என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
- மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக நிரம்பி வரும் நிலையில் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
- ஆற்றில் தண்ணீர் அதிகளவில் வருவதால் ஆற்றில் மீன்பிடிக்கவோ, பரிசல் இயக்கவோ, குளிக்கவோ கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
சேலம்:
கர்நாடகாவில் பெய்துவரும் தென்மேற்கு பருவமழையின் காரணமாக அங்குள்ள கிருஷ்ண ராஜசாகர், கபினி, ஹேமாவதி, ஹேரங்கி ஆகிய அணைகள் நிரம்பியது. மேலும் மாநிலத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டத்தில் இன்றும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அந்த மாவட்டத்திற்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மழையின் தீவிரம் காரணமாக கிருஷ்ண ராஜசாகர், கபினி அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து உள்ளது. கிருஷ்ண ராஜசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 124.22 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 11 ஆயிரத்து 599 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 13 ஆயிரத்து 506 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கபினி அணையின் நீர்மட்டம் 82.36 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 30 ஆயிரத்து 769 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கிருஷ்ண ராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 43 ஆயிரத்து 506 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்து கொண்டு இருக்கிறது. இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டு இருக்கிறது.
நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 99.11 அடியாக இருந்தது. தொடர்ந்து அணைக்கு வினாடிக்கு 93 ஆயிரத்து 828 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால் மேட்டூர் அணை 100 அடியை எட்டியது. கர்நாடகா அணைகளில் இருந்து சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு இருப்பதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. எனவே அணையின் நீர்மட்டம் விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் அதிகாரிகள் அணையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இன்று காலை நிலவரப்படி அணையில் 63.69 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது.
காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுவதால் இருகரை களையும் தொட்டப்படி தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. இதன் காரணமாக காவிரி கரையோரம் உள்ள கோட்டையூர், செட்டிப்பட்டி, பண்ணவாடி பரிசல் துறைஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒலி பெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுஉள்ளது. ஆற்றில் தண்ணீர் அதிகளவில் வருவதால் ஆற்றில் மீன்பிடிக்கவோ, பரிசல் இயக்கவோ, குளிக்கவோ கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து கரையோர கிராமங்களில் பொதுப்பணித்துறையினர், வருவாய்த்துறையினர், உள்ளாட்சி துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக நிரம்பி வரும் நிலையில் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். அணை நிரம்பி வரும் நிலையில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுமா என்று எதிர்பார்த்து உள்ளனர்.
- கல்வராயன் மலைப்பகுதியில் அரசு பள்ளி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
- மக்கள் வரிப்பணத்தில் நடைபெறும் பள்ளிகளில் இன்னும் சாதிப் பெயர்கள் காணப்படுகின்றன.
சென்னை:
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு வக்கீல் தமிழ்மணியின் நேர்காணலை அடிப்படையாக வைத்து கல்வராயன் மலைப்பகுதி மக்கள் மேம்பாடு தொடர்பாக ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு நடைபெற்று வருகிறது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'கல்வராயன் மலைப்பகுதி மக்கள் மேம்பாட்டுக்கு என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்' என அரசு தரப்பில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் நேற்று அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் தலைமை வக்கீல் பி.எஸ்.ராமன் ஆஜராகி பழங்குடியினர் நலத்துறை இயக்குனரின் அறிக்கையை தாக்கல் செய்தார்.
இதை படித்து பார்த்த நீதிபதிகள், 'கல்வராயன் மலைப்பகுதியில் அரசு பள்ளி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், அந்த பள்ளியில் அடிப்படை வசதிகள் எந்த அளவிற்கு உள்ளன என கூறப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் பொத்தாம் பொதுவாக கடந்த 10 ஆண்டுகளில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது' என தெரிவித்தனர்
மேலும், 'மக்கள் வரிப்பணத்தில் நடைபெறும் பள்ளிகளில் இன்னும் சாதிப் பெயர்கள் காணப்படுகின்றன அவற்றை அகற்ற அரசு முன்வர வேண்டும். தெரு பெயர்களில் உள்ள சாதி பெயர்களை நீக்கியது போல அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் சாதி பெயர்களை நீக்க நடவடிக்கை எடுங்கள்' என கருத்து தெரிவித்தனர்.
