search icon
என் மலர்tooltip icon

    மதுரை

    • இன்று காலையில் பெரிய தேரோட்டம் நடைபெற்றது.
    • பக்தர்கள் எழுப்பிய அரோகரா கோஷம் விண்ணை முட்டியது.

    திருப்பரங்குன்றம்:

    முருகப்பெருமானின் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிர மணிய சுவாமி கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது பங்குனி பெரு விழாவாகும். 15 நாட்கள் நடைபெறும் இந்த விழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவினை முன்னிட்டு முருகப்பெருமான் தெய்வானையுடன் காலையில் பல்லக்கிலும், மாலையில் தங்க மயில் வாகனம், தங்க குதிரை வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், சேஷ வாகனம் உள்ளிட்ட பல் வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முருகப்பெருமான் தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

    இதில் மதுரையில் இருந்து பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன் ஆகியோர் கலந்து கொண்டு முருகப்பெருமான் திருமணத்தை நடத்தி வைத்தனர். விழாவில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை அம்பாளை திருமண கோலத்தில் தரிசித்தனர்.

    இதையடுத்து இரவு மீனாட்சி அம்மன் மற்றும் பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரருக்கு வழியனுப்பு விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அம்பாரி வாகனத்தில் முருகப்பெருமான் தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று காலையில் பெரிய தேரோட்டம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலையில் உற்சவர் சன்னதியில் முருகன் தெய்வானைக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

    தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காலை 5.30 மணிக்கு முருகப்பெருமான் தேரில் எழுந்தருளினார். அங்கு கூடியிருந்த பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கிரிவலப்பாதை வழியாக ஆடி அசைந்து சென்றது பக்தர்களை பரவசப்படுத்தியது. அப்போது பக்தர்கள் எழுப்பிய அரோகரா கோஷம் விண்ணை முட்டியது.

    தேரின் முன்பாக சிறிய தேரில் விநாயகர் சென்றார். விழாவில் திருப்பரங்குன்றம், அவனியாபுரம், நிலையூர், கூத்தியார்குண்டு, தனக்கன் குளம் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், உள்ளூர், வெளியூர் பக்தர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தேரை வரம் பிடித்து இழுத்து சுவா மியை தரிசனம் செய்தார்கள்.

    தேரோட்டத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் ஆங்காங்கே பக்தர்களுக்கு நீர்மோர், அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா, அறங்காவலர்கள் மணி செல்வம், பொம்ம தேவன், சண்முகசுந்தரம், ராமையா, கோவில் துணை ஆணையர் சுரேஷ் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது 2 கோடி அ.தி.மு.க. தொண்டர்கள் எடுத்த முடிவு.
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரதமரை எதிர்ப்பது போல் வெளியில் வீர வசனம் பேசி வருகிறார்.

    மதுரை:

    மதுரை கே.கே.நகரில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிமனையை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணி ஏற்பட்டதை அடுத்து நிர்வாகிகள் தொண்டர்கள் எழுச்சியோடு செயல்பட்டு வருகிறார்கள். அ.தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

    தமிழகத்தில் ஒரே அலை தான் வீசுகிறது, அது அ.தி.மு.க. அலையாக வீசுகிறது. அ.தி.மு.க. இதுவரை என்னென்ன சாதனைகள் செய்துள்ளோம், இனி என்னென்ன சாதனைகள் செய்யப் போகிறோம் என மக்களிடம் கூறுவதால் மக்கள் அ.தி.மு.க. கூட்டணியை விரும்புகிறார்கள்.

    பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கள்ளக்கூட்டணி வைத்துள்ளது என முதலமைச்சர் விமர்சனம் செய்வதற்கு அவரே விளக்கம் அளிக்க வேண்டும். இப்படி எல்லாம் யாரும் விமர்சனம் செய்ததே இல்லை. ஒவ்வொரு தேர்தல் சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி அமைக்கப்படுகிறது. பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறிய பின்பும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுமென்றே திட்டமிட்டு அ.தி.மு.க. மீது அவதூறு பரப்பி வருகிறது.

