search icon
என் மலர்tooltip icon

    உலகம் (World)

    வங்கதேச அதிபரை பதவி விலக வலியுறுத்தி திடீர் போராட்டம்
    X

    வங்கதேச அதிபரை பதவி விலக வலியுறுத்தி திடீர் போராட்டம்

    • ஷேக் ஹசீனா கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார்.
    • ராஜினாமா செய்ததற்கான எந்த ஆவணங்களும் இல்லை என ஜனாதிபதி தெரிவித்ததால் ஆத்திரம்.

    வங்கதேசத்தின் பிரதமராக இருந்தவர் ஷேக் ஹசீனா. இடஒதுக்கீடு தொடர்பாக போராட்டம் நடத்திய மாணவர்கள், ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் நாடு தழுவிய வகையில் தீவிரம் அடைந்ததால், ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நாட்டை விட்டு வெளியேறினார்.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன், டி.வி. சேனலுக்கு பேட்டியளித்த வங்கதேச அதிபர் முகமது ஷகாபுதீன், கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ந்தேதி ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்தாக பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததற்கான எந்த ஆவணங்களும் தன்னிடம் இல்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.

    அதிபரின் இந்த பேச்சு ஷேக் ஹசீனாவுக்கு எதிரானவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. நூற்றுக்கணக்கானவர்கள் அதிபர் மாளிகை முன் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிபர் ராஜினாமா செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

    இதனால் அதிபர் மாளிகையில் போலீசார் குவிக்கப்பட்டனர். ராணுவ வீரர்களும் வரவேண்டிய நிலை ஏற்பட்டது. ராணுவ வீரர் போராட்டக்காரர்களை பார்த்து கலைந்து செல்லுமாறு வலியுறுத்தினர். அதன்பின் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

    ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு தப்பியோடியதை தொடர்ந்து இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

    Next Story
    ×