search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    • பரிகாரம் செய்ய சொன்னாங்க செஞ்சேன் ஏதும் நடக்கல.
    • பரிகாரம் செய்பவர்கள் மனதிலும் தோன்றும் விரக்தி.

    ஜோதிடர் சொன்ன "எல்லா பரிகாரமும் செஞ்சிட்டோம்… ஒன்னும் பிரயோஜனம் இல்லை. எதுவும் நடக்கலே.. பல நேரங்களில் ஜோதிட ஆலோசனைகளின் பேரிலும் அல்லது தோஷங்களுக்காக பரிகாரம் செய்பவர்கள் மனதிலும் தோன்றும் விரக்தி இது.

    பரிகாரம் செய்ய சொன்னாங்க செஞ்சேன் ஏதும் நடக்கல எடைக்கு எடை காணிக்கை தர சொன்னாங்க அப்படியும் ஏதும் நடக்கல.. என்று புலம்புகிறார்கள்... பரிகாரம் என்றால் உண்மையில் என்னவென்று தெரியாதவர்களுக்காக இந்த கதை.

    பரிகாரம் தொடர்பான குட்டி கதை...

    ஒரு ராஜா காட்டுக்கு வேட்டையாட சென்றார். நேரம் போனது தெரியாமல் வேட்டையாடிக் கொண்டிருக்கும்போது மாலை நேரம் வந்து எங்கும் இருள் சூழத் தொடங்கிவிட்டது. அப்போது தூரத்தில் தெரிந்த ஒரு மரத்தின் மீது ஏதோ ஒரு மிருகம் அமர்ந்திருப்பதை போல இருந்தது. மிகப்பெரிய உருவமாக இருந்தபடியால் ஏதேனும் கொடிய மிருகமாகத் தான் இருக்கவேண்டும் என்று கருதி, வில்லில் அம்பைப் பூட்டி மரத்தை நோக்கி பாணத்தை செலுத்தினான்.

    அடுத்த சில வினாடிகளில் மரத்தின் மீதிருந்து `ஐயோ… அம்மா' என்ற குரல் கேட்டது. ஏதோ ஒரு மிருகத்தின் ஓலம் கேட்கும் என்று எதிர்பார்த்தால் இப்படி மனிதனின் ஓலம் கேட்கிறதே… யாரையோ தவறுதலாக கொன்று விட்டோமோ என்று அஞ்சி மரத்தை நோக்கி விரைந்தான். அங்கு சென்று பார்த்தால் பதினாறு வயதையொத்த சிறுவன் ஒருவன் இவரின் அம்புக்கு பலியாகி வீழ்ந்து கிடந்தான்.

    `இப்படி ஒரு விபரீதம் நிகழ்ந்து விட்டதே' என்று பதைபதைத்த அரசன், உடனே காவலாளிகளை கூப்பிட்டு, `இவன் பெற்றோர் அருகே தான் எங்காவது இருக்க வேண்டும். உடனே கண்டுபிடித்து அழைத்து வாருங்கள்" என்று கட்டளையிட்டான். வீரர்கள் நாலாபக்கமும் விரைந்தனர். கடைசியில் ஒரு விறகுவெட்டி தம்பதியினரை அழைத்து வந்தனர்.

    "இவர்கள் தான் அந்த பாலகனின் பெற்றோர். காட்டில் விறகு வெட்டி பிழைப்பது தான் இவர்கள் தொழில்" என்று மன்னனிடம் கூறினார்கள். மன்னன் அவர்களிடம் நடந்ததைக் கூறி, "என்னை மன்னித்து விடுங்கள். நான் வேண்டுமென்று உங்கள் மகனை கொல்லவில்லை. அறியாமல் நடந்த தவறு இது. போதிய வெளிச்சம் இல்லாததாலும் தூரத்திலிருந்து அம்பெய்ததாலும் மரத்தின் மீதிருந்தது ஏதோ ஒரு விலங்கு என்று எண்ணிவிட்டேன்…."

    தான் சொன்னதைக் கேட்டு அவர்கள் சமாதானாக வில்லை என்று யூகித்துக் கொண்டான் அரசன். அடுத்த நொடி கைதட்டி தனது காவலர்களை அழைத்தவன் இரண்டு பெரிய தட்டுக்கள் கொண்டு வருமாறு கட்டளையிட்டான்.

    அருகே நின்று கொண்டிருந்த அமைச்சரிடம், இரண்டு தட்டுக்களை அவர்கள் முன்பு வைக்கச் சொன்னான். தட்டுக்கள் வைக்கப்பட்ட பிறகு அதில் ஒரு தட்டில் பொற்காசுகளை கொட்டி தான் அணிந்திருந்த விலைமதிப்பற்ற ஆபரணங்கள் நகைகள், நவரத்தின மாலை, முத்தாரம் என அனைத்தையும் வைத்தான்.

    பின்னர் தன் இடுப்பிலிருந்த உடைவாளை உருவி, அதை மற்றொரு தட்டில் வைத்தான். "மக்களை காக்கவேண்டிய நானே எனது குடிமகன் ஒருவன் உயிரிழக்க காரணமாகி விட்டேன். நான் தண்டிக்கப் படவேண்டியவன். பாதிக்கப்பட்ட உங்களிடமே தீர்ப்பை கூறும் வேலையை விட்டு விடுகிறேன்.

    நான் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் இது தான். இதோ ஒரு தட்டு நிறைய பொற்காசுகள் விலைமதிப்பற்ற ஆபரணங்களும் இருக்கின்றன. அவற்றை எடுத்துக் கொண்டு என்னை மன்னியுங்கள்.

    அப்படி மன்னிக்க விருப்பம் இல்லை என்றால், மற்றொரு தட்டில் இருக்கும் உடைவாளை எடுத்து என்னை வெட்டி வீழ்த்தி உங்கள் மகனைக் கொன்றதற்கு பழி தீர்த்துக் கொள்ளுங்கள்.." என்று தனது கிரீடத்தை கழற்றி மந்திரியிடம் கொடுத்து இந்த பெற்றோர் முன்பு மண்டியிட்டு அமர்ந்தான் அரசன்.

    உடன் வந்த காவலர்களுக்கும் மந்திரி பிரதானிகளும் நடப்பதை பார்த்து திகைத்துப் போய் நின்றனர். அந்த விறகுவெட்டி நம் மன்னனை வெட்டிவிட்டால் என்ன செய்வது? மக்களுக்கும் மகாராணியாருக்கும் என்ன பதில் சொல்வது… செய்வதறியாது திகைத்துப் போய் நின்றனர்.

    சில நிமிடங்கள் மௌனத்திற்கு பிறகு விறகு வெட்டி பேச ஆரம்பித்தான்… "ஒன்று நான் இந்த ஆபரணங்களையும் பொற் காசுகளையும் எடுத்துக்கொள்ளவேண்டும். அல்லது மன்னரை கொல்ல வேண்டும்… அப்படித்தானே…?