    தோல்வி பயத்தின் காரணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அ.தி.மு.க.வை பற்றி அவதூறாக பேசி வருகிறார்கள். பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருந்தோம், பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறிய பின்பு எதை பேசுவது? தி.மு.க. மாதிரி நாங்கள் அல்ல, அ.தி.மு.க. கூட்டணி தர்மத்தை கடைப்பிடிப்போம். கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டாலும் பா.ஜ.க. தவறு செய்தால் நாங்கள் கேட்போம். கூட்டணியில் இருக்கும்போது கட்சியினரை விமர்சனம் செய்யக்கூடாது. அப்படி விமர்சனம் செய்தால் உள்ளடி வேலை செய்வதாக அர்த்தம்.

    கூட்டணி கட்சிகளை விமர்சனம் செய்வது தி.மு.க.விற்கு கைவந்த கலை. கூட்டணி கட்சியினருக்கு அ.தி.மு.க. என்றுமே விசுவாசமாக இருக்கும். தமிழ் நாட்டு மக்களுக்கு பாதிப்பு வருகின்ற திட்டங்களை கடுமையாக எதிர்ப்போம். தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள், யார் தோல்வி அடைவார்கள் என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள். அ.தி.மு.க.விற்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் மக்களிடம் அபரிமிதமான செல்வாக்கு உள்ளது. அதனால் 40 தொகுதிகள் மற்றும் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவோம்.

    தேர்தலில் நிற்க பணம் இல்லை என நிர்மலா சீதாராமன் கூறி இருப்பது அவருடைய சொந்த பிரச்சனை. இதுகுறித்து அவர் தான் கருத்து கூற வேண்டும். ஜனநாயக நாட்டில் யாரும் பெரியவர்கள் இல்லை, அனைவரும் சமமாக உள்ளனர். ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து தேர்தலில் போட்டியிடக்கூடிய 5 ஓ.பன்னீர்செல்வமும் தேர்தலில் நிற்க தகுதியானவர்கள்.

    அ.தி.மு.க.வில் 2 கோடி தொண்டர்களில் நானும் ஒருவன். அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது 2 கோடி அ.தி.மு.க. தொண்டர்கள் எடுத்த முடிவு. ஓ.பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.விலிருந்து நீக்க எடப்பாடி பழனிசாமி எடுத்த முடிவு அல்ல.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரதமரை எதிர்ப்பது போல் வெளியில் வீரவசனம் பேசி வருகிறார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருப்புக்குடை பிடித்தால் பிரதமர் கோபித்துக் கொள்வார் என வெள்ளைக் குடை பிடிக்கிறார். தமிழ் நாட்டில் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக அமைச்சர் உதயநிதி ஓடோடி சென்று பிரதமரை அழைத்து வருகிறார். பிரதமரிடத்தில் சரணாகதி அடைந்து விட்டு வெளியே பிரதமரை எதிர்ப்பது போல் இரட்டை விடும் போடுகிறார்கள். தேர்தலில் மிட்டா மிராசுகள் நின்ற காலம் போய் சாமானிய தொண்டனும் போட்டியிடலாம் என்கிற நிலை உருவாகி இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    • பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் நடந்த விழாவில், ரம்யாவுக்கு அமைச்சர் சிவசங்கர் பணிநியமன ஆணையை வழங்கினார்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தற்போது வேலை கிடைத்துள்ளது.

    மதுரை:

    மதுரை கோ.புதூர் லூர்து நகரை சேர்ந்தவர் பாலாஜி (வயது 44). கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்து கழகத்தில், மதுரை உலகனேரி கிளையில் டிரைவராக பணியாற்றி வந்தார். கொரோனா காலத்தின்போது அவர் பணியில் ஈடுபட்டார். அதில், அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது இழப்பால், போதிய வருமானமின்றி அவரது மனைவி ரம்யா (38) மற்றும் மகள் ராகவி (14) ஆகியோர் செய்வதறியாது திகைத்தனர்.

    அந்த சமயத்தில், கருணை அடிப்படையில் தனக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும் எனக் கூறி ரம்யா போக்குவரத்து கழகத்தில் விண்ணப்பித்தார். தன்னுடைய நிலையை விளக்கி கூறி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், கருணை அடிப்படையில் பணி வழங்ககோரி விண்ணப்பம் செய்தார். இதனை தொடர்ந்து அவரது மனு குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்.

