search icon
என் மலர்tooltip icon

    தென்காசி

    • காரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சுமார் 69 கிலோ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
    • 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகிரி:

    தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதி வழியாக ஒரு வாகனத்தில் குட்கா கடத்தி வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அவரது உத்தரவின்பேரில், சிவகிரி அருகே தென்காசி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தேவிபட்டணம் விலக்கு பகுதியில் தனிப்படை போலீசார் மற்றும் சிவகிரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சிவகிரி நோக்கி வேகமாக வந்த கார் ஒன்றை வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது காரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சுமார் 69 கிலோ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    உடனடியாக போலீசார் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் காரை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் காரில் இருந்தவர்கள் சங்கரன் கோவில் பந்தப்புளி மேலத் தெருவை சேர்ந்த வெள்ளத்துரை (வயது 40) மற்றும் பந்தப்புளி வடக்கு தெருவை சேர்ந்த பிரபு (32) என்பதும், கர்நாடகா மாநிலம் பெங்களூரு பகுதியில் இருந்து தமிழக பகுதியில் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்த போது போலீசாரிடம் சிக்கியது தெரியவந்தது.

    இதனையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
    • ஐந்தருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளுக்குள் நேற்று மாலையில் பெய்த கன மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    அதனைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில், இன்று காலையில் மழை அளவு குறைந்து வெயில் அடிக்க தொடங்கி உள்ளதால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து சீரானதை தொடர்ந்து முதற்கட்டமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    மேலும், பழைய குற்றால அருவியில் நேற்று திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தின் காரணமாக அந்த பகுதியில் கற்கள் மற்றும் மணல்கள் காணப்பட்டதால் அதனை அப்புறப்படுத்திய பின் சுற்றுலா பயணிகள் வழக்கம் போல் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

    • தமிழக கவர்னர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
    • போதை விழிப்புணர்வு பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது.

    தென்காசி:

    வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் சார்பில் இன்று சங்கரன்கோவிலில் மாபெரும் போதை ஒழிப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடை பெற்றது. இன்று காலை சங்கரன்கோவில் பழைய பஸ் நிலையத்தில் தொடங்கிய பேரணியில் வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் நிறுவனர் ஆனந்தன் அய்யாசாமி மற்றும் ஜோகோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, ரோட்டரி கிளப் நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    மேளதாளங்கள் முழங்க பேரணியானது பொதுக்கூட்டம் நடைபெறும் மேடை வரை 2 கிலோ மீட்டர் சென்றடைந்தது. பின்னர் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    இதற்காக சங்கரன்கோவில் வந்த கவர்னர் ஆர்.என்.ரவி முதலில் சங்கர நாராயணர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய சென்றார். அவரோடு ஜோகோ முதன்மை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு, மனிதநேயம் ஐ.ஏ.எஸ். அகாடமி நிறுவனர் சைதை துரைசாமி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

    முன்னதாக நடைபெற்ற பேரணியில் வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் நிறுவனர் ஆனந்தன் அய்யாசாமி, ஜோகோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, பா.ஜ.க. பொருளாளர் எஸ்.ஆர். சேகர் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    மேலும் பேரணியில் பங்கேற்க விருப்பம் தெரிவித்திருந்த பெண்கள், இளைஞர்கள் வாய்ஸ் ஆப் தென்காசி இணையதளத்தில் பதிவு செய்திருந்தனர். அவர்கள் தங்கள் பெற்றோருடன் கலந்து கொண்டனர்.

    பொதுக் கூட்ட மேடையில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் போதை விழிப்புணர்வு பற்றிய கருத்தரங்கு மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

    பொதுக்கூட்டத்தின் போது அனைவரும் போதை பொருட்களுக்கு எதிராக ஒருசேர உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    • தமிழகத்தில் தான் போதைப் பொருள் அதிக அளவில் விற்பனை ஆகிறது.
    • போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு பேரணி.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் இயங்கி வரும் வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் சார்பில் வருகிற 6-ந்தேதி தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் 2 கிலோ மீட்டர் தூரம் போதையில்லா தென்காசியை உருவாக்கும் வகையில் மாபெரும் போதை ஒழிப்பு பேரணி நடைபெறுகிறது.


