search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    • தமிழ்நாட்டின் சில பகுதிகளில் மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தும் ‘ஈரக்குமிழ் வெப்ப நிலை’ பாதிப்பு ஏற்படக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
    • மாநிலத் திட்டக் குழுவானது தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டிய வெப்பத் தணிப்பு செயல்திட்டம் தொடர்பான வரைவு அறிக்கையை 2023ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசுக்கு அளித்துள்ளது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    இந்தியா முழுவதும் 2024 ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வழக்கத்தை விட அதிகமாக வெப்பம் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மிக அதிக வெப்பம் நிலவும். இயல்பை விட அதிகமான நாட்கள் வெப்ப அலை வீசக்கூடும், பல நகரங்களை நகர்ப்புற வெப்பத்தீவு பதிப்பு தாக்கக் கூடும். தமிழ்நாட்டின் சில பகுதிகளில் மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தும் 'ஈரக்குமிழ் வெப்ப நிலை' பாதிப்பு ஏற்படக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழுவானது ( தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டிய வெப்பத் தணிப்பு செயல்திட்டம் தொடர்பான வரைவு அறிக்கையை 2023ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசுக்கு அளித்துள்ளது. இந்த திட்டத்தை உருவாக்குவதற்கான உதவிகளை இங்கிலாந்து அரசு செய்துள்ளது. ஆனால், இந்த அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை என்பதை முதலமைச்சராகிய தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

    உள்ளூர் அளவிலான வானிலை முன்னெச்சரிக்கைகள், நகர்ப்புற பசுமையை அதிகமாக்குதல், நீர்நிலைகள் பாதுகாப்பு, குளிர்ந்த கூறைகள் திட்டம், வெப்பத்தை சமாளிக்கும் காற்றோட்டமான கட்டுமானங்கள், மருத்துவ கட்டமைப்புகள், விழிப்புணர்வு பிரச்சாரம், வெப்ப ஆபத்தில் சிக்குவோருக்கான புகலிடங்கள், போதுமான குடிநீர் வசதிகள், போக்குவரத்தில் வெப்பத்தை சமாளித்தல் மற்றும் பொதுப்போக்குவரத்தை அதிகமாக்குதல், அவசர உதவி வசதிகள், பல்துறையினர் பங்கேற்பு, போதுமான நிதி ஆதாரம் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாக வெப்பத் தணிப்பு செயல்திட்டம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும். இவற்றை செயலாக்குவதற்கான முழுமையான பொறுப்புடைமை விதிகளை தமிழக அரசு வெளியிட வேண்டும்.

    வெப்பத் தணிப்பு செயல்திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தி கோடைக் கால வெப்பத்திலிருந்து தமிழ்நாட்டு மக்களைக் காக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மக்கள் கருத்துக்களை கேட்டு, முழுமையான ஒரு வெப்பத் தணிப்பு செயல்திட்டத்தை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் கூறி உள்ளார்.

    • ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளது.
    • பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தினமும் ரூ.500 முதல் ரூ.1000 வரை ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் கடந்த 19-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.

    வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் 39 தொகுதிகளிலும் ஸ்டிராங்ரூமில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் துணை ராணுவ படையினரின் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது. ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை தேர்தல் அதிகாரிகளும் ரோந்து சென்று வருகிறார்கள். ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளது.

    இவ்வளவு கட்டுக்காவல் இருந்தாலும் அரசியல் கட்சிகளும் தங்கள் சார்பில் தொண்டர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி இருக்கிறது. சுழற்சி முறையில் பணி அமர்த்தப்பட்டுள்ள தொண்டர்கள் 8 மணி நேரத்துக்கு ஒருமுறை மாறி மாறி காவல் இருக்கிறார்கள்.

    இந்த வகையில் தி.மு.க. மற்றும் பா.ஜனதா சார்பில் தலா 9 பேர் வீதம் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அ.தி.மு.க. சார்பில் 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

    இந்த பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தினமும் ரூ.500 முதல் ரூ.1000 வரை ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. மேலும் உணவு, தண்ணீர் பாட்டில் நொறுக்கு தீனிகளும் வாங்கி கொடுக்கிறார்கள்.