    அதன் அடிப்படையில், அவரது கல்வி தகுதிக்கு ஏற்ப உடனடியாக பணி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சரும் பரிந்துரைத்தார். இதனை அடுத்து நேர்முக தேர்வு நடத்தப்பட்டு, அவரது கல்வி தகுதிக்கு ஏற்ப கண்டக்டர் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    கடந்த 14-ந்தேதி பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் நடந்த விழாவில், ரம்யாவுக்கு அமைச்சர் சிவசங்கர் பணிநியமன ஆணையை வழங்கினார். அதன்பின்னர், மதுரை வந்த ரம்யா, மதுரை உலகனேரில் உள்ள தன் கணவர் பணிபுரிந்த அதேகிளையில் கண்டக்டராக பொறுப்பேற்றார். அவருக்கு மதுரை-ராமநாதபுரம் செல்லும் பஸ்சில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த பணியை அவர் திறம்பட செய்து, மக்களின் நன்மதிப்பை பெற்று வருகிறார். அரசு பஸ்சில் பெண் கண்டக்டரா என ஆச்சரியப்படுத்தும் அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    இதுகுறித்து ரம்யா கூறியதாவது:-

    கணவர் இறந்த பிறகு குடும்பம் நடத்துவதற்கே மிகவும் சிரமப்பட்டேன். இதற்கு முன்பு தனியார் ஆஸ்பத்திரியில் பணி செய்தேன். இருப்பினும் அந்த சம்பளத்தை வைத்து குடும்பத்தை நடத்த முடியவில்லை. அதனால், வாரிசு வேலை கிடைக்குமா? என முயற்சித்தேன். 11-ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறேன். மேலும் டிரைவர் வேலையை தவிர எந்த வேலை கொடுத்தாலும் செய்ய தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தேன்.

    அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தற்போது வேலை கிடைத்துள்ளது. 10 நாட்கள் பயிற்சியை முடித்து தற்போது பணியை தொடங்கி இருக்கிறேன். பெண் கண்டக்டர் என்பதால் எல்லோரும் என்னை வித்தியாசமாகவும், பெருமையாகவும் பார்க்கிறார்கள்.

    பெண்களால் எல்லா துறையிலும் சாதிக்க முடியும் என நம்புகிறேன். எந்த சிரமங்கள் இருந்தாலும், என் பணியை சிறப்பாக செய்வேன் என்ற மன தைரியம் உள்ளது. உடன் வேலை செய்பவர்களும் ஆதரவு தருகிறார்கள் என்றார். 

    • மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரருக்கு வரவேற்பு நிகழ்ச்சி.
    • நாளை கிரிவலப்பாதையில் தேரோட்டம் நடக்கிறது.

    திருப்பரங்குன்றம்:

    மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் 12 மாதங்களும் திருவிழா சிறப்பாக நடைபெறும். இதில் முத்தாய்ப்பாக சித்திரை மாதத்தில் நடைபெறும் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபோகம், திருத்தேரோட்டம் பிரசித்தி பெற்றதாகும்.

    தங்கை மீனாட்சியின் திருக்கல்யாணத்தை காண மதுரைக்கு வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு உள்ளிட்ட பல் வேறு நிகழ்வுகள் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் வேறு எந்த ஸ்தலங் களிலும் இல்லாத சிறப்பாக தாய், தந்தையரின் திருமண கோலத்தை காண்பதற்காக மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் நடைபெறும் திருக்கல்யாண வைப வத்தை காண்பதற்காக திருப்பரங்குன்றத்தில் இருந்து வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தருவது வழக்கம்.

    அதேபோல் பங்குனி மாதம் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நடைபெறும் பங்குனி திருவிழாவில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருப்பரங்குன்றம் சென்று மகனான முருகன், தெய்வானையின் திருமணத்தை நடத்தி வைத்து கோவிலுக்கு திரும்புவது தொன்று தொட்டு நடந்து வருகிறது.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படைவீடாக போற்றப்படும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி பெருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்ற வருகிறது. விழாவினை முன்னிட்டு தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    விழாவில் நேற்று இரவு பட்டாபிஷேகம் நடைபெற்றது. அப்போது நவரத்தினங்கள் பதித்த செங்கோல் மற்றும் சேவல் கொடி வழங்கி வேத மந்திரங்கள் முழங்க சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடை பெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதற்காக மதுரையில் இருந்து பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர் மீனாட்சியம்மன் ஆகியோர் இன்று காலை சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி சிம்மானசனத்தில் புறப்பட்டு வந்தனர். சுவாமிகளை பசுமலையை அடுத்த மூலக்கரை அருகே உள்ள சந்திப்பு மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதனையடுத்து கோவில் ஆறுகால் மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மன் திருமண சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்கள். அங்கு மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்கள். அதேநேரம் பெண்கள் புதிதாக தங்களது தாலிக்கயிறு மாற்றிக் கொண்டனர்.

