என் மலர்
வழிபாடு
- ஆன்மாவின் பாவ புண்ணிய கணக்குகள் விசாரிக்கப்படும்.
- நினைத்தாலோ, தரிசித்தாலோ, பெயரைச் சொன்னாலோ முக்தியை கிடைக்கும்.
பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப ஆன்மா பிறப்பதும் மறைவதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பிறப்பெடுத்த ஜீவன் மறைந்ததும் வைகுண்ட வாசலை நோக்கி செல்கிறது. அப்போது அங்கு அந்த ஆன்மாவின் பாவ புண்ணிய கணக்குகள் விசாரிக்கப்படும். அநேக புண்ணியங்களை செய்த ஆன்மா வைகுண்டத்தில் அனுமதிக்கப்பட்டு பரமபதத்தை அடையும். பாவம் செய்த ஆன்மாக்கள் நரகத்துக்கு அனுப்பப்படும் என்பது நம்பிக்கை.
பாவங்கள் செய்த ஆன்மா என்றாலும், பரம்பொருளின் கருணையால், இறுதி வாய்ப்பாக இந்த கேள்வி கேட்கப்படும். 'பூலோக வைகுண்டமாம் திருவெள்ளறையின் திருக்கோபுரத்தை தொலைவிலாவது தரிசித்த புண்ணியம் உமக்குண்டா!' ஆம் என்று அந்த ஆன்மா கூறினால், அந்த ஆன்மா உடனே வைகுண்டத்தில் அனுமதிக்கப்படுமாம்.
நினைத்தாலோ, தரிசித்தாலோ, பெயரைச் சொன்னாலோ முக்தியை அளிக்கும் திருவெள்ளறை கோயில் திருவரங்கத்துக்கு இணையான பெருமை கொண்டது என்பார்கள் பெரியோர்கள். சோழ நாட்டு திவ்ய தேசங்களில் இது நான்காவது திருத்தலம்.
திருமகள் ஷேத்திரம், ஸ்வேதகிரி, நீலிகா வனம், வராகபுரி, உத்தம ஷேத்திரம், ஹித ஷேத்திரம் என்றெல்லாம் போற்றப்படுகிறது திருவெள்ளறை. சிபி மன்னன் காலத்தில் திருமாலோடு 3700 வைஷ்ணவ பெரியோர்கள் வாழ்ந்த தலம் இது.
மாலவனின் பக்தனான சிபி மன்னன் இங்கு வந்திருந்தபோது அவனுக்கு வராஹ மூர்த்தி அருட்காட்சி தந்து ஆட்கொண்டார். அப்போது மார்க்கண்டேய மகரிஷியின் ஆணைப்படி இங்கு திருமாலுக்கு பிரமாண்ட ஆலயம் எழுப்பி வழிபட்டான் சிபி. திருமகள் தவமிருந்து பெருமாளை அடைந்த தலமும் இது. இங்குள்ள பெருமாள் ஸ்ரீபுண்டரீகாட்ச பெருமாள் எனப்படுகிறார். ஆம், அழகிய தாமரை கண்களைக் கொண்டவர் இவர்.
கருவறையில் நின்ற திருக்கோலத்தில், கிழக்கு திருமுக மண்டலமாக காட்சி தருகிறார் ஶ்ரீபுண்டரீகாட்சப் பெருமாள். பெருமாளுக்கு அருகே சூரிய, சந்திரா் சாமரம் வீச, கருடனும் ஆதிசேஷனும் நின்ற திருக்கோலத்தில் பெருமாளை வணங்கிக் கொண்டிருக்கின்றனர். பெருமாளின் திருவடியில் மார்க்கண்டேயர் தவம் செய்யும் கோலத்தில் அமா்ந்துள்ளார்.
திருவெள்ளறை தலத் தீர்த்தமான பூங்கிணற்றில் திருமகள் பங்கஜவல்லி (பங்கயச்செல்வி) தவமிருந்த வேளையில் திருமால் ஆலிலை துயின்ற ஆதிபிரான் கோலத்தில் காட்சி அளித்து திருமகளுக்கு அருள் செய்தார். எனவே ஸ்ரீபுண்டரீகாட்ச பெருமாள் கிருஷ்ணனின் அம்சமானவர் என்றும் கூறப்படுகிறது. பங்கயச் செல்வி, பரிமளதேவி, செண்பகவல்லி என்றெல்லாம் போற்றப்படும் தாயாருக்கே இங்கு எல்லா முதல் மரியாதையும் என்பது இங்கு விசேஷத் தகவல். பெருமாள் வழங்கிய வரத்தின்படி இன்றும் எல்லா உற்சவத்திலும் தாயாரே முன்னே செல்வார். திருமால் அவரைப் பின்தொடர்ந்து செல்வார்.
இத்தலத்து பெருமாளை பெரியாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் 24 பாசுரங்களில் பாடி பெருமை சேர்த்துள்ளார்கள். கூட நிகமாந்த மகாதேசிகரும் மணவாள மாமுனிகளும் மங்களாசாசனம் செய்த தலமும் கூட இது. ஸ்ரீராமானுஜரின் சீடரான எங்களாழ்வார் பிறந்த தலமும் திருவெள்ளறையே. ராமானுஜர் இங்கு வந்தபோது தாயாருக்கு நைவேத்தியம் செய்த பிரசாதத்தை ராமானுஜருக்கு அளித்து பசி போக்கினாராம். அதனால் இன்றும் தாயாருக்கு அமுது செய்யப்பட்ட பிரசாதமே ராமானுஜருக்கு படைக்கப்படுகிறது.
இங்குள்ள சுவஸ்திக் வடிவ திருக்குளமும் உத்தராயன - தட்சிணாயன வாசல்களும் சிறப்பானவை. பெருமாள் சந்நிதிக்கு இரு வாசல்கள் படியேறிச் செல்லும் வகையில் உள்ளன. ஆன்மாக்கள் உய்வு பெற, தை முதல் ஆனி மாதம் வரை உத்தராயன வாசல் வழியாகவும், ஆடி முதல் மார்கழி மாதம் வரை தட்சிணாயன வாசல் வழியாகவும் சென்று வழிபடும் முறை இன்றும் உள்ளது.
இங்குள்ள புகழ்பெற்ற 'ஸ்வஸ்திக் குளம்' என்ற சக்கரக்குளத்தின் சிறப்பு, ஒரு துறையில் குளிப்பவா்களை எதிர் துறையில் குளிப்பவா்கள் பார்க்க முடியாது என்பதே. ஸ்வஸ்திக் வடிவ நான்கு புறத்திலும் 52 படிகள் உள்ளன. இக்குளத்தினை `நாலு மூலைக்கேணி, மாற்பிடுகு பெருங்கிணறு' என்றும் அழைப்பர்.
ஶ்ரீதேவி, பூதேவி, சூரியன், சந்திரன், ஆதிசேஷன், குபேரன் ஆகியோர் இன்றும் அன்றாடம் இங்குள்ள சுவாமியை வழிபடுவதாக ஐதீகம். திருமகள் தங்கி இருந்த பூங்கிணறு, திவ்ய தீா்த்தம், வராஹ தீா்த்தம், குசஹஸ்தி தீா்த்தம், சந்திர புஷ்கரணி தீா்த்தம், பத்ம தீா்த்தம், புஷ்கல தீா்த்தம், மணிகா்ணிகா என 8 தீர்த்தங்கள் இங்கு உள்ளன.
ஈராயிரம் ஆண்டுகளைக் கடந்த ஆலயத்தில் பல்லவமன்னன் தந்திவா்மன் காலத்து (805-ம் ஆண்டு) கல்வெட்டு தொடங்கி விஜயநகர அரசர்கள் காலத்து கல்வெட்டுகள் வரை இந்த ஆலயத்தின் பெருமைகளைக் கூறுகின்றன. வரலாற்று பெருமைகளும் புராண மகிமைகளை கொண்ட இந்த திருவெள்ளரைத் திருத்தலம் திருமகளின் பரிபூரண கடாட்சத்தைக் கொண்டுள்ளது.
