என் மலர்
இத்தாலி
- ஃபோர்னெல்லி பகுதியில் 6 இத்தாலியர்களை நாஜி தூக்கிலிட்டு கொன்றனர்
- சர்வதேச நீதிமன்ற தீர்ப்பின்படி இத்தாலிய அரசு தொகையை வழங்குகிறது
ஜெர்மனியில் 1933 ஆண்டில் இருந்து 1945 வரை ஆட்சியில் இருந்த அடால்ஃப் ஹிட்லர் எனும் சர்வாதிகாரியின் நாஜி கட்சியினர், இவரது பதவிக்காலத்தில் ஜெர்மனியிலும், இத்தாலியிலும் பல்லாயிரக்கணக்கான யூதர்களை பல்வேறு முறைகளில் கொன்று குவித்தனர்.
அக்டோபர் 1943-இல், தனது முன்னாள் நட்பு நாடான இத்தாலியை ஜெர்மனி ஆக்ரமித்த போது தங்கள் நாட்டு போர்வீரரை கொன்றதாக குற்றம் சாட்டி தெற்கு இத்தாலியின் மொலிஸ் பகுதியை சேர்ந்த ஃபோர்னெல்லி எனும் பிராந்தியத்தில் 6 இத்தாலிய குடிமக்களை அப்போதைய நாஜி படையினர் தூக்கிலிட்டு கொன்றனர்.
1939-இல் தொடங்கி 1945 வரை தொடர்ந்த இரண்டாம் உலக போரின் கடைசியில் ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, நாஜி படைகளை சேர்ந்தவர்களின் மீது போர் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
ஃபோர்னெல்லி சம்பந்தமான வழக்கு நீண்ட காலமாக இத்தாலியில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், குற்றம் நடந்து 80 வருடங்கள் கழித்து, தூக்கிலடப்பட்டு இறந்த 6 பேரின் குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு ரூ.107 கோடி ($13 மில்லியன்) நஷ்ட ஈடாக வழங்கவும், உயிரிழந்த 6 பேரின் வம்சத்தில் உள்ளவர்களுக்கு இது சென்றடைய வேண்டும் என்றும் இத்தாலிய நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது.
ஆனால், சர்வதேச நீதிமன்றத்தில் நடைபெற்ற ஒரு முக்கிய வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் இந்த நஷ்ட ஈட்டுத்தொகையை, ஜெர்மனி அரசுக்கு பதிலாக இத்தாலி அரசுதான் தர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
"நடந்த கொடூரத்தை நாங்கள் இன்னும் மறக்கவில்லை" என இது குறித்து, இத்தாலியில் பலியான 6 பேரில் ஒருவரின் கொள்ளு பேரனான மாரோ பெட்ரார்கா கூறினார். தங்களது கொடூர குற்றச்செயல்களுக்காக ஜெர்மனி அரசாங்கம்தான் இந்த நஷ்ட ஈட்டை தர வேண்டும் என யூத அமைப்புகள் தெரிவிக்கின்றன.
2016-இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், நாஜிகளின் போர் குற்றத்திற்கு, சுமார் 22 ஆயிரம் இத்தாலியர்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும், அதில் சுமார் 8 ஆயிரம் பேர் பலியாகினர் என்பதும் தெரியவந்துள்ளது.
- 4 பேரும் கட்டணத்தை செலுத்தாமல் அங்கிருந்து வெளியேறினார்கள்
- அந்த முட்டாள்கள் செலுத்த வேண்டிய கட்டணத்தை கட்டி விடுங்கள்
தென்கிழக்கு ஐரோப்பாவின் பால்கன் தீபகற்பத்தில் உள்ள நாடு அல்பேனியா. அளவில் சிறிய நாடாக இருந்தாலும், பல தொல்பொருள் சிறப்புமிக்க கட்டிடங்களும், பழங்கால மாளிகைகளும் உள்ளதால் அல்பேனியாவிற்கு பல நாடுகளிலிருந்து சுற்றுலா பயணம் மேற்கொள்ள மக்கள் வருகின்றனர்.