    மொத்தம் 44 நாட்கள் பாதுகாப்பு பணியில் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒவ்வொரு வேட்பாளருக்கும் சுமார் ரூ.3 லட்சம் வரை செலவாகலாம் என்கிறார்கள் கட்சிக்காரர்கள்.

    • இரண்டரை லட்சம் புத்தகங்களுக்கு மேல், பல மாணவர்களுக்கும் - நூலகங்களுக்கும் கொடையளித்துள்ளேன்.
    • கையில் புத்தகங்கள் தவழட்டும்! சிந்தனைகள் பெருகட்டும்! நல்வழி பிறக்கட்டும்!

    சென்னை :

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    புதிய உலகத்திற்கான திறவுகோல் - அறிவின் ஊற்று - கல்விக்கான அடித்தளம் - சிந்தனைக்கான தூண்டுகோல் - மாற்றத்திற்கான கருவி - மக்களை உணர வழிகாட்டி எனப் புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை!

    புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்!

    புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வதை ஓர் இயக்கம் என நான் தொடங்கியது முதல் பெறப்பட்ட இரண்டரை லட்சம் புத்தகங்களுக்கு மேல், பல மாணவர்களுக்கும் - நூலகங்களுக்கும் கொடையளித்துள்ளேன்.

    கையில் புத்தகங்கள் தவழட்டும்! சிந்தனைகள் பெருகட்டும்! நல்வழி பிறக்கட்டும்!

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


    • சிறுவர்கள், இளைஞர்கள் வெயிலில் செல்லும்போது சரும நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
    • பஸ், ரெயில் பயணம் மேற்கொள்பவர்கள் வெளியில் உணவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்ள சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் பொது மருத்துவத்துறை தலைவர் டாக்டர் எஸ்.சந்திரசேகர் கூறியதாவது:-

    தமிழகத்தில் கோடை வெயில் தாக்கம் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை இருப்பது வழக்கம். கால சூழல் மாற்றத்தால் வெப்பத்தின் தாக்கம் தற்போது அதிகரித்து உள்ளது. இயல்பைவிட அதிகமாக வெப்பம் தாக்குதலுக்கு நாம் ஆளாகும்போது, உடலில் சோர்வு, தலை சுற்றல், தலைவலி, கால்வலி போன்றவை ஏற்படும்.

    வெயில் அதிகமாக முதியவர்கள் மற்றும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை எளிதாக தாக்கக்கூடும். உஷ்ணம் தாங்க முடியாமல் அவர்கள் சுயநினைவு இழக்க நேரிடும். உடலில் நீர் சத்து குறைந்து வலிப்பு ஏற்படக்கூடும்.

    சிலருக்கு வெப்ப பக்கவாதம் (ஹீட் ஸ்டோக்) பாதிப்பும் உண்டாகலாம். இந்த பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ள முதியவர்கள், இணை நோய் உள்ளவர்கள் காலை 11 மணி முதல் 3 மணி வரை வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்.

    தளர்வான ஆடைகள், பருத்தி உடைகளை அணிவதில் இருந்து தப்பிக்கலாம். வீட்டை விட்டு வெளியே செல்லும்போது குடை பிடித்தும், தொப்பி அணிந்தும் செல்லலாம். கட்டாயம் தண்ணீர் பாட்டில் கையில் வைத்திருக்க வேண்டும்.

    தண்ணீரை அடிக்கடி பருக வேண்டும். இதன் மூலம் நா வறட்சி, படபடப்பு, சோர்வு, உடல் அசதி ஏற்படுவதை தவிர்க்கலாம்.

    வீட்டிற்குள் இருந்தாலும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். மோர், இளநீர், பழங்கள் போன்றவற்றை அருந்த வேண்டும். குளிரூட்டப்பட்ட ஜூஸ் பழ, வகைகளை சாப்பிடக்கூடாது.

