search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மதுபோதை தகராறில் நண்பரை அடித்துக்கொன்ற 4 பேர் கும்பல்
    X

    மதுபோதை தகராறில் நண்பரை அடித்துக்கொன்ற 4 பேர் கும்பல்

    • மதுபோதை அதிகரித்ததால் நண்பர்களுக்குள்ளான ஏற்பட்ட வாக்குவாதம் தகராறாக மாறியுள்ளது.
    • வட மாநில தொழிலாளி கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த ஆஸ்டின்பட்டி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட மதுரை துணைக்கோள் நகரப்பகுதியில் கொலை சம்பவம் நடந்துள்ளதாக நேற்று இரவு போலீசாருக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து ஆஸ்டின்பட்டி போலீசார் துணைக்கோள் நகர பகுதி முழுவதும் சல்லடை போட்டு தேடினர்.

    இந்தநிலையில் அப்பகுதியில் இருந்த தனியார் கல்லூரியின் பின்புறம் உள்ள துணைக்கோள் நகர கீழ் நிலை நீர்த்தேக்க தொட்டி மோட்டார் அறையின் அருகே முட்புதரில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடல் முழுவதும் காயங்கள் இருந்தன. மேலும் அந்த இடம் முழுவதும் மதுபாட்டில், பீர் பாட்டில்கள் உடைந்து கிடந்தன.

    உடனே போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதில் பிணமாக கிடந்தவர் மதுரை தெற்கு வாசல் பகுதியைச் சேர்ந்த மீரா கனி என்பவரது மகன் இஸ்மாயில் (வயது 20) என்பது தெரிய வந்தது. அவர் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் கிடைத்தன. அதன் விபரம் வருமாறு:-

    அதே பகுதியைச் சேர்ந்த சக்தி (25), கீரைத்துறையைச் சேர்ந்த வசந்த் (20), மாடக்குளம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (20), அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த திருமூர்த்தி (21) ஆகியோர் இஸ்மாயில் நண்பர்கள் ஆவார்கள். அவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் இரவு திருமங்கலம் அருகே உள்ள உச்சப்பட்டி துணைக்கோள் நகர் பகுதிக்கு வந்து அங்கிருந்த கீழ் நிலை நீர் தேக்க தொட்டி அறையில் அமர்ந்து மது அருந்தி உள்ளனர்.

    மதுபோதை அதிகரித்ததால் நண்பர்களுக்குள்ளான ஏற்பட்ட வாக்குவாதம் தகராறாக மாறியுள்ளது. சிறிது நேரத்தில் அதுவே முற்றி கைகலப்பானது.

    இதில் ஆத்திரமடைந்த ஒருவர் பீர் பாட்டிலால் இஸ்மாயிலை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த இஸ்மாயில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். ஒரு சில விநாடிகளில் அவர் இறந்துள்ளார்.

    இதனை உணராத நண்பர்கள் மதுபோதையில் அங்கேயே படுத்து உறங்கி உள்ளனர். நேற்று காலை எழுந்து பார்த்தபோது இஸ்மாயில் இறந்து கிடந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து கொலையை மறைப்பதற்காக இஸ்மாயில் உடலை தூக்கி அருகில் இருந்த முட்புதருக்குள் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    பின்னர் இஸ்மாயில் நண்பரான சக்திவேல் நடந்த சம்பவம் குறித்து தனது வழக்கறிஞரிடம் தெரிவித்துள்ளார். வக்கீல் மூலம் ஆஸ்டின்பட்டி போலீசாருக்கு கொலை சம்பவம் தெரிய வந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து இஸ்மாயில் உடலை கைப்பற்றிய போலீசார் அவரது பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து இஸ்மாயில் நண்பர்கள் 4 பேரையும் கைது செய்து ஆஸ்டின்பட்டி போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். மதுபோதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்த சம்பவமும், இதே பகுதியில் நேற்று முன்தினம் எய்ம்ஸ் மருத்துவமனை அலுவலகம் அருகே நடைபெற்ற வட மாநில தொழிலாளி கொலை சம்பவமும் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் அந்த கொலையில் துப்பு துலங்காத நிலையில் அடுத்த கொலை அரங்கேறி உள்ளது.

    துணைக்கோள் நகரப்பகுதி ஆள் நடமாட்டம் இல்லாத இடம் என்பதால் குற்ற சம்பவங்கள் அதிக அளவில் நடப்பதாக அப்பகுதியினர் தெரிவித்தனர். இந்தநிலையில் மதுரை புறநகர் பகுதியில் நான்கு நாட்களுக்குள் அடுத்தடுத்து 3 கொலைகள் மற்றும் பெருங்குடி பகுதியில் சிறுவன் உள்பட 5 பேர் வெட்டப்பட்ட சம்பவம் என குற்றம் சம்பவங்கள் அதிகரித்து போலீசாரை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

    Next Story
    ×