search icon
என் மலர்tooltip icon

    அரியலூர்

    • குழந்தைகள் சிறப்பு மருத்துவமனை உள்ளதால் எந்த நேரமும் கூட்டம் நிறைந்திருக்கும்.
    • டாக்டரிடமும், மருத்துவமனை பணியாளர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    அரியலூர்:

    அரியலூர் நகரின் மையப்பகுதியில் அரசு கல்லூரியும், அரசு மருத்துவக்கலூரிக்கு செல்லும் சாலையில் தனியார் மருத்து வமனை அமைந்துள்ளது. இது குழந்தைகள் சிறப்பு மருத்துவமனை உள்ளதால் எந்த நேரமும் கூட்டம் நிறைந்திருக்கும்.

    இந்த சாலையில் இரவு பகலாக மக்கள் மிக அதிகமாக சென்று வருவார்கள். இந்த நிலையில் ஆயுதபூஜை அன்று இரவு பூஜையை முடித்துவிட்டு சீக்கிரமாக மருத்துவமனையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டனர். மறுநாள் காலையில் சுமார் 10 மணியளவில் மருத்துவமனையை திறந்தபோது பின்பக்க கதவு உடைத்து உள்ளே நுழைந்து மேஜையின் பூட்டை உடைத்து உள்ளேயிருந்த

    விலை உயர்ந்த மருந்து, மாத்திரைகள், பணத்தை திருடிசென்றுவிட்டனர். இதன் மதிப்பு ரூ.30 ஆயிரம் ஆகும்.

    தகவல் அறிந்த அரியலூர் போலீசார் விரைந்து சென்று மோப்ப நாய் உதவியுடன் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். டாக்டரிடமும், மருத்துவமனை பணியாளர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    சி.சி.டி.வி. கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து தீவிர விசாரனை மேற்கொண்டுள்ளனர். அரியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இச்சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    • மாணவர்கள் 5 பேரும் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • இல்லம் தேடி கல்வி திட்ட ஆசிரியர் மட்டுமே பள்ளியில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    அரியலூர் மாவட்டம் குணமங்கலம் பகுதியில் அரசு தொடக்க பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.

    இப்பள்ளியில் 3 ஆம் வகுப்பு படிக்கும் 4 மாணவர்களும் 5 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவரும் கள்ளிப்பால் கள்ளிச் செடியை உடைத்து, அதில் இருந்து வெளியேறிய பாலை சுவைத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கள்ளிப்பால் குடித்ததை குறித்து மாணவர்கள் கூறியதை அடுத்து 5 பேருக்கும் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக இல்லம் தேடி கல்வி திட்ட ஆசிரியர் மட்டுமே பள்ளியில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

    • பாக்கும், பலா மரங்களும் மிக நல்ல முறையில் வளர்ந்து மகசூல் கொடுக்கிறது.
    • எல்லா பயிரும் இங்கும் விளையும். மஞ்சள் மிக நல்ல முறையில் வளர்ந்து வருகிறது.

    அரியலூர் மாவட்டம் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை ஒட்டி நிற்கும் பகுதி. அரியலூர் மாவட்டத்திற்குள் ஒரு சிலப் பகுதிகள் டெல்டா பகுதிக்குள் வந்தாலும் பெரும்பாலானப் பகுதிகள் வானம் பார்த்த பூமியாகவே இருக்கிறது. அரியலூர் மாவட்டத்திற்குள் செல்லும் போதே டெல்டா மாவட்டங்களில் இருக்கும் பசுமையான நிலப்பரப்பு சற்றே மாற துவங்குவதை கவனிக்க முடியும். அங்கு மலைப் பகுதிகளில் விளையும் மர வாசனை பயிர்கள் விளையும் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதனை சாத்தியப்படுத்தி நம்மை வியக்க வைக்கிறார் அரியலூர் மாவட்ட விவசாயி ஒருவர்.