    சிறுவர்கள், இளைஞர்கள் வெயிலில் செல்லும்போது சரும நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. முகம் கருப்பாக மாறிவிடும். அதனால் வெளியே செல்லும்போது சன் ஸ்கிரீன் கிரீம் தடவி செல்ல வேண்டும். கோடை காலத்தில் ஏற்படக்கூடிய வியர்வை கட்டி, வேர்க்குரு போன்றவற்றை தடுக்க தினமும் 2 முறை குளிக்க வேண்டும்.

    வேலை நிமித்தமாக வெளியில் செல்பவர்கள் வெளியில் தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஓட்டல் உணவு நல்லதல்ல. பழைய கஞ்சி உடலுக்கு நல்லது. தற்போதைய சீசன் பழங்களை பருகலாம். தர்பூசணி, தயிர் சாதம், மோர் போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.

    பஸ், ரெயில் பயணம் மேற்கொள்பவர்கள் வெளியில் உணவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது வயிற்றுபோக்கு, வயிற்று வலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். வெப்ப பக்கவாதம் சிலருக்கு உயிர் இழப்பையும் ஏற்படுத்தி விடும். எனவே வயதானவர்கள், நோய் பாதிப்பு உள்ளவர்கள் வெயிலில் செல்லாமல் வீட்டில் இருப்பது நல்லது.

    வெப்ப தாக்குதலால் ஏற்படும் பாதிப்புக்கு அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிறைக்கு செல்வதற்கு விலக்கு அளிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் ராஜேஷ் தாஸ் மனு தாக்கல் செய்தார்.
    • சிறைக்குச் செல்ல விலக்கு கேட்கும் மனுவை ஐகோர்ட்டு நீதிபதி எம்.தண்டபாணி விசாரித்தார்.

    சென்னை:

    தமிழ்நாடு சிறப்பு டி.ஜி.பி.யாக பதவி வகித்தவர் ராஜேஷ் தாஸ். அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதலமைச்சர் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவருடன் சென்ற சிறப்பு டி.ஜி.பி., ஒரு பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு தன் காரில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு இருந்தது.

    இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு விசாரித்தது. பின்னர் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி ராஜேஷ் தாசுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை விழுப்புரம் மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டு உறுதி செய்தது.

    2 கோர்ட்டுகளும் தண்டனை வழங்கியதால், ராஜேஷ் தாஸ் சிறைக்குள் சென்று விட்டு, அதன் பின்னர் தான் மேல்முறையீடு செய்ய வேண்டும்.

    ஆனால் சிறைக்கு செல்வதற்கு விலக்கு அளிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் ராஜேஷ் தாஸ் மனு தாக்கல் செய்தார். அதில் காவல் துறையில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்த தான் சிறைக்கு சென்றால் அது தனக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். மேலும் கீழ் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடும் செய்துள்ளார். இதில், சிறைக்குச் செல்ல விலக்கு கேட்கும் மனுவை ஐகோர்ட்டு நீதிபதி எம்.தண்டபாணி கடந்த வாரம் விசாரித்தார். பின்னர் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி இன்று பிறப்பித்தார்.

    அப்போது ராஜேஷ் தாசின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். அவர் கீழ் கோர்ட்டில் சரண் அடைந்து சிறைக்கு சென்ற பின்னர் அவரது மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

    • வழக்கு திருச்சுழி நீதிமன்றத்தில் கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்தது.
    • தவக்கண்ணன் மீது அ.முக்குளம் போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்தது உண்மையென ஆதாரப்பூர்வமாக விசாரணையில் தெரிய வந்தது.

    திருச்சுழி:

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள சாலைமறைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் தவக்கண்ணன். டிப்ளமோ என்ஜினீயரான இவர் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வதற்காக பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்தார்.