    நான் எதைச் செய்யப் போகிறேன் என்று அறிந்துகொள்ள அனைவரும் படபடப்புடன் காத்திருக்கிறீர்கள் சரி தானே? நான் விரும்புவது இந்த பொற்காசுகளையோ ஆபரணங்களையோ அல்ல… என் மகனே போய்விட்டபிறகு இவற்றை வைத்து நான் என்ன செய்யப் போகிறேன்..?

    "ஐய்யய்யோ'' அப்படியென்றால் இவன் மன்னரை கொல்லப் போகிறான் போலிருக்கிறதே எல்லாரும் வெடவெடத்து போனார்கள். விறகுவெட்டி தொடர்ந்தான்…

    "நீங்கள் நினைப்பது போல நான் மன்னரைக் கொல்ல விரும்பவில்லை. அவர் அளிக்கும் பொன் பொருளையும் விரும்பவில்லை. நான் விரும்பியது எதுவோ அது கிடைத்துவிட்டது. தான் செய்த தவறு குறித்து மன்னர் மனம் வருந்தவேண்டும் என்று விரும்பினேன். அவரோ வருந்திக் கண்ணீர் விட்டதோடு பெருந்தன்மையாக தனது உயிரையும் பதிலுக்கு தியாகம் செய்ய துணிந்துவிட்டார். அது ஒன்றே எனக்கு போதும்.

    மன்னரை தண்டிப்பதால் என் மகன் எனக்கு மீண்டும் கிடைக்கப் போவதில்லை. ஆனால், இந்த நாடு ஒரு நல்ல மன்னனை இழந்துவிடும். நான் அப்படி செய்தால் என் மகனின் ஆன்மாவே என்னை மன்னிக்காது.

    அதே நேரம் நான் பொன்னையும் பொருளையும் பெற்றுக் கொண்டால் என் மகனின் உயிருக்கு நான் விலைபேசியது போலாகிவிடும்.

    மன்னர் தான் செய்த தவறுக்கு உளப்பூர்வமாக மனம் வருந்தி சிந்திய கண்ணீரே போதுமானது. எங்களுக்கு வேறு எதுவும் வேண்டாம்" என்று கூறி தன் மனைவியை அழைத்துக் கொண்டு தன் வழியே போய்விட்டான் விறகுவெட்டி. ஒரு விறகுவெட்டிக்கு இப்படி ஒரு பெருந்தன்மையா? இப்படி ஒரு ஞானமா என்று வியந்து போனார்கள் அனைவரும்.

    இந்த கதை கூறும் நீதி...

    அந்த மன்னன் தான் நாம். நாம் செய்யும் பாவங்கள் தான் அந்த கொலை. அந்த விறகுவெட்டி தான் இறைவன். இப்போது புரிகிறதா எப்படிப்பட்ட மனதுடன் பரிகாரம் செய்யவேண்டும் என்று.

    பெரும் பாவத்தை செய்து பரிகாரம் செய்தால் போச்சு என்று ஆணவத்தால் பணத்தாலோ, ஆடம்பர யாகங்களாலோ, ஆண்டவனுக்கு வெள்ளி தங்க ஆபரணங்களை செலுத்தினாலும் சரி, அர்ச்சகரையோ, அல்லது அந்த ஆலயத்தை சார்ந்தவரை வேண்டுமானால் திருப்தி படுத்தலாம், ஆண்டவனை ஒரு நொடி கூட திரும்பி பார்க்க கூட வைக்க முடியாது.

    ஆனால், இந்த கதையில் வரும் மன்னன் நிலையில் நின்று, ஆண்டவா, மனதுக்குள் வேறு எந்த சிந்தனையுமின்றி நீங்கள் செய்த தவறை, நினைத்து, அறியாமல் நடந்த தவறை எண்ணி வருந்தி மனமுறுகி, இனி எக்காலத்திலும் இதுபோல் நிகழாவண்ணம் நான் பார்த்துக் கொள்கிறேன். இந்த ஒரு முறை மன்னித்து விடு! என உளமுருகி மன்றாடி கேளுங்கள். ஆண்டவன் முன் நீங்கள் கண் மூடி மனம் வருந்தி வேண்டும் போது ஆண்டவன் உங்களை கண்திறந்து பார்ப்பான். கருணை புரிவான். இப்படி செய்யும் பரிகாரங்கள் தான் பலனளிக்கும்.

    • உப்பை தரையில் சிந்தக்கூடாது.
    • பெண்கள் வளையல் அணியாமல் எதையும் பரிமாறக் கூடாது.

    பொதுவாகவே வீட்டில் நிம்மதி இல்லை என்றால் கோவிலுக்கு சென்று, கடவுளை வழிப்பட்டு மனதை ஒரு நிலைப்படுத்தி வருவது பலரது வழக்கம். ஒரு சில விஷயங்களை வீட்டில் நாம் கடைப்படித்து வந்தாலும் அமைதி, செல்வம் மற்றும் இன்பம் என அனைத்தும் நிறைந்திருக்கும். அவற்றை பற்றி சற்று தெளிவாக பார்க்கலாம்.

    * பணம் கொடுக்கல் வாங்கலை வீட்டின் வாசல் படியில் வைத்து செய்ய கூடாது.

    * செல்வம் நிலைக்க, விருத்தி அடைய, பணம் கொடுக்கல் வாங்கல், செவ்வாய் கிழமையில் செய்து நல்லது.

    * வாசற்படி, உரல், ஆட்டுக்கல், அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.

    * வெற்றிலை, வாழையிலை இவைகளை வாடவிடக்கூடாது.

    * வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது சுண்ணாம்பு வெற்றிலையை போடக்கூடாது.

    * எரியும் குத்துவிளக்கை தானாக அணையவிடக்கூடாது, வீட்டில் யாரையும் சனியனே என்று திட்டக்கூடாது. எழவு என்றும் கூறக்கூடாது.

    * உப்பை தரையில் சிந்தக்கூடாது.

    * காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலிக்க செய்வது நல்லது.

    * தினசரி துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மும்முறை வலம் வர வேண்டும்.

    * வீடுகளில் வெள்ளை புறாக்கள் வளர்த்தால் செல்வம் பெருகும்.

    * விளக்கை அமர்த்துதல் அல்லது மலையேற்றுதல் என்று தான் சொல்லவேண்டும். `அணைப்பது' என்று கூற கூடாது.

    * வீட்டில் எப்போதும் பலவித ஊறுகாய்கள் குறைவின்றி இருக்க வேண்டும்.

    * அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கையால் பரிமாறக் கூடாது. கரண்டியால் மட்டுமே பரிமாறவேண்டும்.

    * பெண்கள் வளையல் அணியாமல் எதையும் பரிமாறக் கூடாது.

    * அமாவாசையன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது.

    * இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக் கூடாது.

    • அட்சதைக்கு முனை உடைபடாத பச்சரிசியை மட்டும் பயன்படுத்துவார்கள்.
    • அட்சதை தூவுவதால் அங்கு தீய சக்திகள் விலகுகிறது.

