என் மலர்
மற்றவை
- அவரிடம் உதவித்தொகை பெற இருந்த மாணவர்கள் பட்டியல் அவர் கைக்கு வருகிறது.
- கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கிறார்கள்.
தமிழக முதல்வராக பக்தவச்சலம் இருந்த சமயம் ஒரு முறை அவர், திருச்சிக்கு அருகேயுள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழாவில் கலந்து கொள்ள அக்கல்லூரிக்கு வந்திருந்தார். அவரிடம் உதவித்தொகை பெற இருந்த மாணவர்கள் பட்டியல் அவர் கைக்கு வருகிறது. அவங்க எல்லாரையும் நான் இப்பவே பாக்கணும் என்றார் தன் உதவியாளரிடம்.
உடனே அவர் அமர்ந்திருந்த அறைக்கு அம்மாணவர்கள் அழைத்து வரப்பட்டனர். அவர்களைப் பார்த்ததும் ஐயா துணுக்குற்றார். அனைவரும் வசதியான வீட்டுப் பிள்ளைகள் போலவே தோற்றமளித்தனர், என்னய்யா இது? இவங்க தான்.. அந்த ஏழைங்களான்னு கர்ஜித்தார்!
வெலவெலத்து போன கல்லூரி நிர்வாகத்தினர் தங்கள் தவறை உணர்ந்து அவர் காலில் விழுந்தது, ஐயா நாங்கள் இந்த தொகையை ஏழை மாணவர்களுக்குத் தான் கொடுப்போம், இவர்களுக்கு அல்ல என்றனர்.
அவரது உதவியாளர், "அய்யா இப்ப என்ன செய்யறது.? இந்தக் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கிறார்கள். நாம இப்போதான் இங்க வர்றோம்! இப்ப எப்படி அய்யா ஏழை மாணவர்களை கண்டுபிடிப்பது" எனக்கேட்டார்.
ஒரு நிமிசம் என சற்றே யோசித்த பக்தவச்சலம் அனைத்து மாணவர்களையும் வரவழைத்து "இதை யார் யார் உங்க கைவசம் வச்சிருக்கிங்களோ அவங்க மட்டும் அதை எடுத்துட்டு வந்து எங்கிட்ட காமிங்க" என்றார்.
அவர் கேட்டதைக் கொண்டுவந்து தந்த அனைத்து மாணவர்களுக்கும் உடனே உதவித் தொகை தந்துவிட்டு கிளம்பினார். பக்தவச்சலத்தின் அந்த எளிய முறையை கண்டு அனைவரும் வியந்தனர்!
ஆம் அவர் என்ன கேட்டார் தெரியுமா? மதிய உணவுக்கு தொட்டுக்க யார் யாரெல்லாம் 1 பைசா மட்டை ஊறுகாய் கொண்டு வந்திருக்கிங்க? இது தான் அக்கேள்வி.?
மதிய சாப்பாட்டுக்கு 1 பைசா மட்டை ஊறுகாய் மட்டுமே வைத்திருப்பவன் நிச்சயம் ஏழையாகத் தானே இருக்க முடியும்! அவ்வளவு நெருக்கடியிலும் பக்தவச்சலம் அய்யாவின் சமயோஜிதத்தை கண்டு அனைவரும் நெகிழ்ந்து மகிழ்ந்து கைதட்டிப் பாராட்டினார்கள்.!
-வெங்கடேஷ் ஆறுமுகம்
- எலுமிச்சை பழச்சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.
- ஆரஞ்சுப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.
தேனை எதனுடன் சேர்த்து சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பார்ப்போம்..
பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிடநல்ல தூக்கம் வரும், இதயம் பலம்பெறும்.
பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி உண்டாகும்.
மாதுளம் பழச்சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் புது ரத்தம் உண்டாகும்.
எலுமிச்சை பழச்சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.
நெல்லிக்காய் சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும்.
ஆரஞ்சுப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.
ரோஜாப்பூ குல்கந்தில் தேன்கலந்து சாப்பிட்டால் உடல்சூடு தணியும்.
தேங்காய்பாலில் தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண்,வாய்ப்புண்கள் ஆறும்.
இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால்பித்தம் தீரும்.
கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்த சோகை போகும்.
தேனில் சுண்ணாம்பு கலந்து தடவ கட்டிகள் உடையும் அல்லது வீக்கம்குறையும்.
-நெல்லை மணித்தேவன்
- மகாளயம் என்பது பிதுர்க்கள் பூமியில் நடமாடும் காலமாகும்.
- நாம் அவர்களுக்கு எதுவும் செய்யாவிடில் ஏக்கத்துடன் நம்மை சபித்து விடுவார்கள்.
புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை எனப்படுகின்றது. மகாளய அமாவாசைக்கு முன்பு வரும் 14 நாட்களும் அதாவது ஆவணி மாத பெளர்ணமிக்கு அடுத்த திதியான பிரதமை தொடங்கி அமாவாசைக்கு முந்தய திதியான சதுர்த்தசி திதி வரையிலான காலம் மகாளயம் எனப்படும் .