பின்னர், அரசு அதிகாரிகள் அடங்கிய குழுவினர் கல்வராயன் மலைப்பகுதிக்கு மீண்டும் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும், இந்த குழுவுடன் ஐகோர்ட்டுக்கு உதவி செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள மூத்த வக்கீல் தமிழ்மணியையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அப்போது, வக்கீல் மோகன்தாஸ் ஆஜராகி தன்னையும் இந்த வழக்கில் இணைத்துக்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
அப்போது அவர், 'பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்காக மாநில அரசு 9 கோடி 30 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், ஆனால் அந்த தொகை இன்னமும் முழுமையாக செலவிடப்படவில்லை' என்று கூறி அதுதொடர்பான ஆவணத்தை தாக்கல் செய்தார். அதற்கு நீதிபதிகள், 'தங்களது கோரிக்கையை ஏற்கிறோம். அரசு குழுவுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் தனியாக சென்று ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்யலாம்' என்றனர்.
- முதற்கட்ட விசாரணையில் 189 பேராசிரியர்கள் பல கல்லூரிகளில் பணிபுரிந்தது கண்டறியப்பட்டது.
- அடுத்த வாரத்தில் இந்த முறைகேட்டில் ஈடுபட்ட பேராசிரியர்களை இந்த குழு நேரில் அழைத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளது.
சென்னை:
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் இணைப்பு என்ஜினீயரிங் கல்லூரிகளில் பேராசிரியர்கள் ஆதார் எண்ணை முறைகேடாக பயன்படுத்தி சேர்ந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் 189 பேராசிரியர்கள் பல கல்லூரிகளில் பணிபுரிந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகம் தமிழ்நாடு அரசுக்கு தகவல் தெரிவித்த நிலையில், இதை விசாரிக்க அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் பேராசிரியர் குமாரவேல், தொழில்நுட்ப கல்வி இயக்கக கமிஷனர் ஆபிரகாம், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் சார்பில் தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (என்.ஐ.டிடி.டி.ஆர்.சி.) இயக்குனர் உஷா நடேசன் ஆகிய 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து தமிழ்நாடு கவர்னரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி, அண்ணா பல்கலைக்கழகத்திடம் விளக்கம் கேட்டு இருந்தார். அதன் அடிப்படையில் பேராசிரியர்கள் முறைகேடாக பணிபுரிந்தது தொடர்பான விளக்கங்களை, கவர்னர் ஆர்.என்.ரவியிடம், அண்ணா பல்கலைக்கழகம் சமர்ப்பித்துள்ளது.
மேலும் 3 பேர் கொண்ட குழு இந்த முறைகேடு தொடர்பான விசாரணையில் தீவிரமாக இறங்கி இருக்கிறது. இதற்கான ஆவணங்கள் அனைத்தையும் அண்ணா பல்கலைக்கழகம், குழுவிடம் வழங்கியிருக்கிறது.
அடுத்த வாரத்தில் இந்த முறைகேட்டில் ஈடுபட்ட பேராசிரியர்களை இந்த குழு நேரில் அழைத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளது. அதன் பின்னர், முறைகேடு தொடர்பான அறிக்கையை இந்த குழு தயாரிக்கும் எனவும், அனேகமாக இன்னும் ஒரு வார காலத்துக்குள் இந்த பணிகள் நிறைவு பெற வாய்ப்பு உள்ளது எனவும் அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர். குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் முறைகேட்டில் ஈடுபட்ட பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
- அதிமுக இணையாமல் எந்த தேர்தலிலும் வெற்றி பெற முடியாது.
- தொண்டர்கள் என்ன பதவி கொடுத்தாலும் அந்த பதவியை ஏற்பேன்.
சென்னை:
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு நிர்வாகிகள் கூட்டம் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர் மனோஜ் பாண்டியன், அமைப்பு செயலாளர் வெல்லமண்டி நடராஜன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, "சிலர் கூட்டத்தில் பேசும்போது தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். ஆனால், தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் எனக்கு இல்லை. அதிமுக என்பது எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் சொத்து. அதன் 1½ கோடி தொண்டர்களின் உரிமையை மீட்டுக்கொடுப்பது தான் எனது கடமை'' என்று பேசினார்.
