search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    வெடிகுண்டு மிரட்டல் விடுக்க இ-மெயிலில் குறிப்பிட்ட பிரவுசரை பயன்படுத்தும் மர்ம நபர்கள்
    X

    வெடிகுண்டு மிரட்டல் விடுக்க இ-மெயிலில் குறிப்பிட்ட பிரவுசரை பயன்படுத்தும் மர்ம நபர்கள்

    • சிங்காநல்லூர், புலியகுளம் பகுதிகளில் உள்ள 2 மருத்துவமனைகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
    • டார், வி.பி.என் போன்ற தேடுபொறி தளங்களை பயன்படுத்தும்போது எங்கிருந்து அனுப்புகின்றனர் என்பதை உறுதி செய்ய முடியாது.

    கோவை:

    கோவையில் கடந்த சில நாட்களாக தனியார் பள்ளிகள், ஓட்டல்கள், கல்லூரிகளை குறிவைத்து மர்மநபர்கள் இ-மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

    வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

    ஈச்சனாரி அருகே உள்ள தனியார் மருத்துவ கல்லூரி முதல்வருக்கு வந்த மெயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது.

    செட்டிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை செய்தனர். சோதனையின் முடிவில் அது புரளி என்பது தெரியவந்தது.

    இதேபோல் சிங்காநல்லூர், புலியகுளம் பகுதிகளில் உள்ள 2 மருத்துவமனைகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

    இதுகுறித்து அந்தந்த பகுதி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டல் வந்த மெயில் முகவரியை வைத்து எங்கிருந்து மிரட்டல் வந்தது. அதனை விடுத்தது யார்? என விசாரித்து வருகின்றனர்.

    கோவையில் தொடர்ந்து பள்ளிகள், கல்லூரிகள், ஓட்டல்கள், ஆஸ்பத்திரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ள சம்பவம் கோவை மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    மிரட்டல் விடுக்கும் நபர்கள் யார் என்பதை கண்டறிவதில் போலீசாருக்கு கடும் சவால் ஏற்பட்டுள்ளது. தற்போது போலீசார் தொழில் நுட்ப உதவியுடன், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபர்கள் யார் என்பதை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    டிஜிட்டல் தொழில்நுட்பம் அறிந்த நபர்களே இதுபோன்ற மிரட்டல்கள் விடுத்து வருகின்றனர். டார் எனப்படும் பிரவுசரை பதிவிறக்கம் செய்து, அதன் மூலம் மிரட்டல் விடுத்து இ-மெயில் அனுப்புகிறார்கள்.

    டார், வி.பி.என் போன்ற தேடுபொறி தளங்களை பயன்படுத்தும்போது எங்கிருந்து அனுப்புகின்றனர் என்பதை உறுதி செய்ய முடியாது.

    உள்ளூரில் இருந்து அனுப்பினாலும் வெளிநாட்டில் இருப்பது போலவே முகவரி காட்டும். இதுபோன்ற மிரட்டல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிய தொழில்நுட்ப உதவியுடன் தீவிர விசாரணை செய்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×