இக்காலகட்டத்தில் பித்ருக்கள் அனைவரும் எமலோகத்தில் இருந்து கிளம்பி பூமிக்கு வந்து வாசம் செய்வார்கள். மகாளயம் என்பது பிதுர்க்கள் பூமியில் நடமாடும் காலமாகும். இதனால் எமலோகமே காலியாக இருக்கும். இந்த 15 நாட்களும் சிரார்த்தத்திற்குரிய நாட்களாகும்.
சிரார்த்தம் என்பது இறந்தவர்களுக்கு " சிரத்தையுடன் உணவளிப்பது " எனப் பொருள்படும் . பிதுர்க்கள் தமக்கு தமது வாரிசுகள் ஏதாவது தருகிறார்களா என எதிர்பார்ப்பார்கள். நாம் அவர்களுக்கு எதுவும் செய்யாவிடில் ஏக்கத்துடன் நம்மை சபித்து விடுவார்கள். சாபங்களில் பொல்லாதது பித்ரு சாபம் ஆகும் . பிதுர்க்களை ஈடேற்றுவது நமது கடமையாகும் . அவர்களது மனம் குளிர நமது வாழ்வு சிறக்கும் .
இவ்வருடம் மகாளயம் புரட்டாசி மாதம் 13 ( 30/09/23) சனிக்கிழமை அன்று தொடங்குகின்றது. மகாளய அமாவாசையானது புரட்டாசி 27(14/10/23) சனிக்கிழமை அன்று வர விருக்கின்றது.
அமாவாசைக்கு முன்பு வருகின்ற பிரதமை முதலான 14 தேதிகளில் செய்யக்கூடிய சிரார்த்தத்தின் பலன் கீழே தரப்பட்டுள்ளது .
1. பிரதமை - சிரார்த்தம் செய்வதால் தன சம்பத்து உண்டாகும் .
2. துதியை - பொது ஜன லாபம்.
3. திரிதியை - வளர்ச்சி லாபம் .
4.சதுர்த்தி - சத்ருநாசம்.
5. பஞ்சமி - சம்பத்து உண்டாகும்.
6. சஷ்டி - புகழ் உண்டாகும்.
7. சப்தமி - பூமி சேர்க்கை உண்டாகும் .
8. அஷ்டமி - சிறந்த புத்தி உண்டாகும் .
9. நவமி- பெண் சம்பத்து உண்டாகும்
10. தசமி - இஷ்ட சித்தி ( நினைத்தது நடக்கும் )
11. ஏகாதசி - வேத சித்தி உண்டாகும் .
12.துவாதசி - மக்கள் செல்வாக்கு, மேதையாகும் யோகம், வீரம் உண்டாதல். ஆயுள் விருத்தி கிட்டுதல் .
13. திரயோதசி - நலம் பல பயக்கும் .
14. சதுர்த்தசி - எந்திரங்களால் இறந்தவர்களுக்கு இத்திதியில் சிரார்த்தம் செய்வதால் புண்ணியம் பெறுவர்.
பரணி நட்சத்திரத்திலும், அஷ்டமியிலும், கஜச்சாயை என்று சொல்லப்படும் திரயோதசி திதியிலும் சிரார்த்தம் செய்யின் கயாவில் செய்த புண்ணியம் கிட்டும்.
இந்த நாட்களில் ஏதாவது ஒரு நாளில் சிரார்த்தம் செய்ய முடியாவிடில் மகாளய அமாவாசை அன்று கண்டிப்பாக சிரார்த்தம் செய்ய வேண்டும். அப்படியும் செய்யாவிடில் தீபாவளி வரை பித்ருக்கள் தமக்கு ஏதாவது கிடைக்குமா என காத்திருப்பார்கள். தீபாவளி அன்று கங்கா ஸ்நானம் செய்து விட்டு அவர்களுக்கு பிடித்தமான பலகாரங்களை வைத்து , புத்தாடையும் வைத்து அவர்களை நினைத்து வழிபட்டால் பூரணமாக ஏற்றுக் கொள்வார்கள் .
அப்படியும் செய்யாவிடில் பித்ருக்கள் ஏமாற்றத்துடனும் ஏக்கத்துடனும் நம்மை சபித்து விட்டு மீண்டும் எமலோகத்திற்கே சென்று விடுவார்கள். பித்ருக்களை ஏமாற்றுவது மிகப் பெரிய பாவமாகும். முடிந்த வரை அவர்களுக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும். வரக்கூடிய மகாளயத்தில் பெரியோர்களை நினைத்து அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் சிறப்பாகச் செய்து அவர்களின் பரிபூரண ஆசிர் வாதத்தைப் பெறுவோம்.
ஜோதிடகலாமணி கே.ராதாகிருஷ்ணன்
- இருட்டு என்று ஒரு பிரச்சினை இருந்ததால்தான் மின்விளக்கு கண்டுபிடிக்கப்பட்டது.
