search icon
என் மலர்tooltip icon

    மதுரை

    • அவர்கள் செய்த பாவத்திற்கு அடுத்த ஜென்மம் அல்ல இந்த ஜென்மத்திலேயே அனுபவிப்பார்கள்.
    • துரோகம் செய்தவர்களைப் பற்றி கவலைப்பட தேவையில்லை.

    மதுரை:

    மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் 53-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருமங்கலம் தொகுதி டி.குன்னத்தூரில் அமைந்துள்ள ஜெயலலிதா கோவிலில் பொதுக்கூட்டம் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர், ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

    கடந்த சட்டமன்ற தேர்தலில் திருமங்கலம், உசிலம்பட்டி தொகுதிகளை போல் உழைத்திருந்தால் 10 ஆண்டுகள் உறங்கிக் கொண்டு இருந்த தி.மு.க. ஆட்சிக்கு வந்திருக்காது. இப்போது தி.மு.க.வினர் எழுந்து நிற்பதற்கு யார் காரணம்? அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்தவர்களால் தான் இந்த நிலை ஏற்பட்டது.

    இந்த துரோகத்தை தெய்வங்களாக இருக்கும் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் என்றைக்கும் மன்னிக்க மாட்டார்கள். துரோகம் செய்தவர்களைப் பற்றி கவலைப்பட தேவையில்லை. அவர்களை தண்டிக்கவும் தேவையில்லை. அதை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரிடம் விட்டு விட வேண்டும். அவர்கள் செய்த பாவத்திற்கு அடுத்த ஜென்மம் அல்ல இந்த ஜென்மத்திலேயே அனுபவிப்பார்கள்.

    43 தொகுதிகளில் ஒரு லட்சத்து 92 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் நாம் தோற்று ஆட்சியை இழந்தோம். எடப்பாடியார் தலைமையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அரசு அமைய முடியாமல் போனதற்கு காரணமானவர்கள் இன்று கட்சி வேட்டி கூட அணிய முடியாமல் தவித்து வருகிறார்கள்.

    கட்சியிலிருந்து வெளியே செல்லாதீர்கள் என்று சொன்னபோது எல்லாம் என்னை அங்கே கூப்பிடுகிறார்கள், இங்கே கூப்பிடுகிறார்கள், தொண்டர்கள் என் பக்கம் இருக்கிறார்கள் என்று சொன்னவர்கள் இன்று கட்சியிலே சேர்த்துக் கொள்ளுங்கள், சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கெஞ்சுகிறார்கள். இதற்கு யார் பொறுப்பு, அவர்களே தான்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    • நியோ மேக்ஸ் நிதி மோசடி வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.

    நியோமேக்ஸ் என்கிற நிதி நிறுவனம் மூலம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கோடிக்கணக்கான பணத்தை முதலீடு செய்தனர்.

    இந்த நிதி நிறுவனம் பணத்தை திரும்பத் தராமல் ஏமாற்றியதாக புகார்கள் குவிந்தன. இதன்பேரில் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    மேலும், நிர்வாக இயக்குநர்களான மதுரை கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன், பாஜ பிரமுகர் திருச்சி வீரசக்தி உள்ளிட்ட 90க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்து, 35க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

    இதுதொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, " நிதி நிறுவனம் நடத்தி பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நியோ மேக்ஸ் நிதி நிறுவன சொத்துக்களை இதுவரை முடக்காதது ஏன்? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

    மேலும், இந்த வழக்கில் என்ன தான் நடக்கிறது. இன்னும் எவ்வளவு கால அவகாசம் தேவைப்படும் என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

    தொடர்ந்து, அக்டோபர் 19ம் தேதிக்குள் நிதி நிறுவன சொத்துக்களை வழக்கில் இணைத்து, அவற்றை முடக்கி அரசாணை வெளியிட வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் தமிழ்நாடு உள்துறை செயலாளர் மற்றும் பொருளாதார குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக நேரிடும் எனவும் நீதிபதி பரத சக்கதரவர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • சுவரொட்டி தி.மு.க., கம்யூனிஸ்டு கூட்டணி கட்சியினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
    • திருப்பரங்குன்றம் ரோடு உள்ளிட்ட மதுரை தொகுதியில் உள்ள பெரும்பாலான ரோடுகள் பல மாதங்களாக படுமோசமாக உள்ளது.

