search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மரக்காணம் அருகே குழந்தைகளை கடலில் வீசி கொன்ற தந்தை
    X

    மரக்காணம் அருகே குழந்தைகளை கடலில் வீசி கொன்ற தந்தை

    • பெண் குழந்தையின் உடலும் கரை ஒதுங்கி கிடந்தது.
    • ஆனந்த வேலு எங்குள்ளார் என்ற விபரம் தெரியவில்லை.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கூனிமேடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த வேலு (வயது 33). இவர் தற்பொழுது புதுவை மாநிலம் காலாப்பட்டு பகுதியில் உள்ள சுனாமி குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    ஆனந்த வேலுக்கும் அவரது மனைவி கவுசல்யாவிற்கும் கடந்த வாரம் குடும்ப பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆனந்த வேலு தனது குழந்தைகளான ஜோவிதா (4), ஒன்றரை வயது பெண் குழந்தை சஸ்மிதா ஆகியோரை அழைத்துக் கொண்டு கூனிமேடு குப்பத்திற்கு கடந்து 10-ந் தேதி வந்துவிட்டார்.

    இவர் தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு நேற்று மதியம் வெளியில் சென்றுள்ளார். இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. மனைவியை பார்க்க சென்றிருக்கலாம் என உறவினர்கள் நினைத்திருந்தனர்.

    இந்த நிலையில் கூனிமேடு கடற்கரையோரம் ஒரு பெண் குழந்தையின் உடலும், அனுமந்தைகுப்பம் கடற்கரை ஓரம் ஒரு பெண் குழந்தையின் உடலும் கரை ஒதுங்கி கிடந்தது.

    இதனை கண்ட மீனவர்கள் இது குறித்து மரக்காணம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மேலும், இத்தகவல் அப்பகுதி முழுவதும் காட்டுத்தீ போல பரவியது.

    பொதுமக்கள் விரைந்து சென்று பார்த்த போது, கரை ஒதுங்கி கிடந்த குழந்தைகளின் உடல் ஆனந்தவேலுவின் பெண் குழந்தைகள் என தெரியவந்தது. உடனடியாக அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் ஆனந்த வேலு எங்குள்ளார் என்ற விபரம் தெரியவில்லை.

    தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மரக்காணம் போலீசார், 2 பெண் குழந்தைகளின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவை மாநிலத்தில் உள்ள பிம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    குடும்ப பிரச்சினை காரணமாக ஆனந்தவேலு தனது குழந்தைகளுடன் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது பெண் குழந்தைகளை கடலில் வீசி கொலை செய்துவிட்டு அவர் தலைமறைவாகி விட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆனந்தவேலு அல்லது அவரது உடல் கரை ஒதுங்கினால் மட்டுமே நடந்தது என்ன என்பது தெரியவரும் என போலீசார் கூறினர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண் குழந்தைகளின் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×