search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பால் ஏற்றி வந்த டெம்போ மோதி 2 வாலிபர்கள் பலி
    X

    பால் ஏற்றி வந்த டெம்போ மோதி 2 வாலிபர்கள் பலி

    • மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    களியக்காவிளை:

    குமரி மாவட்டம் புதுக்கடை அருகே அம்சி பகுதியை சேர்ந்தவர் விபின் (வயது 19), கூலி தொழிலாளி. இவரும், அதே ஊரை சேர்ந்தவர் வினித் (20), பிளம்பிங் தொழிலாளியும் நண்பர்கள்.

    வினித்துக்கு செல்போன் வாங்குவதற்காக நேற்று இரவு 2 பேரும் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் காப்பிக்காடு பகுதிக்கு சென்றனர். அப்போது மோட்டார் சைக்கிளை விபின் ஓட்டி சென்றார். அவர்கள் இருவரும் காப்பிக்காடு பகுதியில் உள்ள செல்போன் கடைக்கு சென்று செல்போன் ஆர்டர் செய்தனர்.

    பின்னர் குழித்துறை பகுதியில் உள்ள விபின் உறவினர் வீட்டுக்கு சென்றனர். அப்போது அவர்கள் மோட்டார் சைக்கிளில் குழித்துறை அருகே ஆற்றுப் பாலம் பகுதியில் வந்தபோது எதிரே கேரளாவில் இருந்து பால் ஏற்றி வந்த மினி டெம்போ எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்தனர். சம்பவ இடத்திலேயே விபின் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த களியக்காவிளை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    வினித் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை வினித் பரிதாபமாக இறந்தார். விபத்து தொடர்பாக களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் இந்த விபத்தால் குழித்துறை பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உறவினர் வீட்டுக்கு சென்ற வாலிபர்கள் வாகனம் மோதி பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

    Next Story
    ×