    மதுரை:

    மதுரை பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சு.வெங்கடேசன் 2-வது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் அவரை காணவில்லை என மதுரை நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் விவரம் வருமாறு;-

    மதுரை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட வண்டியூர், சவுராஷ்டிராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சு.வெங்கடேசனுக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், "கண்டா வர சொல்லுங்க... என்ற தலைப்பில் மதுரை பாராளுமன்ற தொகுதியில் 2 முறை எம்.பி.யாக வெற்றி பெற்றும் வண்டியூர் மக்களுக்கு நன்றி கூட சொல்ல வராத மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் உங்களுக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த வண்டியூர் மக்களுக்கு இதுவரை நீங்கள் செய்தது என்ன?" என கேள்வி கேட்டு வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.

    இந்த சுவரொட்டி தி.மு.க., கம்யூனிஸ்டு கூட்டணி கட்சியினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 2 முறை மதுரை பாராளுமன்ற உறுப்பினராக தேர்வான சு.வெங்கடேசன் பொதுமக்களிடம் நேரில் வந்து குறைகளை கேட்பதில்லை. மதுரை மற்றும் பல்வேறு பகுதிகளில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காமல் உள்ளனர்.

    இதுதொடர்பாக எம்.பி. நேரில் வந்து விசாரித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திருப்பரங்குன்றம் ரோடு உள்ளிட்ட மதுரை தொகுதியில் உள்ள பெரும்பாலான ரோடுகள் பல மாதங்களாக படுமோசமாக உள்ளது. அண்மையில் பெய்த மழையால் மதுரையில் குறிப்பிட்ட பகுதியில் வெள்ளநீர் புகுந்தது. இதனை கூட ஆய்வு செய்ய எம்.பி. சு.வெங்கடேசன் வரவில்லை என தெரிவித்தனர்.

    • திமுக அரசும், அமைச்சர்களும் கமிஷன், கலெக்ஷன் மட்டுமே பார்க்கிறார்கள். மக்களை பார்ப்பதில்லை.
    • மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் வரும் சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு பதிலடி கொடுப்பார்கள்.

    மதுரை:

    வீரபாண்டிய கட்டபொம்மனின் 225-வது நினைவு நாளை முன்னிட்டு மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள கட்டபொம்மன் சிலைக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜூ கூறியதாவது:

    அ.தி.மு.க. ஆட்சியில் பருவ மழைகளையும் புயல்களையும் சிறப்பாக எதிர்கொண்டு மக்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்தோம். ஆனால் தி.மு.க. அரசு மக்களுக்கு எதையும் செய்யவில்லை.

    மழை நேரத்தில் முதல்வர் ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் போட்டோ சூட் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

    தி.மு.க. அரசும், அமைச்சர்களும் கமிஷன், கலெக்ஷன் மட்டுமே பார்க்கிறார்கள். மக்களை பார்ப்பதில்லை.

    மழையால் பாதிக்கப்பட்ட தமிழக மக்கள் வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு சரியான பதிலடி கொடுப்பார்கள். அமைச்சர் மூர்த்தி கூட மதுரையில் அவர் தொகுதியில் தான் ஆய்வு செய்கிறார்.

    புது காதலன், புது காதலி போல தமிழக அரசும், ஆளுநர் உள்ளனர். ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் கலந்துகொள்ள மாட்டோம் என ஆளுநருக்கு எதிராக செயல்பட்ட தி.மு.க, தற்போது ஆளுநரோடு இணக்கமாக இருக்கிறார்கள்.

    முதல்வர் ஸ்டாலின் திடீரென டெல்லிக்கு செல்கிறார், பிரதமரை சந்திக்கிறார். மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்குகிறார்கள் ஏதோ தேன்நிலவு போல நடக்கிறது.

    ஆளுநர் எப்போதும் அரசாங்கத்தின் குறைகளை சுட்டிக்காட்டி மக்களின் குறைகளை எடுத்துச் சொல்வார். ஆனால் ஆளுநர் தற்போது மாறி இருக்கிறார் என தெரிவித்தார்.

    சென்னை மழையை முன்னிட்டு தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை பணிகளை ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று பாராட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இன்றைய தலைமுறைகள் சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்த வேண்டும்.
    • கோவில் நிலங்களில் குத்தகைதாரர்கள் குத்தகை தொகையை செலுத்துவதில்லை.