    இந்த பேரணியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். மேலும் ஷோகோ நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் வேம்பு மற்றும் பள்ளி கல்லூரி மாணவ-மாணவி கள், பொதுமக்கள் இந்த பேரணியில் கலந்து கொள்ள உள்ளனர்.

    இதுகுறித்து வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் நிறுவனர் ஆனந்தன் அய்யாச்சாமி இன்று தென்காசியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் போதைப் பொருள் அதிக அளவில் விற்பனை ஆகிறது. அதிக அளவிலான நபர்கள் பயன்படுத்துகிறார்கள் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.

    எனவே பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடம் போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த மாபெரும் பேரணியை நடத்துகிறோம் என்றார்.

    பின்னர் அவரிடம், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் மதுவிலக்கை தேசியக் கொள்கையாக அறிவிக்க வேண்டும் என்று கூறி உள்ளாரே? என கேள்வி எழுப்பினர்.

    அதற்கு அவர் பதில் அளிக்கையில், மது விற்பனை தற்போது மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதனை மத்திய அரசு எடுத்தால் சட்டம் ஒழுங்கு, காவல் துறையையும் மத்திய அரசு எடுத்தால் மாநில அரசுகள் சம்மதிக்குமா என கூறினார்.

    மதுவிலக்கு கொண்டுவர மாநில அரசே நடவடிக்கை எடுக்க வேண்டும். பழியை மத்திய அரசு மீது சுமத்த கூடாது என்றார்.

    காந்தி மண்டபத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தமிழக கவர்னர் ரவி சுத்தம் செய்த போது மது பாட்டில் கிடந்ததாக வருத்தத்துடன் தெரிவித்தார்.

    கவர்னர் அரசியல் செய்வதாக பலர் கூறுகின்றனர். இதனை அரசியல் செய்யக்கூடாது. இதே கொள்கையை தான் தேசப்பிதா காந்தியும் அறிவுறுத்தினார். அதற்காக அவர் அரசியல் செய்தார் என கூற முடியுமா? எனவும் கூறினார். 

    • தற்போது பூத்து குலுங்குவதால் மஞ்சள் போர்வை போர்த்தியது போல் கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது.
    • கேரளா சுற்றுலா பயணிகள் அதிகம் சூரியகாந்தி மலர்கள் பூக்கும் பகுதியில் முற்றுகை இடுகின்றனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் ஆய்க்குடியில் இருந்து சாம்பவர்வடகரை செல்லும் நெடுஞ்சாலையின் இருபுறமும் உள்ள வயல்வெளிகளில் அப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள் சூரியகாந்தி மலர்களை பயிரிட்டு வருவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டும் பலர் சூரியகாந்தி மலர்களை பயிரிட்டனர். அது தற்போது பூத்து குலுங்குவதால் மஞ்சள் போர்வை போர்த்தியது போல் கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது.

    அதனை கண்டு ரசிக்க உள்ளூர் சுற்றுலா பணிகள் ஆர்வம் காட்டுவதை விட அண்டை மாநிலமான கேரளாவை சேர்ந்த தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகள் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளிட்டவற்றை பார்வையிட வரும்போது அப்படியே சூரியகாந்தி மலர்கள் பூத்துக் குலுங்கும். ஆய்க்குடி அருகே உள்ள கம்பளி பகுதியில் முற்றுகை இடுகின்றனர்.

    தற்போது கேரளாவில் இருந்து தினமும் வரும் சுற்றுலா பயணிகள் சாலைகளில் கார்களை நிறுத்திவிட்டு வயல்களில் பூத்து குலுங்கும் சூரியகாந்தி மலர்களை ரசிப்பதற்கு செல்லும்போது அவர்களிடம் வயல் உரிமையாளர்கள் ஒரு நபருக்கு ரூ. 25 வசூல் செய்து வருகின்றனர்.