    பின்னர் திருக்கல்யாண விழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட் டது. விழாவின் சிகர நிகழ்ச் சியாக நாளை காலை 6.00 மணி அளவில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளுவார். பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரில் கிரிவல பாதை வழியாக சுப்பிரம ணிய சுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப் பார்.

    விழாவினை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் திருப்பரங்குன்றம் கோவிலில் வந்து தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள்.

    • மதுரை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.திமு.க. வேட்பாளர் சரவணனின் அறிமுகம் மற்றும் பிரசாரம் கூட்டம் நடைபெற்றது.
    • செல்லூர் ராஜூவின் பேச்சை கேட்டு கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.

    மதுரை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அடுத்த மாதம் 19-ந்தேதி நடைபெறும் தேர்தலுக்காக பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தல் பிரசாரத்துக்கு இன்னும் 21 நாட்களே உள்ள நிலையில் தலைவர்கள் கட்சி, கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகின்றனர்.

    அந்த வகையில், மதுரை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.திமு.க. வேட்பாளர் சரவணனின் அறிமுகம் மற்றும் பிரசாரம் கூட்டம் செல்லூரில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, "நான் பேசும்போது யாராவது பாதியில் எழுந்து போனால் ரத்தம் கக்கி சாவீங்க" என்று கூறியதால் கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.

    மேலும் செல்லூர் ராஜூ கூறியதாவது:- கூட்டத்தில் பேச்சை ஆரம்பிக்க போவதால் நீண்ட நேரம் அமர்ந்து உள்ளவர்கள் எழுந்து போவது என்றால் போகலாம். இங்க இருந்தா பேசக்கூடாது. இடையில் எழுந்திருக்க கூடாது. அப்படி இருக்கிறங்க உட்காருங்கள். அப்படி இல்லன்னா ரத்தம் கக்கி செத்துருவீங்க. நான் மந்திரம் போட்டு வந்துருக்க. நான் ஆலோசனை கூட்டத்தில் பேசும்போது யாராவது எழுந்திருச்சி போனா அவங்க வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி ரத்தம் கக்கி சாவாங்க...னு சொல்லிட்டு வந்துருக்கேன் என்று பேசினார்.

    செல்லூர் ராஜூவின் பேச்சை கேட்டு கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.

    • மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தின் சொகுசு கார் ஒன்று கடந்த 4 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
    • மெட்டல் டிடெக்டர்கள் மூலமாக சோதனை நடத்தப்பட்ட நிலையில் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்தனர்.

    மதுரை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் மாதம் 19-ந்தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில் இந்த சோதனை மேற்கொள்ளப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை தொடங்கி நகர சாலைகள் வரை சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணிக்கும் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் நிறுத்தி இந்த அதிரடி சோதனையை நடத்துகிறார்கள்.

    இந்தநிலையில் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தின் சொகுசு கார் ஒன்று கடந்த 4 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. முதலில் இதனை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனாலும் அந்த காரை எடுக்காத நிலையில் வாகனத்திற்கான பதிவு எண் உள்ளிட்டவைகள் இல்லாமல் இருப்பதால் சந்தேகம் வலுத்தது.

    அதன் அடிப்படையில் முதற்கட்டமாக காவல்துறையினர் 4 நாட்களாக நின்று கொண்டிருந்த காரை தீவிர விசாரணை செய்தனர். மேலும் மெட்டல் டிடெக்டர்கள் மூலமாக சோதனை நடத்தப்பட்ட நிலையில் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்தனர்.

    மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று மாலையுடன் நிறைவு பெறும் நிலையில் 4 நாட்களாக மர்ம கார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அன்னதானப் பணியின் அவசியத்தை உணர்ந்த பலரும் தாமாக முன்வந்து தங்களால் இயன்ற உதவிகளைத் தந்து வருவதாகவும் தெரிவிக்கிறார்.
    • நெல்லையில் பிறந்தாலும் மதுரையில் மையம்கொண்டு கடந்த 20 ஆண்டுகளாக மக்கள் பணியே மகேசன் பணி எனச் செயல்பட்டு வருகிறார்.