    திருமணம் போன்ற அனைத்து சுப காரியங்களிலும் அரிசியில் மஞ்சள் கலந்து, அட்சதை தயாரித்து, அதை தூவி ஆசீர்வாதம் செய்வது வழக்கமாக உள்ளது. யாகங்கள், ஹோமங்கள் ஆகியவற்றிலும் அட்சதை முக்கியமான பொருளாக இடம்பெறுகிறது. அட்சதைக்கு அரிசியை பயன்படுத்துவதற்கு பல முக்கியமான காரணங்கள் உள்ளன.

    சங்க காலத்திற்கு முன்பிருந்தே நம்முடைய வழிபாடு, விழாக்கள் ஆகியவற்றில் அட்சதை பயன்படுத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

     அட்சதை தூவி ஆசிர்வாதம் செய்தல்

    * திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளில் மலர் தூவி ஆசிர்வாதம் செய்வதை விட, அட்சதை தூவி வாழ்த்துவது மிகவும் உயர்வானதாகும்.

    * அட்சதை இல்லாத பட்சத்தில் மலர்களை பயன்படுத்தலாம். சமஸ்கிருதத்தில் அக்ஷதம் என்ற சொல்லுக்கு இடிக்கப்படாத அல்லது பாதிக்கப்படாத என்று பொருள்.

    * அட்சதை தயாரிப்பதற்கு முனை உடைபடாத பச்சரிசியை மட்டும் பயன்படுத்துவார்கள்.

    * அரிசியோடு, மஞ்சள், பசு நெய் சேர்த்து உருவாக்கப்படுவதற்கே அட்சதை என்று பெயர்.

    * வெள்ளை அரிசியில், மஞ்சளும், நெய்யும் சேர்க்கும் போது அதில் தேவதைகளின் அம்சம் நிறைந்து காணப்படும். மணமக்கள் மீது தூவுவதன் அர்த்தம்

    * இதை திருமணத்தின் போது மணமக்கள் மீது தூவுவதால், தேவதைகளே வந்து அவர்களை ஆசீர்வதிப்பதாக அர்த்தம்.

    * அரிசி, மஞ்சள், நெய் மூன்றும் தெய்வங்களுக்கு இணையாக கருதப்படும் மங்கள பொருட்கள் ஆகும். இவை மூன்றையும் ஒன்றாக

    சேர்க்கும் போது தானாக அதற்கு தெய்வீக தன்மை என்பது வந்து விடும்.

    * அரிசி சந்திரனுக்குரிய தானியமாகும். மஞ்சள் குருவிற்குரிய நிறமாகும். நெய் மகாலட்சுமியின் அம்சமாகும். இவை மூன்றும் சேரும் இடத்தில் சுபிட்சம் இருக்கும். அது மட்டுமின்றி அரிசிக்கு உணர்வுகளையும், சக்திகளையும் ஈர்க்கும் சக்தி உண்டு.

    * ஆன்மிக ரீதியாக அரிசியை உடலுடனும், மஞ்சளை ஆன்மாவுடனும், நெய்யை தெய்வத்துடனும் ஒப்பிடுவார்கள்.

    மணமக்களை வாழ்த்துதல்

    * உடல், ஆன்மா ஆகியவை தெய்வ சக்தியோடு இணைந்து மணமக்களை வாழ்த்துகிறோம் என்பதை குறிக்கவே அட்சதையை பயன்படுத்தி ஆசீர்வாதம் செய்கிறார்கள்.

    * திருமாங்கல்யம் அணிவிக்கும் போது அட்சதை தூவுவதால் அங்கு தீய சக்திகள் விலகுகிறது.

    * பொதுவாகவே அரிசியை கைகளால் தொட்டு கொடுக்கக் கூடாது என்று சாஸ்திரம் உள்ளது. அட்சதையையும் கைகளால் தொட்டு கொடுக்கக் கூடாது. அதனாலேயே ஒரு தட்டில் வைத்து, அட்சதையை கொடுக்கிறார்கள். இதனால் அதன் தெய்வீக தன்மை குறையாமல் இருக்கும்.

    * அட்சதை என்பது செல்வ வளம், வரம், வம்ச விருத்திக்கு வழிவகுக்கும் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.

    • விழா ஏற்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்தது.
    • பிரமோற்சவ விழா 13-ந்தேதி வரை கோலாகலமாக நடக்கிறது.

    திருமலை:

    திருப்பதி கோதண்டராமர் கோவிலில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 5-ந்தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 4-ந்தேதி அங்குரார்ப்பணத்துடன் தொடங்கி 13-ந்தேதி வரை கோலாகலமாக நடக்கிறது. விழா ஏற்பாடுகள் குறித்து திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன் தலைமையில் மறு ஆய்வுக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்துக்கு பிறகு நிருபர்களிடம் வீரபிரம்மன் கூறியதாவது:-

    ஏப்ரல் 5-ந்தேதி திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வாகன சேவை தினமும் காலை 7 மணியில் இருந்து 10 மணிவரையிலும், இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரையிலும் நடக்கிறது.

    பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஏப்ரல் 9-ந்தேதி இரவு கருட வாகனம், ஏப்ரல் 10-ந்தேதி அனுமந்த வாகனம், ஏப்ரல் 13-ந்தேதி சக்கர ஸ்நானம் நடக்கிறது.

    பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்குதல், கலாசார நிகழ்ச்சிகள், பாதுகாப்பு, குடிநீர், மோர், மலர் மற்றும் மின் விளக்கு அலங்காரம் போன்ற அனைத்து ஏற்பாடுகளை செய்ய அந்தந்தத்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள். வாகன சேவைக்கு முன்னால் பக்தி பஜனைகள் மற்றும் கோலாட்டங்கள் நடக்கிறது.

    விழாவில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட பக்தர்களை மீட்டு மருத்துவனைக்குக் கொண்டு செல்ல ஆம்புலன்சுகள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும். மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். பிரம்மோற்சவ விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் பக்தி சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்படும். பக்தர்களுக்கு ராமகோடி புத்தகங்கள் வினியோகம் செய்யப்படும். போதுமான எண்ணிக்கையில் ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்களை நியமித்து பக்தர்களுக்கு சேவை செய்யப்படும்.

    ஏப்ரல் 17-ந்தேதியில் இருந்து 19-ந்தேதி வரை ராம நவமி உற்சவம், ஏப்ரல் 21-ந்தேதியில் இருந்து 23-ந்தேதி வரை வருடாந்திர தெப்போற்சவம் நடக்கிறது. இந்த விழாக்களும் வெகுவிமரிசையாக நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இன்று காலையில் பெரிய தேரோட்டம் நடைபெற்றது.
    • பக்தர்கள் எழுப்பிய அரோகரா கோஷம் விண்ணை முட்டியது.