- பிரச்சினை இல்லாத வாழ்க்கைதான் சபிக்கப்பட்ட வாழ்க்கை.
கடவுளிடம் ஒரு விவசாயி கடுமையாகச் சண்டைக்குப் போனான்.
"உனக்குப் பயிர்களைப் பற்றி என்ன தெரியும்.?
நீ நினைத்தபோது மழையை அனுப்புகிறாய்.
தப்பான சமயத்தில் காற்றை வீசுகிறாய்.
உன்னால் பெரிய தொந்தரவாக இருக்கிறது. பேசாமல், இந்த வேலைகளை விவசாயி ஒருத்தனிடம் ஒப்படைத்துவிடேன்..!!" என்றான்.
கடவுள் உடனே, "அப்படியா..? சரி. இனிமேல் வெளிச்சம், மழை, காற்று எல்லாம் உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கட்டும்" என்று வரம் அருளிவிட்டுப் போய்விட்டார்.
விவசாயிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. அடுத்த விதைப்பிற்கான பருவம் வந்தது..!
"மழையே பெய்" என்றான்.
பெய்தது..!
நிறுத்தச் சொன்னபோது,
மழை நின்றது.
ஈரமான நிலத்தை உழுதான். தேவையான வேகத்தில் காற்றை வீசச் செய்து, விதையை தூவினான். மழை, வெயில், காற்று எல்லாமே அவன் சொன்ன பேச்சைக் கேட்டன..!!
பயிர் பச்சைப்பசேல் என வளர்ந்தது..!!
வயல்வெளியைப் பார்க்கவே மிகவும் ரம்மியமாக இருந்தது.
அறுவடைக் காலமும் வந்தது. விவசாயி ஒரு கதிரை அறுத்தான். அதனை உதிர்த்து, திறந்து பார்த்தான். அதிர்ந்தான்..!!
உள்ளே தானியத்தைக் காணவில்லை, மிகச் சிறிய பதர்தான் இருந்தது. அடுத்தது, அதற்கடுத்தது என்று ஒவ்வொரு தானியக்கதிராக வெட்டி எடுத்து உடைத்துப் பார்த்தால் ஒன்றிலுமே தானியம் இல்லை..!!
"ஏ கடவுளே.!" என்று கோபத்தோடு கூப்பிட்டான்..
"மழை, வெயில், காற்று எல்லாவற்றையுமே மிகச் சரியான விகிதங்களில்தானே பயன்படுத்தினேன்..! ஆனாலும், பயிர்கள் பாழாகிவிட்டதே, ஏன்.?" எனக்கேட்டான்.
கடவுள் புன்னகைத்தார்:
"என் கட்டுப்பாட்டில் இருந்தபோது காற்று வேகமாக வீசும். அப்போது பயிர்களெல்லாம், அம்மாவை இறுக்கிக்கொள்ளும் குழந்தைகளைப்போல பூமிக்குள் தங்கள் வேர்களை மிக ஆழமாக அனுப்பிப் பிடித்துக்கொள்ளும்.
மழை குறைந்தால், தண்ணீரைத் தேடி வேர்களை நாலாபக்கமும் அனுப்பும். போராட்டம் இருந்தால்தான் தாவரங்கள் தங்களைப் பாதுகாத்துக்கொண்டு, வலுவாக வளரும். எல்லாமே வசதியாக அமைத்துக் கொடுத்ததில் உன் பயிர்களுக்கு சோம்பேறித்தனம் வந்துவிட்டது. தளதளவென்று வளர்ந்ததே தவிர, ஆரோக்கியமான தானியங்களைக் கொடுக்க அவற்றிற்கு தெரியவில்லை..!!" என்றார்.
"வேண்டாமய்யா, உன் மழையும் காற்றும்..! நீயே வைத்துக்கொள்" என்று கடவுளிடமே அவற்றைத் திருப்பித் தந்துவிட்டான் விவசாயி...!!
பிரச்சினைகள் உங்களைப் போட்டு அழுத்தும்போது தான், உங்களின் திறமை அதிகரிக்கும்..!!
இருட்டு என்று ஒரு பிரச்சினை இருந்ததால்தான் மின்விளக்கு கண்டுபிடிக்கப்பட்டது..!!
பயணம் என்பது பிரச்சினையானபோதுதான் வாகனம் உருவானது..!!
பிரச்சினைகளே இல்லாமல் இருந்துவிட்டால் நம் மூளையின் திறனை எவ்வாறு அறிவீர்கள்.?
பிரச்சினை இல்லாத வாழ்க்கைதான் சபிக்கப்பட்ட வாழ்க்கை..!!
எதிர்பாராத திருப்பங்கள்தானே நம் வாழ்க்கையைச் சுவையாக அமைத்துத் தரமுடியும்..!!
-தரணிதரன்
- வைட்டமின் சக்தியை உற்பத்தி செய்யக்கூடிய கரோட்டின் என்னும் மூலப்பொருள் ஆரஞ்சு நிற கேரட்டில் உள்ளது.