மற்றொரு ஐரோப்பிய நாடான இத்தாலியில், சமீபகாலமாக தங்கும் விடுதிகளில் சுற்றுலா பயணிகளிடம் வசூலிக்கப்படும் கட்டணங்கள் அதிகரித்துள்ளது. இதனால் இத்தாலியிலிருந்து அல்பேனியாவிற்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சமீபத்தில் இத்தாலியிலிருந்து அங்கு சென்ற 4 சுற்றுலா பயணிகள் பெரட் நகரத்திலுள்ள ஒரு உணவகத்தில் உணவருந்தினார்கள். ஆனால், அவர்கள் அதற்குண்டான கட்டணத்தை செலுத்தாமல் அங்கிருந்து வெளியேறி விட்டார்கள்.
இது சம்பந்தமான ஒரு கண்காணிப்பு கேமராவின் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.
இந்நிலையில் இத்தாலியின் அதிபர் ஜியோர்ஜியா மெலனி (Giorgia Meloni), அல்பனி நாட்டதிபர் எடி ரமா (Edi Rama) அழைப்பை ஏற்று தனது குடும்பத்துடன் அங்கு கோடைக்கால சுற்றுலாவிற்கு சென்றிருந்தார்.
அப்போது அவருக்கு, நாட்டின் 4 சுற்றுலா பயணிகளின் நடத்தை குறித்த செய்தி எட்டியது. நாட்டின் நற்பெயருக்கு களங்கம் வரக்கூடாதென்பதால் அவர்கள் செலுத்த வேண்டிய கட்டணத்தை அவர்களுக்காக தானே கட்ட முடிவெடுத்தார்.
"அந்த முட்டாள்கள் செலுத்த வேண்டிய கட்டணத்தை கட்டி விடுங்கள்" என இதுகுறித்து அல்பேனிய நாட்டிற்கான இத்தாலிய தூதரிடம் மெலனி தெரிவித்ததாக, அல்பனி அதிபர் எடி ரமா தெரிவித்தார்.
இத்தாலியின் விவசாய அமைச்சரும், மெலனியின் மைத்துனருமான பிரான்செஸ்கோ லோலோப்ரிஜிடா மெலனியுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அதிபரின் உத்தரவு குறித்த செய்தியை அவரும் உறுதி செய்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
இது தேசத்தின் கவுரவம் சம்பந்தப்பட்ட பிரச்சனை. அதிபர் மெலனி இக்கட்டணத்தை செலுத்த உத்தரவிட்டவுடன், இதை செய்து முடிக்க, இத்தாலியின் தூதர் அல்பேனிய தலைநகர் டிரானாவிற்கு விரைந்தார். ஒரு சில நேர்மையற்ற நபர்கள் ஒழுக்கமான மக்களின் தேசமான இத்தாலியை சங்கடப்படுத்த விட மாட்டோம்
இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய மதிப்பில் சுமார் ரூ.7245 பெறும் அந்த பில்லுக்கான கட்டணம் செலுத்தப்பட்ட செய்தியை அல்பேனியாவிலுள்ள இத்தாலிய தூதரகம் உறுதி செய்தது.
ரோமானிய கலாச்சாரம் குறித்து உலகெங்கும் இன்றளவும் மக்கள் பெருமையாக பேசும் நிலையில், தங்கள் நாட்டின் கவுரவத்திற்காக அதன் அதிபர் இந்த நடவடிக்கையை எடுத்ததை மக்கள் மிகவும் பாராட்டுகின்றனர்.
- அளவுக்கு அதிகமான பயணிகளுடன் செல்லும் படகுகள் கவிழ்ந்து ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.
- துனிசியாவில் உள்ள ஸ்பாக்ஸில் இருந்து இத்தாலி நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது விபத்து.
ரோம்:
உள்நாட்டுப் போர் மற்றும் வறுமையால் வாடும் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் வாழ்வாதாரம் தேடி பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் மத்திய தரைக்கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக படகுகளில் பயணம் செய்து ஐரோப்பாவை அடைய முற்படுகின்றனர். இதுபோன்ற ஆபத்தான பயணங்கள் பல நேரங்களில் துயரத்தில் முடிந்து விடுகிறது. அளவுக்கு அதிகமான பயணிகளுடன் செல்லும் படகுகள் கவிழ்ந்து ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இத்தாலியின் லம்பேடுசா தீவின் அருகே 45 பேருடன் சென்ற படகு மூழ்கியதில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். துனிசியாவில் உள்ள ஸ்பாக்ஸில் இருந்து புறப்பட்ட படகு, இத்தாலி நோக்கிச் சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென விபத்துக்குள்ளாகி மூழ்கியதாக, இந்த விபத்தில் இருந்து தப்பிய 4 பேரும் தகவல் தெரிவித்துள்ளனர்.