அதேபோல் கருணைக் கடலான செந்தாமரைக் கண்ணனாம் புண்டரீகாட்சப் பெருமானின் அருளையும் கொண்டுள்ளது. வாய்ப்பு கிடைப்பவர்கள் திருவெள்ளரைத் திருத்தலத்துக்கு சென்று வாருங்கள். செய்த வினைகள் யாவும் அழிந்து எளிதில் பெருமானின் கருணைக்கு ஆளாகலாம் என்பது ஆன்றோர் வாக்கு.
அமைவிடம்:
திருச்சியில் இருந்து துறையூர் செல்லும் பாதையில் 20 கி.மீ தொலைவில் மண்ணச்சநல்லூர்க்கு அருகில் திருவெள்ளறை திருத்தலம் உள்ளது.
- எறும்புகள் நுழைவதற்காக துளைகளை விட்டு செதுக்கிய சிலை.
- கதவுகல் 120 கூரிய உலோகக் குமிழ்கள் அமைக்கப்பட்டுள்ளன.
உலகத்திலேயே மிகச்சிறிய உயிரினமான எறும்புகள் நுழைவதற்காக துளைகளை விட்டு செதுக்கிய சிலை இந்த கோயிலில் மட்டும்தான் உள்ளது.
தொன்று தொட்டு விளங்கிவரும் தமிழ் பாரம்பரியத்தில் கட்டிடக்கலைக்குப் புகழ்பெற்றவர்கள் தமிழர்கள். தமிழர்களின் கட்டிடக்கலைக்கு மிகப்பெரிய சான்றாக தஞ்சை பெரிய கோயில் உள்ளது. அதைப்போலவே அரிய பொக்கிஷமாகத் திகழும் தாரமங்கலம் கயிலாசநாதர் ஆலயம் உள்ளது. தாரமங்கலம் சேலத்தில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ளது.
மேற்கு பார்த்தபடி அமைந்த சிவன் கோயில் இது, இந்த பழைமையான சிவன் கோயில் தமிழர்களின் சிற்பக்கலைகளுக்கு மேலும் ஒரு சான்று எனலாம். இந்த கோயிலில் மூலவர் கயிலாசநாதர், தாயார் கற்பகாம்பாள் அருள் பாலிக்கிறார்கள்.
இக்கோயிலிலுள்ள இறைவனை சந்திரனும், சூரியனும் வந்து தொழுது செல்வதாக கூறப்படுகிறது. இந்த ஊருக்கு தாரமங்கலம் என்று பெயர் வரக்காரணம், சிவபெருமானுக்கும், பார்வதிக்கும் இங்கு திருமணம் நடந்தது என்றும், திருமால் தாரை வார்த்துக் கொடுத்து மணவிழாவினை நடத்தியதால் 'தாரமங்கலம்' என்ற பெயர் வந்ததென்றும் கூறுவர்.
தல வரலாறு:
கிபி 12-ம் நூற்றாண்டில் கெட்டி முதலியார் இங்கு ஆட்சி செய்து வந்தார். அப்போது பசுக்கள் தினந்தோறும் மேய்ச்சலுக்கு போகும்போது ஒரு பசு மட்டும் குறிப்பிட்ட புற்றினில் தினமும் பால் சுரக்கிறது என்று தகவல் வந்தவுடன் அவர் அந்த புற்றை தோண்டி பார்த்தபோது சிவலிங்கம் காணப்பட்டது. அதனால் அவர் அங்கேயே வழிபாடு செய்ததாகவும் பிறகு வந்த மன்னர்கள் அங்கு கோயில் எழுப்பியதாகவும் வரலாற்றில் கூறப்படுகிறது.
கோயிலின் சிறப்புகள்:
இக்கோயிலிலுள்ள இறைவனை சந்திரனும், சூரியனும் வந்து தொழுது செல்வதாகக் கூறப்படுகிறது. ஆண்டுதோறும் உத்தராயண, தட்சணயான புண்ணிய காலங்களில் மாலை வேளையில் சூரியனின் கதிர்களும், சந்திரன் ஒளியும் சிவலிங்கத்தின் மீது படுகின்றன.
அதாவது, சூரிய ஒளி மூலஸ்தான சிவலிங்க மூர்த்தி மேல் விழுவதை சூரிய பூஜை என்று கூறுவர். சூரியனுடைய கதிர்கள் ராஜகோபுர வாயிலின் வழியே வந்து, நந்தி மண்டபத்தின் ஊடே புகுந்து, பின் மூன்று உள்வாயிலையும் கடந்து சிவலிங்கத்தின் மேல் படுவது அபூர்வமாக கருதப்படுகிறது.
சந்திரனுக்கும், சூரியனுக்கும் தாரகாபதி, தாரகன் என்ற பெயர்கள் இருப்பதால் தாரமங்கலம் என்ற பெயர் உண்டாயிற்று என்றும் கூறுவார்கள். கோயிலில் உள்பிரகார தூண்கள் எல்லாவற்றிலும் அற்புதமான சிற்ப வேலைப்பாடு அமைந்த திருவுருவங்கள் காணப்படுகின்றன. கோயில் என்பது இறைவனின் இருப்பிடம் என்பதைத் தாண்டி மக்களின் 'பாதுகாப்பு அரண்' என்னும் கொள்கையில் இந்தக் கோயில் அமைந்துள்ளது.
எதிரி நாட்டு படை தாக்க வரும்போது பொன், பொருள், மக்களைப் பாதுகாக்கும் வீதம் இந்த கோயில் அமைக்கப்பட்டுள்ளது. ராஜகோபுரம் 90 அடி உயரம் கொண்டது. வாசலில் 20 அடி கொண்ட வேங்கை மரத்தினாலான கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு கதவுகளிலும் 60 கூர்மையான உலோகக் குமிழ்கள் வீதம் மொத்தம் 120 கூரிய உலோகக் குமிழ்கள் அமைக்கப்பட்டுள்ளன. யானை வைத்து கதவுகளை உடைக்கும் அந்த காலத்தில் யானை முட்டி மோதி உடைக்கும் போது குத்தி கிழித்துவிடும்படி நுணுக்கமாக இவை அமைக்கப்பட்டுள்ளன.
சிங்கமுகமும் மனித தலையும் கொண்ட யாழியின் வாயில் உள்ள கல் உருண்டையை நாம் எவ்வாறு வேண்டுமானலும் உருட்டலாம் ஆனால் கல்லை வெளியே எடுக்க முடியாது. கோபுரத்தை அடுத்துள்ள சிவப்பு பவளக்கல் படிகளில் 5 நிமிடம் அமர்ந்தாலே போதும் நம் உடலில் உள்ள வெப்பம் தணிந்து விடும். இந்த சிறப்புகள் தமிழ்நாட்டில் எங்கேயும் கிடையாது.
இந்த கோயிலின் கோபுரங்கள் ஒரு தேர் போலவும் யானைகள் குதிரைகள் கட்டி இழுப்பதுபோலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது சிறப்பு.
உலகத்திலேயே மிகச்சிறிய உயிரினமான எறும்புகள் நுழைவதற்காக துளைகளை விட்டு செதுக்கிய சிலை இந்த கோயிலில் மட்டும்தான் உள்ளது. எறும்புகள் நுழைந்து வரும் அளவுக்கு மட்டுமே துவாரம் உள்ள ஒரு மனிதனின் முகம் அமைக்கப்பட்டுள்ளது.
ஊர்ந்து கொண்டிருக்கும் எறும்புகள் அந்த சிற்பத்தின் காது வழியாக உள்ளே சென்று பின்னர் மூக்கு வழியாக வெளியே வரலாம். பிறகு தாடியில் உள்ள துவாரங்கள் வழியே உள்ளே நுழைந்து மறுபக்கம் சென்று மற்றொரு காது வழியாக வெளியே செல்லும் வகையில் நுண்ணிய துவாரங்களைக் கொண்டதாகக் கல்லில் சிலை செதுக்கியுள்ளனர்.
