் மத்திய மந்திரிகள் இன்று தேர்தலுக்காக வாகன பேரணி, பிரசாரம் போன்றவற்றை செய்து வருகின்றனர்.

    இந்தியாவில் வேலையின்மை, பொருளாதார சீர்கேடுகள், விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகளை திசை திருப்புவதற்காக கச்சத்தீவு பிரச்சினையை மோடி கையில் எடுத்து வருகிறார். அருணாச்சல பிரதேசத்தில் சீனா ஆக்கிரமித்து வருவதை பற்றி பேச மோடிக்கு மனமில்லை. இது போன்ற ஆட்சி மீண்டும் அமைந்தால் இந்தியா அழிவுப்பாதையில் செல்லும். எனவே மக்கள் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மக்கள் போலீஸ் நிலையத்திற்கே பூட்டு போட்டால் தங்கள் குறைகளை யாரிடம் தெரிவிப்பது என கூறினர்.
    • போலீஸ் நிலையத்திற்கு பூட்டு போட்ட சம்பவம் சமூக வளைதலங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி போலீஸ் சரகத்திற்கு உள்பட்ட ஏத்தகோவில் போலீஸ் நிலையம் மாவட்டத்தின் கடைசி எல்லையில் அமைந்துள்ளது. இதற்கு அடுத்து கரடு பகுதியை கடந்தால் ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர் நகரங்களை அடையலாம்.

    இந்த போலீஸ் நிலையத்தில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 3 போலீசார் பணியில் உள்ளனர். தேனி மாவட்டத்தின் பெரும்பாலான போலீஸ் நிலையங்களில் காவலர்கள் பற்றாக்குறை காரணமாக ஒருசிலர் மட்டுமே பணியில் இருப்பது வாடிக்கையாக உள்ளது.

    இந்நிலையில் நேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்திற்காக தேனி வருகை தந்தார். இதனையொட்டி பாதுகாப்பு பணிக்காக பெரும்பாலான போலீஸ் நிலையங்களில் போலீசார் அங்கு சென்றுவிட்டனர். இதேபோல் ஏத்தகோவில் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் அனைத்து போலீசாரும் அங்கு சென்றுவிட்டதால் போலீஸ் நிலையத்திற்கு பூட்டு போட்டனர்.

    இதைபார்த்த அப்பகுதி மக்கள் போலீஸ் நிலையத்திற்கே பூட்டு போட்டால் தங்கள் குறைகளை யாரிடம் தெரிவிப்பது என கூறினர். மேலும் போலீஸ் நிலையத்திற்கு பூட்டு போட்ட சம்பவம் சமூக வளைதலங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

    • மோடி ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் இருக்காது; தேர்தல் இருக்காது என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
    • பிரதமர் மோடி தேர்தல் காரணமாக உள்நாட்டில் சுற்றுலா வந்துள்ளார் என்றார்.

    தேனி:

    தேனி லட்சுமிபுரம் பகுதியில் தேனி தொகுதி வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், திண்டுக்கல் தொகுதி வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை ஆற்றி வருகிறார். அப்போது அவர் பேசியதாவது:

    பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமைதியான இந்தியா, அமளியான இந்தியாவாக மாறிவிடும்.

    மோடி ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் இருக்காது; தேர்தல் இருக்காது. பாராளுமன்றத்தில் விவாதம் இருக்காது. மாநிலங்களுக்கு அதிகாரம் இருக்காது.

    பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் சமூக நீதியை குழிதோண்டி புதைத்து விடும். வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்ற பிரதமர் மோடி, தேர்தல் காரணமாக உள்நாட்டில் சுற்றுலா வந்துள்ளார்.

    திராவிட மாடலால் தமிழ்நாடு வளர்ந்துள்ளது. வளர்ச்சியை மோடி மஸ்தான் வேலையால் தடுக்கமுடியாது. வேண்டாம் மோடி என்று தெற்கிலிருந்து ஒலிக்கும் குரல் இந்தியா முழுவதும் எதிரொலிக்கும்.

    தமிழ்நாட்டை வளர்க்கப் போகிறேன் என இந்தியில் பேசி மோடி மஸ்தான் வித்தை காட்டுகிறார் பிரதமர் மோடி.

