search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காங்கிரசுக்கு துரோகம் செய்பவர்களை தலைவர்களின் ஆன்மா மன்னிக்காது-செல்வபெருந்தகை
    X

    காங்கிரசுக்கு துரோகம் செய்பவர்களை தலைவர்களின் ஆன்மா மன்னிக்காது-செல்வபெருந்தகை

    • இனிமேல் கட்சியில் வேலை செய்தால்தான் பதவி.
    • நமக்கு செல்வாக்கு இல்லாத காரணத்தினால் நம்மை மிரட்டுகிறார்கள்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் நடைபெற்ற மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்வபெருந்தகை கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் 40 சதவீதம் வாக்கு வங்கி நாம் வைத்திருந்தோம். தற்போது எந்த அளவிற்கு உள்ளது என்று நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். குறை நம்மிடம் தான் உள்ளது. நாம் மற்றவர்களை குறை சொல்லக்கூடாது. நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் வீட்டில் உள்ளவர்களை காங்கிரஸ் கட்சியில் சேருங்கள்.

    நம்மிடம் கட்டமைப்பு உள்ளது. இனிமேல் கட்சியில் வேலை செய்தால்தான் பதவி, பதவி வாங்கி வைத்துக்கொண்டு சும்மா உட்கார்ந்து இருப்பவர்களின் பதவி பறிக்கப்படும். நாம் கட்சி பணி செய்யவில்லை என்றால் பெருந்தலைவர்கள், தியாகிகளின் ஆன்மாக்கள் நம்மை மன்னிக்காது.

    ராகுல்காந்தி என் ரத்தம் இந்த மண்ணில் உள்ளது என்று கூறியுள்ளார். அது என்னவென்று உங்கள் அனைவருக்கும் தெரியும். அவரைப்போல் அனைவரும் பாடுபட வேண்டும். நம்மிடம் செல்வாக்கு இல்லாத காரணத்தினால் தான் அண்ணாமலை இறுமாப்புடன் நம் கட்சியை பற்றி பேசி வருகிறார்.

    ஒற்றுமை இருந்தால், செல்வாக்கு இருந்தால் நம் மீது கை வைக்கும் பொழுது கிராமம், நகரம் என அனைத்து இடங்களிலும் பஸ், வேன், லாரி ஏன் விமானத்தை கூட மறித்தால் நம் பலம் அவர்களுக்கு புரியும்.

    நமக்கு செல்வாக்கு இல்லாத காரணத்தினால் நம்மை மிரட்டுகிறார்கள். சமயங்களில் கூட்டணி கட்சிகளுடன் சிறு மனக்கசப்புகள் ஏற்படுகிறது.

    2026 சட்டமன்ற தேர்தலுக்கு சரியாக 23 மாதங்கள் இருந்தாலும் 18 மாதங்களுக்குப் பிறகு தேர்தல் காய்ச்சல் வந்துவிடும். ஆகவே நமக்கு இன்னும் 18 மாதங்கள் தான் உள்ளது. அதற்குள் நாம் கட்சியை வளர்த்தாக வேண்டும்.

    பெரம்பலூர் சிறிய மாவட்டம் என்பதால் முதலில் இங்கு கட்சியை பலப்படுத்த வேண்டும். அண்ணாமலை, இந்திரா காந்தியை பற்றியும், நேருவை பற்றியும் அவதூறாக பேசி வருகிறார். ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் நாட்டை விட்டு ஓட பார்த்தார்களாம். இவரா பிடித்து அழைத்து வந்தார்.

    என்ன அப்பட்டமான பொய் சொல்கிறார், 2026 தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு என்று ஓர் இடத்தை நாம் உருவாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×