search icon
என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • முக்கிய நிகழ்ச்சியான சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் 7ம் தேதி நடைபெறுகிறது.
    • திருக்கல்யாணம் நவ.8-ம் தேதி நடைபெறும்.

    பழனி:

    பழனி அறுபடை வீடுகளின் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் கந்தசஷ்டி விழாவும் ஒன்றாகும். இந்த வருடத்திற்கான கந்தசஷ்டி விழா நவ.2-ம் தேதி மலைக்கோவிலில் உச்சி காலத்தில் காப்புக் கட்டுதலுடன் தொடங்க உள்ளது. தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் 7ம் தேதி நடைபெறுகிறது.

    அன்று அதிகாலை 4 மணிக்கு கோவில்நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், 4.30 மணிக்கு விளாபூஜை, படையல் நெய்வேத்திய நிகழ்ச்சி நடைபெறும். பகல் 12 மணிக்கு உச்சி கால பூஜை, 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறும். அதனை தொடர்ந்து 3.10 மணிக்கு மலைக்கோவிலில் சின்னகுமாரர் அசுரர்களை வதம் செய்ய மலைக்கொழுந்து அம்மனிடம் வேல்வாங்கும் நிகழ்ச்சி நடைபெறும். அதன் பின் சன்னதி அடைக்கப்படும்.

    அன்று மாலை 6 மணிக்கு வடக்கு கிரிவீதியில் தாரகாசூரன் வதம், கிழக்கு கிரிவீதியில் பானுகோபசூரன், தெற்கு கிரிவீதியில் சிங்கமுக சூரன், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் வதம் நடைபெறும். தொடர்ந்து இரவு 9 மணிக்கு ஆரியர் மண்டபத்தில் வெற்றிவிழா நடைபெறும்.

    அதனை தொடர்ந்து மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நவ.8-ம் தேதி நடைபெறும். அன்று காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் தனுசு லக்னத்தில் மலைக்கோவிலில் வள்ளி-தெய்வானை, சண்முக திருக்கல்யாணம் நடைபெறும். இரவு 8.20 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் மிதுன லக்னத்தில் பெரியநாயகி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெறும். சூரசம்ஹாரம் காரணமாக நவ.7-ம் தேதி தங்கரத புறப்பாடு நிறுத்தப்படும். விழாவிற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

    • வெடிகுண்டு மிரட்டல் விடுத்த எண் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
    • வீட்டை விட்டு வெளியேறிய அன்பழகன் தூத்துக்குடிக்கு சென்றாரா என்ற கோணத்தில் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    வத்தலக்குண்டு:

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பஸ்நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதியாகும். இங்கிருந்து கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கும், சபரிமலை உள்ளிட்ட கேரளாவுக்கு செல்லும் முக்கிய சந்திப்பாகவும் உள்ளது. இதனால் பல்வேறு நகரங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டுனர்கள் கடந்து செல்லும் நெருக்கடியான பகுதியாக உள்ளது.

    நேற்று இரவு சென்னை அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் வத்தலக்குண்டு பஸ்நிலையத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.

    இதனையடுத்து வெடிகுண்டு மிரட்டல் குறித்து உடனடியாக சோதனை நடத்த திண்டுக்கல் எஸ்.பி.பிரதீப்புக்கு அறிவுரை வழங்கப்பட்டது. எஸ்.பி. உத்தரவின் பேரில் நிலக்கோட்டை டி.எஸ்.பி. செந்தில்குமார், வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் சிலைமணி, சப்-இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்லா மற்றும் போலீசார் இரவு 2 மணியளவில் வத்தலக்குண்டு பஸ்நிலையம் வந்தனர். அங்கு பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்த நிலையில் ஒருசில கடைகள் மட்டும் திறந்திருந்தன.

    மேலும் கொடைக்கானல் மலை கிராமங்களுக்கு காலையில் முதல் பஸ்சுக்கு செல்லும் தொழிலாளர்களும் பஸ்நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்தனர். அவர்களை எழுப்பி பஸ் நிலையத்தில் இருந்து வெளியேற்றி கடைகளையும் அடைக்குமாறு தெரிவித்தனர். மேலும் பஸ் நிலைய நுழைவாயிலில் பேரிக்காடுகள் மூலம் தடுப்பு அமைக்கப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் அனைத்து பகுதிகளிலும் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தப்பட்டது.

