search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    குழந்தையின்மை சிகிச்சைக்கு தைராய்டு பரிசோதனை அவசியம்
    X

    குழந்தையின்மை சிகிச்சைக்கு தைராய்டு பரிசோதனை அவசியம்

    • தைராய்டு சுரப்பி ஒவ்வொருவரின் கழுத்திலும் பட்டாம்பூச்சி வடிவத்தில் இருக்கும்.
    • கருச்சிதைவு, குறை பிரசவம் ஆகிய பிரச்சனைகளால் பாதிக்கப்படுவார்கள்.

    குழந்தையின்மையால் பாதிக்கப்பட்ட பெண்கள் எவ்வளவு பேருக்கு இந்த தைராய்டு பிரச்சனை இருக்கும்? தைராய்டு பிரச்சனை குழந்தையின்மைக்கு வழி வகுக்குமா?

    பொதுவாக குழந்தையின்மையால் பாதிக்கப்படுகிற 15 சதவீதம் பெண்களில், கிட்டத்தட்ட 6 முதல் 22 சதவீதம் வரையிலான பெண்களுக்கு தைராய்டு பிரச்சனை இருக்கும்.


    தைராய்டு பிரச்சனை இருக்கும் பெண்களில் கிட்டத்தட்ட 60 முதல் 65 சதவீதம் பெண்களுக்கு குழந்தையின்மை ஏற்படும். ஒருவேளை அவர்கள் கருத்தரித்தால் கருச்சிதைவு, குறை பிரசவம் ஆகிய பிரச்சனைகளால் பாதிக்கப்படுவார்கள்.

    எனவே குழந்தையின்மை சிகிச்சையில் தைராய்டு ஹார்மோன் பரிசோதனை என்பது மிக முக்கியமான ஒன்றாகும். குழந்தையின்மையால் பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களும் கர்ப்ப காலத்தில் கண்டிப்பாக தைராய்டு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    தைராய்டு தாக்கம் அனைத்து செல்களையும் பாதிப்பதால் கண்டிப்பாக குழந்தை பேறுக்கு தைராய்டு பரிசோதனை மிக முக்கியமானதாகும்.


    தைராய்டு சுரப்பி என்பது ஒவ்வொருவரின் கழுத்திலும் பட்டாம்பூச்சி போன்ற வடிவத்தில் இணைக்கப்பட்ட 2 மடல்களை கொண்டுள்ளது. அந்த தைராய்டு சுரப்பியில் இருந்துதான் தைராய்டு ஹார்மோன் சுரக்கிறது.

    இந்த தைராய்டு ஹார்மோன் நமது உடலில் உள்ள செல்களின் செயல்பாடுகளில் பங்கு வகிக்கிறது. இந்த ஹார்மோன் சினைப்பையிலும் செயல்பாடுகளை ஊக்குவித்து கருமுட்டைகள் முதிர்ச்சி அடைவதற்கு உதவுகிறது.

    கருமுட்டைகளின் மேல் கிரானுலோசா என்ற செல் இருக்கும். அந்த கிரானுலோசா செல்கள்தான் கருமுட்டையின் வளர்ச்சிக்கு முக்கியமான பங்கை வகிக்கிறது. அதன் மூலமாகத்தான் அனைத்து ஹார்மோன்களும் அந்த கருமுட்டையின் செயல்பாடுகளை ஊக்குவித்து முட்டையின் வளர்ச்சி, முட்டையின் முதிர்ச்சி ஆகிய எல்லாவற்றுக்கும் அடிப்படையாக அமைகிறது.

    இதற்காக கிரானுலோசா செல்கள் மற்றும் கருமுட்டையை சுற்றியுள்ள அனைத்து செல்களிலும் தைராய்டு ஏற்பி காணப்படும். இந்த தைராய்டு சுரப்பியானது அந்தந்த செல்களில், அதனுடைய செயல்பாடுகளை ஊக்குவித்து அந்த கருமுட்டைகளை நன்றாக வளர்ச்சி அடைய வைக்கும் பணிகளை செய்கிறது.

    எனவே தைராய்டு குறைவாக இருக்கும் பெண்களுக்கு கருமுட்டைகளை சுற்றியுள்ள செல்களில் இருக்கும் தைராய்டு சுரப்பியில் சரியான செயல்பாடு இருக்காது. இதனால் கருமுட்டைகளின் வளர்ச்சி, முதிர்ச்சி ஆகியவை சீராக அமையாது.


    தைராய்டு பரிசோதனையை கண்டிப்பாக செய்ய வேண்டுமா? அதை எப்படி கணக்கிடுவது?

    குழந்தையின்மை சிகிச்சைக்கு வரும் பெண்கள் கண்டிப்பாக தைராய்டு பரிசோதனை செய்ய வேண்டும்.