    திருப்பரங்குன்றம்:

    முருகப்பெருமானின் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிர மணிய சுவாமி கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது பங்குனி பெரு விழாவாகும். 15 நாட்கள் நடைபெறும் இந்த விழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவினை முன்னிட்டு முருகப்பெருமான் தெய்வானையுடன் காலையில் பல்லக்கிலும், மாலையில் தங்க மயில் வாகனம், தங்க குதிரை வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், சேஷ வாகனம் உள்ளிட்ட பல் வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முருகப்பெருமான் தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

    இதில் மதுரையில் இருந்து பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன் ஆகியோர் கலந்து கொண்டு முருகப்பெருமான் திருமணத்தை நடத்தி வைத்தனர். விழாவில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை அம்பாளை திருமண கோலத்தில் தரிசித்தனர்.

    இதையடுத்து இரவு மீனாட்சி அம்மன் மற்றும் பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரருக்கு வழியனுப்பு விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அம்பாரி வாகனத்தில் முருகப்பெருமான் தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று காலையில் பெரிய தேரோட்டம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலையில் உற்சவர் சன்னதியில் முருகன் தெய்வானைக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

    தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காலை 5.30 மணிக்கு முருகப்பெருமான் தேரில் எழுந்தருளினார். அங்கு கூடியிருந்த பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கிரிவலப்பாதை வழியாக ஆடி அசைந்து சென்றது பக்தர்களை பரவசப்படுத்தியது. அப்போது பக்தர்கள் எழுப்பிய அரோகரா கோஷம் விண்ணை முட்டியது.

    தேரின் முன்பாக சிறிய தேரில் விநாயகர் சென்றார். விழாவில் திருப்பரங்குன்றம், அவனியாபுரம், நிலையூர், கூத்தியார்குண்டு, தனக்கன் குளம் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், உள்ளூர், வெளியூர் பக்தர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தேரை வரம் பிடித்து இழுத்து சுவா மியை தரிசனம் செய்தார்கள்.

    தேரோட்டத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் ஆங்காங்கே பக்தர்களுக்கு நீர்மோர், அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா, அறங்காவலர்கள் மணி செல்வம், பொம்ம தேவன், சண்முகசுந்தரம், ராமையா, கோவில் துணை ஆணையர் சுரேஷ் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • இறைவனையும், இறைவியையும் வழிபட்டால் திருமணத் தடை நீங்கும்.
    • அம்பாளின் கருவறைக்குள் பெண்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

    கோவில் தோற்றம்

    தில்லை நடராஜர் ஆலயத்தை சுற்றி பல சிவாலயங்கள் உள்ளது. ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு வகையில் நடராஜர் ஆலயத்தோடு தொடர்பு கொண்டவைதான். இவற்றில் பல ஆலயங்கள் அற்புதங்கள் நிறைந்தவையாகவும் உள்ளது. அப்படி ஒரு ஆலயம்தான், தில்லைவிடங்கன் என்ற கிராமத்தில் உள்ள விடங்கேஸ்வரர் கோவில்.

     தில்லைக்கு வலது கண், தில்லைவிடங்கன் கிராமம். மன்னர் காலத்தில் மாரிமுத்தாப்பிள்ளை என்ற தமிழ்ப் புலவர் வாழ்ந்து வந்தார். அவர் தினமும் தில்லை நடராஜர் ஆலயத்தில் நடக்கும் உச்சிகால பூஜையில் கலந்துகொண்டு தேவாரம், திருவாசகம் பாடுவதோடு, தான் இயற்றிய தமிழ் பாடல்களையும் இறைவன் முன்பாக பாடுவார். அவர் தில்லை நடராஜர் ஆலயத்திற்கு செல்லும்போது, தனது தோட்டத்தில் இருந்து வாழைப்பழம் எடுத்துச் செல்வார். இது ஒரு நாளும் தவறியது இல்லை.

    ஒரு நாள் கடுமையான காற்றுடன் மழை பெய்தது. அதனால் தில்லை நடராஜர் கோவிலுக்கு எப்படிச் செல்வது என்ற கவலையில் ஆழ்ந்தார். ஒரு கட்டத்தில் ஈசனை மனதில் நினைத்துக் கொண்டு கோவிலுக்குச் செல்லத் தொடங்கினார். வழியில் கந்தமங்கலம் என்ற கிராமத்திற்கு வந்தபோது, மழையின் கடுமை அதிகமானது. இதற்கு மேல் செல்ல முடியாது என்ற நிலை ஏற்பட்டதால், அந்த கிராமத்திலேயே ஒரு ஓரமாக தங்கினார். சில மணி நேரங்களுக்குப்பிறகு மழை குறைந்ததும் மீண்டும் கோவிலை நோக்கி பயணித்தார்.

    `நாம் செல்வதற்குள் உச்சிகால பூஜை முடிந்துவிடுமோ? ஈசனுக்கு வாழைக் கனியை கொடுக்க முடியாதோ?' என்ற கவலையோடு, `நமசிவாய' என்ற மந்திரத்தை உச்சரித்தபடியே கோவிலை அடைந்தார். அவரைப் பார்த்ததும் கோவில் அர்ச்சகர்கள், "வாருங்கள் புலவரே.. இறைவனுக்கு கனியை கொடுத்து விட்டு எங்கே சென்றீர்கள்? உச்சிகால பூஜை தொடங்கப்போகிறது. வந்து சாமியை தரிசனம் செய்யுங்கள்" என்றனர்.

    அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த புலவர், `சுவாமி என்ன சொல்கிறீர்கள்? நான் மழையால் பல மணி நேரம் ஓரிடத்தில் ஒதுங்கி நின்று விட்டு இப்போதுதான் ஆலயத்திற்கு வருகிறேன். வழக்கமாக நான் அளிக்கும் வாழைப்பழம் கூட என் கையில்தான் உள்ளது. ஆனால் ஏற்கனவே நான் வந்து பழம் தந்ததாக நீங்கள் சொல்கிறீர்களே?" என்று கேட்டார்.

    அர்ச்சகர்களும் ஆச்சரியப்பட்டுப் போயினர். வந்தது ஈசன்தான் என்பதை அனைவரும் உணர்ந்து கொண்டனர். உடனே இறைவனின் மகிமையை எண்ணி, கண்ணீர் வடித்த புலவர், இறைவனை நினைத்து மனமுருகப் பாடினார். பின்னர் அவர் இதுபற்றி தன் ஊர் மக்களிடம் கூறினார். ஆனால் அவர்கள் யாரும் அதை நம்பத் தயாராக இல்லை.

    அன்று இரவு புலவர் உறங்கியதும், அவரது கனவில் தோன்றிய ஈசன், "என்னைக் காண நீ தினம் தினம் பல சிரமங்களை சந்தித்து தில்லை வருகிறாய். இனி நீ அப்படி தில்லை வரவேண்டிய அவசியம் இல்லை. தில்லைவிடங்கனில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிச்சாவரம் வனப்பகுதியில் நான் இருக்கிறேன். என்னைக் கொண்டு வந்து இங்கே வைத்து வழிபாடு செய். உனக்கு எல்லா வளங்களும் கிடைக்கும்" என்றார்.