    மழை இல்லாத காலங்களில் வறட்சி வந்து விளையாடும் மாவட்டத்தில் தன் நிலத்தை வளம் கொழிக்கும் குளிர்ச்சி பகுதியாக மாற்றியிருக்கிறார் முன்னோடி விவசாயி கே.ஆர். பழனிச்சாமி. அரியலூர் மாவட்டத்தில் ஆண்டிமடம், கருக்கை கிராமத்தில் அமைந்துள்ளது இவரின் பண்ணை. 5 அரை ஏக்கர் பரப்பளவில் வறண்டு கிடக்கும் பகுதியில் புதிதாக உதித்த கொடைக்கானல் போல குளுமையாக அமைந்துள்ளது இவரது "நற்பவி வளர்சோலை" இயற்கை பண்ணை.


    பழனிசாமி, சமவெளியில் மரவாசனை பயிர்கள் சாத்தியமா என்ற கேள்வியோடு தொடங்கி இன்று அதில் வெற்றிகரமாக சாதித்துள்ளார். கடந்த 15 வருடங்களாக இயற்கை விவசாயம் செய்து வரும் இவரிடம், பண்ணையில் உள்ள பயிர்கள் என்னென்ன என கேட்ட போது, பூரிப்போடு பேசினார் "என்னுடைய 5 அரை ஏக்கர் தோட்டத்தில் மொத்தம் 2 ஆயிரம் டிம்பர் மரங்கள் இருக்கின்றன. இதில் தேக்கு, மஹோகனி, வேங்கை, செம்மர, படாக், கடம்பு, கடம்பில் அனைத்து ரகங்கள் என கிட்டத்தட்ட 30 வகையான டிம்பர் மரங்கள் இருக்கின்றன, நிறைய மூலிகைகள் இங்கு உள்ளது.

    இதற்கிடையே மர வாசனை பயிர்களான ஏலக்காய், கிராம்பு, ஜாதிக்காய், மிளகு, சர்வ சுகந்தி மூலிகை பயிர் என பல வகை உண்டு. மேலும் பாக்கு, கொய்யா, சப்போட்டா, ஆவக்கோடா, சாத்துக்கொடி, பைனாப்பிள், லிட்சி, பன்னீர் பழம், எல்லாமும் இருக்கிறது. ஹனி ஜாக், கேரளா வகைகள் உள்ளிட்ட 22 வகையான பலாப்பழ மரங்கள் இருக்கின்றன." என அவர் சொல்லும் போது, இவர் பண்ணையில் என்ன தான் இல்லை என்று வியப்பாக இருந்தது.


    மலை பிரதேசத்திலும், குளிர் பிரதேசத்திலும் மட்டுமே வளரும் என நம்பப்பட்ட மரங்கள் இந்த சமவெளியில் எப்படி சாத்தியம் என நாம் ஆச்சரியத்துடன் கேட்ட போது, விரிவாக பேசத் தொடங்கினார் "இந்த கேள்வி ஆரம்பத்தில் எனக்கும் இருந்தது. ஆனால் இன்று இதில் நான் வெற்றி பெற்றிருக்கிறேன். இதற்கு காரணம் சமவெளியில் இந்த பயிர்கள் வளர தேவையான சூழலை நான் உருவாக்கியிருக்கிறேன். இங்கே கொடைக்கானல் போன்ற ஒரு குளுமையான சூழலை நாம் உருவாக்கியிருக்கிறோம். அதனால் அங்கு வளரும் எல்லா பயிரும் இங்கும் விளையும். மஞ்சள் மிக நல்ல முறையில் வளர்ந்து வருகிறது.

    இங்கு பாக்கும், பலா மரங்களும் மிக நல்ல முறையில் வளர்ந்து மகசூல் கொடுக்கிறது. குறிப்பாக பலா மரங்களுக்கு மழை மேகங்களை ஈர்க்கும் தன்மை இருப்பதாக சொல்கிறார்கள். விஞ்ஞான ரீதியாக உண்மையா தெரியாது, ஆனால் என் நிலம் இந்த மரங்களால் குளுமையாக இருக்கிறது. இங்கு எத்தனை நீர் சேர்ந்தாலும் ஒரு போதும் தேங்குவதில்லை. அத்தனை நீரையும் மண் உறிஞ்சி கொள்ளும் அளவும் மண் கண்டம் மிகச் சிறப்பாக உள்ளது.