    மதுரை:

    வீரபாண்டிய கட்ட பொம்மனின் 225-வது நினைவுநாளை முன்னிட்டு மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மதுரை ஆதீனம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இன்றைய தலைமுறைகள் சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்த வேண்டும். தொடர்ந்து இளைஞர்களுக்கு அரசு விடுதலைப் போராட்ட தியாகிகளை நினைவு கூறும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

    தொடர்ந்து மதுரை ஆதீனம் சார்பாக விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு உரிய மரியாதை செலுத்தி வருகிறேன். அவர்கள் இல்லை என்றால் நான் இன்று இல்லை. தமிழகத்தில் இன்றைக்கு பருவம் தவறிய மழைக்கு இளைஞர்களிடையே பக்தி குறைவாக இருப்பது தான் காரணம். கோவில் நிலங்களில் குத்தகைதாரர்கள் குத்தகை தொகையை செலுத்துவதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மதுரையை சேர்ந்த கார்த்திக் தீபாவளி சீட்டு பிடித்து வந்தார்.
    • தீபாவளி சீட்டு பணத்தில் ரூ.3 லட்சத்தை மகன் கார்த்திக்கிடம் இருந்து அவரது தந்தை லோகநாதன் வாங்கியிருந்தார்.

    மதுரை, அக்.16-

    மதுரை வில்லாபுரம் பகுதியில் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 60). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு அப்பள கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். லோகநாதனுக்கு கார்த்திக் என்ற ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அவர்கள் அனைவரும் கூட்டுக்குடித்தனமாக வசித்து வந்தனர்.

    சமீபத்தில் கார்த்திக் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். கார்த்திக் தீபாவளி சீட்டு பிடித்து வந்தார். இதற்காக அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோரிடம் பணம் வசூலித்து வங்கிக் கணக்கில் சேமித்து வைத்திருந்தார். அதனை தீபாவளி பண்டிகையின் பணம் வசூலித்தவர்களுக்கு பலகாரம், பரிசுப்பொருள் மற்றும் வட்டியுடன் கொடுக்க திட்டமிட்டு இருந்தார்.

    இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு தீபாவளி சீட்டு பணத்தில் ரூ.3 லட்சத்தை மகன் கார்த்திக்கிடம் இருந்து அவரது தந்தை லோகநாதன் வாங்கியிருந்தார். தீபாவளிக்கு முன்னதாக அந்த பணத்தை திருப்பி தந்துவிடுவதாகவும் அவர் உறுதியளித்து இருந்தார். ஆனால் தீபாவளிக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் தற்போது வரை லோகநாதன் ரூ.3 லட்சத்தை திருப்பித்தரவில்லை.

    இதுதொடர்பாக தந்தைக்கும் மகனுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் மற்றும் தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று இரவு அந்த பணத்தை கார்த்திக் தந்தையிடம் கேட்டபோது மீண்டும் தகராறு உருவானது. இதில் ஆத்திரம் அடைந்த கார்த்திக், தந்தை என்றும் பாராமல் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து லோகநாதனை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார்.

    பின்னர் அவர் நேராக அவனியாபுரம் போலீஸ் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் கொலையுண்ட லோகநாதன் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கார்த்திக்கிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    தீபாவளி சீட்டு பணத்தை பெற்றுக்கொண்டு திருப்பித்தராத தந்தையை மகனே கழுத்தை அறுத்துக்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

    • விழாவினை முன்னிட்டு தினமும் பகல் 11 மணிக்கும், மாலை 6 மணிக்கும் சண்முகார்ச்சனை நடைபெறும்.
    • சப்பரத்தில் மாலையில் எழுந்தருளி கோவில் ஆஸ்தான மண்டபத்தை 6 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    திருப்பரங்குன்றம்:

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா வருகிற நவம்பர் 2-ந்தேதி காப்புக் கட்டுதலுடன் நடைபெற உள்ளதையொட்டி பக்தர்களுக்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து ஆலோசனைக் கூட்டம் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா தலைமையில் நேற்று நடைபெற்றது.

    முருகப்பெருமானின் முதலாம் பட வீடான திருப்பரங்குன்றத்தில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் கந்தசஷ்டி விழா 7 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா வருகின்ற நவம்பர் 2-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது. விழாவினை முன்னிட்டு அன்றைய தினம் அதிகாலையில் அனுக்கை பூஜை தொடங்கி யாகசாலை பூஜைகள் நடைபெற்று, உற்சவர் சன்னதியில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, சண்முகர் சன்னதியில் சண்முகர் வள்ளி, தெய்வானை, உற்சவ நம்பியார்க்கும் காப்புக்கட்டும் நிகழ்ச்சி நடைபெறும்.