    மதுரையில் ஆதரவற்றவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பசியாற்றும் பணியினை மிகச் சிறப்பாகச் செய்து வருகிறார் மதுரையைச் சேர்ந்த நெல்லை பாலு.

    மதுரைத் தெருக்களில் உள்ள ஆதரவற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோர்களுக்கு ஒருவேளை உணவாவது வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் மதுரையின் அட்சயப் பாத்திரம் என்ற தன்னார்வ அமைப்பை ஏற்படுத்தி, கடந்த 1050 நாட்களுக்கு மேலாக அறுசுவை மதிய உணவை உயர்தரத்துடன் வழங்கி வருகிறார் அட்சயப் பாத்திரத்தின் நிறுவனரான நெல்லைபாலு.

    விடாது மழை பெய்தாலும், கடுமையான வெயில் காய்ந்தாலும் கூட மதிய உணவு வழங்குவதைத் தொடர்ந்து செய்து வருகிறார் இவர். தன்னலம் கருதாது இவர் ஆற்றிவரும் அன்னதானப் பணியின் அவசியத்தை உணர்ந்த பலரும் தாமாக முன்வந்து தங்களால் இயன்ற உதவிகளைத் தந்து வருவதாகவும் தெரிவிக்கிறார்.

    சேவையில் சிறந்த சேவை அன்னதானம். அதில் முழுமையாகப் பங்கெடுக்க முடியாதவர்கள் சில பங்களிப்புகளின் மூலம் உதவி செய்வது உன்னதமான பணி. அதில் விருப்பமுள்ள பலர் கலந்துகொள்கிறார்கள். அதனால் இந்தப் பணியை மேலும் மேலும் சிறப்பாகச் செய்யத் தூண்டுகோலாக இருக்கிறது என்கிறார் பாலு .


    நெல்லையில் பிறந்தாலும் மதுரையில் மையம்கொண்டு கடந்த 20 ஆண்டுகளாக மக்கள் பணியே மகேசன் பணி எனச் செயல்பட்டு வருகிறார். கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் மகாகவி பாரதியின் மீதான பற்றால் பாரதி யுவ கேந்திரா என்கிற அமைப்பை ஏற்படுத்தி பார்வையற்ற 250 மாற்றுத்திறனாளிகளுக்குப் பல ஆண்டுகளாக மாதந்தோறும் 10 கிலோ அரிசி வழங்கி வருகிறார்.

    காஞ்சி ஸ்ரீமகா பெரியவரின் ஜென்ம நட்சத்திரமான அனுஷத்தின் பெயரால் அனுஷத்தின் அனுகிரகம் என்கிற புனித அமைப்பை நிறுவி ஆன்மிகம் தழைத்தோங்க அரிய பணிகளைச் செய்து வருகிறார்.

    அதேபோல் மாதந்தோறும் அனுஷநட்சத்திர நாளில் ஸ்ரீமஹா பெரியவரின் அருமை பெருமைகளைக் கூற ஆன்றோர்களை அழைத்துவந்து சிறப்புச் சொற்பொழிவாற்றச் செய்து செவிக்கு விருந்து படைக்கிறார். அந்நாளில் ஸ்ரீமஹா பெரியவா விக்ரஹம் மற்றும் வெள்ளிப் பாதுகைக்கு அபிஷேக ஆராதனை மற்றும் புஷ்ப அலங்காரம் செய்து அனைவரும் அந்த மகானின் ஆசி பெற்று வாழ்வில் வளம் பெறச் செய்கிறார்.

    மதுரையின் அட்சய பாத்திரத்தின் மூலம் ஆதரவற்றோருக்கு மூன்று வேளையும் உணவு வழங்க விரும்புகிறேன். அன்பர்களின் நல்லாதரவுக்காகக்


    காத்துக்கொண்டிருக்கிறேன் என்கிறார் அட்சயப் பாத்திரம் நிறுவனர் நெல்லைபாலு.

    செல்: 94426 30815 (G-pay).

    MADURAIYIN ATCHAYA PAATHIRAM TRUST என்ற பெயரில் செக் அனுப்பிட வேண்டுகிறோம்.

    அத்துடன் தங்களது முகவரி மற்றும் ஆதார், பான் ஜெராக்ஸ் அனுப்பிட வேண்டுகிறோம்.