    கடந்த 2020 மார்ச் 20-ந்தேதி பாஸ்போர்ட் விசாரணைக்காக அ.முக்குளம் போலீசார் அழைத்ததன் பேரில் தவக்கண்ணன் தனது நண்பருடன் 21-ந் தேதி காலை அ.முக்குளம் போலீஸ் நிலையம் சென்றார். அங்கு விசாரணை சரிபார்ப்பு முடிந்த நிலையில் வீடு திரும்பினார்.

    இதற்கிடையில் அ.முக்குளம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த அப்போதைய சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தனது போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியிலுள்ள கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு வாக்கி-டாக்கியுடன் பாதுகாப்பு பணிக்காக சென்று விட்டு போலீசார் குடியிருப்புக்கு திரும்பிய நிலையில் அங்கிருந்து மீண்டும் அ.முக்குளம் காவல் நிலையத்திற்கு எஸ்.ஐ.மணிகண்டன் திரும்பியுள்ளார்.

    அப்போது திடீரென அவரது வாக்கி-டாக்கி காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்த நிலையில் கடைசியாக போலீஸ் நிலையத்திற்கு பாஸ்போர்ட் விசாரணைக்காக வந்து விட்டு திரும்பிய தவக்கண்ணனை தொடர்பு கொண்டு தனது வாக்கி-டாக்கி காணாமல் போனதாகவும் அதனை நீ திருடியதாகவும் அது சம்பந்தமாக போலீஸ் நிலையத்தில் பதிவாகிய சி.சி.டி.வி. பதிவுக்காட்சிகள் ஆதாரமாக இருப்பதாகவும் கூறி விசாரணைக்காக போலீஸ் வருமாறு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் அழைத்துள்ளார்.

    அதன்பேரில் போலீஸ் நிலையத்திற்கு சென்ற தவக்கண்ணனை எஸ்.ஐ. உள்பட போலீசார் தாக்கியதாக கூறப்பட்டது. இதற்கிடையே தொலைந்து போனதாக கூறப்படும் வாக்கி டாக்கி கிடைத்து விட்ட நிலையிலும் தவக்கண்ணனை விடுவிக்காமல் வாக்கி-டாக்கியை திருடியதாக ஒப்புக்கொள்ள சொல்லி தாக்கியுள்ளனர். பலத்த காயம் அடைந்த அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    இந்த நிலையில் வாக்கி-டாக்கி விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து அ.முக்குளம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, தவக்கண்ணன் குடிபோதையில் பொது இடத் தில் ஆபாசமாக பேசியதாகவும், அரசு சொத்துக்களை சேதப்படுத்தியதாகவும் கூறி அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். குடிபோதையில் இருந்ததாக கூறப்படும் தவக்கண்ணனுக்கு மதுப்பழக்கம் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த வழக்கு திருச்சுழி நீதிமன்றத்தில் கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் அரசு தரப்பிலும், குற்றம் சாட்டப்பட்டதாக கூறப்படும் தவக்கண்ணன் தரப்பிலும் வழக்கறிஞர்கள் ஆஜராகி வழக்கில் வாதிட்டனர்.

    தவக்கண்ணன் மீது அ.முக்குளம் போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்தது உண்மையென ஆதாரப்பூர்வமாக விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து டிப்ளமோ என்ஜினீயரிங் பட்டதாரியான தவக்கண்ணனை இந்த வழக்கில் இருந்து விடுவித்து திருச்சுழி உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அபர்ணா நேற்று அதிரடியாக தீர்ப்பு வழங்கினார்.

    • தனியார் பஸ் டிரைவர் நடுரோட்டில் நிறுத்தி ஆட்களை ஏற்றினார்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களை எச்சரித்து பஸ்சை எடுத்து செல்லும்படி கூறினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதேப்போல் ஈரோடு, கோபி, சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம், கோவை போன்ற ஊர்களுக்கும் பஸ்கள் சென்று வருகின்றன. இதனால் மத்திய பஸ் நிலையத்தில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

    இந்தநிலையில் இன்று காலை திருப்பூரில் இருந்து சத்தியமங்கலம் வழியாக பண்ணாரிக்கு செல்லும் தனியார் பஸ் குறிப்பிட்ட நேரத்தில் செல்லாமல் பஸ் நிலையத்தில் நின்று பயணிகளை ஏற்றி வந்தனர்.