    தொடர்ந்து கோவிலில் தங்கி விரதம் இருக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெறும். விழாவினை முன்னிட்டு தினமும் பகல் 11 மணிக்கும், மாலை 6 மணிக்கும் சண்முகார்ச்சனை நடைபெறும். சண்முகர் தினமும் வெள்ளை அலங்காரம், பச்சை அலங்காரம், மயில் மீது அமர்ந்த அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அலங்காரங்களின் எழுந்தளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

    இதே போல தினமும் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் பல்வேறு சிறப்பு அலங்காரங்களில் தந்ததொட்டி விடையாத்தி சப்பரத்தில் மாலையில் எழுந்தருளி கோவில் ஆஸ்தான மண்டபத்தை 6 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவின் முக்கிய நிகழ்வான வேல் வாங்குதல் வருகின்ற நவம்பர் 6-ந்தேதியும், சிகர நிகழ்ச்சியாக 7-ந்தேதி சொக்கநாதர் கோவில் வாசல் முன்பு சூரசம்ஹாரமும், 8-ந்தேதி காலை தேரோட்டமும் மாலையில் சுவாமிக்கு பாவாடை தரிசனம் மற்றும் மூலவர் தங்க கவச அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள் அளிப்பார்.

    விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் ப.சத்யப்பிரியா, அறங்காவலர்கள் வ.சண்முகசுந்தரம், பொம்மத்தேவன், மணி செல்வம், ராமையா, கோவில் துணை ஆணையர் சூரியநாராயணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • கூல் லிப் பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் பயன்படுத்துகின்றனர்.
    • கூல் லிப் பாக்கெடில் அதன் எச்சரிக்கை வாசகம் "Tobacco users die younger" என உள்ளது.

    தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரிகளில் அருகே கூல் லிப் எனப்படும் போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டு வருவது தொடர்பாக பலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    இந்த விவகாரத்தில் கைதானார் ஜாமின் கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கு இன்று நீதிபதி பரத சக்ரவர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது பள்ளி, கல்லூரி மாணவர்கள் 'கூல் லிப்' எனும் போதைப் பொருளுக்கு அதிகம் அடிமையாகியுள்ளனர் என கருத்து தெரிவித்த நீதிபதி, தமிழகத்தில் கூல் லிப் போதைப்பொருளுக்கு தடை விதித்திருந்தாலும் பிற மாநிலங்களில் கூல் லிப் விற்பனை செய்யப்படுகிறது. இத்தகைய போதைப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களிடம் ஜி.எஸ்.டி. வசூலிக்கப்படுகிறது என்று வேதனை தெரிவித்தார்.

    மேலும் பேசிய அவர், தற்போது பள்ளி மாணவர்களிடையே பெருகி வரும் வன்முறைக்கு இத்தகைய போதைப்பொருட்கள் பயன்பாடு முக்கிய காரணம். ஆகவே இத்தகைய போதைப் பொருளை பாதுகாப்பற்ற உணவுப் பொருள் என அறிவித்து ஏன் நாடு முழுவதும் தடை செய்யக் கூடாது? என மத்திய , மாநில அரசுகள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்தி வைத்தார்.

    இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி பரத சக்ரவர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது குட்கா நிறுவன தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கூல் லிப் மட்டுமல்ல, அது போல பலவகையான போதைப் பொருட்கள் உள்ளன. கூல் லிப் பாக்கெட்டுகளில் எச்சரிக்கை விடுக்கும் வாசகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று வாதிட்டார்.

    இதற்கு கருத்து தெரிவித்த நீதிபதி மற்ற போதைப்பொருட்கள் எல்லாம் பள்ளி, கல்லூரிக்கு வெளியே பயன்பாட்டில் உள்ளன. ஆனால், கூல் லிப் பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் பயன்படுத்துகின்றனர் என்று தெரிவித்தார்.

    மேலும், கூல் லிப் பாக்கெடில் அதன் எச்சரிக்கை வாசகம் "Tobacco users die younger" என உள்ளது. இது 'இறக்கும் வரை இளமையாகவே இருக்கலாம்' என புரிந்துகொள்ளும் வகையில் இருக்கிறது. கூல் லிப் பாக்கெட்டில் மண்டை ஓடு அடையாளத்தை ஏன் அச்சிடுவதில்லை? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி பரத சக்ரவர்த்தி, இது குறித்து விளக்கம் அளிக்க குட்கா நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார்.