    பணம் செலுத்தி சூரியகாந்தி மலர்களை ரசிக்கும் கேரளா சுற்றுலா பயணிகள் சூரியகாந்தி மலர்களின் நடுவே நின்று போட்டோ எடுத்து கொண்டாலோ அல்லது அதனை கண்களால் கண்டு ரசித்தாலோ செல்வம் பெருகும் என கேரளா பகுதி மக்களிடையே வழக்கமாக பேசப்பட்டு வருகிறது.

    இதனாலேயே கேரளா சுற்றுலா பயணிகள் அதிகம் சூரியகாந்தி மலர்கள் பூக்கும் பகுதியில் முற்றுகை இடுகின்றனர். கேரளாவை சேர்ந்த புதிதாக திருமணமான தம்பதிகளும் ஆர்வமுடன் போட்டோ சூட் நடத்தி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    • நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டு வருகிறது.
    • சுற்றுலாப் பயணிகள் குளிக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்த நிலையில், பல்வேறு பகுதிகளில் உள்ள நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டு வருகிறது.

    அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தளங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளில் தற்போது தண்ணீரானது அதிக அளவில் கொட்டி வருவதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.


    குறிப்பாக, குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீரானது தற்பொழுது ஆர்ப்பரித்துக் கொண்டு கொட்டி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று இரவு முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும், தற்போது மழை குறைந்துள்ள நிலையில், தண்ணீரின் அளவு அருவிகளில் குறையும் பட்சத்தில் சுற்றுலாப் பயணிகள் வழக்கம் போல் குளிக்க அனுமதி வழங்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இடி, மின்னலுடன் கனமழையாக கொட்டியது.
    • சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் காலை முதலே அதிகரித்து காணப்படுகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் கடந்த சில வாரங்ககளாக கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலையில் தென்காசி மாவட்டத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது.

    காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் மாலையில் மேகக் கூட்டங்கள் திரண்டு இடி, மின்னலுடன் கனமழையாக கொட்டியது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.

    இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை தினம் என்பதாலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நீர் நிலைகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் காலை முதலே அதிகரித்து காணப்படுகிறது.

    குறிப்பாக குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, புலி அருவிகளில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் நின்று குளித்து மகிழ்ந்தனர்.

    • குருணை மருந்தை வாழைப்பழத்தில் தடவி சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக கிடந்தனர்.
    • சம்பவம் நடந்த தோப்பில் அமைந்திருந்த பரமசிவன் வீட்டுக்குள் சென்று போலீசார் ஆய்வு செய்தனர்.

    தென்காசி:

    தென்காசி அருகே உள்ள கம்பிளி பகுதியை சேர்ந்தவர் பரமசிவன்(வயது 70). இவரது மனைவி சுடலை மாடத்தி(65). இவர்களது மகன் முருகேசன்(50). பரமசிவனும், சுடலைமாடத்தியும் அதே பகுதியில் உள்ள ஒரு தோப்பில் தங்கியிருந்தனர். முருகேசன் தனது மனைவி, மகன், மகள் மற்றும் மருமகளுடன் கம்பிளி மெயின்ரோட்டில் வசித்து வந்தார்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முருகேசன் ஒரு விபத்தில் சிக்கியதில் அவருக்கு மனநலம் சற்று பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று தனது பெற்றோர் வசிக்கும் தோப்பிற்கு சென்ற முருகேசன் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் முருகேசன் குடும்பத்தினர் தனது தாத்தா-பாட்டி வசிக்கும் தோப்பிற்கு சென்று பார்த்தபோது அங்கு பரமசிவன், முருகேசன், சுடலைமாடத்தி ஆகியோர் குருணை மருந்தை வாழைப்பழத்தில் தடவி சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக கிடந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து ஆய்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் அங்கு விரைந்த சென்று 3 பேர் உடலையும் கைப்பற்றி தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் நடந்த தோப்பில் அமைந்திருந்த பரமசிவன் வீட்டுக்குள் சென்று போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அங்குள்ள கட்டிலில் வைக்கப்பட்டிருந்த தலையணையை எடுத்து பார்த்தபோது, அதன் கீழே ரூ.50 ஆயிரம் பணம் இருந்தது. தாங்கள் இறந்தால் தங்களின் இறுதிச் சடங்கிற்கு செலவு செய்வதற்காக அந்த பணத்தை அவர்கள் விட்டு சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    ஆய்க்குடியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த பெற்றோர், மகன் ஆகிய 3 பேரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதோடு மட்டுமின்றி இறுதிச்சடங்கிற்கு ரூ.50 ஆயிரம் பணத்தையும் விட்டுச் சென்றது அவர்களது உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    • 11 குற்றவாளிகளில் 8 பேர் மட்டுமே நீதிபதி முன்பு ஆஜராகினர்.
    • கடந்த 2016-ம் ஆண்டு நெல்லையில் கல்பனா என்ற கர்ப்பிணி பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடத்தை அடுத்த உடப்பன்குளத்தில் கடந்த 2014-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டையொட்டி ஒரு சமுதாயத்தினர், மற்றொரு சமுதாயத்தினரின் தெருவில் பட்டாசு வெடித்தனர்.

    இதுதொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை முன்விரோதமாக மாறி கடந்த 28-5-2014 அன்று ஒருவரை மற்றொரு சமூகத்தினர் சாதி பெயரை சொல்லி திட்டியதாக புகார் எழுந்தது. இதற்கு பழிவாங்கும் நோக்குடன் அதே ஆண்டு 1-6-2014 அன்று உடப்பன்குளம் கீழ தெருவை சேர்ந்த காளிராஜ் (வயது 55), கோவை துடியலூரை சேர்ந்த வேணுகோபால்(42), முருகன்(42) ஆகியோர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.

    இந்த சம்பவத்தில் உடப்பன்குளத்தை சேர்ந்த 25 பேரை வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்பட 6 பிரிவுகளில் கைது செய்தனர். வழக்கு விசாரணை நெல்லை 2-வது கூடுதல் அமர்வு நீதி மன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கடந்த 24-ந்தேதி நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பொன்னுமணி, குட்டிராஜ், குருசாமி, உலக்கன், தங்கராஜ், வேலுச்சாமி மகன் கண்ணன், பால முருகன், முத்துகிருஷ்ணன், வெளியப்பன் மகன் கண்ணன், வக்கீலான சுரேஷ் உள்ளிட்ட 11 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

    அவர்களுக்கு நேற்று இரவு தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அதில் பொன்னுமணி, குருசாமி, காளிராஜ், முத்துகிருஷ்ணன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. குட்டிராஜ், கண்ணன், மற்றொரு கண்ணன், பாலமுருகன், உலக்கன் ஆகியோருக்கு 5 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. வெளியப்பன் மகன் கண்ணன், வக்கீல் சுரேஷ் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் விதிக்கப்பட்டது. மேலும் 11 பேருக்கும் அபராதங்களும் விதித்து தீர்ப்பளித்த பின்னர் நீதிபதி சுரேஷ் குமார் பேனாவை உடைத்தார்.

    காலையிலேயே தீர்ப்பை வாசித்துவிடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் 11 குற்றவாளிகளில் 8 பேர் மட்டுமே நீதிபதி முன்பு ஆஜராகினர். இதனால் மாலையில் அறிவிப்பதாக தீர்ப்பை தள்ளி வைத்தார். தீர்ப்பு தங்களுக்கு எதிராக இருக்கும் என்பதை அறிந்த தூக்கு தண்டனை குற்றவாளிகளுக்கு நேற்று காலையில் திடீரென உயர் அழுத்தம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    எனினும் நீதிபதி உத்தரவின்பேரில் அவர்களும் மாலையில் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். இதேபோல் சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு காலையில் கோர்ட்டுக்கு வராத நிலையில், நீதிபதி உத்தரவின்பேரில் அவரும் மாலையில் நேரில் ஆஜராகினார்.