வளைந்த வாளுடனும், நீண்ட தாடி, தலைப்பாகையுடனும் படை எடுத்துவரும் மாலிக்கபூரின் வீரர்கள், அதை எதிர்த்து குறுவாள், கேடயத்துடன் எதிர்கொள்ளும் தமிழக மன்னர்களின் போர்க் காட்சிகள் பல இங்கு செதுக்கப்பட்டுள்ளன.
சோழ, பாண்டிய நாடுகளில் இருந்த செல்வங்களை எல்லாம் கொள்ளையிட்ட பின்னர் அவற்றைத் தன்னுடன் வந்திருந்த யானை மற்றும் ஒட்டகங்களின் மீது பொதி மூட்டையாய் ஏற்றிக் கொண்டு திரும்பிச் செல்லும் காட்சியும் சித்திரங்களாக உள்ளது.
தன்னுடைய தாய் நாட்டுக்குத் திரும்பிச் செல்லும் மாலிக்கபூரை இப்பகுதியில் வழிமறித்துத் தாக்குதல் நடத்த கெட்டி முதலியின் வீரர்கள் போர் வியூகம் அமைத்துள்ள காட்சி.
பின்னர், மதுரையில் கொள்ளையடித்த செல்வங்களை எல்லாம் யானை மற்றும் ஒட்டகங்களின் மீது ஏற்றிக் கொண்டு வந்த மாலிக்கபூரின் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்கள் கொண்டு வந்த செல்வங்களை எல்லாம் கெட்டி முதலியின் வீரர்கள் பறித்துக்கொண்ட பிறகு, முதுகில் சுமையில்லாமல் யானை ஒன்று மாலிக்கபூரோடு செல்வது போன்ற ஒரு காட்சி போன்றவை ஆலயத்தின் சுற்றுச்சுவரில் செதுக்கப்பட்டுள்ளன.
அந்த செல்வங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தைக் காட்டும் வகையில் சில குறிப்புகளை இந்த சித்திரங்களில் காட்டியுள்ளனர். வாழ்வில் கட்டாயம் காண வேண்டிய சிற்பக் களஞ்சியமாக இந்த கோயில் அமைந்துள்ளது.
- வனம் ஆளும் தேவதையாக பண்ணாரி மாரியம்மன் உள்ளார்.
- மாரியம்மன் வரலாறு மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.
மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் பண்ணாரியில் அமைந்துள்ளது பண்ணாரி மாரியம்மன் கோவில். இக்கோவிலானது சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதிக்கு மிகவும் அருகில் அமைந்துள்ளது. பொதுவாகவே கொங்குமண்டலத்தை பொறுத்தவரை எல்லை காவல் தெய்வங்களையும், பெண் தெய்வங்களையும் அதிகமாகவே போற்றி வணங்குவார்கள்.
அந்த வகையில் சக்தி பண்ணாரி மாரியம்மன் தமிழ்நாட்டில் இருந்து, கர்நாடகா மலையேற்றப்பகுதியில் காவல் தெய்வமாகவும், நீங்காத புகழ் கொண்ட பெண் தெய்வமாகவும் விளங்கிவருகிறது. இக்கோவிலின் கம்பீரமான தோற்றமும், விசாலமான நிலப்பரப்பும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.
சுற்றிலும் வனப்பகுதி, சுற்றித் திரியும் சிறிய வகை வன உயிரினங்கள், அரணாக மலை, அரண்மனை போல கோவில் இப்படி வனம் ஆளும் தேவதையாக பண்ணாரி மாரியம்மன் உள்ளார்.
தலவரலாறு
பண்ணாரி மாரியம்மன் வரலாறு மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் அமைந்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. அக்காலத்தில் சலவைத் தொழில் செய்யும் தம்பதி தங்களின் சலவைத் துணி துவைப்பதற்காக ஒரு பெரிய மலையின் கீழ் அமைந்து இருந்த ஆற்றுக்கு அவற்றை எடுத்து சென்றனர். அப்போது அந்த பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
சலவைத் துணி துவைக்கும் வேளையில் கடுமையான மழை பெய்து கொண்டு இருந்தது. அந்த சமயத்தில் அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. பின் அந்தக் கணவனோ தான் சலவைக்கு கொண்டு வந்த சேலைகளை கொண்டு நால்புறமும் கட்டி தன் மனைவிக்கு தானே பிரசவம் பார்த்துள்ளார். இரு பெண் குழந்தைகள் பிறந்ததாக புராண வரலாறும் செவி வழி வரலாறுமாக உள்ளது.
பின்னர் ஒரு குழந்தையை அவர் தூக்கியதாகவும் மற்றொரு குழந்தையை இருவராலும் தூக்க முடியவில்லை. பின் அவர்கள் அந்த குழந்தையை அருகில் இருந்த தாழியில் வைத்துவிட்டு மூவரும் சென்று நடந்ததை ஊர் தலைவரிடம் முறையிட்டுள்ளனர்.
பின்னர் அவர்களுடன் அந்த குழந்தை இருக்குமிடம் சென்று அந்த குழந்தையே தூக்க முடியவில்லை. பின் இரும்பு கடப்பாரை கொண்டு அந்த தாழியை தூக்க முற்பட்டனர். அப்போது அந்த குழந்தையின் வலது மார்பில் கடப்பாரை பட்டு ரத்தம் கசிந்துள்ளது. (அதை இன்றளவும் நாம் பூஜையில் உண்ணிப்பாக கவனித்தால் அம்மனின் வலது மார்பில் சிறு காயங்கள் தென்படும்). அந்த தாழியின் உள்ளையே இருந்த குழந்தை காலையில் சென்று பார்க்கும் பொழுது பெண் குழந்தை வடிவாகவே அம்மனாக எழுந்தருளி இருந்தது.
அம்மனே கனவில் வந்து தனக்கு திருவிழா நடத்த வேண்டும் என்றும் கூறியதாக வரலாறு கூறுகிறது. அதன்பிறகு ஊர் திருவிழா அன்று அனைவரும் கொங்கு பகுதி வழக்கப்படி பச்சை மாவு எடுத்து வடக்கு திசையில் சென்றனர்.
அப்போது அந்த சலவைத் தொழிலாளி பெண், தனது குடும்ப வறுமை காரணமாக பச்சைமாவுக்கு பதில் புளியங்கொட்டையை கொண்டு இடித்து அதில் மாவு செய்து தெற்கு நோக்கி கொண்டு சென்றிருந்தாள். அந்த புளிமாவுக்காக அம்மனே வடக்கிலிருந்து தெற்கு நோக்கி திரும்பி காட்சியளித்தாள். அது இன்றளவும் அம்மனின் அமைப்பு அப்படியே உள்ளது என்றும் நம்பப்படுகிறது.
இது இன்றளவும் வண்ணார் சமுதாய கடவுளாக, வண்ணார் பெண்ணாக காணப்படுகிறது. மேலும் கோவில் நிர்வாகம் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
பண்ணாரியம்மன் கோவில் ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் வட்டத்தில் உள்ளது பண்ணாரி மாரியம்மன் கோவில். சத்தியமங்கலத்திலிருந்து மைசூர் செல்லும் சாலையில் 12 கி.மீ. தொலைவில் தேசிய நெடுஞ்சாலை 209 ல் அமைந்துள்ளது.பண்ணாரி அம்மன் கோவிலில் இருந்து திம்பம் மலைப்பாதை ஆரம்பம்.
இக்கோவிலின் தெற்கே சுமார் 6 மைல் தொலைவில் பவானி ஆறு மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி ஓடுகிறது. இந்த ஆற்றில்தான் பவானிசாகர் அணை கட்டப்பட்டுள்ளது. இது மிகச்சிறந்த சுற்றுலா தலமாகும். சத்தியமங்கலம் வழியாக பண்ணாரி செல்லலாம். வழியில் நுணமத்தி, தோரணப் பள்ளம் என்ற இரண்டு பள்ளங்கள் உள்ளன. இவற்றில் தண்ணீர் நிறைந்திருக்கும்.