    கூல் லிப் பயன்பாட்டை குறைக்க என்ன மாதிரியான வழிகாட்டுதல் வழங்கலாம் என்பது குறித்து மத்திய அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு இந்த வழக்கின் விசாரணையை அக்டோபர் 16 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

    • மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கண்மாய், குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
    • முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 120 அடியாக உள்ளது.

    மதுரை:

    மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்யும் கன மழை காரணமாக நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. வைகை ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு முழுவதும் பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில் மதுரை மாவட்டத்திலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று 3-வது நாளாக விடிய விடிய பெய்து மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. பலப்பகுதிகளில் குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கண்மாய், குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாய பணிகள் தொடங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

    மதுரை மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு விவரம் வருமாறு-

    மதுரை வடக்கு-6 மி.மீ., தல்லாகுளம்-8மி.மீ., பெரியப்பட்டி-21மி.மீ., விரகனூர்-4மி.மீ., சிட்டம்பட்டி-14மிமீ., கள்ளந்திரி-24மிமீ., இடையப்பட்டி-12மி.மீ., தணியாமங்கலம்-12மி.மீ., மேலூர்-12மி.மீ., வாடிப்பட்டி-62மி.மீ., சோழவந்தான்-50மி.மீ., ஆண்டிப்பட்டி-75மி.மீ., உசிலம்பட்டி-10மி.மீ., குப்பணம்பட்டி-20மி.மீ., மாவட்டம் முழுவதும் சராசரியாக 17 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பொருட்சேதம் மற்றும் உயிர் சேதம் இல்லை என்றாலும் பல இடங்களில் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சேதமடைந்தன.

    இன்னும் மழை பெய்யும் என்பதால் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. முல்லை பெரியாறு அணை, வைகை அணை பகுதியில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 120 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 531 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 967 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    வைகை அணையில் நீர் மட்டம் 56.28 அடியாக உள்ளது. அணைக்கு 1242 கன அடி தண்ணீர் வரும் நிலையில் 969 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வைகை ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும், மழை வெள்ளம் காரணமாகவும் ஆற்றில் தண்ணீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இதனால் வைகை கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆற்றில் குளிக்கவும், ஆற்றை கடக்கவும் இறங்கவும் வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    • காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி முடிவுக்கு வந்தது மிகப்பெரிய வெற்றி.
    • மோடி போன்ற இயற்கையான தலைவர்களைத் தான் நாட்டு மக்கள் எதிர்பார்ப்பார்கள்.

    மதுரை:

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக புதுச்சேரி முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மழையிலிருந்து மக்களை பாதுகாப்பது ஒரு புறம் என்றாலும், குளங்களை தூர்வாரி குடிநீரை சேமித்திருக்க வேண்டும். பெரியாறு அணையில் குழாய்கள் உடைந்துள்ளதால் குடிநீர் வீணாகி விட்டது. குடி தண்ணீர் இல்லாமல் குடியிருப்புகளுக்குள் நீர் புகுந்து விட்டதால் பிரச்சனை அதிகமாகி விட்டது. தி.மு.க. அரசு சென்னை, மதுரை, திருச்சி என அனைத்து மாவட்டங்களையும் மழைக்கு தயார் செய்வதில் முற்றிலும் தோல்வி அடைந்துள்ளது.

    உதயநிதி வார் ரூமில் அமர்ந்து விட்டதால் மழைக்கான ஏற்பாடுகளை செய்து விட்டது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள். விடியா அரசு இன்று விளம்பர அரசாக மாறிவிட்டது. மிகப்பெரிய வானியல் சாகசத்தை கூட மக்கள் மகிழ்ச்சியுடன் பார்க்கக்கூடிய ஏற்பாடுகளை செய்ய முடியாத அரசு எதற்கெடுத்தாலும் விளம்பரம் தான். அன்னை மீனாட்சி நம்மை காப்பாற்றுவாள், ஆனால் இந்த தி.மு.க. ஆட்சி நம்மை காப்பாற்றுமா என்றுதான் கவலையாக உள்ளது. தி.மு.க. ஆட்சியில் பருப்பு கூட வேகாது போல உள்ளது.

    காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி முடிவுக்கு வந்தது மிகப்பெரிய வெற்றி. அரியானாவில் உள்ள வாக்கு சதவீதத்தை தி.மு.க.வும், காங்கிரசும் ஆராய்கிறது. ஆனால் வெற்றி பெற்ற கூட்டணியை விட காஷ்மீரில் பா.ஜ.க. 25 சதவீதம் கூடுதலாக பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 7 சதவீதத்திற்கு சுருங்கி விட்டது. காங்கிரசுக்கு எதிர்காலமே இல்லை. ராகுல் காந்தி மிகப்பெரிய தலைவராக உருவெடுத்து விட்டார் என்று சொன்னார்கள். ஆனால் செயற்கைத் தலைவர்களை உருவாக்க முடியாது.