    இந்த நிலையில் தான் பரபரப்பான தீர்ப்பை வழங்க அவர் தயாரானார். அப்போது புகார்தாரர் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. அவர்கள் இன்று நல்லபடியாக தீர்ப்பு வரவேண்டும் என்பதற்காக கோவிலுக்கு சென்று விட்டனர். எனவே தீர்ப்பை வாசித்துவிடுமாறு அரசு வக்கீல் கந்தசாமி தெரிவித்தார்.

    ஆனால் வழக்கு தீர்ப்பை அவர்கள் பார்க்கவேண்டும். வீடியோ கால் செய்து பார்க்க செய்யுங்கள். அதன்பின்னர் நெல்லையப்பர் கோவிலில் வந்து சாமி கும்பிட சொல்லுங்கள் என்றார். எனினும் அதற்கான வழிவகை இல்லா காரணத்தினால் தீர்ப்பை வாசிக்க நீதிபதி முடிவு செய்தார்.

    அப்போது குற்றவாளிகள் நீதிபதியை நோக்கி இருகரம் கூப்பியபடி, கதறி அழுதனர். எங்களுக்கு இதில் தொடர்பில்லை என்றனர். ஆனால் உங்கள் மீதான குற்றங்கள் நிருபிக்கப்பட்டு விட்டது. பேசாமல் இருங்கள் என்று நீதிபதி கூறிவிட்டார். இந்த தீர்ப்பை கேட்டு புகார் தாரரின் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தண்டணை பெற்றவர்களின் குடும்பத்தினர் கதறி துடித்தனர். தொடர்ந்து கண்ணீருடன் குற்றவாளிகள் இரவோடு இரவாக பாளை மத்தியச்சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர்.

    நெல்லை கோர்ட்டில் ஏற்கனவே 2 வழக்குகளில் தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தற்போது வழங்கப்பட்டுள்ளது 3-வது தூக்கு தண்டனையாகும். கடந்த 2016-ம் ஆண்டு நெல்லையில் கல்பனா என்ற கர்ப்பிணி பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

    இந்த வழக்கு 2-வது கூடுதல் அமர்வு நிதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நிதிபதி அப்துல் காதர் குற்றம் சாட்டப்பட்ட தம்பதிகளான சங்கரநாராயணன், செல்லம்மாளுக்கு தூக்கு தண்டனை வழங்கினார். இதேபோல கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 8-ந் தேதி நெல்லை பேட்டையை சேர்ந்த 5 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டான். இந்த வழக்கு முதலாவது கூடுதல் அமர்வு நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட ஆறுமுகம் என்பவருக்கு தூக்கு தண்டனை விதித்தார். தற்போது 3-வது முறையாக தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் 150 பக்கங்கள் கொண்ட தீர்ப்பு விவரங்கள் அடங்கிய ஆவணத்தை குற்றவாளிகள் 11 பேருக்கும் கோர்ட்டு ஊழியர்கள் வழங்கினர்.

    • கொலை வழக்கில் 11 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட நிலையில் தீர்ப்பு அளிப்பு.
    • நெல்லை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் தீர்ப்பளித்துள்ளார்.

    2014ம் ஆண்டு சங்கரன்கோவில் அடுத்த திருவேங்கடத்தில் 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 11 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட நிலையில் 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும், இந்த கொலை வழக்கில் 5 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2 பேருக்கு தலா 2 ஆயுள் தண்டனையும் விதித்து நெல்லை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் தீர்ப்பளித்துள்ளார்.