- சர்க்கரை நோயாளிகளுக்கு மிக நல்ல உணவாகும்.
குதிரையின் சக்தியை 'ஹார்ஸ் பவர்' என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அத்தகைய சக்தி மனிதனுக்கும் கிடைக்க வேண்டுமானால் கொள்ளு துவையலும், கேரட் பச்சடியும் சாப்பிடுவது நல்லது.
வைட்டமின் சக்தியை உற்பத்தி செய்யக்கூடிய கரோட்டின் என்னும் மூலப்பொருள் ஆரஞ்சு நிற கேரட்டில் உள்ளது. எனவே நம் ஒவ்வொருவருக்கும் கேரட் மிக நல்ல உணவாகும். கேரட்டை பச்சடியாக மட்டுமல்லாமல், ஜூஸாகவோ, அல்வா செய்தோ வெறுமனே பச்சையாகவோ சாப்பிட்டு வரலாம்.
கேரட்டை மென்று தின்றால் பற்கள் பலப்படும். வாய், ஈறு சுத்தமாகும். கேரட்டை துருவி உப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் எக்சிமா என்று சொல்லக்கூடிய தோல் நோய் குணமாகும்.
டோகோகிளின் என்ற ஹார்மோன் கேரட்டில் உள்ளது. இது இன்சுலினை போன்றது. எனவே சர்க்கரை நோயாளிகளுக்கு மிக நல்ல உணவாகும்.
-மரிய பெல்சின்
- வாழை இலை போட்டு சாப்பாடு போடும் பழக்கம் பல இடங்களில் மாறிப் போய்விட்டது.
- இன்றைய இளம் தலைமுறை வெற்றிலை போடும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
வெற்றிலை போடும் பழக்கத்தை பாட்டி காலத்து பழக்கம் என்று இன்றைய இளம் தலைமுறை ஒதுக்கி தள்ளிவிட்டது. ஒரு காலத்தில் சாப்பிட்டவுடன் வெற்றிலை போடும் பழக்கம் என்பது நமது தாத்தா, பாட்டிகள் மத்தியில் தவிர்க்க முடியாததாகவே இருந்து வந்தது. வெற்றிலையுடன் சுண்ணாம்பு, பாக்கு சேர்த்து போடுவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். என்ன சாப்பிட்டாலும் செரிமானமாக்கி விடும் என்பதை அறியாமல் அடுத்த தலைமுறை அதனை முற்றிலுமாக கைவிட்டு விட்டது என்றே கூற வேண்டும். அந்த அளவுக்கு வெற்றிலை போடும் பழக்கத்தை நாகரீக போர்வைக்குள் இன்றைய இளம் தலைமுறை மறைத்துக்கொண்டு உள்ளது.
சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்போது தாம்பூலம் வைக்கும் பழக்கம் தற்போதும் நடைமுறையில் உள்ளது. இந்த தாம்பூல பாத்திரத்தில் வெற்றிலை, பாக்கு இருந்தால் மட்டுமே அது முழுமை அடையும். தாம்பூலமாக அமையும். இதனால் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் கட்டுக்கட்டாக வெற்றிலைகளை வாங்கி அதனை தாம்பூல பைகளில் போட்டு விழாவுக்கு வந்தவர்களுக்கு கொடுப்பது வழக்கம்.
வெற்றிலை போடும் பழக்கம் எப்படி மறைந்து போனதோ அதே போன்று தாம்பூலப் பைகளில் வெற்றிலை போட்டுக்கொடுக்கும் பழக்கமும் மாறத் தொடங்கி இருக்கிறது. நாகரீகம் என்ற பெயரில் பெருகி வரும் கலாச்சார மோகத்தால் வாய் மணக்கும் பயிரான வெற்றிலையை கொஞ்சம் கொஞ்சமாக நாம் மறந்து வருகிறோம் என்றால் அது மிகையல்ல. அந்த வகையில் தற்போது தாம்பூல பைகளில் மணக்கும் வெற்றிலைக்கு பதில் பிளாஸ்டிக் வெற்றிலைகள் போடும் பழக்கம் அதிகரித்து வருகிறது.
வாழை இலை போட்டு சாப்பாடு போடும் பழக்கம் பல இடங்களில் மாறிப் போய்விட்டது. இதன் காரணமாக வீடுகளில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளில் வாழை இலைக்கு பதில் பேப்பர் இலைகளை பயன்படுத்தி வருகிறோம். அந்த வகையில் வரும் காலத்தில் வாய் மணக்கும் வெற்றிலைக்கு பதில் பிளாஸ்டிக் வெற்றிலைகள் சுப நிகழ்ச்சிகளை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்கிறார்கள் வெற்றிலை வியாபாரிகள்.
