என் மலர்
தமிழ்நாடு
- காங்கிரஸ் அரசு பொறுப்புக்கு வந்தவுடன் மேகதாது அணை கட்டும் பணியை தொடங்கப் போவதாக கூறி இருக்கிறது.
- காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டிற்கு சொட்டுநீர்கூட காவிரியில் வராது.
சென்னை:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கர்நாடக மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, மீண்டும் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு கடந்த மாதம் பொறுப்பு ஏற்றது. கர்நாடக மாநில துணை முதல்வரான டி.கே.சிவக்குமார், காங்கிரஸ் கட்சி எதிர்கட்சி வரிசையில் இருந்தபோது, மேகதாது அணை கட்ட வலியுறுத்தி பெங்களூருவில் இருந்து 10.01.2022-ல் நடை பயணம் தொடங்கி, 10 நாட்கள் பல ஊர்கள் வழியாகச் சென்று 19.01.2022 அன்று மேகதாதுவில் ஆர்ப்பாட்டமும் நடத்தினார்.
தற்போது மீண்டும் காங்கிரஸ் அரசு பொறுப்புக்கு வந்தவுடன், மேகதாது அணை கட்டும் பணியை தொடங்கப் போவதாக கூறி இருக்கிறது. நீர்ப்பாசனத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார், மேகதாது அணை கட்டும் பணியை தொடங்குவோம். எந்த நிலையிலும் பின்வாங்க மாட்டோம் என்று கூறி இருப்பது கண்டனத்துக்கு உரியது.
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டிற்கு சொட்டுநீர்கூட காவிரியில் வராது. உச்சநீதிமன்றம் பிப்ரவரி 16, 2018-ல் அளித்தத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய 177.25 டி.எம்.சி. நீர், கானல் நீராகவே போய்விடும் ஆபத்துதான் விளையும்.
எனவே ஒன்றிய பா.ஜ.க. அரசு மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி அளிக்கவே கூடாது. தமிழ்நாட்டின் மரபு உரிமையை கர்நாடக மாநிலம் பறித்துக் கொள்வதை ஏற்கவே முடியாது.
எனவே, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை தமிழ்நாடு அரசு விரைவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- சென்னை கடற்கரை- எழும்பூர் 4-வது புதிய ரெயில் பாதை முக்கியமானதாக உள்ளது. இதற்கான பணியை விரைவில் தொடங்க உள்ளோம்.
- பறக்கும் ரெயில் சேப்பாக்கத்தில் நிறுத்தப்பட்டால் அங்கிருந்து சென்ட்ரல், பாரிமுனை மற்றும் கடற்கரை பகுதிகளுக்கு செல்வதில் சிரமத்தை சந்திக்க நேரிடும்.
சென்னை:
சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே 4.3 கி.மீ. தொலைவுக்கு 4-வது புதிய பாதை அமைக்கும் திட்டத்துக்கு நடப்பாண்டில் மத்திய பட்ஜெட்டில் ரூ.96.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த புதிய ரெயில் பாதை திட்டப் பணிகளை விரைவில் தொடங்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த நிலையில் 4-வது வழித்தட பணிகளுக்காக, சென்னை கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரெயில் சேவையில் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி வேளச்சேரி - கடற்கரை இடையே இயக்கப்படும் பறக்கும் மின்சார ரெயில்கள் வரும் ஜூலை 1-ந்தேதி முதல் ஜனவரி 31-ந்தேதி வரை 7 மாதங்களுக்கு சேப்பாக்கம் வரை மட்டும் இயக்க முடிவு செய்யப்பட்டது. இதை அறிந்ததும் பறக்கும் ரெயில் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், "வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரெயில் வழித்தடம் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் பரங்கிமலையில் இருந்து இனி நேரடியாக கடற்கரை பகுதிக்கு செல்லலாம் என்று காத்திருந்தோம். 12 ஆண்டுகள் காலதாமதத்துக்கு பிறகு நேரடி ரெயில் இணைப்பை பெற இருந்தோம். பறக்கும் ரெயில் சேப்பாக்கத்தில் நிறுத்தப்பட்டால் அங்கிருந்து சென்ட்ரல், பாரிமுனை மற்றும் கடற்கரை பகுதிகளுக்கு செல்வதில் சிரமத்தை சந்திக்க நேரிடும். எனவே பறக்கும் ரெயிலை பூங்கா ரெயில் நிலையம் வரையிலாவது இயக்க வேண்டும்" என்றனர்.