பின்னர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் இந்தியாவிலேயே அதிக வாக்குகள் பெற்ற சுயேச்சை வேட்பாளராக மக்கள் என்னை தேர்ந்து எடுத்தார்கள்.
இதன் மூலம் அதிமுகவின் தொண்டர்கள் எங்கள் பக்கம் இருப்பதை நிரூபித்து இருக்கிறார்கள். சி.வி.சண்முகமும் அதிமுக ஒருங்கிணைவதை விரும்புவதாக சொல்கிறார்கள். அவர் அதிமுக இணையாமல் எந்த தேர்தலிலும் வெற்றி பெற முடியாது என்று சொல்லி இருக்கிறார். பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு காரணமே அதிமுக ஒருங்கிணையாதது தான். இரட்டை இலை சின்னம் இதுவரை இதுபோன்ற தோல்வியை கண்டது இல்லை. அதிமுகவை பதவிக்காக ஒருங்கிணைக்க விரும்பவில்லை. தொண்டர்கள் என்ன பதவி கொடுத்தாலும் அந்த பதவியை ஏற்பேன்.
பொதுக்குழு தொடர்பான 6 வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டு வரை சென்றது. அதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு 6 வழக்குகளையும் சென்னை ஐகோர்ட்டு விசாரித்து தீர்ப்பு வழங்கும் என்று தெரிவித்து உள்ளது. அந்த தீர்ப்பு தான் இறுதியானது என்று சொல்லி இருக்கிறது.
எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராக இருந்தார். நான் ஒருங்கிணைப்பாளராக இருந்தேன். இணை ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் எப்போது பொதுச்செயலாளர் ஆனார் என்று நீதிபதி கேட்டு இருக்கிறார். பதில் சொல்ல முடியவில்லை. உடனே வாபஸ் வாங்கிவிட்டு மன்னிப்பு கேட்டு இருக்கிறார்.
- ஒரு நல்ல அரசு என்பது வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்த மக்களுக்கும் சேர்ந்தே பாடுபட வேண்டும்.
- தமிழகத்தை பா.ஜ.க. புறக்கணித்தால் மேலும் தோல்வியை பா.ஜ.க. சந்திக்கும்.
சென்னை:
நிதி ஆயோக் கூட்டம் புறக்கணிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது:-
மத்திய பா.ஜ.க. அரசின் மாற்றந்தாய் மனப்பான்மை கொண்ட நிதிநிலை அறிக்கையால் நீதி கேட்டு மக்கள் மன்றமான உங்கள் முன் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. திராவிட மாடல் அரசு கடந்த மூன்றாண்டு காலமாக எத்தகைய முற்போக்கு மற்றும் தொலைநோக்குத் திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டு வருவது தெரியும்.
தமிழ்நாடு அரசின் திட்டங்களின் பயன்கள், ஒவ்வொரு குடும்பத்துக்கும்- ஒவ்வொரு குடிமகனுக்கும் நேரடியாகக் கிடைக்கிறது.
தமிழ்நாடு அரசின் எண்ணங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்களை மத்திய அரசு தொடர்ந்து செய்து கொண்டு வருகிறது. ஒரு அரசு எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கான இலக்கணத்தை நான் அடிக்கடி சொல்லிக்கொண்டு வருகிறேன்.
ஒரு நல்ல அரசு என்பது வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்த மக்களுக்கும் சேர்ந்தே பாடுபட வேண்டும்.
மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு வருவதற்கு முன்பு இருந்த எல்லா மத்திய அரசுகளும் கூட அப்படித்தான் இருந்தன. ஆனால் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு மட்டும் தான் அரசியல் நோக்கத்துடன் அரசை நடத்துகிறார்கள். 3-வது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள பா.ஜ.க. அரசுக்கு மக்கள் பெரும்பான்மை அளிக்கவில்லை.