இதற்கு முடிவு கட்டும் வகையில் பிளாஸ்டிக் வெற்றிலைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள். இன்றைய இளம் தலைமுறை வெற்றிலையை மறந்து வரும் நிலையில் எத்தனை புது மாப்பிள்ளைகளுக்கு தெரியும் அந்த வெற்றிலையின் ரகசியம் என்பதும் மிகப்பெரிய கேள்வியாகவே மாறி இருக்கிறது. மாறிவரும் உணவு பழக்க வழக்கங்களால் இன்றைய இளம் தலைமுறை வாலிபர்கள் திருமணத்துக்கு பிறகு இல்லற வாழ்வில் சறுக்கி வருகிறார்கள்.
இளம் வயதிலேயே ஏற்படும் தவறான பழக்க வழக்கங்கள் மற்றும் சவர்மா உள்ளிட்ட சிக்கன் உணவு வகைகள் போன்றவற்றால் ஆண்மை குறைவு ஏற்படுவதாக டாக்டர்களும் எச்சரித்து வருகிறார்கள். ஆனால் இந்த ஆண்மை குறைவுக்கு வெற்றிலை அருமருந்து என்பது இன்றைய இளம் தலைமுறைக்கு தெரியாத ஒரு உண்மையாகும். வெற்றிலையை அடிக்கடி மென்று சாப்பிட்டு வருவதன் மூலம் வயாகராவுக்கு இணையான சக்தியை பெற முடியும் என்று முன்னோர்கள் கூறி இருக்கிறார்கள்.
எனவே இன்றைய இளம் தலைமுறை வெற்றிலை போடும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இது எதை சாப்பிட்டாலும் செரிக்கும் தன்மையை வளர்க்க உதவும். அதே நேரத்தில் சுப நிகழ்ச்சிகளில் பிளாஸ்டிக் வெற்றிலைக்கு விடை கொடுத்து மணக்கும் வெற்றிகளை பயன்படுத்த வேண்டும் என்பதே வெற்றிலை விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. இப்படி இல்லற இன்பத்துக்கு வழி வகுக்கும் வெற்றிலையின் வேறு மகத்துவங்கள் என்ன என்பதையும் பார்க்கலாம்.
வெற்றிலை போட்டால் வாய் மணக்கும். நல்ல மதிய உணவு விருந்துக்குப் பின் வெற்றிலை பரிமாறுவதைப் பாரம்பரியமாகக் கொண்டுள்ளோம். வெற்றிலையில் பல நம்ப முடியாத நல்ல விஷயங்கள் உள்ளது. முன்பெல்லாம் கோவில் பூஜைகள் முதல் மருந்துகள் வரை வெற்றிலையை பல விதமாக உபயோகித்து வந்துள்ளோம். இறைவனுக்கு எத்தனை பதார்த்தங்களை நிவேதனம் செய்தாலும் வெற்றிலை பாக்கு வைக்காவிட்டால் அந்நிவேதனம் முற்றுப்பெறுவதில்லை என்பர்.
இதில் குறைந்த கொழுப்பு மற்றும் மிதமான புரத உள்ளடக்கத்தையும் கொண்டுள்ளது. இது அயோடின், பொட்டாசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2 மற்றும் நிகோடினிக் அமிலம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளன.
வெற்றிலை உடன் பாக்கு குறைவாகவும், சுண்ணாம்பு சிறிது அதிகமாகவும் சேர்த்து சாப்பிட்டால் பசி எடுக்காதவர்களுக்கு பசி எடுக்கும்.
வயிற்றுப்புண், வாய்ப்புண், வாயில் துர்வாடை பிரச்சினை உள்ளவர்கள், மாலையில் வெற்றிலை அதிகமாகவும், பாக்கு சுண்ணாம்பு குறைவாகவும் மென்றால் இந்த பிரச்சினைகள் குணமாகி வரும். ஒரு வெற்றிலையினுள் ஐந்தாறு துளசி இலைகளை வைத்து சிறிது கசக்கிப் பிழிய வருகின்ற சாற்றினை குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி, இருமல் குணமாகும்.
கொழுந்து வெற்றிலை மற்றும் மிளகு சாப்பிடுவதால், இரைப்பை குடல் வலி, அசிடிட்டி, செரிமானம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் குணமாகுவதோடு, மெட்டபாலிசம் அதிகரித்து, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, உடல் முழுவதையும் சுத்தமாக்க உதவுகிறது. நமது உடலில் சுரக்கும் 24 விதமான "அமினோ அமிலங்கள்" வெற்றிலையில் உள்ளன. இந்த "அமினோ அமிலங்களை" வெற்றிலை மூலம் நாம் அடையும்போது ஜீரணம் எளிதாகின்றது. அதனால்தான் நம்முன்னோர்கள் உணவுக்குப் பின் "தாம்பூலம்" தரிக்கும் வழக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
காலையில் வெற்றிலை, பாக்கு போடும்போது பாக்கின் அளவை சற்று அதிகரித்துக் கொள்ளலாம். துவர்ப்புச் சுவை கொண்ட பாக்கு, மலமிளக்கியாகச் செயல்படும். வயிற்றைச் சுத்தப்படுத்தக் கூடியது. மதியம் வெற்றிலை, பாக்கு போடும்போது சுண்ணாம்பின் அளவை சற்று அதிகரித்து எடுத்துக்கொள்ளலாம். இதன் மூலம் செரிமான சக்தி சீராவதுடன், உடலுக்குத் தேவையான இயற்கையான கால்சியம் சத்தும் சேர உதவும்.