    மறுநாள் காலை இதுபற்றி ஊர் மக்களிடம் புலவர் தெரிவித்தார். ஆனால் யாரும் நம்பவில்லை. வழக்கம்போல அவரை எள்ளி நகையாடினர். இருப்பினும் மனம் தளராத அந்த புலவர், ஈசன் சொன்ன இடத்திற்குச் சென்று பார்த்தபோது அங்கே ஒரு சிவலிங்கம் இருப்பது கண்டு மகிழ்ந்தார். ஆனால் அந்த சிவலிங்கம் பெரியதாக இருந்ததால், எப்படி இங்கிருந்து தூக்கிச் செல்வது என்று தவித்தார்.

    அப்போது அருகில் மரத்தை வெட்டும் சத்தம் கேட்டு, அங்கு சென்றார். அங்கே சிலர் மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களிடம் சிவலிங்கத்தை, தன் ஊருக்கு கொண்டு செல்ல உதவும்படி கேட்டார். ஆனால் அவர்களோ, `அப்படிச் செய்தால் எங்களுக்கு ஒரு நாள் கூலி போய்விடும். அந்த கூலியை நீங்கள் தருவதாக சொன்னால், நாங்கள் சிவலிங்கத்தை எடுத்து வந்து உங்கள் ஊரில் கொடுக்கிறோம்" என்றனர்.

    அவரும் சரி என்று கூற, அவர்கள் சிவலிங்கத்தை தில்லைவிடங்கன் கிராமத்தில் கொண்டு வந்து சேர்த்தனர். அப்போதுதான் ஊர் மக்கள், புலவரை நம்பினர். ஊர் மக்கள் அனைவரும் புலவரிடம் மன்னிப்பு கேட்டனர். பின்னர் சிவலிங்கத்தை தூக்கி வந்தவர்களுக்கு ஊதியம் கொடுக்க அவர்களைத் தேடியபோது, அவர்கள் அங்கே இல்லை. அந்த சிவலிங்கத்தை தூக்கி வந்தவர்கள் அனைவரும் தேவலோகத்தைச் சேர்ந்த தேவர்கள் என்பதை மக்கள் புரிந்து கொண்டனர்.

    முதல் வேலையாக அந்த சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து ஒரு சிறிய ஆலயம் அமைத்தனர். அந்த ஊரிலேயே இருந்த ஒரு சிற்பி, அம்பாள் சிலை வடிக்கத் தொடங்கினார். அதையும் அதன் அருகிலேயே பிரதிஷ்டை செய்தனர். நாளடைவில் பல்வேறு சன்னிதிகளுடன் இந்த ஆலயம் விரிவாக்கம் பெறத் தொடங்கியது என்று இந்த ஆலயம் உருவான வரலாறு சொல்லப்படுகிறது.

     ஆலய அமைப்பு

    கிழக்கு பார்த்தபடி அமைந்த இந்த ஆலயம், மகா மண்டபத்தின் வெளியே நந்தி, பலிபீடம், இடதுபக்கம் நவக்கிரக சன்னிதியைக் கொண்டுள்ளது. மகா மண்டபத்தின் மேலே சிவன்-பார்வதியும், அவர்களின் இருபுறமும் நந்தியும் சுதைச் சிற்பங்களாக காட்சி தருகின்றனர். அவர்களை வணங்கி ஆலயத்திற்குள் நுழைந்தால், இடப்பக்கம் நால்வர் சன்னிதி, தொடர்ந்து விநாயகர், வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர், நடராஜர் - சிவகாம சுந்தரி சன்னிதிகளும், வலது பக்கம் ஒரே சன்னிதியில் சூரியன் - சந்திரன், பைரவர், சனீஸ்வரன் ஆகியோரும் வீற்றிருக்கின்றனர். ஆலயத்தில் தெற்கு நோக்கி பர்வதாம்பாள் நான்கு திருக்கரங்களோடு காட்சி தருகிறார். கருவறைக்குள் வட்டவடிவிலான பீடத்தில் விடங்கேஸ்வரர் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.

    இந்த ஆலய இறைவனையும், இறைவியையும் வழிபட்டால் திருமணத் தடை நீங்கும் என்கிறார்கள். திருமணத் தடை உள்ள பெண்கள், வளர்பிறையில் வரும் ஞாயிற்றுக்கிழமையில் காலை 7 மணி முதல் 9 மணிக்குள், அம்பாளின் திருப்பாதத்தில் மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து, மலர்கள் சமர்ப்பித்து மஞ்சள் கட்டிய திருமாங்கல்யக் கயிற்றை அம்மனின் பாதத்தில் வைத்து பூஜிப்பார்கள். இதனால் திருமணம் விரைவில் நடந்தேறும் என்கிறார்கள்.

    பொதுவாக கருவறைக்குள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் திருமணத் தடை என்ற கூட்டுப் பிரார்த்தனைக்காக மட்டும், அம்பாளின் கருவறைக்குள் பெண்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

    பேச்சுக் குறைபாடு உள்ளவர்கள், தொடர்ச்சியாக ஐந்து மாதங்கள் திங்கட்கிழமை தோறும் காலையில் இவ்வாலயம் வந்து, அப்போது இறைவனுக்கு நடைபெறும் அபிஷேக, ஆராதனைகளைக் கண்டு, அபிஷேக தீர்த்தத்தை வாங்கி பருகினால், பேச்சுக் குறைபாடு நீங்கும் என்கிறார்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், தம்பதியராக இங்கே வந்து மகா மண்டபத்தில் அமர்ந்து `ஓம் நமசிவாய' என்ற மந்திரத்தை 108 முறை ஜெபிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள்.

    இவ்வாலயத்தில் ஐப்பசி அன்னாபிஷேகம், மகா சிவராத்திரி வெகு விமரிசையாக கொண்டாடப்படும். மேலும் வாரந்தோறும் திங்கட்கிழமை பூஜை, பிரதோஷம் ஆகிய தினங்களும் சிறப்பாக வழிபடப்படும்.

    அமைவிடம்

    சிதம்பரத்தில் இருந்து கிள்ளை செல்லும் பேருந்தில் சென்றால் தில்லைவிடங்கன் கிராமத்தை அடையலாம்.

    • ருத்ராட்சத்தை, சிவனுடைய கண்கள் என்று கூறுவர்.
    • ருத்ராட்சத்திற்கு 14 வித பெயர்கள் உண்டு.

    ருத்ராட்சத்தை, சிவனுடைய கண்கள் என்று கூறுவர். ருத்ராட்ச மரத்தை, ஒரு தெய்வீக விருட்சம் எனப் போற்றுவார்கள். அம்மரத்துப் பழத்தின் உள்ளிருக்கும் விதையே, ருத்ராட்சம். சொல்லுக்கடங்கா மகிமை வாய்ந்த ருத்ராட்சத்தை, யாவரும் அணிதல் அவசியம். ருத்ராட்சத்திற்கு 14 வித பெயர்கள் உண்டு. `யோகராசா' என்னும் நூலை ஆராய்ந்தால், பல உண்மைகள் புரியும்.