பண்ணாரியம்மன் திருக்கோவில் அழகிய கோபுரத்துடனும், அர்த்தமண்டபம், மகா மண்டபம், சோபன மண்டபம் முதலியவற்றுடன் தூண்களில் அற்புதமான சிற்ப வேலைப்பாட்டுடன் காணப்படுகிறது. வனத்தின் மேற்கே சுமார் 3 மைல் தொலைவில் ஓர் ஆலமரத்தினடியில் மாதேசுரசாமிக் கோவிலும், தீர்த்த கிணறும் உள்ளன.
- மதுரை ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் பின்னங்கிளி வாகனத்தில் பவனி.
- ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, புரட்டாசி 10 (புதன்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: திரயோதசி இரவு 9.06 மணி வரை பிறகு சதுர்த்தசி
நட்சத்திரம்: சதயம் நாளை விடியற்காலை 4.23 மணி வரை பிறகு பூரட்டாதி
யோகம்: சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று பிரதோஷம். திருமயிலை கற்பகாம்பாள் சமேத கபாலீசுவரர், திருவான்மியூர் திரிபுரசுந்தரியம்பாள் சமேத மருந்தீசுவரர், பெசன்ட்நகர் அரளாகேசியம்பாள் சமேத ரத்தினகிரீசுவரர், திருவிடைமருதூர் பிருகத்குசாம்பிகை சமேத மகாலிங்க சுவாமி கோவில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். லால்குடி பிரவிருத்த ஸ்ரீமதி என்கிற பெருதிருப்பிராட்டியார் சமேத சப்தரிஷீசுவரர் கோவிலில் மாலை சுவாமி-அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி. மதுரை ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் பின்னங்கிளி வாகனத்தில் பவனி. நரசிங்க முனையரையர் நாயனார் குருபூஜை, சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-கீர்த்தி
ரிஷபம்-துணிவு
மிதுனம்-உறுதி
கடகம்-லாபம்
சிம்மம்-சோர்வு
கன்னி-சாந்தம்
துலாம்- உயர்வு
விருச்சிகம்-அமைதி
தனுசு- உழைப்பு
மகரம்-கண்ணியம்
கும்பம்-உவகை
- ஏராளமான மருத்துவ மூலிகைகள் உள்ளன.
- சதுரகிரியில் உள்ள சிவலிங்கம் மட்டும் சாய்ந்த கோணத்தில் இருக்கும்.
நான்குபுறமும் மலை சூழ்ந்து இருப்பதாலும், இது சதுரமாக இருப்பதாலும் சதுரகிரி என்று அழைக்கப்படுகிறது. இந்த மலையில் ஏராளமான மருத்துவ மூலிகைகள் இருப்பதை தெரிந்துகொண்ட பல சித்தர்கள் இந்த இடத்தை தேர்வு செய்து தவம் செய்து வந்துள்ளனர்.
அதோடு தங்களை தேடி வரும் பக்தர்களுக்கு தீராத நோய்களை இங்கு கிடைக்கக்கூடிய மூலிகைகளை வைத்து வைத்தியம் செய்து வந்துள்ளனர். பழனி நவபாஷான முருகன் சிலையை போகர் சித்தர் தான் செய்தார் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். அவர்கள் இந்த சதுரகிரியில் தங்கி இருந்து தான் அதிக சக்திவாய்ந்த நவபாஷான முருகர் சிலையை செய்தார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
எல்லா சிவன் கோவில்களிலும் சிவன் சிலை நேராக இருக்கும். ஆனால் சதுரகிரியில் உள்ள சிவலிங்கம் மட்டும் சாய்ந்த கோணத்தில் சுயம்பு லிங்கமாக காட்சி தருகிறார். அதற்கு இரண்டுவிதமான கதைகள் சொல்லப்படுகிறது.
கயிலாயத்தில் சிவபெருமானின் பூதகணங்களில் ஒருவர் யாழ்வல்லதேவன். இவர் யாழ் இசைத்து சிவனை மகிழ்வித்து வந்துள்ளார். அவர் அப்சரஸ் கன்னிகை மீது காதல் வயப்பட்டார். இவர்கள் இருவருக்கும் சிற்றின்ப ஆசை ஏற்பட்டுள்ளது. இதை அறிந்துகொண்ட சிவபெருமான் கோபம் கொண்டு இரண்டுபேரும் பூமியில் மனிதர்களாக பிறந்து உங்களோட விருப்பு வெறுப்பு எல்லாம் தீர்ந்து எப்போது முக்தி அடைகிறீர்களோ அப்போது என் இடத்திற்கு திரும்பி வருவீர்கள் என்று சாபம் அளித்தார்.
சதுரகிரி மலைக்கு அடியில் கோட்டையூரில் யாழ்வல்ல தேவன், பச்சைமாலாகவும், அப்சரஸ் கன்னிகை சடைமங்கையாக பிறந்து இரண்டுபேரும் திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்கள். இவர்கள் பசுக்களை மேய்த்து பால் கறந்து விற்று வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர்.
சடை மங்கை குறிப்பிட்ட அளவு பால் கறந்து வியாபாரியிடம் கொடுத்த வாணிபம் செய்து வந்தாள். ஒருமுறை பால் எடுத்துக்கொண்டு செல்லும்போது ஒரு துறவி அவளிடம் பசிக்கிறது எனக்கு பால் தருமாறு கேட்டாள். அவளும் அந்த துறவிக்கு பருகுவதற்கு பால் கொடுத்தாள்.
உடனே அந்த துறவி நான் தினமும் இங்கு வருவேன் எனக்கு பால் அருந்துவதற்கு கொடுத்து எனது பசியை போக்க வேண்டும் என்று கூறினார். இதற்கு மறுத்து பேசாமல் சடைமங்கை கணவருக்கு தெரியாமல் துறவியின் பசியை ஆற்றுவதற்கு பால் அருந்த கொடுத்து வந்தாள்.
பால் அளவு நாட்கள் செல்ல செல்ல குறைந்து கொண்டுவருகிறது என்று வணிகர்கள் பச்சைமாலிடம் சொல்லி வந்துள்ளனர்.
தன்னோட மனைவி தினமும் என்ன செய்கிறாள் என்று பச்சைமால் மறைந்திருந்து பார்த்தான். சடைமங்கை வழக்கம்போல் அந்த துறவிக்கு குடிப்பதற்கு பால் கொடுத்தாள். இதைபார்த்ததும் கோபம் கொண்ட பச்சைமால் மனைவியை சரமாரியாக தாக்கினான்.
உடனே துறவி, தனக்கு இரக்கப்பட்டு குடிப்பதற்கு பால் கொடுத்த சடைமங்கை இப்படி அடிவாங்கிவிட்டாளே என்று அவளை சடைதாரி என்ற பெயரில் காவல் காக்கும் தெய்வமாக சிலையாக மாற்றிவிட்டு அந்த இடத்தைவிட்டு மறைந்துவிட்டார் துறவி.
மனைவியை பிரிந்த பச்சைமால் தன்னோட தவறை உணர்ந்து திருந்தி சதுரகிரியில் உள்ள சுத்தநாத சித்தர், சட்டைமுனி சித்தர் ஆகியோருக்கு பசியாற பால் கொடுத்து வந்தான் பச்சைமால்.
சதுரகிரிக்கு துறவி ஒருவர் புதிதாக வந்தார். அவரை எல்லோரும் நன்றாக உபசரித்து வந்துள்ளனர். அவருக்கு பச்சைமால் பசியாறுவதற்கு பால் கொடுத்து வந்துள்ளான். ஒருநாள் புதிதாக வந்த சித்தர் மாட்டின் மடியில் இருந்து பால் குடித்துள்ளார். சிவ பூஜைக்கு உள்ள பாலை யாரோ திருடன் குடித்துள்ளான் என்று கோபப்பட்டு ஒரு கம்பால் தலையில் அடித்தான். அதில் அந்த துறவியின் தலை உடைந்து ரத்தம் கொட்டியது.