- நூற்றுக்கணக்கான குடும்பங்கள் சிறு தொழிற்சாலைகளை அமைத்து சீஸ் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன
- கியாகோமோவின் உடலை கண்டுபிடிக்கவே சுமார் 12 மணிநேரம் ஆனது
சீஸ் எனப்படும் பாலாடைக்கட்டிகள் ஐரோப்பிய நாடுகளில் பிரபலமான உணவுப்பொருள்.
ஐரோப்பாவின் சீஸ் தேவைகளில் பெரும்பகுதியை இத்தாலி பூர்த்தி செய்கிறது. கிரானா படானோ மற்றும் பார்மிஜியானோ ரெகியானோ எனும் சீஸ் வகைகள் இத்தாலியில்தான் பெருமளவில் தயாரிக்கப்படுகின்றன. இத்தொழிலில் அங்கு நூற்றுக்கணக்கான குடும்பங்கள் சிறு தொழிற்சாலைகளை அமைத்து ஈடுபட்டு வருகின்றன.
அங்கு கிரானா படானோ சீஸ் தயாரிப்பில் 74 வயதான கியாகோமோ சியாப்பரினி என்பவரின் குடும்பமும் இந்த தொழில் செய்து வந்தது.
இவரது சீஸ் தொழிற்சாலையின் குடோன் இத்தாலியின் பெர்காமோ நகருக்கு அருகே ரொமானோ டி லொம்பார்டியா பகுதியில் உள்ளது. ஒரு நாளைக்கு சுமார் 50 கிரானோ படானோ பாலாடைக்கட்டி அங்கிருந்து விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. அங்கு சுமார் 33 அடி வரையில் உயரம் உள்ள உலோக ரேக்குகளில் இவை அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
இவற்றை 3 தினங்களுக்கு முன் கியாகோமோ ஆய்வு செய்து கொண்டிருந்த போது ஒரு அலமாரி உடைந்தது. உடைந்த அலமாரி மற்றொரு அலமாரியை தள்ளி, ஒரு சங்கிலி தொடர் போல் ஒன்றின் மேல் ஒன்றாக அவர் மேல் அலமாரியிலுள்ள பாலாடைக்கட்டிகள் விழுந்தன.
இதில் அவர் பாலாடைக்கட்டிகளுக்கு அடியில் சிக்கினார். அவர் மேல் ஆயிரக்கணக்கில் பாலாடைகட்டிகள் விழுந்தன.
தகவல் அறிந்த அதிகாரிகள் உடனே அவரை காப்பாற்ற விரைந்து வந்தனர். ஆனால் அவர் சிறிது நேரத்தில் உடல் நசுங்கி உயிரிழந்தார்.
அவரது உடலை அவருடன் பணிபுரியும் அவரின் குடும்பத்தினர் அடையாளம் காட்டினர்.
அவர் உடலை கண்டுபிடித்து வெளியில் எடுக்கவே ஆயிரக்கணக்கில் பாலாடைக்கட்டிகள் மற்றும் அலமாரிகளை கையால் நகர்த்த வேண்டியிருந்ததாகவும், சியாப்பரினியின் உடலை கண்டுபிடிக்க சுமார் 12 மணிநேரம் ஆனதாகவும் அவரை மீட்க வந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
இயந்திரக் கோளாறு அல்லது பொருட்களின் தேய்மானம் விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்றாலும், முதல் உலோக அலமாரி எவ்வாறு சரிந்தது என்பது தெளிவாக தெரியவில்லை.
