search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    காங்கேயம் அருகே கார்-லாரி மோதல்: இளம்பெண் உள்பட 2 பேர் பலி
    X

    காங்கேயம் அருகே கார்-லாரி மோதல்: இளம்பெண் உள்பட 2 பேர் பலி

    • கார் தலைகுப்புற கவிழ்ந்து சுக்குநூறாக நொறுங்கியது.
    • காரில் இருந்த 4 பேரும் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினர்.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த ஆலம்பாடி ஊராட்சியில் ஆவின் பால் கூட்டுறவு சங்க செயலாளராக பணியாற்றி வருபவர் பேபி (வயது 45). இவரது மகள் ரஞ்சனி பிரியா (25). கல்லூரி படிப்பு முடித்து விட்டு அரசு வேலை தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார்.

    இந்நிலையில் பேபி , மகள் ரஞ்சனி பிரியா மற்றும் உறவினர் சிவக்குமார், பால்பண்ணையில் டிரைவராக பணிபுரியும் பெரியசாமி ஆகியோர் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் நேற்றிரவு திருச்செந்தூரில் இருந்து காங்கயத்திற்கு காரில் புறப்பட்டனர். காரை பெரியசாமி ஓட்டினார்.

    இன்று காலை காங்கயம் கருக்கம்பாளையம் அருகே வரும் போது கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் கார் தலைகுப்புற கவிழ்ந்து சுக்குநூறாக நொறுங்கியது.

    காரில் இருந்த 4 பேரும் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினர். இது குறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காங்கேயம் தீயணைப்பு நிலைய வீரர்கள் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்த 4 பேரையும் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது ரஞ்சனி பிரியா மற்றும் டிரைவர் பெரியசாமி ஆகியோர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் பேபி, சிவக்குமார் ஆகிய இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து ஊதியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×