search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விக்கிரவாண்டியில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி முகம் - தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கிய ஸ்டாலின்

    • மின்னணு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ண மற்றொரு அறையில் 14 மேஜைகள் போடப்பட்டிருந்தது.
    • வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த நா.புகழேந்தி மரணம் அடைந்ததால் அங்கு கடந்த 10-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

    தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா உள்பட 29 பேர் போட்டியிட்டனர். மொத்தமுள்ள 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்களில் 1 லட்சத்து 95 ஆயிரத்து 495 பேர் வாக்களித்தனர். இது 82.47 சதவீத வாக்கு பதிவாகும்.

    ஓட்டுப்பதிவு முடிவடைந்ததும், வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்கு எண்ணும் மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

    பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த தேர்தலில் இன்று (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

    இதையொட்டி காலை 7.30 மணியளவில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையின் சீல் அகற்றப்பட்டு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு செல்லப்பட்டன.

    அதுபோல் விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் இருந்து தபால் வாக்குச்சீட்டுகள் அடங்கிய பெட்டிகளும் கொண்டு வரப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.

    இதற்காக அங்குள்ள தனி அறையில் 2 மேஜைகள் போடப்பட்டு அங்கு தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தபால் வாக்குகள் எண்ணப்பட்ட போது சில வாக்குச் சீட்டுகளில் கூடுதல் மை கொட்டி இருந்தது.

    இதனால் அந்த வாக்குச் சீட்டுகளை செல்லாது என்று தேர்தல் அதிகாரி அறிவித்தார். இதற்கு பா.ம.க. தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் சிறிது நேரம் சர்ச்சை நிலவியது.

    அதன் பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணும் பணியில் 14 கிராம உதவியாளர்கள், தாசில்தார்கள், துணை தாசில்தார்கள் மற்றும் அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள், ஊழியர்கள் என 150 பேர் ஈடுபட்டனர்.

    வாக்கு எண்ணிக்கையை எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் அமைதியான முறையில் நடத்தி முடிக்க ஏதுவாக, வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. திஷாமித்தல், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாச் ஆகியோர் தலைமையில் 4 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 7 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 28 இன்ஸ்பெக்டர்கள், 86 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், துணை ராணுவப்படையினர் என 1,195 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    மின்னணு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ண மற்றொரு அறையில் 14 மேஜைகள் போடப்பட்டிருந்தது. ஒவ்வொரு மேஜையிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்கு எண்ணிக்கை நிகழ்வுகளை சி.சி.டி.வி. மூலம் கண்காணிக்கவும், வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


    வாக்கு எண்ணிக்கையை 20 சுற்றுகளாக நடத்தி முடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. 9.30 மணி அளவில் முதல் சுற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டது.

    தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா 8,565, பாம.க. வேட்பாளர் சி.அன்புமணி 3,906, நாம் தமிழர் வேட்பாளர் டாக்டர் அபிநயா 303 வாக்குகள் பெற்று இருந்தனர். 2-வது சுற்றில் தி.மு.க. 12,002, பாம.க. 5904, நாம் தமிழர் 819 பெற்றனர்.

    2-வது சுற்று ஓட்டு எண்ணிக்கை முடிவில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா 6,524 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருந்தார். 3-வது சுற்றில் தி.மு.க. 18,057, பா.ம.க. 7,323, நாம் தமிழர் 1,383 வாக்குகள் பெற்றன. 4-வது சுற்றில் தி.மு.க. 24,169 பா.ம.க. 9,131, நாம் தமிழர் 1,500 வாக்குகள் பெற்றன.

    4-வது சுற்று முடிவில் தி.மு.க. 15038 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை யில் இருந்தது. 10.30 மணி அளவில் 5-வது சுற்று முடிவுகள் வெளியானது. அப்போது தி.மு.க. 24,171, பா.ம.க. 8,825, நாம் தமிழர் 1,763 வாக்குகள் பெற்று இருந்தன.

    இதனால் 5-வது சுற்று முடிவில் தி.மு.க. வேட்ப ளர் அன்னியூர் சிவா 15,346 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். 6-வது சுற்று முடிவில் தி.மு.க. 31,151, பா.ம.க. 11,483, நாம் தமிழர் கட்சி 2,275 வாக்குகள் பெற்று இருந்தன. தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா 19,668 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார்.

    இதேபோல் தொடர்ந்து ஒவ்வொரு சுற்று முடிவிலும் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை வகித்து வருகிறார். நண்பகல் 12.30 மணி நிலவரப்படி தி.மு.க. 83,431, பா.ம.க. 36,341, நாம் தமிழர் 6,767 வாக்குகள் பெற்று இருந்தன.

    இதன் மூலம் தி.மு.க. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெறுவது தொடக்கத்திலேயே உறுதியானது. இதனால் தி.மு.க. தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

    இதனிடையே, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ள நிலையில், சென்னை அண்ணாஅறிவாலயத்தில் தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

    Next Story
    ×