- குடும்பத்துடன் இத்தாலியின் அமல்ஃபி கடற்கரைக்கு சுற்றுலா சென்றிருந்தார்
- இந்த மோதலில் ஏட்ரியன் படகிலிருந்து கடலில் தூக்கி வீசப்பட்டார்
ப்ளூம்ஸ்பரி பப்ளிஷிங் என்பது இங்கிலாந்தின் கேம்டன் பகுதியை மையமாக கொண்டு செயல்படும் ஒரு உலகளாவிய பதிப்பக நிறுவனம்.
இந்நிறுவனம் கதை மற்றும் கதை அல்லாத புத்தகங்களை பதிப்பிட்டு வெளியிடுவதில் உலக புகழ் பெற்றதாகும். இந்நிறுவனத்திற்கு இந்தியா உட்பட பல நாடுகளில் பதிப்பக கிளைகள் உண்டு.
இதன் ஒரு பதிப்பக அலுவலகம் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் இருக்கிறது.
அமெரிக்காவில் இந்நிறுவனத்தின் செயல்பாடுகளை நிர்வகித்து வந்தவர் இதன் தலைமை நிர்வாக அதிகாரி ஏட்ரியன் வாகன் எனும் 45 வயது பெண்மணி.
இவர் இத்தாலியின் அமல்ஃபி கடற்கரையில் தனது கணவர், 12 மற்றும் 8 வயதுடைய இரு குழந்தைகளுடன் சுற்றுலா சென்றிருந்தார். அங்கு அவர் குடும்பத்தினருடன் ஒரு வாடகை வேகப்படகில் கடலில் பயணித்தார்.
அப்போது சற்று தொலைவில் ஒரு பெரிய படகு சுமார் 80 சுற்றுலா பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.
திடீரென ஏட்ரியன் சென்ற படகு கட்டுப்பாட்டை இழந்து அந்த பெரிய படகின் மீது மோதியது.
இதில் ஏட்ரியன் படகிலிருந்து கடலில் தூக்கி வீசப்பட்டார். அப்போது பெரிய படகின் புரொபெல்லர் மீது மோதி அவர் படுகாயமடைந்தார்.
உடனடியாக கடலிலிருந்து அவர் மீட்கப்பட்டார். அவசரகால சிகிச்சை குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆனால், அவர்கள் வந்து பரிசோதித்து பார்த்த போது ஏட்ரியன் உயிரிழந்திருந்தார்.
இந்த மோதலில் ஏட்ரியனின் கணவர் மைக் வைட்டிற்கு தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. குழந்தைகளுக்கு காயங்கள் ஏதுமில்லை என்றாலும் இந்த கோர விபத்தை நேரில் கண்டதால் அவர்கள் இருவரும் அதிர்ச்சியடைந்தனர்.
இத்தாலியின் புலனாய்வு துறையினர் இந்த விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
ஏட்ரியன் உயிரிழப்பிற்கு ப்ளூம்ஸ்பரி பதிப்பகம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.
- அறுவை சிகிச்சைக்கு பிறகு எனக்கு உடல்நிலை நன்றாக இருக்கிறது.
- ஒவ்வொருவரும் தேவாலயத்திற்குள் தங்கள் சொந்த வழியில் கடவுளை சந்திக்கிறார்கள்.
வாடிகன்:
போப் பிரான்சிஸ் கடந்த ஜூன் மாதம் குடல் இறக்கத்துக்கான அறுவை சிகிச்சை செய்து கொண்டார். பின்னர் அவர் உடல்நலம் தேறினார்.
இந்த நிலையில் போர்ச்சுக்கல் நாட்டில் நடந்த உலக இளையோர் தின கத்தோலிக்க விழாவில் பங்கேற்று விட்டு ரோம் திரும்பினார். அப்போது போப் பிரான்சிஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-
அறுவை சிகிச்சைக்கு பிறகு எனக்கு உடல்நிலை நன்றாக இருக்கிறது. தையலும் அகற்றப்பட்டு விட்டது. ஆனால் தசைகள் வலுவாக்கும் வரை இன்னும் 2 அல்லது 3 மாதங்கள் வயிற்றில் பட்டை அணிந்திருக்க வேண்டும் என் டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். ஒரே பாலின ஈர்ப்பு கொண்டவர்களையும் கடவுள் நேசிக்கிறார். ஓரினசேர்க்கையாளர்கள் உள்பட அனைவருக்கும் கத்தோலிக்க தேவாலயம் திறந்து இருக்கும். தேவாலயத்தில் ஒரே பாலின திருமணத்தையோ அல்லது ஒரே பாலின ஜோடிகளுக்கு ஆசீர்வாதங்களையோ அனுமதிப்பது இல்லை. சட்டத்தின்படி அவர்கள் ஒரு சில சடங்குகளில் பங்கேற்க முடியாது. விதிகளுக்கு உட்பட்டு அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். ஒவ்வொருவரும் தேவாலயத்திற்குள் தங்கள் சொந்த வழியில் கடவுளை சந்திக்கிறார்கள்.