இந்த நிலையில் ரெயில் பயணிக்கு பாதிப்பு இல்லாமல் பணிகளை மேற்கொள்வது மற்றும் ரெயில் சேவை வழங்குவது தொடர்பாக ரெயில்வே அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இன்னும் ஓரிரு நாளில் தெற்கு ரெயில்வே அதிகாரிகளும், மாநில போக்குவரத்து துறை அதிகாரிகளும் ஒன்று கூடி ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளனர். இது குறித்து தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
சென்னை கடற்கரை- எழும்பூர் 4-வது புதிய ரெயில் பாதை முக்கியமானதாக உள்ளது. இதற்கான பணியை விரைவில் தொடங்க உள்ளோம். பயணிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லாமல், வேளச்சேரி பறக்கும் ரெயில்களை சிந்தாதிரிப்பேட்டை அல்லது பூங்கா வரை இயக்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறோம்.
பூங்கா வரை பறக்கும் ரெயில் இயக்கப்பட்டால் பயணிகள் தாம்பரம்-கடற்கரை இடையே இயக்கப்படும் மின்சார ரெயில்களில் ஏறி தாங்கள் போக விரும்பும் இடத்துக்கு செல்ல வசதியாக இருக்கும். எனவே பறக்கும் ரெயிலை பூங்கா வரை இயக்குவது பற்றியே ஆலோசித்து வருகிறோம். பயணிகளின் வசதி கருதி இதற்கான முடிவு விரைவில் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- பலத்த காயமடைந்த இருவரும் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
- மூளைச்சாவு அடைந்த முத்துக்குமரனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க பெற்றோர் முன் வந்தனர்.
சென்னை:
சென்னை கொளத்தூரில் வசித்து வருபவர் மாரிமுத்து. இவரது மனைவி மாலா. இவர்களுக்கு 5 குழந்தைகள். மாரிமுத்துவின் சொந்த ஊர் காஞ்சீபுரம் மாவட்டம் பஞ்சந்திருத்தி இருளர் குடியிருப்பு ஆகும்.
மாரிமுத்து தனது மூத்த மகன் முத்துக்குமரன்(13) என்பவனை திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூரில் உள்ள உறவினர் வீட்டில் விட்டு விட்டு மற்ற 4 குழந்தைகளுடன் சென்னை யில் வசித்து வந்தார். கடந்த 27-ந்தேதி முத்துக்குமரன், தனது உறவினரின் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு 12 வயது நண்பனுடன் வெளியில் சென்றார்.
திருப்பாச்சூர் அருகே திருப்பதி தேசிய நெடுஞ்சாலையை கடந்த போது திருத்தணி நோக்கி சென்ற கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு கடந்த 30-ந்தேதி முத்துக்குமரன் மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் கூறினார்கள். இந்த நிலையில் மூளைச்சாவு அடைந்த முத்துக்குமரனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க பெற்றோர் முன் வந்தனர். அதன்படி சிறுவனின் உடல் உறுப்புகள் மற்ற நோயாளிகளுக்கு தானமாக வழங்கப்பட்டன.
மேலும் விபத்து தொடர்பாக திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை தொடங்கும் கால கட்டத்தில் புயல் சின்னங்கள் ஏற்படுவது வழக்கம்.
- அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் புயல் உருவாவதற்கான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன.
சென்னை:
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி எடுத்து வருகிறது. மே மாதம் முடிந்துள்ள நிலையிலும் வெயிலின் தாக்கம் குறையாமலேயே உள்ளது. கோடை முடிந்து எப்போதும் ஜூன் மாத தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்குவது வழக்கம். அந்த வகையில் இன்னும் சில தினங்களில் பருவ மழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வானிலை மைய நிபுணர்கள் கணித்து உள்ளனர்.
இந்த நிலையில் அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அரபிக்கடலில் தற்போது நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியில் வருகிற 5-ந்தேதி புயலாக மாறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக தனியார் வானிலை நிபுணரான பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார். இதே போன்று வங்கக் கடலிலும் புயல் உருவாவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த புயல் இன்னும் சில தினங்களில் உருவாகும் என பிரதீப்ஜான் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை தொடங்கும் கால கட்டத்தில் இது போன்ற புயல் சின்னங்கள் ஏற்படுவது வழக்கம். அந்த வகையில்தான் அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் புயல் உருவாவதற்கான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன.