    ஒரு முக ருத்ராட்சம்:- சிவன். இதை அணிந்தால் பிரம்மஹத்தி தோஷம் முதல் எல்லா தோஷங்களும் நிவர்த்தியாகும். இதை அணிந்திருப்பவரை எந்தவிதமான எதிர்ப்பாலும் வெற்றிகொள்ள முடியாது.

    இரு முக ருத்ராட்சம்:- இதற்கு `ஹர சவுரி' என்று பெயர். ஹோகத்தி முதலிய தோஷங்கள் விலகும்.

    மூன்று முக ருத்ராட்சம்:- இதற்கு `அக்னி ருத்ராட்சம்' என்று பெயர். இதை அணிந்தால் பருத்திப் பொதியில் நெருப்புப் பற்றினால் பொசுங்கி விடுவதுபோல, மூன்று பிறவிகளில் செய்த பாவங்கள் நீங்கும்.

    நான்கு முக ருத்ராட்சம்:- இதற்கு `தத்தாத்ரேயர்' என்று பெயர். இதை அணிந்தவர்களுக்கு மனிதனைக் கொன்ற பிரம்மஹத்தி நிவர்த்தியாகும்.

    ஐந்து முக ருத்ராட்சம்:- இதை `காலக்னி' என்று கூறுவர். இது ஜீரண சக்தியை உண்டாக்கும். குடிப்பழக்கம் முதலிய செய்யத் தகாத விஷயங்களால் ஏற்பட்ட பாவங்கள் விலகும்.

    ஆறு முக ருத்ராட்சம்:- இதனை `ஷண்முக ருத்ராட்சம்' என்பர். இதை அணிந்தால் கருவை அழித்த பாவம் நீங்கும்.

    ஏழு முக ருத்ராட்சம்:- `ஆனந்த ருத்ராட்சம்' என்பது இதன் பெயர். இதை அணிவர்களுக்கு ஐஸ்வர்யம் நிலைக்கும்.

    எண் முக ருத்ராட்சம்:- இதனை `விநாயகர் ருத்ராட்சம்' என்பர். பொய், களவு, சூது போன்ற பஞ்சமா பாதகங்கள் செய்த பாவம், இதனை அணிவதால் குறையும்.

    ஒன்பது முக ருத்ராட்சம்:- 'பைரவ ருத்ராட்சம்' என்று பெயர். இதையணிந்தால் சிவலோக பதவி கிட்டும்.

    பத்து முக ருத்ராட்சம்:- இதற்கு 'விஷ்ணு' என்று பெயர். இதை அணிந்தால் பல்வேறு தோஷங்கள் அகலும்.

    பதினோரு முக ருத்ராட்சம்:- `ஏகாதச ருத்ராட்சம்' என்பது இதன் பெயர். இதையணிந்தால் பல யாகங்களைச் செய்த புண்ணியம் கிடைக்கும்.

    பன்னிரண்டு முக ருத்ராட்சம்:- இதனை `அர்க்க ருத்ராட்சம்' என்பர். இதனை அணிந்தால் பல புண்ணிய நதிகளின் நீராடிய பலன் கிடைக்கும். நீராடும் தண்ணீரும் கூட இந்த ருத்ராட்சத்தால் புனிதத்துவம் பெறும்.

    பதின்மூன்று முக ருத்ராட்சம்:- `காம ருத்ராட்சம்' இதன் பெயர். இது எல்லா ஆசைகளையும் நிறைவேற்றும். நினைத்தது நினைத்தபடி சித்திக்கும்.

    பதினான்கு முக ருத்ராட்சம்:- இதற்கு `ஸ்ரீகண்ட ருத்ராட்சம்' என்று பெயர். இதை அணிபவர்கள் தங்களின் குலத்திற்கு பெருமை சேர்ப்பார்கள்.

    • உண்மையான நோன்பு எது?
    • ஐம்புலன்களையும் அடக்கி ஆள்வது தான் உண்மையான நோன்பு.

    உண்மையான நோன்பு எது?

    உணவு, பானங்கள், உடல் இச்சை ஆகியவற்றை விட்டு தடுத்துக் கொள்வது தான் உண்மையான நோன்பு என நாம் நினைப்பது முற்றிலும் தவறு. நமது உடலின் ஒவ்வொரு உறுப்புக்களும் நோன்பு இருப்பதே உண்மையான நோன்பு ஆகும்.

    நோன்பின் ஒழுக்கங்கள் எட்டு. அவை: வயிறு, கண்கள், காதுகள், மூக்கு, நாக்கு, கை-கால்கள், மறைவிடத்தைப் பேணுதல் ஆகும். ஒட்டுமொத்தத்தில் ஐம்புலன்களையும் அடக்கி ஆள்வது தான் உண்மையான நோன்பு.

    வயிறு: விலக்கப்பட்டவைகளை உண்ணுவது, பருகுவது ஆகியவைகளை விட்டு தடுத்து நோன்பு இருக்க வேண்டும்.

    கண்கள்: விலக்கப்பட்டவைகளையும், ஆபாசங்களையும் பார்ப்பதை விட்டு தடுத்து நோன்பு இருக்க வேண்டும்.

    காதுகள்: பொய், புறம், அவதூறு, ஆபாசம், கவனத்தை திசை திருப்பும் இசை போன்ற விலக்கப்பட்ட செயல்களை கேட்பதை விட்டு தடுத்து நோன்பு இருக்க வேண்டும்.

    மூக்கு: தடை செய்யப்பட்ட மதுவகைகள், புகைவகைகள், போதையூட்டும் பொருட்கள் ஆகியவைகளை நுகர்வதை விட்டும் தடுத்துநோன்பு இருக்க வேண்டும்.

    நாவு: பொய், புறம், அவதூறு, அறிவற்ற பேச்சுக்கள் ஆகியவைகளை விட்டும் தடுத்து நோன்பு இருக்க வேண்டும்.

    கைகள்: அனுமதிக்கப்படாத பொருட்களை தொடுதல், லஞ்சம் வாங்குதல், வரதட்சணை வாங்குதல், வட்டி வாங்குதல், கொடுத்தல், அதற்கு சாட்சியாக இருத்தல், கொலை- கொள்ளையடித்தல் ஆகியவற்றில் இருந்து விலகி இருந்து நோன்பு இருக்க வேண்டும்.

    கால்கள்: தடுக்கப்பட்ட இடங்கள் அனைத்திற்கும் செல்வதை விட்டும் தடுத்து நோன்பு இருக்க வேண்டும்.

    மறைவிடம்: பாலியல் தொந்தரவு, பலாத்காரம், தகாத உறவு போன்ற செயல்களை விட்டு விலகி நோன்பு இருக்க வேண்டும். இவ்வாறு உடலும், உறுப்புகளும் தவிர்க்க வேண்டியவைகளை விட்டு விலகி இருந்து நோன்பு இருக்க வேண்டும்.