    • ஒ.பி.எஸ். மூன்று முறை முதல்வராக இருந்தவர், இன்று கட்சியின் வேட்டியை கூட கட்ட முடியவில்லை.
    • அம்மாவின் ஆன்மா இந்த தேர்தல் முடிந்த பின் அரசியலை விட்டே போகும் நிலைக்கு செல்லும் நிலையை உருவாக்கும்.

    திருமங்கலம்:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஆர்.பி.உதயகுமார் உசிலம் பட்டியில் இன்று நடந்த கூட்டத்தில் பேசியதாவது:-

    தாய்மார்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் என்ற அ.தி.மு. க.வின் தேர்தல் அறிக்கை இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. நீங்கள் அதே அறிவிப்பை வெளியிட்ட போது எந்த இடத்திலும் பேசப்படவில்லை. ஏனென்றால் பொய்யான வாக்குறுதியை அளிப்பார்கள் என மக்கள் நம்பவில்லை. ஆனால் அ.தி.மு.க. அதே அறிவிப்பை கொடுக்கும் போது பேசப்படுகிறது.

    ஒ.பி.எஸ். மூன்று முறை முதல்வராக இருந்தவர், இன்று கட்சியின் வேட்டியை கூட கட்ட முடியவில்லை, கட்சி பெயரை பயன்படுத்த முடியவில்லை. என்ன பாவம், என்ன துரோகம் செய்துள்ளார் என யோசித்து பார்த்தபோது அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அப்போது முதல்வராக இருந்தவர் அதிகாரத்தை கையில் வைத்திருந்தவர் வெளிநாட்டிற்கு கூட கொண்டு சென்று காப்பாற்றி இருக்கலாம். ஆனால் மவுன சாமியாராக இருந்துவிட்டார்.

    அதனாலேயே பாவம் ஏற்பட்டு அம்மாவின் ஆன்மா வஞ்சிக்கிறதோ என தெரிகிறது. எம்.ஜி.ஆர்., அம்மா என முதல்வராக இருந்த யாருக்கும் இந்த நிலை இல்லை. இன்று வீதியில் நின்று ஒரே ஒரு சீட்டுக்காக சென்றிருக்கிறார். சின்னத்திற்காக அது வேண்டும், இது வேண்டும் என கேட்கிறார்.

    அம்மா உயிர் பறிபோக நீங்கள் தான் காரணம். அம்மாவின் ஆன்மா இந்த தேர்தல் முடிந்த பின் அரசியலை விட்டே போகும் நிலைக்கு செல்லும் நிலையை உருவாக்கும். ஜெயலலிதாவின் ஆன்மா ஓ.பி.எஸ்.சை வஞ்சிக்கிறது. அமைச்சர் மூர்த்திக்கு பயம் வந்துவிட்டது. இந்த தேர்தலில் தோற்றால் அமைச்சர் பதவியையும், மாவட்ட செயலாளர் பதவியையும் ராஜினாமா செய்கிறேன் என சொல்கிறார். தேர்தல் ரிசல்ட் வரை வேண்டாம் நாளைக்கே ராஜினாமா செய்யுங்கள். நீங்கள் வெற்றி பெற போவது இல்லை. துரோகம் செய்தவர்களுக்கு தக்க பாடத்தை தொண்டர்கள் காட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பொய் சொல்வதை முதலில் நிறுத்துங்கள் என்றும் நிர்வாகிகளை கடிந்து கொண்டார்.
    • தேனி தொகுதியில் போட்டி கடுமையானதாக இருக்கும் என்பது கட்சியினர் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ள நிலையில் மாநிலம் முழுவதும் பிரசாரங்களும்களை கட்டி வருகிறது.

    2019ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 38 இடங்களில் அபார வெற்றி பெற்றது. மீதமுள்ள ஒரு தொகுதி தேனி ஆகும்.

    இந்த தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட்டார்.

    2019ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ரவீந்திரநாத் 4,99,354 வாக்குகள் பெற்றார். காங்கிரசின் இளங்கோவன் 4,23,035 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் 76,319 வாக்குகள் வித்தியாசத்தில் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார்.