    முடிவில் வெடிகுண்டு மிரட்டல் என்பது புரளி என தெரியவந்தது. இதனை தொடர்ந்து கடை ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கி திறக்க அறிவுறுத்தினர். பஸ் நிலையத்தில் சி.சி.டி.வி. கேமராக்கள் உள்ள போதிலும் சந்தேகப்படும் படியான நபர்கள் யாரேனும் வந்தால் அதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

    இதனிடையே வெடிகுண்டு மிரட்டல் விடுத்த எண் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்தது தெரியவந்தது. அந்த எண் யாருடையது என போலீசார் விசாரணை நடத்தியதில் மதுரை விளாங்குடியை சேர்ந்த அன்பழகன் என்பவருக்கு சொந்தமானது என கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் சம்மந்தப்பட்ட வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். வீட்டில் அன்பழகனின் தாய் முத்துலட்சுமி மட்டுமே இருந்தார். அவர் தனது மகனுக்கு கடந்த சில நாட்களாகவே மனநிலை பாதிக்கப்பட்டு நாங்கள் சொல்வதை கேட்காமல் இருந்து வருகிறார்.

    இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை மேற்கொண்டு நேற்று காலையில் தான் வீட்டிற்கு அழைத்து வந்தோம். சிறிது நேரம் வீட்டில் இருந்துவிட்டு வெளியே சென்று வருவதாக என்னிடம் கூறிச்சென்றார். ஆனால் அதன் பிறகு தற்போது வரை வரவில்லை. எனது உறவினர்கள் அவரை தேடி வருகிறோம் என்றார். இதனால் வீட்டை விட்டு வெளியேறிய அன்பழகன் தூத்துக்குடிக்கு சென்றாரா என்ற கோணத்தில் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுரையில் கடந்த வாரம் அடுத்தடுத்து பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் மதுரையை சேர்ந்த வாலிபர் வத்தலக்குண்டு பஸ் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் இப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் இனிப்பு, காரம் உள்ளிட்டவை தயாரிக்கும் திடீர் கடைகளும் முளைத்து வருகின்றன.
    • உணவு பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? என தெரியவில்லை.

    வடமதுரை:

    திண்டுக்கல் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த பியூலா என்ற பெண் தனது 3 வயது மகனுடன் அதே பகுதியில் உள்ள பேக்கரியில் வடை சாப்பிட சென்றார். சிறுவனுக்கு வடையுடன் குருமா ஊற்றி கொடுத்துள்ளனர்.

    பாதி வடையை சாப்பிட்ட பின்னர் அதில் பூரான் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து தனது தாயிடம் தெரிவித்தான். அவர் கடைக்காரரிடம் வடையில் பூரான் கிடப்பதை காட்டி கேட்டார். ஆனால் அவர்கள் முறையான பதில் அளிக்காமல் அலட்சியமாக பேசியுள்ளனர்.

    இந்த நிலையில் சிறுவனுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    திண்டுக்கல் நகரில் ஏராளமான சாலையோர கடைகள் உள்ளன. இதில் பெரும்பாலான கடைகளில் சுகாதாரம் என்பது துளியளவு கூட கிடையாது. தற்போது மழை பெய்து வருவதால் பூரான், பல்லி, பூச்சி உள்ளிட்ட விஷ சந்துகள் ஆங்காங்கே ஊர்ந்து வருகின்றது. பெரும்பாலான சாலையோர கடைகளில் உணவு பொருட்கள் தரையிலேயே வைக்கப்படுகின்றன. இதனால் பூச்சிகள் அதில் விழும் அபாயம் உள்ளது.

    மேலும் தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் இனிப்பு, காரம் உள்ளிட்டவை தயாரிக்கும் திடீர் கடைகளும் முளைத்து வருகின்றன. இதில் உணவு பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? என தெரியவில்லை. இதுபோன்ற தரம் குறைந்த உணவுகளை உண்பதால் பொதுமக்களுக்கு வயிற்று போக்கு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டு வருகின்றது.