    மோடி போன்ற இயற்கையான தலைவர்களைத் தான் நாட்டு மக்கள் எதிர்பார்ப்பார்கள். மத்திய அரசின் திட்டங்களை மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள், தி.மு.க. ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தான் நமது கருத்து. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கதிர் சக்தி திட்டம் கொண்டு வந்தபோது அதை நான் முழுவதும் வரவேற்றேன். தேசத்தை சின்ன சின்ன விஷயங்களில் கூட பிரதமர் முன்னெடுத்து செல்வதற்கு இது மிகப்பெரிய உதாரணம்.

    ரெயில் விபத்து மத்திய அரசின் சதி என்ற குற்றச்சாட்டுக்கு ராகுல் காந்தியை வன்மையாக கண்டிக்கிறேன். வான்சாகத்தின்போது ஐந்து பேர் உயிரிழந்தபோது அவர் எங்கே சென்று இருந்தார். கள்ளக்குறிச்சியில் 65 பேர் உயிரிழந்தபோது ராகுல் எங்கே சென்று இருந்தார். வான் சாகசத்தில் உயிரிழந்த சம்பவம் போல பா.ஜ.க. ஆளுகின்ற மாநிலத்தில் நடந்திருந்தால் ஸ்டாலின்தான் முதலில் குரல் கொடுத்திருப்பார். அவரைப் போல் தான் ராகுல் காந்தியும் தமிழகத்தில் நடக்கிற அசம்பாவிதத்திற்கு குரல் கொடுக்க மாட்டார். அதனால் தான் காஷ்மீரில் மக்கள் காங்கிரசுக்கு சரியான பதிலடி கொடுத்திருக்கிறார்கள்.

    ரெயில் விபத்துகளை வைத்து அரசியல் செய்ய வேண்டாம். ஆனால் வான் சாகசத்தில் உயிர் இழந்ததை அரசியலாக்க கூடாது என்று சொல்கிறார்கள். ஆனால் தி.மு.க. எதை எடுத்தாலும் அரசியலாக்கும். தி.மு.க.வின் கூட்டணி கட்சிகளே அதற்கு எதிராக திரும்பி இருக்கிறார்கள். 2026 தேர்தலில் நிச்சயமாக இதே தி.மு.க. கூட்டணி நிலைக்காது. சாம்சங் விவகாரத்தை வைத்து கம்யூனிஸ்ட் வேறு எங்கோ செல்கிறார்கள். மதுவிலக்கு பிரச்சனையை வைத்து வி.சி.க. ஒரு புறம் செல்கிறார்கள். தங்களுக்கும் ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டும் என்று தம்பி கார்த்திக் சிதம்பரம் இப்போதுதான் கொஞ்சம் தைரியம் வந்து பேசி இருக்கிறார். 2026 தேர்தலுக்கு தி.மு.க. கூட்டணிக்கு ஆட்சியில் பங்கு கொடுக்கவில்லை என்றால் தி.மு.க. கூட்டணி வெலவெலத்து போகும்.

    அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி குறித்து திண்டுக்கல் சீனிவாசன் பேசியது, தேர்தல் வரும்போது எது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும், எதைப் பற்றி வேண்டுமானாலும் நடக்கலாம். இப்போதைக்கு எங்கள் வேலை எங்கள் கட்சியை பலப்படுத்துவதற்கு உறுப்பினர்களை சேர்ப்பது தான். கூட்டணி குறித்து எங்கள் அகில பாரத தலைவர்கள் முடிவு செய்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அவரிடம் கேட் கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கே: சீன தயாரிப்புகளுக்கு தடை குறித்து...

    ப: நிர்மலா சீதாராமனுக்கும், பியூஸ் கோயலுக்கும் தமிழகத்தை சேர்ந்தவர் என்கிற முறையில் நன்றி சொல்கிறேன். மதுரை, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் தீப்பெட்டி தொழில் வாழ்வாதாரமாக உள்ளது. மத்திய அரசின் திட்டங்கள் இந்தியில் உள்ளதை தமிழ் படுத்தினால் மக்களுக்கு புரியும். நான் புதுச்சேரியில் திட்டங்களை தமிழ்படுத்தினோம். ஆனால் இங்கு உள்ள அரசு அது தெரியாமல் இருப்பது தான் நல்லது என நினைக்கிறார்கள். ஆனால் நாங்கள் மத்திய அரசு திட்டங்களை மக்களுக்கு புரியும் வகையில் தமிழ் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.