    10 ஆண்டுகள் பிரதமராக இருந்த மோடி சாதனைகளாக எதையும் சொல்ல முடியாமல் உள்ளார் என தெரிவித்தார்.

    • கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாவுக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • திறக்கப்படும் தண்ணீர் வேகமாக செல்லும் வகையில் ஆரம்பத்தில் கூடுதலாக திறக்கப்பட்டு பின்னர் படிப்படியாக குறைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரமுள்ள வைகை அணை உள்ளது. இந்த அணை தண்ணீர் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் குடிநீர் மற்றும் பாசன வசதி பெறுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக அதன் முழு கொள்ளளவான 71 அடியை எட்டியது.

    அதன் பிறகு மழை படிப்படியாக குறைந்ததாலும் பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும் நீர்மட்டம் வேகமாக சரிந்தது. இந்நிலையில் உலக புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா நடைபெறும். இதற்காக வைகை அணையில் போதுமான நீர் இருப்பு இருந்தால் தண்ணீர் திறப்பது வழக்கம்.

    இந்நிலையில் இந்த ஆண்டு மதுரை சித்திரை திருவிழா வருகிற 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 23-ந்தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா நடைபெறுகிறது.

    இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். தற்போது வைகை அணையின் நீர்மட்டம் 60 அடியாக உள்ளது. இதனால் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாவுக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி வருகிற 19-ந்தேதி மாலை 6 மணிக்கு தண்ணீர் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தண்ணீர் வேகமாக ஆற்றில் செல்லும் வகையில் இரவில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

    19-ந்தேதி மாலை 6 மணி முதல் 23-ந்தேதி காலை 6 மணி வரை மொத்தமாக 26 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறையினர் முடிவு செய்துள்ளனர். திறக்கப்படும் தண்ணீர் வேகமாக செல்லும் வகையில் ஆரம்பத்தில் கூடுதலாக திறக்கப்பட்டு பின்னர் படிப்படியாக குறைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பிரசித்தி பெற்ற கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழாவுக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது பக்தர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை.
    • அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பாராளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில் ஒரே கட்டமாக 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.

    தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    அதன்படி, தேனி தொகுதி தி.மு.க. வேட்பாளர் தங்கதமிழ்செல்வன், திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேனியில் இன்று மாலை 4 மணிக்கு தேர்தல் பிரசாரம் செய்கிறார். பின்னர், தேனி பெரியகுளத்தில் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட உள்ளார்.

    இந்நிலையில், தேனி உழவர் சந்தை, பாரஸ்ட் ரோட்டில் நடைபயணம் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் வாக்கு சேகரித்தார்.

    இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியகுளம் சாலையில் உள்ள என்.ஆர்.டி. ரோடு பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது சாலையோர கடைகளிலும், நடந்து சென்ற பொதுமக்களிடமும் நலம் விசாரித்து வாக்கு சேகரித்தார்.

    பின்னர் உழவர் சந்தைக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு காய்கறிகள் வாங்க வந்த பெண்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    சாலையோர வியாபாரிகள் கைகுலுக்கி வரவேற்பு தெரிவித்தனர். அவர்களிடம் தி.மு.க. வேட்பாளருக்கு வாக்களிக்கும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். காய்கறிகள் வாங்க வந்த பெண்களிடமும் மகளிர் உரிமைத் தொகை முறையாக கிடைக்கிறதா? என்று விசாரித்தார்.

    அதற்கு பெண்கள் தங்களுக்கு உரிமைத்தொகை சரியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுவதாகவும், இதனால் தங்கள் குடும்ப செலவுக்கு மிகவும் உதவியாக இருப்பதாகவும் தெரிவித்துக் கொண்டனர்.

    அதன் பின் சாலையோரம் இருந்த ஒரு தேனீர் கடையில் அமர்ந்து எளிமையான முறையில் தேனீர் குடித்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த எளிமையான பிரசாரம் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. முதல்-அமைச்சருடன் தி.மு.க. வேட்பாளர் தங்கதமிழ்செல்வன், அமைச்சர் இ.பெரியசாமி மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் சென்றனர்.

    ×