search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    வாரவிடுமுறை தினத்தை முன்னிட்டு கும்பகோணம் கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கம்
    X

    வாரவிடுமுறை தினத்தை முன்னிட்டு கும்பகோணம் கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கம்

    • சென்னை தடத்தில் 200 சிறப்பு பஸ்களும், பிற தடங்களில் 150 சிறப்பு பஸ்களும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    தஞ்சாவூர்:

    கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பொன்முடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் நாளை, நாளை மறுநாள் (சனி, ஞாயிறு) வார விடுமுறையையொட்டி திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கும் 295 பஸ்கள் இயக்கப்படுகிறது.

    திருச்சியில் இருந்து கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய இடங்களுக்கும், கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களில் இருந்து திருச்சிக்கும் 175 பஸ்கள் கூடுதலாக இயக்கப்படும்.

    அதேபோன்று, விடுமுறைக்கு பின் பயணிகள் மீண்டும் அவரவர் ஊர்களுக்கு திரும்ப செல்ல 29, 30 ஆகிய தேதிகளில் (ஞாயிறு, திங்கட்கிழமை) சென்னை தடத்தில் 200 சிறப்பு பஸ்களும், பிற தடங்களில் 150 சிறப்பு பஸ்களும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை காரணமாக பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×