இவ்வாறு போப் பிரான்சிஸ் கூறினார். பின்னர் அவர் வாடிகன் புறப்பட்டு சென்றார்.
- சம்பிரதாயமான நடைமுறையாக இரு போட்டியாளர்களும் போட்டிக்கு பிறகு கைகுலுக்கி கொள்ள வேண்டும்.
- இனி வரவிருக்கும் அணிகளுக்கான ஆட்டங்களிலும் ஓல்கா பங்கு பெற இயலாது.
இத்தாலியில் உள்ள மிலன் நகரில், உலக பென்சிங் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.
நேற்று நடைபெற்ற போட்டியில் 4 முறை ஒலிம்பிக் பட்டம் வென்ற உக்ரைன் நாட்டு வீராங்கனை ஓல்கா கர்லான், ஒற்றையர் ஆட்டத்தில் ரஷிய வீராங்கனை அன்னா ஸ்மர்னோவா என்பவருடன் மோதினார்.
ரஷிய- உக்ரைன் போர் 500 நாட்களுக்கும் மேல் நடைபெறும் பின்னணியில், இரு நாடுகளுக்கிடையேயான இந்த போட்டி மிகுந்த ஆர்வமுடன் பார்க்கப்பட்டது. இப்போட்டியில் உக்ரைன் வீராங்கனை ஓல்கா வெற்றி பெற்றார்.
இந்த ஆட்டத்தின் சம்பிரதாயமான நடைமுறையாக இரு போட்டியாளர்களும் போட்டிக்கு பிறகு கைகுலுக்கி கொள்ள வேண்டும். ஆனால், ஓல்கா இதனை செய்ய மறுத்தார். இதற்கு பதிலாக தனது கத்தியால் அன்னாவின் கத்தியை தொட்டு கொள்ள முன்வந்தார்.
அவரது இந்த நடத்தையால் இப்போட்டியிலிருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
ரஷிய வீராங்கனை அன்னா, விளையாட்டு நடந்த இடத்திலேயே சுமார் அரை மணி நேரம் நின்றிருந்து அதிகாரிகளுடன் பேசிவிட்டு புறப்பட்டார்.
பென்சிங் விளையாட்டில் இந்த கைகுலுக்கல் ஒரு கட்டாய நடைமுறையாகும். இதற்கு கட்டுப்பட மறுப்பவர்களுக்கு கருப்பு அட்டை (Black Card) வழங்கப்பட்டு, தகுதி நீக்க நடவடிக்கைக்கு ஆளாக வேண்டியிருக்கும். தற்போது கருப்பு அட்டை முறைப்படி ஒற்றையர் ஆட்டத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஓல்கா, இனி வரவிருக்கும் அணிகளுக்கான ஆட்டங்களிலும் பங்கு பெற இயலாது.
"இந்த முடிவிற்கெதிராக நாங்கள் மேல்முறையீடு செய்வோம். ஏனெனில் தீர்ப்பளித்த நடுவர், நேரடியாக கருப்பு அட்டை கொடுக்கவில்லை" என ஓல்காவின் நடத்தையை ஆதரிக்கும் உக்ரைன் நாட்டு பென்சிங் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
"நேர்மையான போட்டியில் தோல்வியடைந்த அன்னா, கைகுலுக்கல் நிகழ்ச்சியை வைத்து ஒரு மட்டமான விளையாட்டில் ஈடுபடுகிறார். இவரை போன்றுதான் ரஷிய ராணுவமும் நடந்து கொள்கிறது," என உக்ரைனின் வெளியுறவு துறை அமைச்சர் கூறினார்.
