search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முறைகேடாக விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சிய விவசாயி மீது வழக்கு
    X

    முறைகேடாக விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சிய விவசாயி மீது வழக்கு

    • கடந்த 2 வருடங்களாக அந்தப் பகுதிகளுக்கு போதுமான குடிநீர் கிடைக்கவில்லை.
    • சென்னிமலை போலீசார் பெரியசாமி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே முருங்கத்தொழுவு ஊராட்சிக்குட்பட்ட மொட்டையன் காட்டுப்புதூர் பகுதிக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் பைப்லைன் அமைத்து சுமார் 13 கிராமங்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது.

    ஆனால் கடந்த 2 வருடங்களாக அந்தப் பகுதிகளுக்கு போதுமான குடிநீர் கிடைக்கவில்லை. இதனால் ஊராட்சி நிர்வாகம் சார்பில் லாரிகள் மூலம் பொது மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் பைப்லைன் மூலம் போதுமான தண்ணீர் அனுப்பப்பட்டும் மொட்டையன் காட்டுபுதூர் பகுதிக்கு ஏன்? சரியாக தண்ணீர் கிடைப்பதில்லை என்பதற்காக முருங்கத்தொழுவு ஊராட்சி நிர்வாகத்தினர் பைப் லைனை ஆய்வு செய்தனர்.

    அப்போது முருங்கத் தொழுவை சேர்ந்த பெரியசாமி என்ற விவசாயி கடந்த 2 ஆண்டுகளாக தனது விவசாய நிலத்திற்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டக் குழாயை உடைத்து முறைகேடாக தண்ணீர் கொண்டு சென்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து முருங்கத் தொழுவு ஊராட்சித் தலைவர் பிரபா தமிழ்செல்வன் சென்னிமலை போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் சென்னிமலை போலீசார் பெரியசாமி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக கொண்டு செல்லப்பட்ட கூட்டு குடிநீர் திட்ட குழாயை உடைத்து முறைகேடாக விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×