    அதன்படி, பொன்னுமணி, குருசாமி, முத்துகிருஷ்ணன், காளிராஜ் ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    • வனத்துறையினர் அங்கு விரைந்து வந்து மேற்கு தொடர்ச்சி மலை பகுதிக்குள் யானைகளை விரட்டினர்.
    • கடந்த மாதம் கரிசல்குடியிருப்பு ஊருக்குள் யானை ஒன்று புகுந்தது.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள வடகரை பகுதியில் நேற்று அதிகாலை 2 மணிக்கு தீ.ப.தெரு, உ.மு. சந்து, காவல்கார தெரு, சாம்பவர் காலனி ஆகிய பகுதிகளில் 4 யானைகள் புகுந்து சுற்றி வந்தன. தொடர்ந்து அங்கிருந்த தென்னை மரம் ஒன்றை அந்த யானைக்கூட்டம் வேரோடு சாய்த்தது. வேலி கற்களையும் உடைத்து தள்ளியது.

    இதை பார்த்ததும் அங்கிருந்த கிராம மக்கள் அலறி அடித்து வீடுகளை விட்டு ஓட்டம் பிடித்தனர். அதன் பின்னர் யானைகளை பொதுமக்கள், விவசாயிகளுடன் சேர்ந்து வெடி வெடித்தும், கூட்டாக சத்தம் எழுப்பியும் வனப்பகுதிக்குள் நேற்று விரட்டினர்.

    இந்நிலையில் இன்று காலை மீண்டும் 3 யானைகள் வடகரை மேட்டுக்கால் சாலையில் உச்சாமடை அருகே சேக் உசேன் என்பவருடைய தோப்பில் நிற்பதை கண்டு அலறி அடித்து ஓடி உள்ளார். அதன் பின்னர் வனத்துறையினர் அங்கு விரைந்து வந்து மேற்கு தொடர்ச்சி மலை பகுதிக்குள் யானைகளை விரட்டினர்.

    ஆனால் இந்த யானைகள் ஊருக்குள் அடிக்கடி புகுந்து சுற்றி வருவதால் மீண்டும் வரக்கூடும் என இப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த மாதம் கரிசல்குடியிருப்பு ஊருக்குள் யானை ஒன்று புகுந்தது. கடந்த வாரம் 2 யானைகள் வடகரை குளத்தில் குளியல் போட்ட வீடியோ சமூக வலைத் தளங்களில் பரவியது.

    இங்கு அடிக்கடி ஊருக்குள் வரும் யானை களை விரட்ட வனத்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுத்து இந்த யானைகளை மீண்டும் மீண்டும் ஊருக்குள் வராத படி சோலார் மின்வேலிகள், அகலிகள் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அருவிகளுக்கு தண்ணீர் வரத்து மிகவும் குறைந்துள்ளது.
    • ஓரளவிற்கு சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் காணப்பட்டது.

    தென்காசி:

    தென்மேற்கு பருவமழை கேரளா மற்றும் தமிழகத்தில் முடிவுற்ற நிலையில் அவ்வப்போது கேரளா மற்றும் தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த சாரல் மழையின் காரணமாக கடந்த வாரம் குற்றால அருவிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

    தற்போது மழைப் பொழிவு முழுவதுமாக குறைந்து வெயில் கடுமையாக சுட்டெரித்து வருவதால் குற்றாலத்தின் பிரதான அருவிகளான மெயினருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி, பழைய குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து மிகவும் குறைந்துள்ளது.

    நேற்று விடுமுறை தினம் என்பதால் குற்றால அருவிகளில் ஓரளவிற்கு சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் காணப்பட்டது. அவர்கள் அருவிகளில் பாறைகளை ஒட்டி மிதமாக விழும் குறைந்த அளவு தண்ணீரில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

    அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து சுற்றுலாப் பயணிகள் அதிகமாக குற்றால அருவிகளில் குளிக்க குவிந்திருந்தனர்.

    கேரளாவிலும் வெயில் சுட்டெரிக்கத் தொடங்கி உள்ளதால் தென்காசி மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளை நோக்கி கேரளா சுற்றுலாப் பயணிகள் படை யெடுத்து வருகின்றனர்.

    ×