    கே: த.வெ.க. தலைவர் பாதை மாறுகிறாரா?

    ப: அரசியல் கட்சித் தலைவர் தவறை உணர்ந்து அதை திருத்திக் கொள்வது ஆரோக்கியமான சூழ்நிலைதான். ஆனால் தற்போது உள்ள சூழலில் இந்து மதம் சார்ந்த கருத்துக்களை யார் எதிர்த்தாலும் அவர்களை மக்கள் எதிர்ப்பார்கள். இந்து மதம் சார்ந்த மக்களுக்கு ஆதரவு தரவில்லை என்றால் மக்கள் அவர்களுக்கு ஆதரவு தர மறுப்பார்கள் என்கிறது தான் இன்றைய சூழ்நிலை. அதைத் தம்பி விஜய் உணர்ந்துவிட்டார் என்று நினைக்கிறேன். அவரிடம் இருந்து தீபாவளி வாழ்த்தையும் எதிர்பார்க்கிறோம்.

    அவர் மட்டுமல்ல முதல்வரிடமிருந்தும் தீபாவளி வாழ்த்து எதிர்பார்க்கிறோம். தி.மு.க. தலைவராக இல்லை என்றாலும், தமிழக முதல்வராக தீபாவளி வாழ்த்து தெரிவிக்க வேண்டும். வாழ்த்து சொல்லவில்லை என்றால் தீபாவளி கொண்டாடுபவர்கள் அவரை எதிர்ப்பார்கள் என்பது எனது கருத்து என்றார்.

    • லாரி உட்பட கனரக வாகனங்கள் 50-க்கும் மேற்பட்டவை குடி நீரில் சிக்கிக் கொண்டது.
    • வாகனங்கள் பழுது ஏற்பட்டுள்ளதாக வாகன ஓட்டு வாகன ஒட்டிகள் தெரிவித்து வருகின்றனர்.

    மதுரை:

    தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து நான்கு நாட்களுக்கும் மேலாக மாலை நேரங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு 2 மணிநேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித்தீர்த்தது. மதுரையில் நேற்று இரவு மட்டும் 16 செ.மீட்டர் மழை பெய்தது.

    மதுரை தமுக்கம் மைதானம், அண்ணா நகர், கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கனமழை பெய்த நிலையில், மதுரை மாநகரின் பிரதான பகுதியான மாட்டுத்தாவணியை ஒட்டியுள்ள டி.எம்.நகர் மற்றும் அதனை ஒட்டிய பல்வேறு பகுதிகளை கடந்து செல்லும் சாத்தையார் ஓடையில் கனமழையின் காரணமாக உடைப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து தற்போது நகருக்குள் குடியிருப்புகளை சுற்றி ஓடைநீர் புகுந்து வருகிறது. ஏற்கனவே சாத்தையார் ஓடையில் தடுப்புச் சுவர் அமைக்க பலமுறை அதிகாரிகளிடம் குடியிருப்பு வாசிகள் வலியுறுத்தியும் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அதிக அளவில் மழை நீருடன் ஓடை நீர் குடியிருப்புகளுக்குள் புகுந்துள்ளது.


    இதேபோல், மதுரை பழங்காநத்தம் பிரதான சாலையில் முல்லைப் பெரியாறு கூட்டு குடிநீர் திட்ட பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தின் மூலம் குடிநீர் தொட்டிக்கு செல்லக்கூடிய பைப்பு லைனில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் குடிதண்ணீர் வீணாகி வருகிறது.

    மேலும் குடிநீர் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு பண்டக சாலை, கார் பார்க்கிங், கூட்டுறவு மருந்தகம் உள்ளிட்டவைகளில் லட்சக்கக்கணக்கான லிட்டர் குடி தண்ணீர் புகுந்து வெள்ளம் போல் காட்சியளிக்கிறது. இந்த வெள்ளத்தில் எம்.டி.சி. நிறுவனத்தில் பணியாற்றும் அரசு அதிகாரிகள் வாகனம் மற்றும் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்ட லாரி உட்பட கனரக வாகனங்கள் 50-க்கும் மேற்பட்டவை குடி நீரில் சிக்கிக் கொண்டது.