சர்வதேச பென்சிங் கூட்டமைப்பு (FIE) இதுகுறித்து உடனடியாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
- கப்பலிலிருந்து பெரிய பார்சல்கள் கடலில் வீசி எறியப்படுவதை ஒரு கண்காணிப்பு விமானம் கண்டறிந்துள்ளது.
- போதைப்பொருள் கடத்தலை தடுத்த காவல்துறையினரை சிசிலி பிராந்திய தலைவர் வெகுவாக பாராட்டியுள்ளார்.
இத்தாலியின் சிசிலி நகரின் தெற்கு கடல் பகுதியில் 5300 கிலோ (5.3 tons) கோகைன் போதைப் பொருளை ஒரு கப்பலிலிருந்து இன்னொரு கப்பலுக்கு மாற்றும் போது காவல்துறை கைப்பற்றியது. அவற்றின் மதிப்பு சுமார் ரூ.7700 கோடி ($946 million) ஆகும்.
தென் அமெரிக்காவிலிருந்து பயணிக்கும் ஒரு கப்பலை காவல்துறை கண்காணித்து வந்தது. அப்போது சிசிலி ஜலசந்தி பகுதியில் இழுவை படகின் மூலம் எடுத்து செல்வதற்காக அந்த கப்பலிலிருந்து பெரிய பார்சல்கள் கடலில் வீசி எறியப்படுவதை ஒரு கண்காணிப்பு விமானம் கண்டறிந்துள்ளது.
உடனே அந்த இழுவை படகை நிறுத்தி பரிசோதித்தபோது அதில் சில தடுப்புகள் அமைக்கப்பட்ட பகுதிகளில் பெருமளவில் போதை மருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக துனிசியாவை சேர்ந்த இருவர், ஒரு இத்தாலியர், ஒரு அல்பேனியர் மற்றும் ஒரு பிரெஞ்ச் நாட்டவர் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
போதைப்பொருள் கடத்தலை தடுத்த காவல்துறையினரை சிசிலி பிராந்திய தலைவர் ரினாடோ ஸ்கிஃபானி வெகுவாக பாராட்டியுள்ளார்.
"போதைப் பொருள் என்பது நமது சமூகத்தின் கேடு. நம்பிக்கைகளை சிதைத்து குடும்பங்களை அழித்து மரணத்தை விதைக்கும் இரக்கமற்ற நபர்களால் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுகிறது" எனவும் அவர் கூறியுள்ளார்.
- உலகளவில் இதுவரை இல்லாத வகையில் வெப்பம் அதிகரிப்பு
- இத்தாலி, கிரீஸ், ஸ்பெயின் நாடுகள் அதிக அளவில் பாதிப்பு
முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஐரோப்பிய கண்டத்திலுள்ள பல நாடுகள், அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தால் திணறி வருகின்றன. அங்கு இயல்பு வாழ்க்கை முடங்கி வருகிறது.
வட இத்தாலியில் 47 டிகிரி செல்சியஸ் (116.6 டிகிரி ஃபாரன்ஹீட்) வெப்பம் பதிவாகியுள்ளது. கிரீஸ் நாட்டில் காட்டுத்தீ பரவி வருகிறது. ஸ்பெயின் நாட்டில் கடலோர பகுதிகளில் வெப்பம் இதுவரை இல்லாத அளவை தொட்டிருக்கிறது.
இத்தாலியின் சிசிலி, ட்ரப்பானி, சியாக்கா மற்றும் சர்டீனியா பகுதிகளில் வெப்பம் 46 டிகிரிக்கு மேல் பதிவானது. ரோம் நகரில் அதிகரித்த ஏர்கண்டிஷனர்களின் பயன்பாட்டால், மின்சார 'கிரிட்'களில் ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாக மின்சார வினியோகம் நேற்று முன்தினம் நிறுத்தி வைக்கப்படும் நிலை உருவானது.
படுவா நகரில் ஒரு முதியவரும், மிலன் நகரில் ஒரு 44-வயது நபரும் வெப்பம் தாங்காமல் உயிரிழந்தனர்.
இச்சம்பவங்களுக்கு பிறகு அதிகரித்து வரும் வெப்பம் குறித்த அச்சம் மக்களிடையே அதிகரித்துள்ளது.