    இந்நிலையில் நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் திமுக சார்பில் தங்க தமிழ்செல்வனும், அதிமுக சார்பில் நாராயணசாமியும், அமமுக சார்பில் டிடிவி தினகரனும், நாம் தமிழர் சார்பில் மதன் ஜெயபாலும் வேட்பாளர்களாக களம் இறங்குகிறார்கள். இதை தொடர்ந்து இந்த முறையும் தேனி தொகுதியில் போட்டி கடுமையானதாக இருக்கும் என்பது கட்சியினர் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் மதுரை அலங்காநல்லூரில் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி தி.முக. நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேசியதாவது,

    திமுக பாராளுமன்ற தேர்தலில் தேனி மாவட்ட திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் வெற்றி பெற வேண்டும் என்றும், அதிகப்படியான வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெறவில்லை என்றால் தனது பதவியை அடுத்த நாளே ராஜினாமா செய்கிறேன் என்று கூறினார்.

    நிர்வாகிகள் கூட்டத்தில் வெளியில் இருந்து பெண்களை அழைத்து வந்ததை சுட்டிக்காட்டி பேசிய அமைச்சர் மூர்த்தி செல்போனில் அரசியல் தேவையில்லை என்றும், மக்களை நேரில் சந்தியுங்கள் என்றும், செல்போனில் அரசியல் செய்தால் எப்படி உருப்படும் என்றும், பொய் சொல்வதை முதலில் நிறுத்துங்கள் என்றும் நிர்வாகிகளை கடிந்து கொண்டார்.

    • சிவன் கோபமுற்று நெற்றிக் கண்ணைத் திறந்து மன்மதனை எரித்தார்.
    • பங்குனி மாதங்களில் காமன் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    தொண்டி:

    உலக நன்மைக்காக கைலாயத்தில் சிவபெருமான் கடும் தவம் இருந்தார். தேவலோகத்தில் தலைவனாக இருப்பவருக்கும், தேவர்களுக்கும் இந்த தவத்தால் நன்மை கிட்டாமல் போகலாம் என்று எண்ணிய இந்திரன் முதலானோர் சிவனின் தவத்தை கலைக்க வேண்டும் என்று பலரையும் நாடினர். ஆனால் சிவனின் கோபத்திற்கு பயந்து யாரும் முன்வரவில்லை.

    இந்நிலையில் மன்மதனின் உதவியை நாடிய தேவர்கள், அவரது மனதை மாற்றி சிவனுக்குள் புகுந்து காம எண்ணத்தை தூண்டினால் தவம் கலைந்து விடும் என கூறினர். அதற்கு சம்மதித்த மன்மதனும் சிவனுக்கு அருகில் சென்று காம பானத்தை தொடுத்தான். தவத்தில் இருந்த சிவன் கோபமுற்று நெற்றிக் கண்ணைத் திறந்து மன்மதனை எரித்தார்.

    இதனை அறிந்த மன்மதனின் மனைவியான ரதி தேவி சிவபெருமானிடம், தேவேந்திரனின் தூண்டுதலாலேயே மன்மதன் தங்களது தவத்தில் இடையூறு செய்தார். அவர் மீது எந்த தவறும் இல்லை. இந்த செயலால் நான் கணவனை இழந்து வாழ வேண்டுமா? என்று அழுது புலம்பி முறையிட்டாள். ரதிதேவியின் வேண்டுதலை ஏற்ற சிவபெருமான், அவரிடம் உன் கண்ணுக்கு மட்டுமே மன்மதன் தெரிவார் என்று கூறி மன்மதனின் உயிரை மீட்டு சாப நிவர்த்தி செய்தார்.

    இந்த புராண சம்ப வத்தை நினைவு கூறும் வகையில் சுமார் 160 ஆண்டுகளுக்கு மேலாக தொண்டியில் உள்ள வெள்ளாளர் தெரு சொசைட்டியினரால் மாசி, பங்குனி மாதங்களில் காமன் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டும் காமன் பண்டிகையை யொட்டி காமன் மேடையில் காப்புக்கட்டுதல் நடந்தது. தினமும் மண்டகப்படி தாரர்களால் பூஜைகள் நடந்தது.

    அதனைத் தொடர்ந்து மன்மதனை எரிக்கும் நிகழ்வாக காமன் மேடையில் எரியூட்டப்பட்டு தகனம் நடந்தது. முன்னதாக பெண்கள் மாவிளக்கு வழிபாடு செய்து பக்தர்களுக்கு மாவு உருண்டையை பிரசாதமாக வழங்கினர். மேலும் குழந்தை இல்லாத தம்பதியர் வேண்டுதல் நிறைவேறிய பின் கரும்பு தொட்டிலில் குழந்தையை வைத்து காமன் மேடையைச் சுற்றி வந்து நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.