    மேலும் இங்கு உழவில்லா விவசாயம் செய்கிறேன். இரசாயனங்கள், பூச்சிக் கொல்லிகள், களைக்கொல்லிகள் என எதுவும் பயன்படுத்துவது இல்லை. மாறாக மாட்டு எரு, பஞ்சக்கவ்யம், மீன் கரைசல் போன்ற இயற்கை இடுப்பொருட்களே பயன்படுத்துகிறேன். இதனால் மண் வளமாக, உயிரோட்டமாக இருக்கிறது. பொதுவாக எங்கள் ஊர் பக்கம் முந்திரி பயிர் தான் பிரதான பயிராக இருக்கும், ஆனால் என் நிலத்தில் அனைத்து வகையான பயிர்களும் வருகின்றன. நான் உருவாக்கிய இந்த மாற்றம், நான் உருவாக்கிய இந்த சூழலாலே சாத்தியம்" என உறுதியாக சொன்னார்.


    இந்தப் பண்ணை மூலம் அவருக்கு கிடைக்கும் வருவாய் மற்றும் சந்தைப்படுத்துதல் தொடர்பாக அவர் பயன்படுத்தும் உத்திகள் குறித்து நாம் கேட்ட போது, வெற்றிப் புன்னகையோடு பேசத் தொடங்கினார் "என்னிடம் இப்போது 15 ஆண்டுகள் பழமையான டிம்பர் மரங்கள் இருக்கின்றன, இவற்றை இனியும் பல வருடங்களுக்கு வெட்டும் எண்ணம் எனக்கு இல்லை. இது என் தலைமுறை கடந்து வருபவர்களுக்கு நான் உருவாக்கியிருக்கும் மிகப் பெரிய சொத்து. இதை வெட்டாமல் ஊடுபயிர் மூலம் என் வருவாயை ஈட்டி வருகிறேன். உதாரணமாக, கேரளா போன்ற இடங்களில் மட்டுமே விளையும் என சொல்லப்படும் 'எக்ஸாடிக் பழ வகைகளில்' ஒன்றான 'குடம் புளி' இப்போது காய்ப்புக்கு வந்திருக்கிறது. மேலும் இங்கிருக்கும் 100 பலா மரங்களிலிருந்து 2 இலட்சம் வரை வருமானம் வருகிறது. மிளகு சாகுபடியில், பைனாப்பிள் சாகுபடியில் எனப் பல வழிகளில் எனக்கு வருமானம் வருகிறது. மாதத்திற்கு இந்த நிலத்திலிருந்து குறைந்தது 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை நிரந்தர வருமானம் வருகிறது.

    மேலும் எங்கள் நிலம் கும்பகோணத்திலிருந்து விருதாச்சலம் செல்லும் பிரதான சாலையில் அமைந்திருப்பதால், எங்கள் நிலத்தின் முன்பாகவே ஒரு இயற்கை அங்காடி வைத்திருக்கிறோம். அங்கு வருபவர்கள் எங்கள் நிலத்தை பார்த்து இது இயற்கை விவசாயம் மூலம் விளைவிக்கப்பட்ட பொருட்கள் என்பதை தெரிந்து கொண்டு நல்ல விலைகொடுத்து பொருட்களை வாங்கி செல்கிறார்கள்." என்றார் உற்சாகமாக.

    எனவே கலப்பினப் பயிர்கள், மலையினப் பயிர்கள், வாசனைப் பயிர்கள் என அனைத்து ரகங்களும் ஒரே இடத்தில் சாத்தியமா என்றால் சாத்தியம் என்பதை அடித்து சொல்கிறார். மேலும் அவருடைய அனுபவத்தை ஈஷா காவேரி கூக்குரல் சார்பில் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி திருப்பூர் தாராபுரத்தில் "சமவெளியில் மர வாசனைப் பயிர்கள் சாத்தியமே" எனும் மாபெரும் கருத்தரங்கில் நேரடியாக பகிர்ந்து கொள்ள இருக்கிறார்

    இவரைப் போலவே இன்னும் பல முன்னோடி விவசாயிகள், வேளாண் வல்லுனர்கள் மற்றும் விஞ்ஞானிகள் என பல அறிஞர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு தங்கள் அனுபவத்தை பகிர உள்ளனர்.

