search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
    X

    ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

    • 2-வது நாளாக இன்றும் அதே நிலை நீடிப்பதால் மீனவர்களின் பாதுகாப்பு கருதி கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை விதித்தது.
    • 8 ஆயிரம் விசைப்படகு மீனவர்கள் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

    ராமேசுவரம்:

    தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மேலும் வங்ககடலில் உருவாகி உள்ள வளிமண்டல தாழ்வு நிலை காரணமாக கடற்கரை மாவட்டங்களில் 60 கி.மீ.வரை சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

    அதன்படி கடற்கரை மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கடற்கரை பகுதிகளில் சூறாவளி காற்று வீசி வருகிறது. குறிப்பாக மன்னார் வளைகுடா, பாக்நீரிணை கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனால் நேற்று மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 2-வது நாளாக இன்றும் அதே நிலை நீடிப்பதால் மீனவர்களின் பாதுகாப்பு கருதி கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை விதித்தது.

    இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தேவிபட்டணம், சோளியகுடி, தொண்டி, கீழக்கரை, ஏர்வாடி, மூக்கையூர் உள்ளிட்ட பகுதியில் 1,500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் அந்தந்த துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. 8 ஆயிரம் விசைப்படகு மீனவர்கள் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

    ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் 560-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் பாதுகாப்புடன் நிறுத்தும்பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×