இரவில் வெற்றிலை கூடுதலாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். வெற்றிலை என்பது மவுத்வாஷ் போன்றும் செயல்படும். வாய் துர்நாற்றம் நீங்கவும், பற்களில் கிருமிகள் சேராமல் காக்கவும் இது உதவும். கபம் சேர்வதைத் தடுக்கும்.
வெற்றிலைக்கு அரச இலை, மாவிலை போன்று தெய்வீக சக்தி உண்டு. கண்களுக்கு தெரியாத பொருளை மைபோட்டு பார்ப்பது, வசியம் செய்வது போன்றவற்றிற்கும் வெற்றிலையை அதிகம் பயன்படுத்துவார்கள்.
வெற்றிலைக்கு செல்வத்தின் தலைமகளாக உள்ள மகாலட்சுமியை ஈர்க்கும் ஆற்றல் உண்டு. மேலும் தீய கர்ம வினைகளையும் இந்த வெற்றிலை அழிக்கும். செல்வமின்மையும் நமது மோசமான கர்மா தான் இவை எல்லாவற்றையும் நிவர்த்தி செய்ய வெற்றிலையை பயன்படுத்தலாம்.
அந்தக் காலத்தில் மூன்று வேளைகளுமே வெற்றிலை, பாக்கு போடும் வழக்கம் இருந்தது. ஆனால் இன்று வெற்றிலை, பாக்கு போடுவதென்பது இமேஜை பாதிக்கிற விஷயமாக மாறிவிட்டது. படிக்காதவர்கள் செய்யும் செயல் போல பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் காவிரி நதிக்கரையில் அமைந்துள்ள பகுதிகளில் அதிகமாக வெற்றிலை தோட்டம் உள்ளது. குறிப்பாக நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் போன்ற பகுதிகளிலும் தேனி, சேலம் போன்ற பகுதிகளில் ஆங்காங்கு இப்பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன.
- கம்பனும் அவர்க்கு இணங்கி , இராமாவதாரம் என்கிற கம்பராமாயணம் பாடி முடித்தான்.
- சைவ சமயத்திற்கும் இதுபோன்ற ஒரு காவியம் படைக்க வேண்டும் என்றார்.
தொடக்ககாலத்தில் சமணர்களின் கை ஓங்கி இருந்தது. சோழர்களிடம் செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தனர். எனவே திருத்தக்கதேவர் என்கிற பெரும்புலவர் சமண சமயக் கருத்துகளை உள்ளடக்கிய சீவகசிந்தாமணி எனும் காப்பியத்தை இயற்றினார்.
ஆனால் அந்நூல் சமண சமயத்தைப் பெருக்குவதற்கு மாறாக மிதமிஞ்சிய காதற் சுவை கொண்டதாக அமைந்துவிட்டது. அதற்கு "தமிழ் காம சூத்திரம்"என்ற அங்கதம் பெயர் கூட உண்டு. இந்நூலின் காமச் சுவையில் கட்டுண்டு கிடந்தான் சோழன்.
இதனைக் கண்ட வைணவ சமயத்தினர் வைணவத்தின் அவதாரத் தலைவன் இராமனைப் புகழ்ந்து ஒரு காவியம் படைக்கும்படி கம்பனைப் பணித்தனர். இதற்குக் கொடைவள்ளல் சடையப்பரை நாடினர். சடையப்பரும் இராமகாதைபாடும்படி கம்பனை வேண்டிக் கொண்டு அவனுக்கு எல்லா உதவிகளையும் செய்தார்.
கம்பனும் அவர்க்கு இணங்கி , இராமாவதாரம் என்கிற கம்பராமாயணம் பாடி முடித்தான். இப்படித்தான் வைணவத்திற்கு ஒரு கம்பராமாயணம் எழுந்தது.
இதைக்கண்ட சைவப்பெருமக்கள் சோழனிடம் சென்று முறையிட்டனர். "மன்னா சமணத்திற்கு சீவகசிந்தாமணியும் வைணவத்திற்கு ஒரு கம்பராமாயணமும் தோன்றியுள்ளது. ஆனால் சைவ சமயத்திற்கு என்று காவியம் இல்லை, எனவே சைவ சமயப் பெருமை கூறும் காபியம் படைக்க நீங்கள் முயற்சி எடுக்க வேண்டும்" என்றனர்.