ஒட்டுமொத்த இந்திய மக்களுக்காகவும் உருவாக்க வேண்டிய பட்ஜெட்டை 'இந்தியா' கூட்டணிக்கு வாக்களித்த மக்களைப் பழிவாங்க உருவாக்கி இருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த பட்ஜெட்டிலாவது வெள்ள நிவாரண அறிவிப்பு வெளியாகுமெனக் காத்திருந்தோம். ஆனால் தங்களின் பதவி நாற்காலிக்கு, கால்களாக இருக்கும் மாநிலங்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடிக்கும் மேல் நிதியை அள்ளி வழங்கியுள்ளார் நிதி அமைச்சர். தமிழ்நாட்டுக்கென எந்த சிறப்புத் திட்டத்தையும் கொடுக்காமல், தமிழ்நாட்டு மக்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க வேண்டும் என எப்படித்தான் எதிர்பார்கிறார்களோ தெரியவில்லை. தமிழகத்திற்கு எந்த திட்டத்தையும் வழங்காமல் வாக்குகளை மட்டும் பா.ஜ.க. எதிர்பார்க்கிறது. மேலும் தமிழகத்தை பா.ஜ.க. புறக்கணித்தால் மேலும் தோல்வியை பா.ஜ.க. சந்திக்கும்.
பட்ஜெட்டில் தமிழ்நாடு பெயரும் இல்லை, குறளும் இல்லை. திருவள்ளுவர் பா.ஜ.க.வுக்கு கசந்துவிட்டார். இதுபோன்ற பட்ஜெட்டில் திருக்குறள் இடம் பெறாதது நிம்மதி அளிக்கிறது.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
தலைநகரில் @NITIAayog கூட்டத்தில் பங்கெடுத்திருக்க வேண்டிய நாளில், ஒன்றிய பா.ஜ.க. அரசின் வஞ்சனையால், நீதி கேட்டு மக்கள் மன்றத்தில்…#UnfairBudget4TN pic.twitter.com/L2rqtORNvD
— M.K.Stalin (@mkstalin) July 27, 2024
- புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சவுந்தர்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
- நேற்று சிகிச்சை பலனின்றி சவுந்தர்யா உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சியை சேர்ந்த சவுந்தர்யா செய்தித் துறையின் மீது கொண்ட ஆர்வத்தால் மீடியாவில் இணைந்தார். தனியார் செய்தி தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்த சவுந்தர்யாவின் கணீர் குரலும், தமிழ் உச்சரிப்பும் கவனம் ஈர்த்தது.
இந்நிலையில், கடந்த ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சவுந்தர்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் பலரும் இவருடைய சிகிச்சைக்கு நிதியுதவி வழங்கினர். தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இவருடைய சிகிச்சைக்காக 5 லட்சம் கொடுத்து உதவினார்.
கடந்த 6 மாதமாக சவுந்தர்யா சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் செய்தித்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவருடைய மறைவுக்கு தொலைக்காட்சி ஊழியர்கள் மற்றும் செய்தித் துறையை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தனியார் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா மறைவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். கவர்னர் மாளிகையின் எக்ஸ் பதிவில், "செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா அவர்களின் மரணத்தை அறிந்து வேதனையடைந்தேன்; அவர் ஒரு பிரகாசமான மற்றும் சிறந்த செய்தித் தொகுப்பாளராக விளங்கினார்; அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது அனுதாபங்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இவருடைய சிகிச்சைக்காக 5 லட்சம் கொடுத்து உதவினார்.
- சவுந்தர்யா மறைவுக்கு தொலைக்காட்சி ஊழியர்கள் மற்றும் செய்தித் துறையை சேர்ந்தவர்கள் இரங்கல்.
தனியார் செய்தி தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்தவர் சவுந்தர்யா.
கள்ளக்குறிச்சியை சேர்ந்த சவுந்தர்யா செய்தித் துறையின் மீது கொண்ட ஆர்வத்தால் மீடியாவில் இணைந்தார்.
இவருடைய கணீர் குரலும், தமிழ் உச்சரிப்பும் ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியதோடு, பிரபலமடைந்தார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு சவுந்தர்யாவுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உடல்நிலை சீராகாததை அடுத்து, புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன் முடிவில் சவுந்தர்யாவுக்கு புற்றுநோய் இருப்பது உறுதியானது. மேலும், 4வது ஸ்டேஜில் இருப்பதும் கண்டறியப்பட்டது.
தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் பலரும் இவருடைய சிகிச்சைக்கு நிதியுதவி வழங்கினர். தமிழக
முதல்வர் முக ஸ்டாலின் இவருடைய சிகிச்சைக்காக 5 லட்சம் கொடுத்து உதவினார்.