இதில் அரபிக்கடலில் தான் முதலில் புயல் உருவாகிறது. பின்னர்தான் வங்கக்கடலில் புயல் உருவாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புயல் உருவாகும் நேரத்தில் தரைகாற்று அதிகமாக வீசுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என்றும் வானிலை மைய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வருகிற 5-ந்தேதி அரபிக்கடலில் புயல் உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில் வங்கக்கடலில் 9- ந்தேதி புயல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
அரபிக்கடலில் உருவாகும் புயல் தீவிரம் அடைந்து மேற்கு இந்திய கடலோர பகுதிகளை நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கேரளா மற்றும் கர்நாடகா பகுதியை இந்த புயல் நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்க கடலில் உருவாக உள்ள புயலின் தாக்கம் பற்றி தற்போது கணிக்க முடியாது என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
- விபத்தில் தனியார் தொழிற்சாலைக்கு தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற வேன், லாரி, சரக்குவேன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதிக்கொண்டன.
- ஏற்கனவே மெட்ரோ ரெயில் பணி காரணமாக பூந்தமல்லி, கரையான் சாவடி, நசரத்பேட்டை உள்ளிட்ட இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
பூந்தமல்லி:
பூந்தமல்லி அருகே உள்ள சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். காலை மற்றும் மாலை நேரங்களில் வாகன நெரிசல் மிகுந்து இருக்கும்.
இந்த நிலையில் இன்று காலை 8.45 மணியளவில் ஏராளமான வாகனங்கள் பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் நோக்கி சென்று கொண்டு இருந்தன. அப்போது சரக்கு வேன் ஒன்று முன்னால் சென்ற வாகனத்தின் மீது மோதாமல் இருக்க வேன் டிரைவர் திடீர் பிரேக் போட்டார். இதனால் பின்னால் வந்த வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து அடுத்தடுத்து ஒன்றன்பின் ஒன்றாக மோதியது.
இந்த விபத்தில் தனியார் தொழிற்சாலைக்கு தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற வேன், லாரி, சரக்குவேன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதிக்கொண்டன. இதில் சில வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி நின்றதால் பின்னால் வந்த மற்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஸ்ரீபெரும்புதூர் நோக்கி சென்ற வாகனங்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
தகவல் அறிந்ததும் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தினர். இதன்பின்னர் வாகனங்கள் ஒவ்வொன்றாக மெதுவாக சென்றன. இந்த விபத்தால் சுமார் ஒரு மணிநேரம் பெங்களூரு நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. அதிர்ஷ்டவசமாக உயிர் பலி ஏற்படவில்லை.
ஏற்கனவே மெட்ரோ ரெயில் பணி காரணமாக பூந்தமல்லி, கரையான் சாவடி, நசரத்பேட்டை உள்ளிட்ட இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த பகுதிகளை தாண்டி வந்தாலும் பெங்களூரு நெடுஞ்சாலையில் இதுபோன்று அடிக்கடி விபத்து ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்படுவதாக வாகன ஓட்டிகள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர். போக்குவரத்து நெரிசலை குறைக்க கூடுதல் போலீசாரை பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- தனியார் விடுதியின் மேலாளர் அறையில் மின்கசிவு காரணமாக ஏசியில் பற்றிய தீ அறை முழுவதும் பரவியது.
- தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 3 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர்.
சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலையில் உள்ள தனியார் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதானல் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தனியார் விடுதியின் மேலாளர் அறையில் மின்கசிவு காரணமாக ஏசியில் பற்றிய தீ அறை முழுவதும் பரவியது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 3 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். பின்னர், பெரும் போராட்டத்திற்கு பிறகு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
- கடந்த மாதம் 1-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.
- ஆந்திராவில் அவ்வப்போது கோடை மழை பெய்து வருகிறது.
ஊத்துக்கோட்டை:
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரியாக பூண்டி ஏரி உள்ளது. இதில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.
கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திரா அரசு வருடம்தோறும் தமிழகத்திற்கு 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி, ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரை கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும்.