    இக்கருத்தரங்கில் கலந்து கொள்ள விரும்புவோர் 94425 90079 / 94425 90081 என்ற எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    • மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அரியலூரில் நேற்று நடைபெற்றது.
    • தி.மு.க.வும், பா.ஜ.க.வும் வேறு வேறு அல்ல.

    அரியலூர்:

    நாம் தமிழர் கட்சியின் அரியலூர், பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அரியலூரில் நேற்று நடைபெற்றது. இதில், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறப்புரையாற்றினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க.வும், பா.ஜ.க.வும் வேறு வேறு அல்ல. 2 கட்சிகளுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. தங்கள் கட்சியில் 100 சதவீதம் இந்துக்கள் இருப்பதாக பா.ஜ.க.வினர் கூறுகின்றனர். தி.மு.க.வில் 90 சதவீத இந்துக்கள் இருப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார்.

    எனவே, இரண்டுக்கும் 10 சதவீதம்தான் வித்தி யாசம். விஜய் தனது கட்சி மாநாட்டுக்கு என்னை அழைக்க மாட்டார். அழைக்கவும் கூடாது. அவரது கட்சியின் தொடக்க விழாவுக்கு, மற்றவர்களை அழைக்க மாட்டார்.

    நாம் தமிழர் கட்சி எப்போதும் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என்று நான் முடிவெடுத்து இருக்கிறேன். ஆனால், தேர்தல் காலத்தில் கட்சி நிர்வாகிகள் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்து, கூட்டணி குறித்து யோசிப்பேன்.

    2026-ல் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்காக, 50 தொகுதி களில் வேட்பாளர்களை தேர்வு செய்துவைத்து உள்ளேன். ஆனால் செய்தியாளர்களிடம் இது குறித்து இதுவரை நான் தெரிவிக்கவில்லை.

    இவ்வாறூ அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கரும்புகை வெளியேறியதால் ஆய்வகத்தில் இருந்த 19 மாணவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.
    • மூச்சு திணறல் காரணமாக மாணவர்கள் அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் தேளூர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆய்வகத்தில் கணினி வெடித்து விபத்து ஏற்பட்டது.

    கரும்புகை வெளியேறியதால் ஆய்வகத்தில் இருந்த 19 மாணவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. அருகே இருந்த அறைகளுக்கும் கரும்புகை பரவியதால் அங்கிருந்த மாணவர்களும் பாதிக்கப்பட்டனர்.

    மூச்சு திணறல் காரணமாக மாணவர்கள் அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    • சென்னையில் தற்போது தாழ்தள பேருந்துகள் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.
    • எச்.ராஜா தொடர்ந்து மக்களால் ஒதுக்கி தள்ளப்பட்டவர்.

    அரியலூர்:

    அரியலூரில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற விழாவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டார்.

    பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    போக்குவரத்து துறையின் மூலம் சென்னையில் தற்போது தாழ்தள பேருந்துகள் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. மின்சார பேருந்துகள் வாங்குவதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. டெண்டர் முடிவுற்ற பிறகு மின்சாரப் பேருந்துகள் செயல்பாட்டிற்கு வர உள்ளது.

    சென்னையில் கையடக்க கருவியோடு டிக்கெட் வழங்குகின்ற கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்பிறகு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திலும் மற்ற போக்குவரத்துக் கழகங்களிலும் அடுத்தடுத்த கட்டங்களில் அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    எங்களை போன்ற தொண்டர்கள் எல்லாம் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதல்வராக வேண்டும் என்று காத்திருக்கிறோம்.