சட்டைமுனி பச்சைமாலுக்கு சாபம் கொடுப்பதற்காக வந்தார். உடனே துறவி உருவத்தில் வந்த சிவபெருமான் புலித்தோல் அணிந்து அவரோட சுயரூபத்தை காட்டினார். அப்போது அந்த துறவியிடம் அவனது முன்ஜென்ம கதையையும், பெற்ற சாபத்தையும் பற்றி கூறி சாபவிமோச்சனம் அளிக்க வந்தேன் என்று சிவபெருமான் கூறினார்.
முனிவர்கள் கேட்டுக்கொண்டதால் சுயம்புவாக சுந்தர மகாலிங்கம் என்ற பெயரில் சாய்ந்த கோணத்தில் தலையில் அடிபட்ட தழும்புடன் இன்றளவும் சதுரகிரி மலையில் ஆசி வழங்கி வருகிறார்.
ஒரு கதையில் சிவபெருமானின் பக்தன் யாழ்வல்லதேவன் என்று சொல்லப்படுகிற மாதிரி மற்றொரு கதையில் காவல் தெய்வமான கருப்பசாமியின் காவலை சோதித்து பார்க்க நினைத்த சிவபெருமான் கருப்பசாமியின் காவலில் இருந்த ஒரு மாட்டின் பாலை திருட்டுத்தனமாக குடித்து வந்துள்ளார். இதை பார்த்த கருப்பசாமி பிரம்பால் சிவபெருமானை அடித்துள்ளார். அதனால் தான் சுந்தரமகாலிங்கத்திற்கு அடிபட்டது.
கடமை தவறாத கருப்பசாமியை காவல் தெய்வமாக நியமித்தார் சிவபெருமான் என்றும், காவல் தெய்வமான கருப்பசாமியை வழிப்பட்ட பிறகுதான் சுந்தர மகாலிங்கத்தை தரிசிக்க முடியும்.
எந்த இடத்திலேயும் இல்லாத அளவுக்கு சதுரகிரி மலையில் மட்டும் தான் இரட்டை லிங்கங்கள் ஒரே இடத்தில் காணப்படுகிறது.
- ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம்.
- பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருவதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் அங்குள்ள மகா தீபமலையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர்.
ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம்.
அதன்படி புரட்டாசி மாத பவுர்ணமி நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மாலை 6.46 மணிக்கு தொடங்கி மறுநாள் வெள்ளிக்கிழமை மாலை 4.34 மணிக்கு நிறைவடைகிறது. இது கிரிவலம் செல்ல உகந்த நேரம்.
மேலும் பவுர்ணமியை முன்னிட்டு கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் 2 நாட்கள் அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருவதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- முறையாக சன்னியாசம் பெற்ற முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய சிரார்த்தம்.
- இறந்தவர்கள் ஆன்மா சாந்தி அடையும்.
* நம் குடும்பத்தில் நம்முடன் வாழ்ந்து அல்லது நமக்கு முன் வாழ்ந்து மறைந்த, முறையாக சன்னியாசம் பெற்ற முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய சிரார்த்தம் இது. மஹாளய பட்சத்தில் வரக்கூடிய துவாதசி திதி அன்று இதனை செய்ய வேண்டும். அன்று செய்யும் சிரார்த்தம், தர்ப்பணம் மிகுந்த புண்ணியத்தைக் கொடுக்கும். இதற்கு 'ஸன்யஸ்த மகாளயம்' என்று பெயர்.
* கணவனும், மகனும் இல்லாத பெண், தன் கணவர், மாமனார், மாமியார் மற்றும் முன்னோர்களுக்காக மகாளய அமாவாசை அன்று சங்கல்ப சிரார்த்தம் செய்யலாம். இதற்கு 'விதவா மகாளயம்' என்று பெயர்.
* சுமங்கலியாக வாழ்ந்து இறந்த பெண்களுக்காக (பாட்டி, சகோதரி, தாய், அத்தை, சித்தி), மகாளய பட்சத்தில் வரும் நவமி திதி அன்று திதி செய்ய வேண்டும். இதற்கு 'அவிதவா நவமி' என்று பெயர். இதை முறையாக செய்யும்பொழுது அந்த குடும்பத்தில் பெண் சாபங்கள் விலகும். நீண்ட ஆயுள் உண்டாகும். வரும் காலங்களில் அந்த குடும்பத்தில் பெண்கள் விதவையாகும் நிலை உருவாகாது. இந்த நாளில் தங்களால் இயன்றவர்கள், சுமங்கலிப் பெண்களை வீட்டிற்கு வரச் சொல்லி புடவை, ரவிக்கை, குண்டு மஞ்சள், குங்குமம், தாம்பூலம் தந்து வணங்கலாம்.
* நம் குடும்பம் சம்பந்தப்பட்ட யாராவது துர்மரணம் அடைந்திருந்தால், அதாவது தண்ணீரிலோ, நெருப்பிலோ அல்லது தூக்கு போட்டு, விபத்துகளில், கொடிய மிருகங்களில் தாக்குதலில் அல்லது மற்றவர்களால் கொலை செய்யப்பட்டிருந்தால், அவர்களுக்கு மகாளய பட்ச காலத்தில் வரும் சதுர்த்தசி திதியன்று சிரார்த்தம், தர்ப்பணம் செய்யலாம். இதனால் அந்த குடும்பத்தில் துர்மரணம் நிகழாது. இறந்தவர்கள் ஆன்மா சாந்தி அடையும். இதற்கு `சஸ்திரஹத மகாளயம்' என்று பெயர்.
* தர்ப்பணம் செய்வதில், 'தேவ தர்ப்பணம்' என்று ஒன்று உள்ளது. சுண்டுவிரல் அடிப் பாகத்தால் இந்த தர்ப்பணத்தை செய்ய வேண்டும். தண்ணீர், அட்சதை (அரிசி) மட்டும் இதில் பயன்படுத்தப்படும். சிலர் எள் சேர்த்தும் செய்வர். இந்த தர்ப்பணத்தை, தாய் - தந்தை உயிருடன் உள்ளவர்கள் கூட செய்யலாம்.
இந்த தர்ப்பணத்தைச் செய்யும்போது, கேசவம் தர்ப்பயாமி, நாராயணம் தர்ப்பயாமி, மாதவம் தர்ப்பயாமி, கோவிந்தம் தர்ப்பயாமி, விஷ்ணும் தர்ப்பயாமி, மதுசூதனம் தர்ப்பயாமி, த்ரிவிக்கிரமம் தர்ப்பயாமி, வாமனம் தர்ப்பயாமி, ஸ்ரீதரம் தர்ப்பயாமி, ரிஷிகேசம் தர்ப்பயாமி, பத்மநாபனம் தர்ப்பயாமி, தாமோதரம் தர்ப்பயாமி, ஆதித்யம் தர்ப்பயாமி, சோமம் தர்ப்பயாமி, அங்காரகம் தர்ப்பயாமி, புதம் தர்ப்பயாமி, பிரகஸ்பதி தர்ப்பயாமி, சுக்ரம் தர்ப்பயாமி, சனீஸ்வரம் தர்ப்பயாமி, ராகும் தர்ப்பயாமி, கேதும் தர்ப்பயாமி என்று சொல்ல வேண்டும்.
- ஒவ்வொரு ஆண்டும் திதி கொடுப்பது அவசியம்.
- ஓராண்டுக்கு திதி கொடுத்த புண்ணியம் கிடைக்கும்.
முன்னோர்கள் இறந்த மாதம், பட்சம், திதி அறிந்து, ஒவ்வொரு ஆண்டும் திதி கொடுப்பது அவசியம். இல்லாவிட்டால் குடும்பத்தில் சிரமம், பிரச்சினை, துயர சம்பவங்கள் நடைபெறும் என்று சொல்லப்படுகிறது. முன்னோர் வழிபாட்டை முறையாக மேற்கொண்டால், இந்தப் பிரச்சினைகளில் இருந்து நாம் விடுபடலாம்.