    எனவே திண்டுக்கல் நகரில் உள்ள ஓட்டல்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனையிட்டு உணவின் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பஸ் நிலையம், அடிவாரம், கிரிவீதி உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
    • படிப்பாதை, யானைப்பாதை, வின்ச்நிலையம், ரோப்கார் நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    பழனி:

    தமிழ் கடவுள் முருகனின் 3ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். தைப்பூசம், வைகாசி விசாகம், சூரசம்ஹாரம் உள்பட முக்கிய திருவிழாவின் போது ஏராளமான பக்தர்கள் பழனியில் குவிகின்றனர். மேலும் விடுமுறை நாட்களில் அதிக அளவில் பக்தர்கள் வருவதால் வருடம் முழுவதும் திருவிழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது.

    ஆயுதபூஜை, விஜயதசமி உள்ளிட்ட தொடர் விடுமுறை காரணமாக ஏராளமானோர் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய பழனிக்கு படையெடுத்தனர்.

    இதனால் பஸ் நிலையம், அடிவாரம், கிரிவீதி உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் படிப்பாதை, யானைப்பாதை, வின்ச்நிலையம், ரோப்கார் நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    மலைக்கோவிலில் ஏராளமானோர் திரண்டனர். பொது தரிசனம், சிறப்பு தரிசனங்களிலும் நீண்ட வரிசை காணப்பட்டது. நீண்ட நேரத்திற்கு மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 

    • பழனி கோவிலில் இருந்து பராசக்தி வேல் கொண்டு வரப்படும்.
    • வன்னிகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி இன்று மாலை நடக்கிறது.

    பழனி:

    பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் உபகோவிலான பெரியநாயகி யம்மன் கோவிலில் நவராத்திரி விழா கடந்த 3ம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினந்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வன்னிகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெறுகிறது.

    இதற்காக பழனி கோவிலில் இருந்து பராசக்தி வேல் கொண்டு வரப்படும். எனவே பக்தர்கள் காலை 11 மணிவரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இதனை தொடர்ந்து கோவிலில் மதியம் 12 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டு உச்சிகால பூஜையும், 1.30 மணிக்கு சாயரட்ஷை பூஜையும் நடக்கிறது. அதனை தொடர்ந்து மதியம் 3.15 மணிக்கு மலைக்கோவிலில் நடை அடைக்கப்படுகிறது.

    இதனை தொடர்ந்து பராசக்தி வேல் புறப்பாடாகி பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு வந்தடையும். அங்கிருந்து தங்ககுதிரை வாகனத்தில் முத்துக் குமாரசாமி புறப்பாடாகி கோதைமங்களம் ஜோதீஸ்வரர் கோவிலை வந்தடைவார். அங்கு வன்னிகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி இன்று மாலை நடக்கிறது.

    மேலும் சிவானந்த புலிப்பாணி பாத்திரசாமிகள் அம்பு போடுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. இதனை தொடர்ந்து சுவாமி பெரியநாயகி அம்மன் கோவிலை வந்தடையும். பராசக்திவேல் முருகன் கோவிலுக்கு கொண்டு செல்லப்படும். அதன் பின்பு அங்கு அர்த்த சாம பூஜைகள் நடைபெறும்.

    நாளை முதல் வழக்கமான பூஜைகள் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மலைப்பாதையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
    • மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் தற்காலிகமாக சீரமைக்கும் பணி நடந்தது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகவே மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை 11 மணிக்கு சாரல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை, மாலை வரை பெய்து கொண்டே இருந்தது. இதன் எதிரொலியாக பகல் நேரத்தில் மலைப்பாதை மேகமூட்டமாக காட்சி அளித்தது. இதனால் பகல் நேரத்திலேயே வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றன. வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

    இதற்கிடையே கனமழைக்கு பெருமாள்மலை வழியாக அடுக்கம்-கும்பக்கரை செல்லும் மலைப்பாதையில் பாறைகள் உருண்டு விழுந்தன. மலைப்பாதையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், பணியாளர்கள் விரைந்து வந்து மலைப்பாதையில் விழுந்த பாறைகள், கற்கள், மண்குவியல்களை அகற்றினர். மேலும் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் தற்காலிகமாக சீரமைக்கும் பணி நடந்தது. இதையடுத்து முதல் அடுக்கம் மலைப்பாதையில் போக்குவரத்து தொடங்கியது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மலைப்பாதையில் மழைக்காலத்தில் அடிக்கடி மண் சரிவு ஏற்படுகிறது. இதனால் மோட்டார் சைக்கிள் மற்றும் கார், வேன் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே அடுக்கம் மலைப்பாதையை விரைவில் முழுமையாக சீரமைத்து போக்குவரத்து தொடங்க வேண்டும். தேனி மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்கள் அந்த சாலையை பயன்படுத்தினால், கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்றனர்.

