search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அதானி குழும முறைகேடு பற்றி கூட்டுக்குழு விசாரணை கோரி எதிர்க்கட்சிகள் அமளியால் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்தி வைப்பு
    X

    அதானி குழும முறைகேடு பற்றி கூட்டுக்குழு விசாரணை கோரி எதிர்க்கட்சிகள் அமளியால் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்தி வைப்பு

    • அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. முதலீடு செய்திருப்பது குறித்து விரிவான விசாரணை செய்ய வேண்டும்.
    • அதானி குழும மோசடி விவகாரத்தில் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் ஏற்கனவே 2 நாட்கள் முடங்கி இருந்தன. இன்று 3-வது நாளாக இரு அவைகளும் முடங்கின.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31-ந்தேதி தொடங்கியது. முதல் நாள் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.

    2-வது நாளான கடந்த 1-ந்தேதி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

    அதானி குழும விவகாரத்தால் 2-ந்தேதியும், 3-ந்தேதியும் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் இரு அவைகளும் முடங்கியது.

    அமெரிக்காவை. சேர்ந்த ஹிண்டன் பார்க் நிறுவனம் கடந்த 24-ந்தேதி ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் பங்கு சந்தையில் தனது பங்குகளின் மதிப்பை உயர்த்தி காட்டுவதற்காக அதானி குழுமம் மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையை முடக்கி இருந்தனர்.

    இந்த நிலையில் அதானி குழும விவகாரத்தால் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும், எதிர்க்கட்சிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டன.

    அதானி குழும முறைகேடு குறித்து கூட்டுக்குழு விசாரணை நடத்த கோரி பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினார்கள். எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் முழக்கம் மற்றும் கோஷங்களையும் எழுப்பினார்கள்.

    இந்த போராட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா, கம்யூனிஸ்டு உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள், தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு உள்ளிட்ட எம்.பி.க்கள், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மகுவா மைத்ரா உள்ளிட்ட எம்.பி.க்கள், சிவசேனா சார்பில் சஞ்சய் ராவத் உள்ளிட்ட எம்.பி.க்கள் மற்றும் கம்யூனிஸ்டு எம்.பி.க்கள் கலந்து கொண்ட னர்.

    அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. முதலீடு செய்திருப்பது குறித்து விரிவான விசாரணை செய்ய வேண்டும். ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு அரசுடமை வங்கிகள் அதானி குழுமத்தில் முதலீடு செய்திருப்பது பற்றியும், கடன் வழங்கி இருப்பது குறித்தும் பாராளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். இது தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்பது குறித்தும் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பி.க்கள் வலியுறுத்தினார்கள்.

    பாராளுமன்றம் இன்று காலை 11 மணிக்கு கூடியதும் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதானி குழும விவகாரத்தை கிளப்பினார்கள்.

    அதானி குழுமத்தின் மோசடி குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷங்களை எழுப்பினார்கள். இதற்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதிக்கவில்லை. இதனால் அமளியில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து 2 மணி வரை அவையை ஒத்தி வைத்தார்.

    மேல்சபையிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. அதானி குழும முறைகேடு குறித்து பாராளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும். இதுகுறித்து அவையில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர்.

    எதிர்க்கட்சிகள் கோரிக்கையை துணை ஜனாதிபதியும், அவைத் தலைவருமான ஜெகதீப் தன்கர் ஏற்க மறுத்தார். இதனால் அவை 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

    அதானி குழும மோசடி விவகாரத்தில் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் ஏற்கனவே 2 நாட்கள் முடங்கி இருந்தன. இன்று 3-வது நாளாக இரு அவைகளும் முடங்கின.

    Next Story
    ×