    "முஃமீன்களே! உங்கள் முன்னோர்கள் மீது நோன்பு விதியாக்கப்பட்டிருப்பது போன்று, உங்கள் மீதும் விதியாக்கப்பட்டிருக்கிறது. (அதனால்) நீங்கள் பரிசுத்தமானவர்களாக முடியும்".(திருக்குர் ஆன் 2:183)

    "எவர் பொய்யான காரியங்களை செய்வதை யும், பொய்யான பேச்சுக்களையும் விடவில்லையோ, அவர் தமது உணவையும், நீரையும் விட்டுவிடுவ (நோன்புவைப்ப)தில் அல்லாஹ் விற்கு எந்தத் தேவையும் இல்லை என நபி (ஸல்) கூறினார்கள்". (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்:புகாரி)

    "எத்தனையோ நோன்பாளிகள், அவர்களின் நோன்பில் இருந்து பசியையும், தாகத்தையும் தவிர வேறெதுவு (கூலியு)ம் கிடைப்பதில்லை என நபி (ஸல்) கூறினார்கள்". (அறி விப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: தாரமீ)

    பசித்திருப்பது, தாகித்திருப்பது நோன்பல்ல. தகாதகாரியங்கள் முழுவதையும் தவிர்த்து இருப்பது தான் பரிபூரணமான நோன்பு என்பதை நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.

    இந்த நோன்பின் மூலம் இறைவனுக்காக மனிதன் பல தியாகங்களை செய்கிறான். உணவு, நீர், இல்லற இன்பம் இவற்றை மனவிருப்பத்தோடு விலக்குகிறான். இவை அவனது நுகர்தலுக்கு உரியவை. ஆயினும், இவற்றைக் குறிப்பிட்ட காலத்துக்கு விலக்கி வாழ்கிறான்.

    ஐம்புலன்களை தேவையானபோது, அடக்கி ஆளும் ஆற்றலை மனிதன் பெறுவதே நோன்பின் தத்துவம். நாமும் அதை பெறுவோம்.

    • அழகிய நம்பிராயர், தேவிமார்களுக்கு திருமஞ்சனம், தீபாராதனை.
    • இரவு படியேற்ற சேவை நடைபெறும்.

    நெல்லை மாவட்டம் நாங்குனேரி தாலுகாவில், மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள திருத்தலம் திருக்குறுங்குடி. 1500 வருடம் பழமையான இந்த புண்ணிய க்ஷேத்திரம், 108 திவ்ய தேசங்களில் சிறப்பு வாய்ந்த தாகும். வராஹப் பெருமான் தனது பிரம்மாண்டமான உருவத்தைக் குறுக்கியது இந்த தலத்தில் என்பதால் திருக்குறுங்குடி ஆயிற்று.

    வாமன க்ஷேத்திரம் என்ற பெருமை வாய்த்ததால், குறியவன் வசிக்கும் குடில் எனும் அர்த்தம் தொனிக்கக் குறுங்குடி என்று பெயர் பெற்றது. வராஹ மூர்த்தியின் மடியிலிருந்து பூமிப் பிராட்டி கைசிக மஹாத்மியத்தை இத்தலத்தில் உபதேசம் பெற்று, பின் பூவுலகில் ஆண்டாளாக அவதரித்துப் பெருமாளின் பெருமையைப் பரப்பியதால், ஆண்டாளின் அவதார காரணத் தலம் திருக்குறுங்குடி.

    நம்மாழ்வாரின் பெற்றோர்களான காரியும், உடைய நங்கையும் இத்தலத்தில் வந்து புத்திர பாக்கியம் வேண்டிப் பிரார்த்தித்ததால், திருக்குறுங்குடி நம்பியின் அம்சமாக நம்மாழ்வார் அவதரித்தார். எனவே இத்தலத்தில், நம்மாழ்வாருக்குத் தனி சன்னதி இல்லை. திருமங்கை ஆழ்வார் பரமபதம் அடைந்த தலமும் இதுவே.

    இத்தலத்தில், பெருமான் ஐந்து நிலைகளில் சேவை சாதிக்கிறார். நின்ற நம்பி, இருந்த நம்பி, கிடந்த நம்பி, திருப்பாற்கடல் நம்பி மற்றும் மலை மேல் நம்பி என்று பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். நம்பி கோவிலின் மூலவர், நின்ற திருக்கோலத்தில் உள்ள வடிவழகிய நம்பி. ஒரு முறை பார்த்தவர் திரும்ப திரும்பப் பார்க்க வருவர் என்று சொல்லும் அளவிற்குச் சிவந்த திருமேனியுடன், தாமரையை ஒத்த விசாலமான செவ்வரி ஓடிய கண்களுடன் காட்சி தருகிறார்.

    திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயில் பங்குனி பிரம்மோற்சவ விழாவில், இன்று ஐந்து கருட சேவை நிகழ்ச்சி நடைபெறும். இக்கோயிலில், பங்குனி பிரம்மோற்சவம் தினம் 5-ஆம் திருவிழாவில் காலையில் சுவாமி திருவீதி புறப்பாடு நடைபெறும். பின்னர், அழகிய நம்பிராயர் மற்றும் தேவிமார்களுக்கு திருமஞ்சனம், தீபாராதனை நடைபெறும்.

    மாலையில் அழகிய நம்பிராயர், வீற்றிருந்த நம்பி, சயன நம்பி, திருப்பாற் கடல் நம்பி, திருமலை நம்பி ஆகிய 5 சந்நதிகளின் உற்சவர்களும், 5 கருட வாகனங்களில் எழுந்தருளுவர். அலங்காரமாகி, தீபாராதனை, தீர்த்த விநியோகம் நடைபெறும். இரவு 9 மணியளவில், ஒவ்வொரு எம்பெருமானும் ராயகோபுர வாசல் கடந்து படியேற்ற சேவை நடைபெறும். மாடவீதிகள், ரதவீதிகள் வழியாக ஐந்து பெருமாளும் வலம் வருவதைக் காண ஆயிரம் கண்கள் வேண்டும்.

    • திருத்தணி முருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை.
    • திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் பெரிய வைரத் தேரோட்டம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, பங்குனி 16 (வெள்ளிக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: சதுர்த்தி இரவு 6.21 மணி வரை. பிறகு பஞ்சமி.

    நட்சத்திரம்: விசாகம் இரவு 6.41 மணி வரை. பிறகு அனுஷம்.

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி ராஜாங்க ஹம்ச வாகனத்தில் பவனி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு. திருத்தணி முருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை. திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் பெரிய வைரத் தேரோட்டம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலையில் திருமஞ்சன சேவை. மாலை ஊஞ்சல் சேவை. மாடவீதி புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-சுகம்

    ரிஷபம்-நன்மை

    மிதுனம்-உறுதி

    கடகம்-முயற்சி

    சிம்மம்-நன்மை

    கன்னி-பொறுமை

    துலாம்- ஆர்வம்

    விருச்சிகம்-அமைதி

    தனுசு- உயர்வு

    மகரம்-பரிவு

    கும்பம்-தெளிவு

    மீனம்-கணிப்பு

    • இரு மாநில பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வார்கள்.
    • இங்கு சிறப்பு அம்சம் என்னவென்றால் பூசாரி மட்டுமே தீமிதிப்பார்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. தமிழக-கர்நாடகா எல்லை அருகே இந்த கோவில் அமைந்துள்ளதால் இரு மாநில பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வார்கள்.

