search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    விஜய் கட்சி மாநாடு பணிகள் 90 சதவீதம் நிறைவு- பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஐ.ஜி. ஆலோசனை
    X

    விஜய் - கட்சி மாநாட்டு திடலில் கொடிகள் கட்டப்பட்டுள்ளதை காணலாம்.

    விஜய் கட்சி மாநாடு பணிகள் 90 சதவீதம் நிறைவு- பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஐ.ஜி. ஆலோசனை

    • மாநாட்டு திடலில் 900 கொடி கம்பங்கள் நடும் பணி நடைபெற்று வருகிறது.
    • போலீசார் மட்டும் அவ்வப்போது மாநாட்டு திடலினுள் சென்று பணிகளை பார்வையிட்டு வருகின்றனர்.

    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழக மாநாட்டு பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து, இறுதிகட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் வருகிற 27-ந் தேதி தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெறவுள்ளது

    மாநாட்டிற்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், மாநாட்டு ஏற்பாடுகளில் ஒப்பந்ததாரர்கள் பம்பரமாக சுழன்று இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர். நேற்று மாநாட்டு முகப்பு வாயிலில் இருந்து மாநாட்டு திடல் வரை வழியில் இருபுறமும் 35 அடி உயரத்தில் 500 கொடி கம்பங்கள் நட்டு அதில் 15 அடி நீளம், 3 அடி அகலம் கொண்ட வெல்வெட் துணியிலான கட்சி கொடியை பறக்க விட்டுள்ளனர்.

    இதேபோன்று, மாநாட்டு திடலில் 900 கொடி கம்பங்கள் நடும் பணி நடைபெற்று வருகிறது. மாநாட்டு பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். மாநாட்டு பணிகளை பார்வையிட வரும் கட்சி மற்றும் தொண்டர்கள் பொதுமக்களை நுழைவு வாயிலில் உள்ள தனியார் நிறுவன பவுன்சர்கள், உள்ளே விட மறுத்து திருப்பி அனுப்பி வருகின்றனர். போலீசார் மட்டும் அவ்வப்போது மாநாட்டு திடலினுள் சென்று பணிகளை பார்வையிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையோரம் மாநாடு நடத்த அனுமதியும், சாலை பாதுகாப்பு மேம்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்க வேண்டி கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், 'நகாய்' திட்ட இயக்குனர் வரதராஜனிடம் கேட்டுக் கொண்டார். அதன்பேரில், சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை டோல்பிளாசா மேலாளர் சதீஷ்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தண்டபாணி, பாதுகாப்பு மேலாளர் மனோஜ்குமார் ஆகியோர் நேற்று மாநாட்டு திடலை பார்வையிட்டு சென்றனர்.

    இந்நிலையில், நேற்று இரவு விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ரா கார்க், டி.ஐ.ஜி., திஷா மித்தல் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இதில் விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு தீபக்சிவாச், கடலுார் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு ரஜத் சதுர்வேதி, விழுப்புரம் ஏ.டி.எஸ்.பி.க்கள் திருமால், தினகரன் மற்றும் டி.எஸ்.பி.க்கள் பங்கேற்றனர். த.வெ.க., மாநாட்டிற்கான இடவசதிகள், பார்க்கிங் வசதிகள், போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில், கூட்டத்தை கண்காணித்தல், நெரிசல் ஏற்பட்டால், மாநாடு தொடங்கியதும் தேசிய நெடுஞ்சாலையில், விழுப்புரம், திண்டிவனத்தில் வாகனங்களை திருப்பி, மாற்று சாலையில் அனுப்புவது போன்றவை குறித்து ஆலோசனை நடத்தினர்.

    Next Story
    ×