search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மயிலாடுதுறை பா.ஜ.க. தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கம் - மாநில தலைவர் அண்ணாமலை
    X

    மயிலாடுதுறை பா.ஜ.க. தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கம் - மாநில தலைவர் அண்ணாமலை

    • ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக தருமபுரம் ஆதீனம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
    • மயிலாடுதுறை மாவட்டத்தின் பா.ஜ.க. தலைவர் அகோரம் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீன சைவ மடம் அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 27-வது தலைமை மடாதிபதியாக மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமி இருந்து வருகிறார்.

    இந்நிலையில், தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோவை வலைதளங்களில் வெளியிடுவதாக கூறி மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக தருமபுரம் ஆதீனம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    இந்த விவகாரம் பூதாகாரமானதை தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆபாச வீடியோ தொடர்பாக விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து மிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை மாவட்டத்தின் பா.ஜ.க. தலைவர் அகோரம் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களில் நான்கு பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி அகோரம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    அதன்படி தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோவை வெளியிடுவதாக மிரட்டல் விடுத்த மயிலாடுதுறை மாவட்ட பா.ஜ.க. தலைவர் அகோரத்தை மும்பையில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, அகோரம் மற்றும் சிலர் சிறையில் இருந்து ஜாமின் பெற்று வெளியே வந்தனர்.

    இதைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து அகோரம் நீக்கப்படுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    அதேபோல் திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர், பொதுச்செயலாளர் செந்திலரசன் ஆகியோரும் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×