search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடும்ப தகராறில் மூதாட்டி கத்தியால் குத்திக்கொலை- கணவர் கைது
    X

    குடும்ப தகராறில் மூதாட்டி கத்தியால் குத்திக்கொலை- கணவர் கைது

    • பிள்ளைகளுக்கு நிலத்தை பிரித்து கொடுப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது.
    • கணவன்-மனைவிக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மகராஜகடை பகுதியில் உள்ள பெலவர்த்தியை அடுத்த காட்டூரை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 72), விவசாயி. இவருடைய மனைவி லட்சுமி (63). இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். ராமமூர்த்தி கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று மனைவியிடம் பிள்ளைகளுக்கு நிலத்தை பிரித்து கொடுப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது கணவன்-மனைவிக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த, ராமமூர்த்தி அருகில் கிடந்த கட்டையால் மனைவி லட்சுமியை சரமாரியாக தாக்கினார்.

    இருப்பினும் ஆத்திரம் அடங்காத அவர், கத்தியால் மனைவியை சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த லட்சுமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

    இந்த சம்பவம் குறித்து மகராஜகடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராமமூர்த்தியை கைது செய்தனர்.

    மகராஜகடை அருகே குடும்ப தகராறில் மூதாட்டியை அவரது கணவரே கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×