    இந்த கோவிலின் குண்டம் திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த குண்டத்தில் சிறப்பு அம்சம் கோவில் பூசாரி மட்டுமே தீமிதிப்பார்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 26-ந் தேதி தொடங்கியது. நேற்று காலை முதல் மாலை வரை சிறப்பு பூஜைகள் நடந்தன மாலை 6 மணிக்கு மாரியம்மனுக்கு சிறப்பு மலர் மற்றும் ஆபரணங்கள் அலங்கரிக்கப்பட்டன.

    தாளவாடி மாரியம்மனுடன் கும்டாபுரம் மாரியம்மனும் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இரவு 9 மணிக்கு அம்மனுக்கு அலங்கார வீதி உலா தொடங்கியது. உற்சவ சிலைகள் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைக்கப்பட்டு தாளவாடியில் உள்ள அனைத்து வீதிகளிலும் உலா வந்தது. இரவு கோவிலின் முன்பு குண்டம் பற்ற வைக்கப்பட்டது. குண்டத்தில் போடப்பட்ட விறகுகள் முழுமையாக எரிந்து காலையில் குண்டம் தயார் செய்யப்பட்டது.

    தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் இருந்து மேல தாளங்கள் முழங்க உற்சவர் சிலைகள் தாளவாடி ஆற்றுக்கு புறப்பட்ட கோவிலின் தலைமை பூசாரி சிவண்ணா தலைமையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஆற்றுக்கு சென்றனர்.

    அங்கு மாரியம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் உற்சவர் சிலை பூசாரி சிவண்ணா தலையில் சுமந்து அம்மனை அழைத்து வந்தார். அப்போது பக்தர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து ஊர்வலமாக வந்தனர்.

    இளைஞர்கள் காவல் தெய்வங்கள் வேடத்தில் அலங்காரம் செய்து ஆடி வந்தனர். இதேபோல குறவர் ஆட்டம் ஆடிக்கொண்டு சில பக்தர்கள் வந்து சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.

    ஆற்றை கடந்து ஊர்வலம் வந்தபோது அங்குள்ள விநாயகர் கோவில் முன்பு காத்திருந்த பெண்கள் மலர் மற்றும் பழங்கள் வைத்து மாரியம்மனை வரவேற்றனர். பின்னார் தாளவாடி பஸ் நிலையம் பகுதியில் மாரியம்மனுக்கு பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    தலமலை ரோடு, ஓசூர் ரோடு பகுதியிலும் அம்மன் ஊர்வலம் சென்றது. அங்கிருந்து அம்மன் ஊர்வலம் போயர் வீதி, மற்றும் அம்பேத்கார் வீதிக்கு சென்றது. அங்கு பக்தர்கள் மலர்களால் மாலை அணிவித்து அம்மனை வரவேற்றனர்.

    அதை ஏற்றுக்கொண்ட மாரியம்மன் உற்சவ சிலை ஊர்வலமாக கோவில் வளாகத்துக்கு வந்தது. அதைத்தொடர்ந்து மேள தாளங்கள், தப்பட்டைகள் முழங்க தலைமை பூசாரி சிவண்ணா மாரியம்மன் உற்சவ சிலையை கொண்டு குண்டத்தை நோக்கி விரைந்து வந்தார்.

     அப்பொழுது கூடி இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பத்தி கோஷங்கள் எழுப்ப 30 அடி நீளம், 4 அடி உயரம் உள்ள குண்டத்தில் இறங்கி கோவில் கருவறைக்கு சென்றார். அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

    விழாவையொட்டி தாளவாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களில் இருந்தும் பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். பெரும்பாலான கர்நாடக முறையில் பூஜைகள் நடைமுறைப்பட்டது. இந்த பிரம்மாண்ட குண்டம் விழாவில் கோவிலின் பூசாரி சிவண்ணா மட்டுமே தீ மிதித்தார். வேற யாரும் குண்டம் இறங்க அனுமதி இல்லை. எனினும் பூசாரி தீ இறங்குவதை பார்க்க காலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் முன்பு குவிந்தனர்.

    கோவில் பூசாரி சிவண்ணா குண்டம் இறங்கும் போது கோவிலின் கோபுரத்தின் மேல் கருடர் வலம் வந்தார். அவர் குண்டம் இறங்கும்போது பக்தர்கள் எழுப்பிய கோஷம் விண்ணை தொட்டது. குண்டத்தில் இருந்து அவர் வெளியே றியதும் கூடியிருந்த பக்தர்கள் கையில் இருந்த பூமாலை, வேப்பிலை, உப்பு, சாம்பிராண்டி ஆகியவற்றை குண்டத்தில் வீசினார்கள். சாமி தரிசனம் செய்தனர்.

    குண்டம் விழாவையொட்டி தாளவாடி இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • நிறைவு நாளான நேற்று இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது.
    • பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பிரசித்தி பெற்ற சந்திரசூடேஸ்வரசாமி கோவில் தேர்த்திருவிழா நேற்று முன்தினம் விமரிசையாக நடைபெற்றது.

    இதில், தமிழகம் மட்டுமன்றி ஆந்திரா, கர்நாடகம் என 3 மாநி லங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் இழுத்து, சாமியை வழிபட்டு சென்றனர். விழாவின் அடுத்த நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் இரவு ஓசூர் தேர்பேட்டையில் பல்லக்கு உற்சவம் விடிய, விடிய நடைபெற்றது.

    இந்த விழாவின் போது, விநாயகர், சந்திர சூடேஸ்வரர், மரக தாம்பிகை அம்மன், முருகர், ஆஞ்சநேயர் என 20-க்கும் மேற்பட்ட சாமிகளை அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில் வைத்து வானவேடிக்கை மற்றும் மேள வாத்தியம் முழங்க தேர்பேட்டையில் வீதி உலா நடைபெற்றது.

    தேர்திருவிழாவின் நிறைவு நாளான நேற்று இரவு, தேர்பேட்டையில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், ஸ்ரீ மரக தாம்பிகை சமேத சந்திர சூடேஸ்வர சாமியை தெப்பத்தில் வைத்து, நாதஸ்வர இசையுடன், குளத்தை சுற்றி 3 முறை வலமாக அழைத்து செல்லப்பட்டார். அப்போது ஏராளமான பக்தர்கள் பூஜைப் பொருட்களை வழங்கி சாமியை வழிபட்டனர்.

    மேலும் இதில், முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். தெப்ப உற்சவத்தை காண, ஓசூர் மற்றும் சுற்று பகுதிகளிலிருந்து மக்கள் குவிந்ததால் ஓசூர் தேர்பேட்டையில் கூட்டம் அலைமோதியது.

    ×