சோழனுக்கும் அது சரியெனப்பட்டது. தனது அமைச்சரும் பெரும்புலவருமான சேக்கிழார் பெருமானை அழைத்தார் . "சமணத்திற்கு சீவக சிந்தாமணியும் , வைணவத்திற்குக் கம்பராமாயணமும் பெருங்காப்பியங்களாக உள்ளன, சைவ சமயத்திற்கும் இதுபோன்ற ஒரு காவியம் படைக்க வேண்டும் என்றார்.
அதற்கு "சீவக சிந்தாமணிக்கு ஜீவகன் எனும் ஒரு காவியத்தலைவனும் கம்பனுக்கு இராமன் என்று ஒரு அவதார புருஷனாகிய இராமனும் காவியத்தலைவர்களாக இருந்தானர். எனவே அவர்கள் எளிதாக இவ்விருவரை மட்டும் காவியத்தலைவர்களாக வைத்துப் பாடிவிட்டனார். ஆனால் சைவத்தில் அப்படி இல்லை. பல காவியத்தலைவர்கள் உள்ளனர். அவர்களில் யாரை பற்றிப் பாடுவேன்" எனக் கேட்டார்.
அதற்கு சோழன் . "அத்துனை பேரையும் பற்றி ஒரு பெரியபுராணமே பாடுங்கள்" என்றார்.
எனவேதான் சேக்கிழார் 71 நாயன்மார்கள் (எல்லாரும் நினைப்பது போல் நாயன்மார்கள் அறுபத்துமூவர் (63)மட்டுமல்லர்) புகழ்பாடும் திருத்தொண்டர் புராணம் என்கிற பெரிய புராணம்பாடி முடித்தார்.
ஒரு ஒரு கதைத்தலைவனைப் பற்றிப் பாடிய திருத்தக்கதேவரினும் , கம்பனை விடவும் பல காவியத் தலைவர்களைப் பற்றிப் பாடிய தெய்வத்திரு சேக்கிழாரே சிறந்த காவியப் புலவராவார்.
-துலாக்கோல்
- ஒரு முதியவர் போல் உள்ளே நடந்து போகிறார்.
- பக்தி பரவசத்தில் வந்திருப்பது தன் மகன் என்று அறியாமல் மரியாதையுடன் அழைத்து சென்று உணவு பரிமாறி வணங்குகிறார்.
சாரதா ஸ்டூடியோவில் திருவருட்செல்வர் படப்பிடிப்பு. நடிகர் திலகம் திருநாவுக்கரசர் என்ற அப்பர் வேடத்தில் சிவனடியாராக நடித்துக் கொண்டிருக்கிறார்...
படப்பிடிப்பு முடிந்து வேடத்தை கலைக்காமல் அன்னை இல்லம் நோக்கி காரில் செல்கிறார்.
நடிகர் திலகம், டிரைவரிடம் வீடு வரை ஹாரன் அடிக்காமல் போய் உள்ளே செல்லாமல் வெளியே காரை நிறுத்து என்று சொல்கிறார். டிரைவரும் அவ்வாறே செய்கிறார்...
எஜமானின் கார் வருவதைக் கண்டு அன்னை இல்ல காவலாளி கேட்டைத் திறக்கிறார்...
கார் வீட்டிற்குள் வராமல் வெளியே நிற்பதைக் கண்டு காரின் அருகே ஓடி வருகிறார் காவலாளி.
காரில் இருந்த நடிகர் திலகம் கீழே இறங்கி வாயில் விரலை வைத்து உஷ் என்று காவலாளிக்கு சைகை செய்து விட்டு...
ஒரு முதியவர் போல் உள்ளே நடந்து போகிறார். வாசலை அடைந்ததும் குரலை மாற்றி "அம்மா தாயே " என்று குரல் கொடுக்கிறார்...
குரல் கேட்டு வருகிறார் ராஜாமணி அம்மையார்..
அம்மாவைக் கண்டதும், "தாயே நான் ஒரு சிவபக்தன். கைலாயமலை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன்... வழியில் கிடைத்ததை சாப்பிடுவேன்.... ஒரு வாய் சோறு கிடைக்குமா" என்று கேட்கிறார்.
பக்தி பரவசத்தில் வந்திருப்பது தன் மகன் என்று அறியாமல் மரியாதையுடன் அழைத்து சென்று உணவு பரிமாறி வணங்குகிறார்..
சாமியார், சாப்பிடும் விதத்தை பார்த்து, நம்ம கணேசன் சாப்பிடுவதைப் போல் இருக்கிறதே என்று எண்ணி கூர்ந்து கவனிக்கிறார் ராஜாமணி அம்மாள்.
எத்தனையோ முகபாவங்களை காட்டுபவர் அம்மாவின் முகம் மாறுதலைக் கண்டு சத்தம் போட்டு சிரிக்கிறார் நடிகர் திலகம்...
அந்த சிரிப்பு சத்தம் கேட்டு சாப்பிடுவது தன் மகன் கணேசன் என்றுணர்ந்து பிரமிக்கிறார் ராஜாமணி அம்மாள்.