இத்தாலியில் தொழிற்சாலை பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். கார் மற்றும் பேட்டரி தொழிற்சாலைகளில் பணியாற்றூம் பெரும்பாலான தொழிலாளர்கள் வெப்பம் தாக்குப்பிடிக்க முடியாமல் பணிக்கு செல்வதை தவிர்க்கின்றனர்.
ஸ்டெலாண்டிஸ் எனும் கார் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வேலை செய்யும் தொழிலாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளதால் மேக்னட்டி மரேலி தொழிற்சாலையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.
விவசாயம், கட்டிட துறை போன்ற துறைகளிலும் பாதிப்பு அதிகம் உள்ளது. மார்சிகா, அப்ருஸோ ஆகிய இடங்களில் பண்ணை வேலையாட்கள் வெப்பத்தை தவிர்க்கும் விதமாக அதிகாலை 4 மணியிலிருந்து 11 மணி வரை மட்டுமே வேலை செய்கின்றனர்.
வெப்பத்தின் தாக்குதலை சமாளிக்கும் வகையில் மக்களுக்கு உதவ ஒரு தகவல் தொடர்பு கட்டுப்பாட்டு அறை நிறுவப்படும் என அறிவித்துள்ள இத்தாலியின் சுகாதாரத்துறை அமைச்சர் ஒரேஸியோ ஷில்லாஸி "அதிகளவில் நீர் அருந்துவதும், காய்கறிகள் மற்றும் பழங்களை உண்பதும், கொழுப்புச்சத்து நிறைந்த உணவையும் மதுவையும் தவிர்ப்பதும், வெப்பத்திலிருந்து காத்து கொள்ள உதவும் என்றும் குழந்தைகள், முதியோர்கள், மற்றும் சுலபமாக பாதிக்கப்படக்கூடிய உடல்நிலை உடையவர்கள் ஆகியோரை காக்க சிறப்பு கவனம் செலுத்தப்படும்" என்றும் தெரிவித்தார்.
மற்றொரு ஐரோப்பிய நாடான கிரீஸ் நாட்டில் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட அக்ரோபொலிஸ் சுற்றுலா தலத்தில் சென்ற வார இறுதியிலிருந்தே அதிக வெப்பம் காரணமாக அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. அங்கு பணியாற்றுபவர்கள் 4 மணி நேரம் மட்டுமே வேலை செய்கின்றனர்.
ஏதென்ஸ் நகரை சுற்றி ஏற்பட்டிருக்கும் காட்டுத்தீ பரவலை தடுக்க இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் உதவி வருகின்றன.
ஸ்பெயின் நாட்டின் கடலோர பகுதிகளில் கடற்கரை நீரின் வெப்ப அளவு 24.6 டிகிரி செல்சியஸ் அளவை தொட்டுள்ளது. இது இன்னும் அதிகரிக்கப்படலாம் என அந்நாட்டு வானிலை ஆய்வாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
- பொது மக்களும், சுற்றுலா பயணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
- விமான நிலையங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
ரோம்:
இத்தாலியில் ஊதிய உயர்வு கோரியும், ஒப்பந்தத்தை நீட்டிக்க வலியுறுத்தியும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமான நிலைய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இதனால் ரோம், வெனிஸ், மிலன் நகரங்களின் விமான நிலையங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
இதனால் பொது மக்களும், சுற்றுலா பயணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். கோடை விடுமுறை காலத்தில் சுற்றுலா பயணிகள் அதிகமாக கூடும் ரோம், வெனிஸ் போன்ற நகரங்களில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதால், சுற்றுலா பயணிகளும் சுற்றுலாவை நம்பி தொழில் செய்பவர்களும் சோகத்தில் உள்ளனர்.
இதற்கிடையே இத்தாலியில் 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் விமானத்தில் பயணம் செய்ய முடியாமல் தவித்து வருகிறார்கள்.
ரோம் நகரில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட விமானங்களும் மிலன் நகரில் 150-க்கும் மேற்பட்ட விமானங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அந்நாட்டின் போக்குவரத்து துறை மந்திரி கூறும்போது, விமான நிலைய பணியாளர்கள் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகளையும், மக்களையும் சிரமப்படுத்தாமல் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்றார்.