    • ஜூஸ் தொழிற்சாலை அருகே சென்றபோது எதிரே வந்த கண்டெய்னர் லாரி பைக் மீது பயங்கரமாக மோதியது.
    • விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாக குற்றம்சாட்டி அப்பகுதி பொதுமக்கள் சம்பவ இடத்தில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அசோக்நகரை சேர்ந்தவர் தினகரன் (வயது20). இவர் வேலம்பட்டியை சேர்ந்த பாலாஜி (19) மற்றும் ஒரு நண்பருடன் மோட்டார் சைக்கிளில் நத்தம் சாலையில் சென்று கொண்டிருந்தார். கோபால்பட்டியை அடுத்த ஜூஸ் தொழிற்சாலை அருகே சென்றபோது எதிரே வந்த கண்டெய்னர் லாரி பைக் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் பாலாஜி மற்றும் அவருடன் வந்த நண்பர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். படுகாயம் அடைந்த தினகரன் உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதும் சிகிச்சை பலனின்றி தினகரன் உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து சாணார்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் பொன்குணசேகர் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த 3 பேரும் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் ஜூஸ் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் லாரிகள் அதிவேகமாக வருவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாக குற்றம்சாட்டி அப்பகுதி பொதுமக்கள் சம்பவ இடத்தில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சம்பவம் குறித்து அறிந்தும் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

    • விடுமுறை நாட்களில் அதிக அளவில் பக்தர்கள் வருவதால் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.
    • மலைக்கோவிலில் ஏராளமானோர் திரண்டனர்.

    பழனி:

    தமிழ் கடவுள் முருகனின் 3ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர்.

    தைப்பூசம், வைகாசி விசாகம், சூரசம்ஹாரம் உள்பட முக்கிய திருவிழாவின் போது ஏராளமான பக்தர்கள் பழனியில் குவிகின்றனர்.

    மேலும் விடுமுறை நாட்களில் அதிக அளவில் பக்தர்கள் வருவதால் வருடம் முழுவதும் திருவிழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது.


    காலாண்டு விடுமுறை இன்றுடன் முடிவடைந்து நாளை பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏராளமானோர் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய பழனிக்கு படையெடுத்தனர்.

    இதனால் பஸ்நிலையம், அடிவாரம், கிரிவீதி உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் படிப்பாதை, யானைப்பாதை, வின்ச்நிலையம், ரோப்கார் நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    மலைக்கோவிலில் ஏராளமானோர் திரண்டனர். பொது தரிசனம், சிறப்பு தரிசனங்களிலும் நீண்ட வரிசை காணப்பட்டது. நீண்ட நேரத்திற்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    மலைக்கோவிலில் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு உதவி மையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று பாதவிநாயகர் கோவில் அருகே தகவல் மையம், முதல் உதவி மையம், குழந்தைகள் பாலூட்டும் அறை பூஜை செய்து திறக்கப்பட்டது.

    இந்த வசதிகளை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்ப ட்டுள்ளது.

    நவராத்திரி விழாவை யொட்டி பெரிய நாயகியம்மன் கோவில், சண்முகபுரம் சித்தி விநாயகர் கோவிலில் கொலு வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர். 

    • கைது செய்யப்பட்ட மற்ற 3 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    • ஒவ்வொரு இடமாக தான் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை ரிச்சர்டு சச்சின் போலீசாரிடம் எடுத்து கொடுத்தார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பேகம்பூரை சேர்ந்தவர் முகமதுஇர்பான் (வயது24). இவரை கடந்த மாதம் 28ந் தேதி திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே ஒரு கும்பல் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர்.

    இதனை தடுக்க வந்த முகமது இர்பானின் நண்பருக்கும் வெட்டுக்காயம் விழுந்தது. படுகாயம் அடைந்த அவர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    இந்த கொலை தொடர்பாக 5 தனிப்படை அமைத்து நகர் வடக்கு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

    இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி மற்றும் அவரது தலைமையிலான போலீசார் திண்டுக்கல் முத்தழகுபட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளியான எடிசன் சக்கரவர்த்தி (25), ரிச்சர்டு சச்சின்(26), பிரவின் லாரன்ஸ் (28), மார்ட்டின் நித்தீஷ் (28) ஆகிய 4 பேரை நேற்று கைது செய்தனர்.