    பா.ஜ.க.வின் மூத்த தலைவர் எச்.ராஜா தான் தமிழ்நாட்டுக்கு பெரும் தீங்கானவர். உதயநிதி செயல்பாட்டை மக்கள் அறிவார்கள். அதனால் தான் அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டப்பேரவை உறுப்பினராகி அமைச்சராகி உள்ளார்.

    ஆனால் எச்.ராஜா தொடர்ந்து மக்களால் ஒதுக்கி தள்ளப்பட்டவர். எடப்பாடி பழனிச்சாமி ஒரு அடிப்படை அரசியல் கூட தெரியாமல் முதல்வரானவர். நாணயம் வெளியீடு என்பது ஒரு அரசு விழா. அரசு விழா நடைபெறும் போது மத்திய அரசு, மாநில அரசு இணைந்து பங்கேற்புடன் நடைபெற்று உள்ளது.

    தி.மு.க. சார்ந்த நிகழ்வுகள் நடைபெறும் போது அதில் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்பது வழக்கமாக உள்ளது.

    எடப்பாடி பழனிச்சாமி தனது முதுகை முதலில் பார்க்கட்டும். பிறகு மற்றவர்களை விமர்சிக்கட்டும். காய்ந்த மரம் கல்லடிபடும் என்ற அடிப்படையில் ஆளுங்கட்சியை எல்லோரும் விமர்சிப்பது வழக்கம்.

    அதுபோல சீமான் விமர்சிக்கிறார். ஊடக வெளிச்சம் வர வேண்டும் என்பதற்காக தரக்குறைவான விமர்சனங்களை சொல்கிறார். அவர்களெல்லாம் மக்களால் ஒதுக்கி தள்ளப்படுவார்கள்.

    இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

    • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் பாபு தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • 120 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து உடையார்பாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சில பகுதிகளில் கள்ளத்தனமாக அரசு மது பாட்டில் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் பாபு தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்தேகம் ஏற்படும் அளவிற்கு நின்று கொண்டிருந்த ஒருவரை விசாரணை செய்த போது திடீரென ஓட தொடங்கினார். அவரை விரட்டி பிடித்து விசாரணை செய்ததில் அவர் கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.

    இதையடுத்து அவரிடம் இருந்து 120 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை செய்ததில் அவர் நத்தவெளியை சேர்ந்த கலியபெருமாள் மகன் இளவரசன் என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவர் தொடர்ந்து கள்ளத்தனமாக மது பாட்டில் விற்பனை செய்து வருகிறார் என கூறப்படுகிறது.

    • 2 மான்கள் துப்பாக்கியால் சுட்டதில் இறந்து கிடந்தது.
    • மான்களை மீட்டு வனத் துறையினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை பெரிய ஏரி பகுதியில் ஏராளமான மான்கள் வசிக்கின்றன. இந்த பகுதியில் நேற்று துப்பாக்கியால் சுடும் சத்தம் பல முறை கேட்டது. இதனையடுத்து அங்கிருந்த சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போது அங்கு 2 மான்கள் துப்பாக்கியால் சுட்டதில் இறந்து கிடந்தது தெரிய வந்தது. போலீசார் வருவதை அறிந்து வேட்டை கும்பல் மான்களை அங்கேயே போட்டுவிட்டு ஓட்டம்பிடித்தது விசாரணையில் தெரிய வந்தது. இதனை அடுத்து அந்த மான்களை மீட்டு வனத் துறையினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    இதனைத் தொடர்ந்து மான்களை சுட்டு வேட்டை யாடியது யார்? வேட்டைக்கு பயன்படுத்தியது நாட்டு துப்பாக்கியா? அல்லது லைசன்ஸ் துப்பாக்கியா? என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    இதுகுறித்து மான்களை பிரேத பரிசோதனை செய்த பிறகு அதில் உள்ளது பால்ரஸ் குண்டா அல்லது துப்பாக்கி குண்டா என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல் தெரிய வேண்டும் என மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் தெரிவித்தார்.