சிலருக்கு தங்களுடைய முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் இருக்கலாம். அவர்களும் மகாளய பட்சத்தில் திதி கொடுக்கலாம். மகாளய பட்சத்தில் கொடுக்கப்படும் தர்ப்பணத்தால், ஓராண்டுக்கு திதி கொடுத்த புண்ணியம் கிடைக்கும். மற்ற மாதங்களில் அமாவாசை தர்ப்பணம் செய்யாதவர்கள் கூட இந்த மகாளய பட்ச தர்ப்பணத்தை தவிர்க்காமல் செய்ய வேண்டும்.
ஒரு முறை சத்தியலோகத்தில் உள்ள பிரம்மனை, சில தேவர்கள் சென்று தரிசித் தனர். அப்போது அவர்களிடம், "நீங்கள் என்னை பூஜை செய்யுங்கள்" என்றார். ஆனால் அந்த வார்த்தையை சரியாக புரிந்து கொள்ளாத தேவர்கள், தங்களைத் தாங்களே பூஜித்துக் கொண்டனர். இதைக் கண்ட பிரம்மா "ஏ மூடர்களே! நீங்கள் அறிவற்றவர்களாக போவீர்கள்" என்று சபித்தார். தங்கள் தவறை உணர்ந்து வருந்திய தேவர்கள், சாப விமோசனம் கேட்டனர். அதற்கு பிரம்மதேவன், "நீங்கள் என் மகன்களிடம் சென்று சாப விமோசனம் பெற்றுக் கொள்ளுங்கள்" என்றார்.
தேவர்கள் பிரம்மபுத்திரர்களிடம் சென்று வணங்க, அவர்கள் தேவர்களைப் பார்த்து, "புத்திரர்களே.." என அழைத்தனர். பின், "உங்கள் சாபம் விலகிவிட்டது. உங்கள் விருப்பம் போல் நீங்கள் சந்தோஷமாக செல்லுங்கள்" என்றனர். இதனைப் பார்த்த பிரம்மதேவன், "என் மகன்கள் உங்களை புத்திரர்களே என்று அழைத்தனர். நீங்கள்அவர்களை வணங்கி சாப விமோசனம் பெற்றீர்கள். இன்று முதல் என் புத்திரர்கள் 'பித்ருக்கள்' (பித்ரு தேவதைகள்) என்று அழைக்கப்படுவார்கள். யார் இவர்களை பூஜிக்கின்றனரோ, அவர்களுக்கு பித்ரு தோஷம் விலகும்" என்றார். கவ்யவாகன், அனலன், சோமன், யாமன், அரியமான், அக்னிஷ்வார்தன், பர்ஹிஷதன் ஆகிய ஏழு பேரும் பித்ரு தேவர்களாக இருக்கிறார்கள்.
பித்ரு தோஷம், பித்ரு சாபம் என்பது, ஒருவருக்கு அவருடைய முன்னோர்களால் வருவதாக சிலர் சொல்வார்கள். ஒரு மகன் தன்னுடைய தாய்- தந்தையை உயிருடன் இருக்கும் பொழுது கவனிக்காவிட்டால் கூட, பசியால் வாடியபோதும், துன்பத்தை அனுபவித்த போதும், அந்த தாயும் தந்தையும் தன்னுடைய பிள்ளையை சபிக்க மாட்டார்கள். அப்படி இருக்கையில் இறந்த பிறகு சாபம் இடுவார்களா என்ன? பித்ரு தோஷம் (சாபம்) என்பது, நம் தாய், தந்தை, தாத்தா, பாட்டியால் வருவது அல்ல. அவர்களை சரியாக பராமரிக்காவிட்டால், பித்ரு தேவதைகள் நமக்குக் கொடுக்கக் கூடிய சாபம்தான், 'பித்ரு சாபம்' ஆகும்.
உயிருடன் இருக்கும் பொழுது தாய், தந்தையை பராமரிக்காத மகன், அவர்கள் இறந்த பிறகு வெகு சிறப்பாக சிரார்த்தம் செய்தாலும், அது காக்கை தின்னும் மலத்திற்கே சமம். இதை நன்கு மனதில் பதியவைத்துக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் மகனால் கைவிடப்பட்ட தாய்-தந்தையரை, மகள் பராமரிக்கும் பட்சத்தில், அவர்கள் இறந்த பிறகு சிரார்த் தம் செய்த புண்ணியம் மகளையே சென்று சேரும்.
ஒருவரின் தாய் -தந்தையர் அல்லது தாத்தா - பாட்டி இறந்த பிறகு, அவர்கள் நிச்சயம் வேறு ஜென்மம் எடுக்க வாய்ப்பு உண்டு என்பது இந்து மதத்தின் நம்பிக்கை. அப்படி இருக்கையில் மீண்டும் பிறந்தவர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சரியாகுமா? என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது. மேலும் அப்படி நாம் அவர்களுக்கு கொடுக்கும் தர்ப்பணம் அவர்களுக்குப் போய் சேருமா? அதன் மூலம் நமக்கு புண்ணியம் கிடைக்குமா? என்ற கேள்விகளும் எழுகின்றன. தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா மறுபிறவி எடுத்தால் கூட, நாம் செய்யக்கூடிய எள் தர்ப்பண பலனை, பித்ரு தேவதைகள் ஏற்றுக்கொண்டு, நமக்கு புண்ணியத்தை தருகிறார்கள் என்பதுதான் உண்மை.
யார், யாருக்கு..
பொதுவாக 12 பேர்களுக்கு நாம் தர்ப்பணம் செய்ய வேண்டும். அவர்கள்தான் நம் முன்னோர்கள். அதன்படி
1) பிதா - அப்பா
2) பிதாமஹர் - பாட்டனார்
3)பிரபிதாமஹர் - பாட்டனாருக்கு தகப்பனார்
4) மாதா-அம்மா
5) பிதாமஹி - பாட்டி
6) பிரபிதாமஹி - பாட்டனாருக்கு தாயார்
7) மாதாமஹர் - அம்மாவின் தகப்பனார்
8) மாது: பிதாமஹர்- தாய்ப் பாட்டனாருக்குத் தகப்பனார்
9) மாது: பிரபிதாமஹர் - தாய்ப் பாட்டனாருக்குப் பாட்டனார்
10) மாதாமஹி - பாட்டி (தாயாருக்கு தாயார்)
11) மாது: பிதாமஹி - தாய்ப் பாட்டனாருக்குத் தாயார்
12) மாது: பிரபிதாமஹி - தாய்ப் பாட்டனாருக்குப் பாட்டி
தர்ப்பணம் செய்ய ஆரம்பிப்பதற்கு முன், யார் யாருக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். அவர்களின் பெயர், கோத்ரம் போன்றவற்றை தெரிந்து கொண்டு தர்ப்பணம் செய்ய வேண்டும். பெயர் தெரியாவிட்டால், ஆண்களுக்கு 'நாராயணா' என்றும், பெண்களுக்கு 'லட்சுமி' என்றும் சொல்லும் வழக்கமும் உண்டு.
மகாளய அமாவாசை தர்ப்பணத்தை, பசு கொட்டகை, பக்தர்கள் கூடக் கூடிய பொது இடங்கள், நதிக்கரை, சமுத்திரக்கரை, குளக்கரை, கோவில் மண்டபங்கள், புண்ணிய தலங்கள் ஆகியவற்றில் செய்வது விசேஷமானதாகும். சமுத்திரக்கரையில் செய்யும் பொழுது உப்பு நீரைக் கொண்டு தர்ப்பணம் செய்யக்கூடாது.
கயா சென்று சிரார்த்தம் செய்ய முடியாதவர்கள், கன்னி ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் பொழுது வரக்கூடிய பரணி நட்சத்திரம் அன்று (மகா பரணி என்று அழைப்பார்கள்) சிரார்த்தம் செய்தால், அஷ்டகயா ஷேத்திரங்களுக்கு சென்று, பல்குனி நதி, அட்சயவடம் போன்ற இடத்தில் பிண்ட பிரதானம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.