    திண்டுக்கல்லை சேர்ந்த தி.மு.க. பிரமுகரான பட்டறை சரவணன் படுகொ லைக்கு பழிக்குப்பழியாக முகமதுஇர்பானை வெட்டிக்கொன்றதாக அவர்கள் தெரிவித்தனர்.

    இதனையடுத்து கைது செய்யப்பட்ட மற்ற 3 பேரை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முகமது இர்பானின் முகத்தை கொடூரமாக வெட்டி கொன்றது ரிச்சர்டு சச்சின் என தெரிய வரவே அவரை போலீசார் அழைத்துச் சென்று கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் எங்கே உள்ளது என விசாரணை நடத்த முடிவு செய்தனர்.

    இதனையடுத்து அந்த ஆயுதங்களை திண்டுக்கல் சிலுவத்தூர் ரோட்டில் உள்ள மாலப்பட்டி ரோட்டில் மயானத்தில் பதுக்கி வைத்திருப்பதாக ரிச்சர்டு சச்சின் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து இன்று காலை நகர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி, சப்-இன்ஸ்பெக்டர் ராமபாண்டியன், ஏட்டுகள் அருண்பிரசாத், ஆரோக்கியம் ஆகியோர் ரிச்சர்டு சச்சினை மாலப்பட்டி சுடுகாட்டுக்கு அழைத்து சென்றனர். அப்போது ஒவ்வொரு இடமாக தான் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை ரிச்சர்டு சச்சின் போலீசாரிடம் எடுத்து கொடுத்தார்.

    திடீரென ஒரு அரிவாளால் அங்கிருந்த ஏட்டு அருண்பிரசாத்தை வெட்டிவிட்டு ரிச்சர்டு சச்சின் தப்பி ஓட முயன்றார். இதனால் அருண்பிரசாத் சத்தம்போடவே இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி தனது துப்பாக்கியால் ரிச்சர்டு சச்சினின் வலது காலில் முழங்காலுக்கு கீழே சுட்டார். இதில் வலியால் அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை போலீசார் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் ஏற்றி திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அரிவாள் வெட்டில் காயம் அடைந்த ஏட்டு அருண்பிரசாத்துக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனிடையே துப்பாக்கி சூடு நடந்த இடத்தை மாவட்ட எஸ்.பி.பிரதீப் தலைமையிலான போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தும் சம்பவம் அதிகரித்து வருகிறது. மேலும் குற்றவாளிகள் தப்பி செல்லும்போது கை, கால்களில் முறிவு ஏற்பட்டு மாவு கட்டு போடும் சம்பவமும் நடந்து வருகிறது. அதன்வரிசையில் திண்டுக்கல்லில் கைதான ரவுடி மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் ரவுடிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த ரிச்சர்டு சச்சின் மீது ஏற்கனவே திண்டுக்கல் நகர், மேற்கு போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி, பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்குதல், திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோ விலில் கூட்டு கொள்ளை முயற்சி, திண்டுக்கல் முகமது இர்பான் கொலை என பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து காப்புக்கட்டப்பட்டது.
    • பழனி முருகன் கோவிலில் தங்கரத புறப்பாடு நடைபெறாது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா இன்று தொடங்கியது. இதனை முன்னிட்டு இன்று காலை பெரியநாயகி அம்மன் கோவிலில் முருகன், வள்ளி, தெய்வானை ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் செய்து காப்புக்கட்டப்பட்டது.

    பின்னர் மதியம் உச்சிகால பூஜைக்குப் பின்பு மலைக்கோவிலில் உள்ள முருகபெருமான், துவார பாலகர்கள், வாகனம் ஆகியவற்றிற்கு காப்புக்கட்டு நடைபெற்றது.

    இதேபோல் உப கோவில்களிலும் நவராத்திரி விழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் மாலை 6 மணிக்கு பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 7 மணிக்கு அலங்காரம் நடைபெற உள்ளது.