    இதனால் வாகனங்கள் பழுது ஏற்பட்டுள்ளதாக வாகன ஓட்டு வாகன ஒட்டிகள் தெரிவித்து வருகின்றனர். மேலும் தற்போது வரை பல லட்சம் லிட்டர் குடிதண்ணீர் வீணாகி எம்.டி.சி. பண்டக சாலைக்குள் புகுந்து வருகிறது.

    • தமிழ்நாட்டில் மக்கள் பேராதரவோடு பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
    • ரெயில்வே துறையில் கடந்த 10 ஆண்டுகளில் பிரமாண்டமான வளர்ச்சி நடந்துள்ளது.

    மதுரை:

    மதுரையில் பா.ஜ.க. சார்பில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த மத்திய இணை மந்திரி எல்.முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் மக்கள் பேராதரவோடு பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. வருகிற 15-ந்தேதி வரை உறுப்பினர் சேர்க்கை நடைபெறும். ஜனநாயக முறையில் பா.ஜ.க.வில் மட்டுமே உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது. 11 கோடி இலக்கு வைத்து இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. வேறு எந்த கட்சியிலும் இப்படி ஜனநாயக முறையில் உறுப்பினர் சேர்க்கை நடைபெறுவதில்லை.

    தமிழ்நாட்டில் திட்டமிட்டு ஒரு கருத்தை மத்திய அரசுக்கு எதிராக ரெயில் விபத்தில் பரப்பி வருகின்றனர். தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் திட்டமிட்டு இதனை செய்து வருகின்றனர். மெரீனாவில் 5 பேர் உயிரிழந்தார்கள். அதுபற்றி தி.மு.க. கூட்டணி கட்சிகள் பேசினார்களா? மெரீனா சம்பவத்தை மறைக்க தி.மு.க. ரெயில் விபத்தில் நாடகமாடி வருகிறார்கள்.

    ரெயில்வே துறையில் கடந்த 10 ஆண்டுகளில் பிரமாண்டமான வளர்ச்சி நடந்துள்ளது. தொடர்ந்து இந்தியாவில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. புல்லட் ரெயில் இன்னும் ஒரு வருடத்தில் வர உள்ளது. ரெயில் நிலையங்களுக்கு தி.மு.க., காங்கிரஸ் ஆட்சியில் ஏன் வந்தோம் என இருக்கும். ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை.

    ரெயில் விபத்து குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். ஆனால் ஒட்டு மொத்த ரெயில்வேயும் வேலை செய்யவில்லை என தி.மு.க. இந்தியா கூட்டணி ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்து கொண்டுள்ளனர். மெரினா நிகழ்ச்சியின் போது என்ன நடவடிக்கை எடுத்தார்கள்?

    மெட்ரோ ரெயில், பேருந்து வசதி செய்து கொடுக்கவில்லை. தண்ணீர், ஆம்புலன்ஸ் இல்லாமல் 5 பேர் இறந்தார்கள். இதற்காக நாம் ஒரு தனி விசாரணையை நடத்த தேவையில்லை. ரெயில் விபத்தில் என்.ஐ.ஏ. விசாரித்து உண்மையை வெளிக்கொண்டு வருவார்கள். தி.மு.க.வின் மூன்றரை வருட ஆட்சி முழுக்க முழுக்க வேதனையான ஆட்சியாகவே இருந்திருக்கிறது.

    பல்வேறு கட்டணங்களையும், வரிகளையும் உயர்த்தி உள்ளனர். எந்தப்பக்கம் சென்றாலும் மனமகிழ் மன்றங்கள் தான் உள்ளன. போதைப்பொருளை கட்டுப்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்கள் தலையில் வரி மேல் வரி கட்டண உயர்வை விதித்துள்ளனர்.

    விஜய் வருகிற 27-ந்தேதி மாநாடு நடத்துகிறார். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்கலாம். அவருடைய செயல்பாடு, கொள்கைகளை பொறுத்து தான் மக்கள் முடிவெடுப்பார்கள். நடிகர், நடிகை என பிரித்து பார்க்க விரும்பவில்லை.

    விநாயகர் சதுர்த்திக்கு விஜய் வாழ்த்து சொல்லாதது ஏன் என மக்கள் கேள்வி கேட்டார்கள். நாங்களும் கேள்வி கேட்டோம். அதனால் அவர் விஜயதசமி, ஆயுதபூஜைக்கு வாழ்த்து சொல்லியிருப்பார். அரசியலில் நிரந்தர எதிரி, நண்பன் இல்லை என்ற திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். இதற்கு தேசிய தலைமை கூட்டணி குறித்து முடிவெடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×