    இதனை பார்த்த அடுத்து செல்ல வேண்டிய அரசு பஸ் டிரைவர்- கண்டக்டர் பஸ்சை எடுக்கும்படி கூறினர். ஆனால் தனியார் பஸ் டிரைவர் நடுரோட்டில் நிறுத்தி ஆட்களை ஏற்றினார். இதனால் அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்- கண்டக்டர்கள் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

    சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக நடுரோட்டில் பஸ்சை நிறுத்தி மோதலில் ஈடுபட்டதால் மற்ற பஸ்கள் பஸ் நிலையத்திற்குள் வர முடியாமல் நீண்ட வரிசையில் நின்றது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளானார்கள்.

    தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களை எச்சரித்து பஸ்சை எடுத்து செல்லும்படி கூறினர். இதனையடுத்து வாக்குவாதத்தை கைவிட்டு பஸ்சை எடுத்துச்சென்றனர். இதனால் மத்திய பஸ் நிலையத்தில் இன்று காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

    • வழக்கின் விசாரணையானது தென்காசி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
    • வழக்கினை விசாரணை செய்த நீதிபதி மாரீஸ்வரி குற்றவாளிகளுக்கு தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம், வீ.கே. புதூர் பகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு போலீசார் வாகன சோதனையின்போது கள்ள ரூபாய் நோட்டு வைத்திருத்த இடையர்தவனை ஐயப்பன் (வயது 37), தாயார் தோப்பு சேர்மலிங்கம்(50), மோசஸ் ராஜ்குமார்(44), சங்கரன்கோவில் மணிகண்டன்(57), ராஜபாளையம் வீரபாண்டியன்(57) மற்றும் ராஜபாண்டியை சேர்ந்த ராஜேந்திரன்(52) ஆகிய 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இவ்வழக்கின் விசாரணையானது தென்காசி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கினை விசாரணை செய்த நீதிபதி மாரீஸ்வரி குற்றவாளிகளுக்கு தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

    இவ்வழக்கில் திறம்பட விசாரணை செய்து, சாட்சிகளை விரைவாக ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுத்த அப்போதைய வீ.கே.புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசாருக்கு தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

    • சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
    • வரும் 25-ந்தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    வட தமிழக உள் மாவட்டங்களில் இன்றும் நாளையும் வெப்ப அலை வீசக்கூடும்.

    தமிழக உள் மாவட்டங்களில் 27-ந்தேதி வரை வெப்பநிலை இயல்பைவிட 2-4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

    சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 43 டிகிரி செல்சியஸ், சேலத்தில் 41.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது.

    23, 24-ந்தேதிகளில் தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

    வரும் 25-ந்தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • புத்தகம் வாசிப்பதன் மூலம் மனிதர்களுக்கு கல்வி அறிவு , புரிதல் ,தெளிவு கிடைக்கிறது.
    • மனிதர்களை புதிய உலகத்துக்கு புத்தகங்கள் அழைத்து செல்கின்றன.

    மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக யுனெஸ்கோ சார்பில் உலக புத்தக தினம் கொண்டாடப்படுகிறது.

    புத்தக வாசிப்பால் கிடைக்கும் அளவற்ற மகிழ்ச்சியை குழந்தை பருவத்திலேயே ஏற்படுத்தினால் எழுத்து மீதான ஆர்வம் தூண்டப்பட்டு அவர்களின் எழுத்துகளை பின்னாளில் பிரசுரிக்கவும் உதவும் என நம்பப்படுகிறது.

    புத்தகம் வாசிப்பதன் மூலம் மனிதர்களுக்கு ஏராளமான நன்மைகள், கல்வி அறிவு , புரிதல் ,தெளிவு கிடைக்கிறது. மனிதர்களை புதிய உலகத்துக்கு புத்தகங்கள் அழைத்து செல்கின்றன.