கடந்த மாதம் 1-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆந்திராவில் உள்ள விவசாயிகள் சாகுபடி செய்வதற்காக கிருஷ்ணா நீரை பயன்படுத்தி வந்ததால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது. வினாடிக்கு 160 கன அடி தண்ணீர் வந்தது. இந்த நிலையில் ஆந்திராவில் அவ்வப்போது கோடை மழை பெய்து வருகிறது.
மேலும் தற்போது ஆந்திர விவசாயிகள் கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் எடுப்பதை குறைத்துள்ளத்தால் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இன்று காலை வினாடிக்கு 350 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். 1.195 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 13 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
- 12-வது ஆண்டாக தமிழகம் முழுவதும் 11 இடங்களில் சுயம்வர நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.
- கூடுதல் தகவல்களுக்கு www.tndfctrust.com எனும் இணையதள முகவரியில் அணுகலாம்.
சென்னை:
தமிழகம் முழுவதும் 11 இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சுயம்வரம் நிகழச்சி நடைபெறவுள்ளது. இது குறித்து தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் கூட்டமைப்பின் அறக்கட்டளை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மாற்றுத்திறனாளிகள், ஏழைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் கூட்டமைப்பின் அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ கீதாபவன் அறக்கட்டளை இணைந்து கடந்த 11 ஆண்டுகளாக திருமணம் நடத்தி வருகிறது. 12-வது ஆண்டாக தமிழகம் முழுவதும் 11 இடங்களில் சுயம்வர நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. சுயம்வரமானது திருவாரூர் (ஜூன் 4), கடலூர் (ஜூன் 18), கோவை (ஜூன் 25), ஈரோடு (ஜூலை 2), விழுப்புரம் (ஜூலை 9), திருவண்ணாமலை (ஜூலை 15), வேலூர் (ஜூலை 23), அரியலூர் (ஜூலை 23), விருதுநகர் (ஆக.5), மதுரை (ஆக.6), சென்னை (ஆக.13) நகரங்களில் நடைபெறவுள்ளது.
இதில் தேர்வாகும் மாற்றுத்திறனாளி தம்பதிகளுக்கு செப்.9-ந் தேதி மருத்துவ கலந்தாய்வு நடத்தப்படும். அதைத் தொடர்ந்து நவ.19-ந் தேதி திருமணம் நடத்தி வைக்கப்படும். இதுகுறித்த கூடுதல் தகவல்களுக்கு www.tndfctrust.com எனும் இணையதள முகவரியில் அணுகலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தொடர்ந்து அடுத்தடுத்து ரெயில்கள் வந்ததால் நீண்ட நேரம் கேட் மூடி இருந்தது.
- ரெயில்வே கேட்டின் இருபக்கம் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
பொன்னேரி:
மீஞ்சூர் ரெயில் நிலையம் அருகே மேம்பால பணி கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக மீஞ்சூரில் இருந்து காட்டூர், தந்தை மஞ்சி, உள்ளிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ரெயில் நிலையம் அருகே உள்ள ரெயில்வே கேட்டை பயன்படுத்தி வருகிறார்கள்.
ரெயில்கள் வரும்போது கேட் மூடப்படும் நேரத்தில் வாகன ஓட்டிகள் கடும் நெரிசலில் சிக்கி தவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று இரவு 8 மணிஅளவில் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்ததை தொடர்ந்து ரெயில்வே கேட் மூடப்பட்டது. மேலும் தொடர்ந்து அடுத்தடுத்து ரெயில்கள் வந்ததால் நீண்ட நேரம் கேட் மூடி இருந்தது. இதனால் ரெயில்வே கேட்டின் இருபக்கம் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சிறிது நேரத்தில் ரெயில்வே கேட் திறந்தாலும் இருபக்கமும் இருந்த வாகனங்கள் கடந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் தவித்தனர்.
இதற்கிடையே வாகனங்கள் அனைத்தும் ரெயில்வே கேட்டை கடந்து செல்வதற்கு முன்பே சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி செல்லும் மின்சார ரெயில் வந்தது. ஆனால் கடும் வாகன நெரிசல் காரணமாக ரெயில்வே கேட்டை மூட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ரெயிலுக்கு சிக்னல் வழங்கப்படவில்லை.
இதைத்தொடர்ந்து கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற மின்சார ரெயில் நந்தியம் பாக்கத்திலும், கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னைநோக்கி சென்ற மின்சார ரெயில் மீஞ்சூர் ரெயில் நிலையத்திலும் நடுவழியில் நிறுத்தப்பட்டன.