    காம தகன ஏற்பாடுகளை தலைவர் பிச்சுமணி, பொருளாளர் சுந்தரமூர்த்தி, உறுப்பினர்கள் விடுதலை முரசு, பட்டாபிராமன், ராஜகோபால், ராமநாதன், ராம மூர்த்தி, நாகராஜ், ராஜாராமன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ளது
    • எனக்குத் தெரிந்த தமிழ்நாட்டில் நயினார் நாகேந்திரன் மட்டுமே வெற்றி பெறுவார்

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ளது. பாஜக கட்சி, பாமக , தமாகா, அமமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து வரும் தேர்தலை சந்திக்கிறது.

    மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக முன்னாள் எம்பி சுப்பிரமணிய சாமி, "பாஜக கேட்டால் பிரசாரத்திற்கு செல்வேன். ஆனால் என்னிடம் கேட்கவில்லை. மோடி பிரதமராக மீண்டும் வரக்கூடாது. அவர் தோற்கடிக்கப்பட வேண்டும்.

    எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டில் நயினார் நாகேந்திரன் மட்டுமே வெற்றி பெறுவார். மற்றவர்கள் பற்றி எனக்கு தெரியாது, தெரிந்து கண்டு பதில் சொல்கிறேன்.

    இந்தியா எல்லையில் சீன ஆக்கிரமிப்பு குறித்து பிரதமர் மோடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொருளாதார ரீதியாக பாஜக அரசியல் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. விளம்பரத்தில் மட்டுமே எல்லாம் செய்து விட்டதாக பாஜக சொல்கிறது" என்று அவர் தெரிவித்தார். 

    • விருதுநகரில் பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்
    • மதுரையில் பேசிய சரத்குமார், நான் போட்டியிட்டாலும் ஒன்றுதான், ராதிகா போட்டியிட்டாலும் ஒன்றுதான்

    பாஜகவுடன் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கூட்டணியில் இணைந்தது. ஆனால், அடுத்த சில நாட்களில் சமகவை பாஜகவுடன் இணைப்பதாக சரத்குமார் அதிரடியாக அறிவித்தார். மூன்றாவது முறை மோடியை பிரதமராக்குவதே லட்சியம் என்று அவர் சூளுரைத்துள்ளார்.

    இதனை தொடர்ந்து வரும் பாராளுமன்ற தேர்தலில் விருதுநகரில் பாஜக சார்பில் சரத்குமாரின் மனைவியும் நடிகையுமான ராதிகா சரத்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

    இங்கு திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனும் களம் காண்கிறார்கள். இதனால் விருதுநகரில் மும்முனை போட்டி உருவாகியுள்ளது.

    மதுரை அடுத்த திருப்பரங்குன்றம் கோயிலில் இன்று வழிபாடு நடத்திய பிறகு ராதிகா சரத்குமார் தனது பரப்புரையைத் தொடங்கினார். அப்போது பேசிய ராதிகா, "வேலைவாய்ப்பு, இருப்பிடம் மற்றும் உணவுத் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாகவே நாங்கள் செயல்படுவோம். பிரதமர் மோடி நாட்டுக்கு எத்தனையோ நல்ல விஷயங்களை செய்துள்ளார். அவற்றில் பல விஷயங்கள் இன்னும் தமிழ்நாட்டுக்கு வந்து சேரவில்லை. ஆகவே, மோடியின் திட்டங்கள் தமிழ்நாட்டுக்கு வர நாங்கள் பாடுபடுவோம்" என்று தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், நான் போட்டியிட்டாலும் ஒன்றுதான், ராதிகா போட்டியிட்டாலும் ஒன்றுதான். சூரியவம்சம் படத்தில் கலெக்டர் ஆக்கியது போல எனது மனைவி ராதிகாவை எம்.பி ஆக்குவேன். காமராஜர் பிறந்த மண்ணில் என் மனைவி போட்டியிடுவது பெருமை, மோடி 3வது முறையாக பிரதமர் ஆகவேண்டும் என சரத்குமார் தெரிவித்துள்ளார்.

    ×