    உலக புத்தக தினம் 1995 -ம் ஆண்டு ஏப்ரல் 23 - ந்தேதி முதன் முதலாக கொண்டாடப்பட்டது, அன்றைய தினம் தொடர்ந்து அங்கீகரிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் மக்கள் புத்தகம் வாசிப்பு பழக்கத்தை தற்போது மேம்படுத்தி வருகிறார்கள்.வாசிப்பின் சக்தியை மக்கள் அடையாளம் காண இந்த நாள் ஒரு வாய்ப்பாக அமைகிறது.

    உலகம் முழுவதும் உள்ள எழுத்தாளர்களின் சிறந்த படைப்புகளை கவுரவிக்கும் விதமாக உலக புத்தக தினம் யுனெஸ்கோ சார்பில் கடைபிடிக்கப்படுகிறது. இதன் மூலம் வாசிப்பு மீதான காதல், எழுத்து மீதான ஆர்வம், மொழிப்பெயர்ப்பு, ஆகியவற்றை ஊக்கப்படுத்துவது இதன் நோக்கம்.


    ஒரு மனிதனுக்கு புத்தகம் சிறந்த தோழன் ஆக உள்ளது. உலகின் சிறந்த எழுத்தாளர்களான வில்லியம் சேக்ஸ்பியர், பிரபல ஸ்பானிஷ் வரலாற்று ஆசிரியர் இன்கா கார்சிலாசோ டி லா வேகா ஆகியோரின் நினைவு நாளாக இது அமைந்துள்ளது.

    புத்தக வாசிப்பு விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கத்தில் யுனெஸ்கோ, சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு இலக்கிய பரிசுகளை வழங்கி வருகிறது.




    இந்த தினத்தில் புத்தகங்களை நன்கொடையாக வழங்குங்கள். நூலகங்கள், பள்ளிகள் அல்லது தொண்டு நிறுவனங்களுக்கு புத்தகங்களை நன்கொடையாக கொடுங்கள். புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை உருவாக்க நண்பர்கள், உறவினர்களுக்கு உதவிடுங்கள்

    • எதிர்பாராத விதமாக வீரக்குமார் கால் தவறி 7-வது மலையில் இருந்து கீழே விழுந்தார்.
    • ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வடவள்ளி:

    திருப்பூர் மாவட்டம் எஸ்.பி.காலனியை சேர்ந்தவர் வீரக்குமார்(வயது31).

    இவர் தனது நண்பர்களுடன் கடந்த 18-ந்தேதி கோவையில் உள்ள வெள்ளியங்கிரி மலைக்கு வந்தார்.

    பின்னர் தனது நண்பர்களுடன் மலையேறி சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து நண்பர்களுடன் கீழே இறங்கி கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக வீரக்குமார் கால் தவறி 7-வது மலையில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு வயிறு, காலில் படுகாயம் ஏற்பட்டது.

    இதை பார்த்த அவரது நண்பர்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக வனத்துறையினர் விரைந்து வந்து, மலைவாழ் மக்களுடன் சேர்ந்து வீரக்குமாரை மீட்டு, டோலி கட்டி மலையில் இருந்து மலையடிவாரத்திற்கு கொண்டு வந்தனர்.

    அவரை பூலுவப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்து முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த வீரக்குமார் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 1,200 கன அடி தண்ணீர் வீதம் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
    • நேற்று 54.83 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 54.66 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 20.87 டி.எம்.சி.யாக உள்ளது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை மற்றும் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் ஆகியவற்றை பொறுத்தே மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படும். தற்போது மேட்டூர் அணைக்கு 100 கன அடிக்கும் கீழ் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நேற்று 57 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்றும் அதே நிலை நீடிக்கிறது. அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 1,200 கன அடி தண்ணீர் வீதம் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் நீரை விட திறப்பு அதிகமாக உள்ளதால் நேற்று 54.83 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 54.66 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 20.87 டி.எம்.சி.யாக உள்ளது.

    ×