கடந்த 6 மாதமாக சவுந்தர்யா சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் செய்தித்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவருடைய மறைவுக்கு தொலைக்காட்சி ஊழியர்கள் மற்றும் செய்தித் துறையை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- அதிகமாக செம்மண் அள்ளிய வழக்கில் பொன்முடியின் சொத்துகள் முடக்கம்.
- வழக்கில் அமலாக்கத்துறை அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.
செம்மண் குவாரி முறைகேடு வழக்கில், அமைச்சர் பொன்முடியின் ரூ.14.21 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக செம்மண் அள்ளிய வழக்கில் பொன்முடியின் சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் எம்.பி., கவுதம சிகாமணி தொடர்புடைய வழக்கில் அமலாக்கத்துறை அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.
இதேபோல், அமைச்சர் பொன்முடி, அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
- 10 ரெயில்கள் அரக்கோணம்- செங்கல்பட்டு வழியாக இயக்கப்படும்.
- அந்தியோதயா விரைவு ரெயில் சேவை இரு மார்க்கத்திலும் முழுவதுமாக ரத்து.
தாம்பரம் பணிமனை மற்றும் சிக்னல் மேம்பாட்டு பணிகள் காரணமாக ரெயில் சேவையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 14ம் தேதி வரை, 27 விரைவு ரெயில்கள் பல்வேறு இடங்களில் இருந்து இயக்கப்படுகிறது.
அதன்படி, திருச்சி- பகத் கி கோத்தி, காரைக்கால்- லோக்மான்ய திலக், ராமேஸ்வரம்- அயோத்தியா, ராமேஸ்வரம் பனாரஸ் உள்ளிட்ட 10 ரெயில்கள தாம்பரம் வழியாக இயக்கப்பட மாட்டாது.
10 ரெயில்களும், மாறாக அரக்கோணம்- செங்கல்பட்டு வழியாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம்- நாகர்கோவில் இடையே இயக்கப்படும் அந்தியோதயா விரைவு ரெயில் சேவை இரு மார்க்கத்திலும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
பல்லவன் விரைவு ரெயில், வைகை எக்ஸ்பிரஸ், மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ஆகியவை செங்கல்பட்டு வரை இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- சர்வதேச அரங்கில் இந்திய விளையாட்டுத்துறையின் முகமாக தமிழ்நாடு மாறி வருகிறது.
- தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி.
விளையாட்டு துறைக்கு, தமிழ்நாட்டுக்கு வெறும் ரூ.20 கோடியை மட்டுமே மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது;-
கேலோ இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது முதல் ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வளவு நிதி வழங்கப்பட்டுள்ளது என மத்திய விளையாட்டு & இளைஞர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ள புள்ளிவிவரம், ஓரவஞ்சனையின் மொத்த வடிவம் தான் ஒன்றிய பா.ஜ.க. அரசு என்பதற்கான சான்றாக உள்ளது.
கடந்த 7 ஆண்டுகளில், பா.ஜ.க ஆளும் உத்தர பிரதேசத்துக்கும் – குஜராத்துக்கும் தலா ரூ.400 கோடிக்கு மேல் தந்து தாராளம் காட்டியிருக்கிற ஒன்றிய அரசு, தமிழ்நாட்டுக்கு வெறும் ரூ.20 கோடியை மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது.
உலக செஸ் போட்டி – ஆசிய ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப் – தேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் – World Surfing League – Squash World Cup- Khelo India Youth Games 2023 என பல்வேறு சர்வதேச மற்றும் தேசிய அளவிலானப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்தியிருக்கிறோம்.
சர்வதேச அரங்கில் இந்திய விளையாட்டுத்துறையின் முகமாக தமிழ்நாடு மாறி வருகிறது.
விளையாட்டுத்துறையில் இத்தனை ஆக்கப்பூர்வமாக செயல்படும் தமிழ்நாட்டுக்கு வெறும் ரூ.20 கோடியை மட்டும் ஒதுக்கியிருப்பதை நம் மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள்.
இது தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி.
தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்குவதில் தொடர்ந்து பாரபட்சம் காட்டும் பாசிச பா.ஜ.க.வின் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
வாக்களிக்காத மாநிலங்களுக்கு எதிரான மனநிலையை ஒன்றிய பா.ஜ.க. அரசு உடனடியாக கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- உச்சநீதிமன்றம் உள்பட பல்வேறு நீதிமன்றங்களில் ஜாமின் கோரி மனு தாக்கல்.