    இந்த பகுதியில் மான்களை வேட்டையாடிய சம்பவம் மிகப்பெரிய பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை அதே பகுதியில் ஒரு மான் விபத்தில் சிக்கி உயிர் இழந்தது. இதுகுறித்து செந்துறை போலீசார் மற்றும் வனத்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மத்திய அரசு இதனை பேரிடராக அறிவிக்க வேண்டும்.
    • உதயநிதி துணை முதல்வராக வேண்டும் என்பது அவர்களின் உட்கட்சி விவகாரம்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தின் போது திருமானூர் அருகே இலந்தைக் கூடம் கிராமத்தில் இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்ததாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் திருமாவளவன் எம்.பி.மீது வெங்கனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணை அரியலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணைக்காக திருமாவளவன் எம்.பி. நேரில் ஆஜரானார்.

    பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு நூற்றுக்கணக்காணவர்களை பலி வாங்கி இருக்கிறது. இதுவரையில் 377 உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்து உள்ளது. நூற்றுக்கனக்கான குடும்பங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.

    மத்திய அரசு இதனை பேரிடராக அறிவிக்க வேண்டும். மறுவாழ்வுக்காகவும், மறு கட்டுமானத்திற்காகவும் போதிய இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் .

    வரும் 9-ந் தேதி கேரள மாநில முதல்-மந்திரியை சந்தித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ரூ.15 லட்சம் நிவாரண நிதியை வழங்க இருக்கிறோம்.

    தமிழக அரசு அரசு பணியாளர்களின் பணி ஓய்வுக்கான வயதை 60 லிருந்து 62 ஆக உயர்த்த போகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த பணி ஓய்வு பெறும் வயதை நீடிப்பதால் புதிய இளைய தலைமுறைக்கான வேலை வாய்ப்பில் சிக்கல் ஏற்படும் என்று கருத்து உள்ளது.

    ஆம்ஸ்ட்ராங் குடும்பத்துக்கு கொலை மிரட்டல் வந்திருப்பது உடனடியாக தமிழக அரசும் அவர்கள் தங்கி இருக்கிற இல்லத்துக்கு பாதுகாப்பு அளித்திருப்பதை வரவேற்கிறோம்.

    சாதிவாரி கணக்கெடுப்பு தவிர்க்க முடியாததாக உள்ளது. எனவே சாதிவாரி கணக்கெடுப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஆதரிக்கிறது.

    அண்மையில் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் மேகாலவை சந்தித்து, அரியலூரில் நீண்ட கால கோரிக்கையான ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டிய நிதியை உடனே ஒதுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பிலும், ம.தி.மு.க.வின் சார்பிலும் கோரிக்கை வைத்திருக்கிறோம் .

    தமிழ்நாடு அரசு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகாவில் மேகதாதுவில் அணையை கட்ட முடியாது அதற்கு வாய்ப்பில்லை. உதயநிதி துணை முதல்வராக வேண்டும் என்பது அவர்களின் உட்கட்சி விவகாரம். அதில் நான் தலையிட விரும்பவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நீதி மன்றத்தில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    • 7-ந் தேதி விசாரணைக்கு ஆஜராக உத்தரவு.

    அரியலூர்:

    2019-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், தேர்தல் விதிமுறைகளை மீறி குறிப்பிட்ட நேரத்திற்கு அதிகமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் மீதும் வெங்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதற்கான குற்றபத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.

    இது தொடர்பாக அரியலூர் கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. ஆஜராகாமல் இருந்துள்ளார்.

    இதனால் அவர் மீது அரியலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர்நீதி மன்றத்தில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வருகிற 7-ந் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    இதேபோல் கடந்த 2020-ம் ஆண்டு நீட்தேர்வை ரத்து செய்யக்கோரி அரியலூர் அண்ணாசிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ. சின்னதுரை உள்பட தி.மு.க. கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

    போக்குவரத்திற்கு இடையூறாக பொதுமக்கள் பாதிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக அரியலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாராணைக்கு ஆஜராகாத கந்தர்வக் கோட்டை தொகுதி எம்.எல்.ஏ. சின்னதுரைக்கும் அரியலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வாரன்ட் பிறப்பித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

    • தமிழ்நாட்டில் உயர்த்தபட்ட மின் கட்டணம் பொதுமக்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் எங்களது நிலைப்பாடு.