சுமார் ½மணிநேரத்துக்கும் மேலாக மின்சார ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் ரெயில்சேவை பாதிக்கப்பட்டது.
பின்னர் ரெயில்வே போலீசார் விரைந்து வந்து இருபக்கமும் நின்ற வாகனங்களை தடுத்து நிறுத்தி ஒவ்வொன்றாக கடந்து செல்ல செய்தனர். இதன் பின்னரே ரெயில்வே கேட்டை ஊழியர்களால் மூட முடிந்தது. இதைத்தொ டர்ந்து இரவு 8.45 மணியளவில் ரெயில் சேவை சீரானது.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, ரெயில்வே மேம்பால பணி மந்தமாக நடந்து வருகிறது. இதனை விரைந்து முடித்தால்தான் இந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும். வரும் நாட்களில் பள்ளிகள் திறந்ததும் மேலும் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் என்றனர்.
- கலைவாணர் அரங்கில் கருணாநிதியின் புகைப்பட கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
- மேற்குவங்க மாநில ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி கருணாநிதியின் நூற்றாண்டு லட்சினையை வெளியிட்டார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி இன்று நூற்றாண்டு லட்சினை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்று வருகிறது.
சென்னை, கலைவாணர் அரங்கில் கருணாநிதியின் புகைப்பட கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக மகாத்மா காந்தியின் பேரனும், மேற்குவங்க முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தி பங்கேற்றார்.
பின்னர், மேற்குவங்க மாநில ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி கருணாநிதியின் நூற்றாண்டு லட்சினையை வெளியிட்டார்.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
பெரியாரின் கொள்கை வாரிசான கருணாநிதியை வாழ்த்துவதற்காக காந்தியின் பேரன் வந்துள்ளார். பெரியார் சுய மரியாதை இயக்கத்தை துவங்கும் முன் காந்தியின் தொண்டராக தான் இருந்தார்.
கதர் ஆடை அணிந்து நாடு முழுவதும் சுற்றினார். காங்கிரஸ் தலைவராகவும் இருந்தார் பெரியார். கோட்சாவால் காந்தி சுட்டு கொல்லப்பட்டபோது பெரியார் அடைந்த வேதனை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
அண்ணாவும் காந்தி மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார். கருணாநிதியும் காந்தி மீது மிகுந்த மரியாதையும், மதிப்பும் வைத்திருந்தார்.
திராவிட இயக்கத்தின் மதிப்பு கொண்டவர் காந்தியின் பேரன் போபால கிருஷ்ண காந்தி. பெரியாரின் லட்சிய அரசியலை ஆட்சி பீடத்தில் அமர்த்தியது அண்ணா, கருணாநிதி என சொன்னவர் காந்தி பேரன்.
காந்தியின் பேரன் திமுக அரசை பாராட்டி இருப்பது வாழ்நாளில் கிடைத்த மாபெரும் பெயர். தமிழக அரசே கருணாநிதி தான். திமுக ஆட்சியை கருணாநிதிக்கு சமர்ப்பிக்கிறோம்.
கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஓராண்டு கொண்டாட அரசு திட்டமிட்டுள்ளது. கருணாநிதி சாதனைகளை விளக்கும் விழாவாக நூற்றாண்டு விழா கொண்டாடப்படும்.
தொலைநோக்கு பார்வை, மக்கள் மீது பற்றும் கொண்ட தலைவராக கருணாநிதி இருந்தார். கருணாநிதி தொடாத துறை இல்லை. அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்தவர். கருணாநிதி வகுத்த பாதையில் தான் அனைத்து துறையும் பயணிக்கிறது.
உலகமெங்கும் வாழும் தமிழர்களுக்காக பாடுபட்டவர் கருணாநிதி. உலகமெங்கும் வாழும் தமிழர்களால் கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது.
தலைநகர் சென்னையில் உலகதரத்தில் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும். பன்னாட்டு மாநாடுகள், திரைப்பட விழாக்கள் எல்லாம் அங்கு நடைபெறும். 25 ஏக்கர் பரப்பளவில், 5000 நபர்கள் அமரும் வகையில் மிக பிரம்மாண்டமான முறையில் கலைஞர் கன்வென்ஷன் சென்னை அமையவுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.