    கோவில் வளாகத்தில் கொலு வைக்கப்பட்டு இதில் சிறுவர் சிறுமிகள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்படும்.

    10ம் நாளாக வருகிற 12ம் தேதி விஜயதசமி அன்று பழனி முருகன் கோவிலில் இருந்து பராசக்தி வேல் பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெறும்.

    அதனை தொடர்ந்து முத்துக்குமார சாமி தங்கக்குதிரை வாகனத்தில் கோதைமங்களம் சென்று வில், அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறும். அதன்பின் முத்துக்குமார சாமி பெரியநாயகி அம்மன் கோவில், பழனி முருகன் கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

    நவராத்திரி விழாவை முன்னிட்டு இன்று முதல் வருகிற 12ம் தேதி வரை பழனி முருகன் கோவிலில் தங்கரத புறப்பாடு நடைபெறாது என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    • திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு சவரிமுத்து புகார் அளித்தார்.
    • சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையிலும் போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்-பழனி சாலை பைபாஸ் பகுதியில் நைனார் முகமது தெருவில் வசித்து வருபவர் சவரிமுத்து. இவர் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஸ்டெல்லா. இவரும் ஜம்புளியம்பட்டி அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களது ஒரே மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்த திருமணத்திற்காக ஜவுளி எடுக்க குடும்பத்துடன் திருச்சிக்கு சென்றனர்.

    இரவு 11 மணியளவில் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் உள்ளே இருந்த கதவின் பூட்டும் கம்பியால் நெளிக்கப்பட்டு திறந்து கிடந்தது. பீரோவில் மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த 100 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு சவரிமுத்து புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்.பி. பிரதீப் தலைமையில் போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த பகுதியில் மொத்தம் 10 வீடுகள் மட்டுமே உள்ளன. ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருப்பதை கவனித்தும், இவர்கள் வீட்டில் திருமணத்திற்கு நகைகள் இருப்பதை நோட்டமிட்டும் கொள்ளையர்கள் கைவரிசை காட்டிச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

    இதனையடுத்து சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தினர். மேலும் மோப்பநாயை வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது. அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையிலும் போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு டாக்டர் வீட்டில் 100 பவுன் நகை மற்றும் ரூ.பல லட்சம் ரொக்கம் கொள்ளை போனது. அந்த வழக்கில் இதுவரை கொள்ளையர்கள் பிடிபடாத நிலையில் தற்போது மீண்டும் ஒரு கொள்ளை சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • அண்ணன் எடப்பாடி பழனிசாமி மீது செல்போன் வீசிய செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.
    • இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார்? என்பதை கண்டறிந்து தமிழக அரசு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திண்டுக்கல்:

    அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில நிர்வாகிகள், மண்டல நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு வந்த எடப்பாடி பழனிசாமி தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் செல்போனை எடப்பாடி பழனிசாமி மீது வீசினார். அந்த செல்போன் இ.பி.எஸ். காதில் பட்டு கீழே விழுந்தது. இதனால் அவர் திடீரென பதட்டமடைந்தார். இந்த சம்பவம் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து தேனி முன்னாள் எம்.பி.யும், ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில் அண்ணன் எடப்பாடி பழனிசாமி மீது செல்போன் வீசிய செயலை வன்மையாக கண்டிக்கிறேன். இது முற்றிலும் அநாகரீகமான செயல். அரசியல் மற்றும் கருத்து வேறுபாடுகளுக்கு பின்னால் இருந்து வந்தாலும், நம்முடைய மரியாதையும், சீர்திருத்தமும் குறைவாக கூடாது. வன்முறையை தூண்டக்கூடாது. இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார்? என்பதை கண்டறிந்து தமிழக அரசு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தலைவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய போலீசார் மிகுந்த கவனமுடனும், விழிப்புடணும் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    கட்சிக்கு துரோகம் இழைத்ததாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன்களை எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். அதன் பிறகு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன்கள் அ.தி.மு.க.வில் இணைய வாய்ப்பே இல்லை என முன்னாள் அமைச்சர்களும், எடப்பாடி பழனிசாமியும் கூறி வந்தனர். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியை அண்ணன் என அன்போடு அழைத்து ரவீந்திரநாத் பதிவிட்டு இருப்பது அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×