    அரியலூர்:

    அரியலூரில் தொல்.திருமாவளவன் எம்.பி. செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் உயர்த்தபட்ட மின் கட்டணம் பொதுமக்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே மின் கட்டண உயர்வை முதல்வர் பரிசீலனை செய்ய வேண்டும்.

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் அனைத்து கட்சிகளும் விடுத்த கோரிக்கையையடுத்து மயிலாடுதுறை-மைசூர் விரைவு ரெயில் தற்போது கடலூர் வரை நீட்டிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் எங்களது நிலைப்பாடு. நீட் தேர்வுக்கு எதிராக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை மத்திய அரசு அங்கீகரிக்க வேண்டும். ஜனாதிபதி அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

    அரியலூர் வழியாகச் செல்லக்கூடிய அனைத்து ரெயில்களும் அரியலூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என தெற்கு ரெயில்வே ரெயில்வே நிர்வாகத்திடம் வலியுறுத்தியுள்ளேன்.

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை கட்சி நிர்வாகிகள் என கூறக்கூடாது. அவர்கள் கட்சி, ஜாதி ரீதியாக செயல்படுவதில்லை ஒரு குழுக்களாக செயல்படுகிறார்கள்.

    ஆம்ஸ்ட்ராங்கை என்ன காரணத்துக்காக கொலை செய்தார்கள் என்பதை கண்டறிவது தான் முக்கியமாகும். எனவே தான் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும்.

    இக்கொலை வழக்கில் முக்கியமான நபர்கள் யார் என்பதை கண்டறிந்து அவர்களை கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மை குற்றவாளிகள் திரை மறைவில் இருக்கிறார்கள் அவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும்.

    கடந்த 10 ஆண்டுகளில் கார்ப்பரேட் கம்பெனிகள் நலனில் கருத்தில் கொண்டு தான் நிதிநிலை தயாரித்து உள்ளார்கள். மக்கள் நலனை கருத்தில் கொண்டு நிதிநிலை அறிக்கை தயாரிப்பதில்லை.

    இப்போதும் வரக்கூடிய நிதிநிலை அறிக்கையில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் இருக்கும் என எதிர்பார்க்க இயலாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சையது சலீம் காரை இங்கே நிறுத்தக்கூடாது வியாபாரம் பாதிப்பதாக கூறியதாக தெரிகிறது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உடையார்பாளையம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 35). சம்பவத்தன்று இவரும் இவரது மைத்துனர் சின்னதுரை ஆகிய இருவரும் நேற்று நடந்த உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு சென்றர்.

    பின்னர் சமையல் பாத்திரங்களை ஜெயங்கொண்டம் ஜூப்ளி சாலையில் உள்ள பாத்திரக்கடையில் கொடுப்பதற்காக எதிரே உள்ள சையது சலீம் என்பவரின் ரெடிமேட் கடையின் முன்பு காரை நிறுத்தினர். உடனே சையது சலீம் காரை இங்கே நிறுத்தக்கூடாது வியாபாரம் பாதிப்பதாக கூறியதாக தெரிகிறது.

    இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சையது சலீம் கார்த்திக்கின் காரின் நான்கு பக்க கண்ணாடிகளையும் கட்டையால் அடித்து நொறுக்கி உள்ளார். உடனே இதுபற்றி ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து கடை உரிமையாளர் சையது சலீமிடம் விசாரித்த போது போலீசாரிடமும் அவர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து நடந்த சம்பவம் குறித்து சின்னதுரை ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இதன் தொடர்ச்சியாக சையது சலீமை போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். தொடர்ந்து அருகில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.

    இதை அறிந்த சையது சலீமின் நண்பர் அப்பு என்கிற தசரதன் (28) என்பவர் கார் உரிமையாளர் கார்த்திக்கிடம் தகராறு செய்தார். இதுகுறித்து கார்த்திக்கும் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் ராமராஜன் வழக்கு பதிவு செய்து சையது சலீம், தசரதன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    ×