    இந்த தைராய்டு பரிசோதனையில் உங்களுக்கு இருக்கும் தைராய்டு அளவானது டி.எஸ்.எச். (தைராய்டு தூண்டுதல் ஹார்மோன்) என்ற வகையில் கணக்கிடப்படுகிறது.

    இந்த டி.எஸ்.எச். அளவானது குறிப்பாக எல்லா பெண்களுக்கும் 3.5 ஆக இருக்கிறது. இது சரியான அளவுதான் என்பார்கள்.

    ஆனால் குழந்தையின்மை சிகிச்சைக்கு வரும் பெண்களுக்கு இந்த அளவை விட கொஞ்சம் குறைவாகத்தான் உயர் நிலையை கணக்கிடுவோம். ஏனென்றால் டி.எஸ்.எச். அளவானது 3 முதல் 3.5 வரை இருக்கும் பெண்களுக்கு கூட இந்த குறைபாடுகளால் கருமுட்டைகளின் தரம், கருமுட்டைகளின் கருத்தரிக்கும் தன்மை ஆகியவை குறைவாகிறது.

    குழந்தையின்மையால் பாதிக்கப்பட்ட பெண்களில் தைராய்டு பிரச்சனை உள்ள 20 சதவீதம் பெண்களுக்கு தைராய்டு அளவு குறைவாக இருப்பதை இந்த வகையில் தான் நாம் கண்டுபிடிக்க முடியும்.

    கருமுட்டை வளர்ச்சிக்கான ஹார்மோன்களில் ஒன்றான கோனோ டோட்ரோபின் மூளையில் உள்ள ஹைப்போதலாமசில் இருந்து சுரக்கிறது. இந்த ஹார்மோனும் தைராய்டு பிரச்சனை ஏற்படுவதில் முக்கியமான பங்கை வகிக்கிறது.

    ஏனென்றால் இதில் இருந்து வருகிற ஹார்மோன் மூளையில் உள்ள தைராய்டின் செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் போது தைராய்டு ஹார்மோன் அளவு குறைகிறது.

    தைராய்டு அளவு குறைவானால் தானியங்கி முறையில் தைராய்டு அளவை சரி செய்வதற்காக நமது மூளையில் இருந்து ஒரு சிக்னல் வரும். இதை தைரோட்ரோபின் ரிலீசிங் ஹார்மோன் என்று சொல்வோம்.

    இந்த தைரோட்ரோபின் ரிலீசிங் ஹார்மோன் ஹைபோதலாமசில் செயல்பட்டு தைராய்டு சிமுலேட்டிவ் ஹார்மோனை சுரக்கும். அதோடு சேர்த்து புரோலாக்டின் என்ற ஹார்மோனையும் அதிகரிக்கும்.

    இந்த புரோலாக்டின் ஹார்மோன் அதிகமாகும் போது, அதுவும் முட்டையின் வளர்ச்சிக்கு பாதகமாக அமைகிறது. தைராய்டு குறைவாக இருக்கும் நிலையில், புரோலாக்டின் ஹார்மோன் அதிகமாகும் போது, மறைமுகமாக இது கோனோ டோட்ரோபின் ஹார்மோன் சுரப்பை பாதிக்கிறது.

    இதன் காரணமாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு குழந்தை பேறு பெறுவதில் பலவிதமான சிக்கல்கள் ஏற்படுகிறது. இதனால் குறிப்பாக கரு முட்டைகளின் வளர்ச்சி பாதிக்கப்படும்.


    கருமுட்டைகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டால் மாதவிலக்கு தள்ளித் தள்ளி வரும். சில பெண்களுக்கு மாதவிலக்கு வரவே வராது. சில நேரங்களில் மாதவிலக்கு அதிகமாக போகும்.

    இந்த மாதிரியான பலவித குறைபாடுகளால் கருமுட்டைகளின் வளர்ச்சி பாதிக்கப்படும். கருமுட்டைகள் சரியாக வளரவில்லை என்றால் குழந்தையின்மை பிரச்சனை ஏற்படும். சில நேரங்களில் முட்டைகளில் கரு உருவானால் கூட இந்த குறைபாடுகளால் கருவின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டு கருச்சிதைவு, குறைபாடுள்ள குழந்தை மற்றும் குறைவான எடை கொண்ட குழந்தை பிறக்கும்.

    குழந்தையின்மை சிகிச்சைக்காக வரும் பெண்களுக்கு தைராய்டு பாதிப்புகளை சரி செய்வதற்கும், அவர்கள் ஆரோக்கியமான குழந்தை பெற்றெடுப்பதற்கும் வழிமுறைகள் உள்ளன.

    Next Story
    ×