- சிறுவயதில் அவர் வீண் விளையாட்டுகளில் அறவே ஈடுபாடு காட்டவில்லை.
- அநாதையாக நின்ற முகம்மதை அவரது பாட்டனார் வளர்த்து வந்தார்.
கி.பி. 6-ம் நூற்றாண்டின் இறுதியில், இன்றைய சவுதி அரேபியாவின் பாலைவன பகுதியிலுள்ள மக்கா நகரில் அப்துல்லா-ஆமினா தம்பதியருக்கு ஒற்றை மகனாக பிறந்தார் முகம்மது. தாய் வயிற்றில் ஆறு மாத சிசுவாக இருக்கும் போதே அவர் தம் தந்தையை இழந்தார், தம் ஆறாம் வயதில் தாயை இழந்தார். அநாதையாக நின்ற முகம்மதை அவரது பாட்டனார் அப்துல் முத்தலிப் பாசத்துடன் வளர்த்து வந்தார்.
சிறுவயதில் அவர் வீண் விளையாட்டுகளில் அறவே ஈடுபாடு காட்டவில்லை. தம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு உதவி செய்பவராக, சிரமப்படுபவர்களுக்கு தன்னால் இயன்றவரை உபகாரம் செய்பவராக இருந்தார். எந்த ஒரு சூழ்நிலையிலும் பொய் பேசாதவராக இருந்தார். இதனால் தான் அவரை ஊர்மக்கள் 'அல் அமீன்' (நம்பிக்கைக்குரியவர்) என்றும், 'அஸ்ஸாதிக்' (உண்மையாளர்) என்றும் சிறப்புப் பெயரிட்டு அழைத்து வந்தனர்.
தமது வாலிப வயதில் ஆடு மேய்ப்பது, வியாபாரத்திற்குச் செல்வது போன்ற முன்னேற்றச் செயல்பாடுகளில் ஆர்வமாக ஈடுபட்டார்கள். தமது இருபத்து ஐந்தாம் வயதில் நாற்பது வயதான விதவை கதீஜா அம்மையாரை திருமணம் செய்து கொண்டார்கள்.
இதே காலகட்டத்தில் 'ஹில்ஃபுல் ஃபுளூல்' என்ற பெயரில் செயல்பட்டு வந்த சமூக நீதிச்சங்கத்திலும் தம்மை இணைத்துக் கொண்டு பாதிக்கப்பட்ட உள்ளூர், வௌியூர் மக்களின் நீதிக்காக போராடினார்கள், நாளடைவில் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள மனம் விரும்பியதின் அடிப்படையில் மூன்று மைல்களுக்கு அப்பாலுள்ள சுமார் இரண்டாயிரத்து ஐநூறு அடி உயரத்தில் அமைந்திருந்த 'ஹிரா' குகையில் தியானம் செய்து வந்தார்கள்.
அப்படி ஒருநாள் தியானத்தில் இருக்கும் போது தான் வானவர் ஜிப்ரயீல் வந்து முகம்மதை கட்டிப்பிடித்து, 'ஓதுவீராக..., உம்மைப் படைத்தவனின் பெயரைச் சொல்லி ஓதுவீராக' என்று கூற, அன்று முதல் வஹி மூலம் அவருக்கு திருக்குர்ஆன் வசனங்கள் வெளிப்படத் தொடங்கின. அப்போது தான் அவர் நபி எனப்படும் இறைத்தூதர் ஆனார்.
அப்போது முதல் அல்லாஹ்வின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட திருக்குர்ஆன் வசனங்களையும், அதில் இடம்பெற்றுள்ள இஸ்லாமிய கொள்கை, கோட்பாடுகளை, சட்டதிட்டங்களை தமக்கு நெருக்கமானவர்களிடம் முதலில் சொல்ல ஆரம்பித்தார். அதில் முதன் முதலாக இஸ்லாமை மனப்பூர்வமாக ஏற்று தனது ஆதரவுக்கரத்தை நீட்டியது மனைவி கதீஜா அம்மையார்தான்.
முகம்மது நபி (ஸல்) அவர்களின் சிறப்பு குறித்து திருக்குர்ஆனில் இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது:
'நபியே நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்'. (68:4)
'அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு: நிச்சயமாக, அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது'. (33:21)
நம்பிக்கையாளர்களே, நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்; நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தத்தைக் கொடுக்கின்றது; அன்றி, உங்(கள் நன்மை)களையே அவர் பெரிதும் விரும்புகிறார்; இன்னும் முஃமின்கள் மீது மிக்க கருணையும் கிருபையும் உடையவராக இருக்கின்றார்'. (9:128)
'நபியே, அகிலத்தார் அனைவருக்கும் கிருபையாகத் தான் உம்மை நாம் அனுப்பியுள்ளோம்'. (21:107)
நபிகள் நாயகம் மதீனா வந்த இறுதிப் பத்தாண்டுகளில் தான் இஸ்லாம் வேகமாக வளரத் தொடங்கியது, யஸ்ரிப் என்றிருந்த அந்த ஊர்ப் பெயர் 'மதீனத்துர் ரசூல்- இறைத் தூதரின் நகரம்' என்று பெயர் மாற்றம் பெற்றது. கூடவே மனிதர்களின் நடவடிக்கைகளும் மாற்றம் பெறத் துவங்கின.
மது, மாது, சூது, வட்டி, திருட்டு, கொலை, கொள்ளை, அடிமைத்தனம், விபச்சாரம், பெண் சிசுவை உயிரோடு புதைப்பது, குலப்பெருமை, குடும்பப் பகைமை, குறிப்பாக சிலை வணக்கம் போன்றவற்றில் மூழ்கித்திளைத்த மக்கள் அதில் இருந்து விடுபட்டு நபிகளார் காட்டிய பாதையில் வாழத்தொடங்கினார்கள்.
'நான் இரக்கம் காட்டுபவனாகத் தான் அனுப்பப்பட்டிருக்கின்றேன். சபிப்பவனாக அல்ல...' என்று தம்மை அவ்வப்போது அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். சொன்னபடி வாழ்ந்து காட்டினார்கள்.
தமது இறுதி நாட்களை நெருங்கும் நேரத்தில் சுமார் ஒரு லட்சத்து இருபத்து ஐந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனிதப் புனிதர்களையும் உருவாக்கி, அவர்களில் எவரையும் நீங்கள் தாராளமாக பின்பற்றி நடக்கலாம் என்று உத்திரவாதம் அளித்திருந்தார்கள் என்பதில் தான் அவர்களது வெற்றியின் ரகசியம் மறைந்திருக்கிறது.
தோன்றின் புகழோடு தோன்றுக என்ற சொல்லிற்கு உரியவர்களாக நாயகத்தின் தோழர்களும், தோழியர்களும் அடுத்தடுத்த தலைமுறைக்கு நாயகர்களாகவே இருந்தார்கள் என்பது தான் ஆச்சரியம்.
தொழுகையில் கவனமுடன் இருங்கள், பெண்களிடம் கண்ணியமுடன் நடந்து கொள்ளுங்கள், மகத்தான எனது வழித்தோழ(னான இறைவ)னை நோக்கி.... என்று சொன்னவாறே தமது இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டார்கள். அப்போது நபிகளாரின் வயது அறுபத்து மூன்று.
வாருங்கள் நபிகளின் வாழ்வியலைப் படிப்போம்...! நல்ல பல வரலாறுகளை படைப்போம்...!
- வியாதியின் வாயிலாக கடவுளின் நாமம் மகிமைப்படுகிறது.
- தொழுநோயாளிகளைக் கூட ஆண்டவர் இயேசு தொட்டு சுகப்படுத்தினார்.
மனிதர்கள் வாழ்கின்ற வாழ்க்கைமுறை, வாழ்க்கைத்தரம், பொருளாதார நிலை ஆகியவற்றின் அடிப்படையில் மனிதர்களை, நல்லவர்-கெட்டவர், பாவி-பரிசுத்தர், ஆசீர்வதிக்கப்பட்டவர்-சாபம் நிறைந்தவர் என்று வகைப்படுத்துகின்றோம்.