யூ டியூபர் சவுக்கு சங்கர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பெண் போலீசார் குறித்து தரக்குறைவாக பேசி இருந்தார்.
இதுதொடர்பாக, பெண் போலீசார் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனைத்தொடர்ந்து, சவுக்கு சங்கர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் போலீசார் பல்வேறு வழக்குகளின் கீழ் அதிரடியாக கைது செய்தனர்.
இந்நிலையில், சவுக்கு சங்கர் உச்சநீதிமன்றம் உள்பட பல்வேறு நீதிமன்றங்களில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
அதன்படி, கோவை சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த, பெண் காவலர்கள் மற்றும் உயர் காவல் அதிகாரிகளை அவதூறாக பேசிய வழக்கில் யூ டியூபர் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- இந்தியாவிலேயே தொழில் வளர்ச்சியில் தமிழகம் 3-வது இடத்தை பிடித்துள்ளது.
- கடந்த 3 ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சியில் சிறு குறு நிறுவன துறையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
நெல்லை:
நெல்லையில் தொழில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்து வரும் ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் சுய தொழில் முனைவோருக்காக ரூ. 961 கோடியே 58 லட்சம் மானியத்துடன் சுமார் ரூ. 2,818 கோடியே 24 லட்சம் மதிப்பீட்டில் வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 30 ஆயிரத்து 324 இளைஞர்கள் தொழில் முனைவோராக உருவாக்கப் பட்டுள்ளனர். நேரடியாகவும், மறைமுகமாகவும் 3 லட்சம் நபர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்ற கடந்த 10 ஆண்டுகளில் 55 ஆயிரத்து 230 நபர்கள் மட்டுமே தொழில் முனைவோராக உருவாக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் முன்னோடி திட்டமாக தமிழக அரசால் கடந்த ஆண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில்முனைவோருக்காக தொடங்கப்பட்ட அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம் மூலம் ரூ. 159.40 கோடி மானியத்துடன் ரூ.302.86 கோடி வங்கி கடனுதவி வழங்கப்பட்டு 1369 தொழில் முனைவோர் உருவாக்கப்பட்டுள்ளனர்.
பின்தங்கிய தென் மாவட்டங்களில் ரூ. 262.13 கோடி மானியத்துடன் ரூ. 769.27 கோடி வங்கி கடன் உதவியுடன் 9,594 தொழில் முனைவோர் உருவாக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவிலேயே தொழில் வளர்ச்சியில் தமிழகம் 3-வது இடத்தை பிடித்துள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டதில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. உலக தொழில் முதலீட்டாளர் மாநாட்டை போல் வரும் பிப்ரவரி மாதம் தமிழக முதலமைச்சர் தலைமையில் உலக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சியில் சிறு குறு நிறுவன துறையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 170 ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்கப்பட்டு ரூ.69 கோடியே 15 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் மட்டும் 90 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கடந்த 3 ஆண்டுகளில் தொடங்கப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் ராக்கெட் தொழில்நுட்பம் சம்பந்தமான தொழிற் சாலைகளை தொடங்குவதற்கு முன் வருபவர்களுக்கு உடனடியாக தொழிற்சாலைகள் தொடங்க முன்னுரிமை கொடுக்கப்படும்.
தமிழக அரசின் மூலம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 8 சிட்கோ தொழிற்பேட்டைகளில் 6 தொழிற்பேட்டைகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் 8 சிட்கோ தொழிற்பேட்டைகள் புதிதாக இந்த ஆண்டு தொடங்கப்பட உள்ளது.
பல ஆண்டுகளாக செயல்பாட்டில் இல்லாத நெல்லை மாவட்டத்தில் உள்ள பேட்டை நூற்பாலை மற்றும் வள்ளியூரில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டை ஆகியவை முழுமையாக கையகப்படுத்தி அங்கும் புதிய தொழில் தொடங்க இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.
புதிய தொழில் முனைவோரை உருவாக்குவதில் அரசு கண்ணும் கருத்துமாக உள்ளது. அதிகாரிகளை ஊக்குவித்து இளைஞர்களை புது தொழில் முனைவராக உருவாக்கும் நடவடிக்கைகள் நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)