search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரி அரசியலில் மீண்டும் பரபரப்பு... பா.ஜ.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் நாளை டெல்லி பயணம்
    X

    புதுச்சேரி அரசியலில் மீண்டும் பரபரப்பு... பா.ஜ.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் நாளை டெல்லி பயணம்

    • பா.ஜ.க. மாநில பொறுப்பாளராக மீண்டும் நியமிக்கப்பட்ட நிர்மல்குமார் சுரானா நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
    • உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திக்க பா.ஜ.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு அனுமதி கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் என்.ஆர். காங்., பா.ஜனதா கூட்டணி சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அமைச்சர் நமச்சிவாயம் தோல்வி அடைந்தார்.

    தோல்விக்கு பொறுப்பேற்று தற்போதுள்ள அமைச்சர்களை மாற்ற வேண்டும் என பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார், ரிச்சர்டு, வெங்கடேசன், மற்றும் பா.ஜ.க. ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் அங்காளன், சிவசங்கரன், கொல்லப்பள்ளி சீனிவாஸ் அசோக் ஆகியோர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

    ரகசிய கூட்டம் நடத்திய கையோடு, மாநில பா.ஜனதா மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி.யுடன் டெல்லி சென்று தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, கட்சியின் அமைப்பு செயலாளர் சந்தோஷ், மத்திய மந்திரி அர்ஜூன் ராம் மெக்வால் ஆகியோரை சந்தித்தனர். ஆனால் உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திக்க முடியாமல் திரும்பினர்.

    இதற்கிடையே பா.ஜ.க. மாநில பொறுப்பாளராக மீண்டும் நியமிக்கப்பட்ட நிர்மல்குமார் சுரானா நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரி வந்த மத்திய மந்திரி கிஷன்ரெட்டியை சந்தித்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், முதல்- அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை தெரிவித்ததால், சமரச முயற்சி தோல்வியில் முடிந்தது.

    இந்நிலையில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திக்க பா.ஜ.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு அனுமதி கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால், அதிருப்தி எம். எல்.ஏ.க்கள் நாளை (திங்கட்கிழமை) மாலை டெல்லி செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திக்கும் பா.ஜ.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்கள் மற்றும் முதல்-அமைச்சர் மீது புகார் தெரிவிப்பதோடு புதுச்சேரி அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தர வேண்டும் என வலியுறுத்துவார்கள் என கூறப்படுகிறது. இதனால் புதுச்சேரி அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×