வியாதியும், பாடுகளும் பாவம் மற்றும் சாபத்தின் விளைவுகளே என்று உறுதியாய் நம்பிக்கொண்டிருந்த யூதர்களுக்கு ஆண்டவர் இயேசு கிறிஸ்து, 'வியாதி சாபத்தின் அடையாளம் மட்டுமேயல்ல' என்பதைப் பிறவியிலே பார்வையற்ற ஒருவரை குணமாக்கிய (யோவான் 9:1-41) நிகழ்வின் வாயிலாக மிக அருமையாக விளக்குகிறார்.
ஆண்டவர் தாம் சென்ற வழியில் பிறவியிலே பார்வையற்ற ஒருவரைக் கண்டார். அப்போது சீடர்கள் அவரிடம் 'ரபி, இவர் பார்வையற்றவராகப் பிறக்கக் காரணம் இவர் செய்த பாவமா? இவர் பெற்றோர் செய்த பாவமா?' என்று கேட்டார்கள்.
அதற்கு ஆண்டவர் இயேசு, 'இவர் செய்த பாவமும் அல்ல; இவர் பெற்றோர் செய்த பாவமும் அல்ல; கடவுளின் செயல் இவர் வழியாக வெளிப்படும் பொருட்டே இப்படி பிறந்தார்' என்றார்.
யூதர்கள் எப்போதும் துன்பம் அல்லது பாடுகளை பாவத்தோடு தொடர்புப்படுத்திப் பார்த்தனர். எங்கேயெல்லாம் துன்பம் நிகழ்ந்ததோ அங்கேயெல்லாம் பாவம் மிகுந்திருந்ததென யூதர்கள் நம்பியபடியால் இப்படி கேட்டனர். இப்படி யூதர்கள் முழுமையாக நம்புவதற்கு அன்றைக்கு அவர்களிடம் காணப்பட்ட மூன்று விதமான நம்பிக்கைகள் காரணமாக இருந்தது.
1. பெற்றோர் (அல்லது) மூதாதையரின் பாவம்: 'என்னைப் புறக்கணிக்கும் மூதாதையரின் பாவங்களைப் பிள்ளைகள் மேல் மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் தண்டித்துத் தீர்ப்பேன்' (வி.ப.20:5) என்ற திருவசனத்தின் அடிப்படையில் ஒருவரின் வியாதி மற்றும் பெலவீனத்திற்கு மூதாதையரின் பாவம் காரணமாக இருக்கலாமென்று நம்பினர்.
2. பிறப்பிற்கு முந்தைய பாவம்: ஒரு குழந்தை தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே பாவம் செய்யக்கூடுமென்று ரபிமார் நம்பி வந்ததாக தார்க்கும், தால்மூட் ஆகிய ஏடுகள் சான்று பகருகின்றன.
3. படைப்பிற்கு முந்தைய ஆன்மா: இது பிளேட்டோ மற்றும் கிரேக்கர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட நம்பிக்கையாகும். உலகம் உருவாவதற்கு முன்னே நல்ல ஆன்மாக்களும், கெட்ட ஆன்மாக்களும் இருந்ததாகவும், இந்த ஆன்மாக்கள் தான் மனித உடலில் நுழைந்து மனிதர்களை நல்லவர்களாகவும் கெட்டவர்களாகவும் மாற்றுகின்றது என்றும் யூதர்கள் நம்பினர். 'நல்லவனாய் இருந்ததால் மாசற்ற உடலினுள் புகுந்தேன்'(சா.ஞா.8:20).
இப்படிப்பட்ட நம்பிக்கையில் இருந்த யூதர்களைப் பார்த்து ஆண்டவர் இயேசு "இவர் செய்த பாவமும் அல்ல; இவர் பெற்றோர் செய்த பாவமும் அல்ல; கடவுளின் செயல் இவர் வழியாக வெளிப்படும் பொருட்டே இப்படிப் பிறந்தார்" என்கிறார்.
வியாதியின் வாயிலாக கடவுளின் கிரியைகள் வெளிப்படுகிறது. வியாதி உள்ளவர்களை, பலவீனர்களை ஆண்டவர் இயேசு ஒருபோதும் பாவிகளாக, சாபம் நிறைந்தவர்களாகக் கருதியதுமில்லை; அவர்களை ஒதுக்கியதுமில்லை. அன்றைய சமூகத்தில் தீட்டு என்று கருதப்பட்டு தொடக்கூடாத நிலையில் இருந்த தொழுநோயாளிகளைக் கூட ஆண்டவர் இயேசு தொட்டு சுகப்படுத்தினார்.
'பிறப்பிலிருந்தே பாவத்தில் மூழ்கிக்கிடக்கும் நீயா எங்களுக்குக் கற்றுத்தருகிறாய்?' என்று பெரிய பாவியாய் கருதி, யூதர்கள் புறம்பே தள்ளிவிட்ட இந்த பார்வையற்றவர் பாவியோ, சாபம் நிறைந்தவரோ அல்ல; இவர் ஆசீர்வதிக்கப்பட்டவர், என்கிறார் ஆண்டவர் இயேசு.
கடவுள் தன் கிரியைகளை வெளிப்படுத்தும்படியாகத் தெரிந்துகொள்ளப்பட்ட கடவுளின் பாத்திரம் இவர். கடவுள் தன் கிரியைகளின் வல்லமையை வெளிப்படுத்த தெரிந்தெடுத்த கடவுளின் தாசன் இவர். கடவுளின் தாசனாகிய மோசே 'இப்பணிகளையெல்லாம் செய்யும்படி ஆண்டவர் என்னை அனுப்பியிருக்கிறார்' (எண்.16:28) என்கிறார்.
ஆம், கடவுளின் தாசர்களைப் போல், தீர்க்கர்கள், ஆசாரியர்கள், அரசர்கள் போல் கடவுளின் கிரியைகளை வெளிப்படுத்த கடவுளால் அழைப்பு பெற்றவர் இவர் என்று ஆண்டவர் இயேசு மிக உறுதியாகக் கூறுகிறார்.
வியாதியின் வாயிலாக கடவுளின் நாமம் மகிமைப்படுகிறது. பார்வை பெற்றவரைப் பார்த்து யூதர்கள் 'உண்மையைச் சொல்லிக் கடவுளை மாட்சிப்படுத்து' என்றார்கள். ஆண்டவர் இயேசுவால் விடுதலை பெற்ற அனைவரும் கடவுளை மகிமைப்படுத்தியபடிச் சென்றார்கள்.
ஆண்டவர் இயேசுவின் சிநேகிதனாகிய லாசரு வியாதினிமித்தம் மரணப்படுக்கையில் இருந்த செய்தி அவருக்கு அறிவிக்கப்பட்டபோது, 'இந்நோய் சாவில் போய் முடியாது, கடவுளின் மாட்சி விளங்கவே இவன் நோயுற்றான். இதனால் மானிடமகனும் மாட்சி பெறுவார்' என்றார் (யோவான்.11:4). ஆம், அவர் சொன்னபடியே லாசருவின் மரணத்தின் வாயிலாக கடவுளின் நாமம் மகிமைப்பட யூதர்கள் அநேகர் அவரை நம்பினர்.
பிரியமானவர்களே, நீங்களும் ஒருவேளை கொடிய வியாதியினாலும், கடுமையான துன்பத்தினாலும் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கலாம். இந்த சமூகம் உங்களை பெரும்பாவியாக, சாபம் நிறைந்தவராகக் கருதலாம். ஆனால் நீங்கள் கடந்து செல்லும் இந்த வலி நிறைந்த பாதையின் வாயிலாகக் கடவுள் உங்களோடு இடைபடுகிறார். கடவுளின் கிரியைகள் வெளிப்படுவதற்கும், அவர் நாமம் மகிமைப்படுவதற்கும் அவர் உங்களைத் தெரிந்தெடுத்திருக்கிறார் என்பதை நினைத்து கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்!