-அண்ணாதுரை துரைசாமி
- பாதிப்பு நடந்த இடத்தில் அதை சரிசெய்யும் பொருட்டு வந்த என்னை குற்றவாளியாக்குகிறீர்கள்.
- ரத்தத்தில் எப்படி ஹீமோகுளோபின் முக்கியமோ, எப்படி சரியான அளவில் க்ளூகோஸ் முக்கியமோ, அதே போல நானும் முக்கியமானவன்.
அன்புடையீர், நான் கொலஸ்ட்ரால் பேசுகிறேன். என் பெயரைச் சொன்னாலே உங்களுக்கெல்லாம் அச்சம் தொற்றிக் கொள்கிறது தானே?
உண்மையில் நீங்கள் என்னை வெறுத்து உணவு வழியாக உட்கொள்ளத் தயங்கினாலும் உடலுக்குத் தேவையான என்னை உங்கள் கல்லீரலே சமைத்துக் கொடுத்து விடுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? கொலஸ்ட்ரால் கெட்டது என்றும் இதய அடைப்பை ஏற்படுத்தும் என்று தானே அச்சப்படுகிறீர்கள் .
நானின்றி உங்களின் மூளை இயங்காது. உங்களின் மூளையில் முக்கால்வாசி என்னால் ஆனது என்றால் நம்ப முடிகிறதா? ஒரு செல்லிலும் உயிர் இருக்காது. காரணம் செல்களின் சுவர் என்னால் ஆனது.
நானில்லை என்றால் இவ்வுலகில் ஆணில்லை பெண்ணில்லை.. கர்ப்பமில்லை.. குழந்தைப்பேறில்லை..
நான் தேவையில்லை என்று நீங்கள் உண்ணாமல் விட்டாலும், ஏன் கல்லீரலே என்னை உற்பத்தி செய்யாமல் போனாலும் உங்களின் ஒவ்வொரு செல்லும் என்னை தன்னகத்தே உருவாக்கிக் கொள்ளும் ஆற்றலுடன் இருப்பதை அறிவீர்களா?
உங்களுக்குள் பிரிவினை பேதம் கற்பிப்பது போலவே என்னையும் நல்ல கொலஸ்ட்ரால் என்றும் கெட்ட கொலஸ்ட்ரால் என்றும் பிரித்து வைத்திருக்கிறீர்கள் .
கல்லீரலில் இருந்து செல்களுக்குத் தேவையான என்னைக் கொண்டு செல்பவனை - கெட்ட கொலஸ்ட்ரால் ( எல் டி எல்) என்றும் ,
செல்கள் உபயோகித்து மீதமிருக்கும் என்னை கல்லீரலுக்கு கொண்டு வருபவனை - நல்ல கொலஸ்ட்ரால் ( ஹெச் டி எல்) என்றும் கூறுகிறீர்கள்.
அது எப்படி கல்லீரல் செல்களுக்கென சமைத்த என்னை, செல்களை நோக்கி கொண்டு செல்பவன் கெட்டவனாகிறான்?
நீரிழிவு , ரத்தக் கொதிப்பு, புகைப்பழக்கம், குடி நோய், மன அழுத்தம் , போதிய உறக்கமின்மை, இன்சுலின் எதிர்ப்புநிலை, உடல் பருமன் போன்ற பல பிரச்சனைகளை நீங்கள் வரவழைத்துக் கொண்டு அதனால் உங்களின் ரத்த நாளங்களில் தொடர்ந்து காயங்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன.
இந்தக் காயங்களுக்கு கொலஸ்ட்ரால் மருந்து பூச வரும் பெரிய எல்டிஎல் ஆகிய என்னை விட்டத்தில் சிறியவனாக்கி ( சிறிய எல்டிஎல்) விடுகிறீர்கள்.
அளவில் சிறியவனான நான் ரத்த நாளத்தின் உட்புற சுவர் வழியாக உள்ளே செல்கிறேன். என்னை அதற்குக் கீழ் செல்லவிடாமல் தடுக்க அங்கு ரத்தக் கட்டி உருவாகிறது. அதுவே நாளடைவில் ரத்த நாள அடைப்பை ஏற்படுத்துகிறது.
நானோ ரத்த நாளத்தின் காயங்களுக்கு மருந்து பூச வந்தவன். கூடவே செல்களுக்கு கல்லீரல் படைத்த சமையலை விருந்து படைக்க வந்தவன்.
ஆனால் உங்களின் உடலில் நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளும் தொடர் உள்காயங்களால் என்னை வழிகெடுத்து பெரிய எல்டிஎல் ஆகிய என்னை சிறிய எல்டிஎல் ஆக்குவது நீங்கள் தான். ஆனால் பழி மட்டும் என் மீது போடப்பட்டு விட்டது. காலங்காலமாக இந்த பழியை நான் சுமந்து வருகிறேன்.
உண்மையில் நான் செல்களை சென்று சேர்ந்தால் தான், செல்கள் என்னை அவற்றின் சுவர்கள் உருவாக்கத்தில் பயன்படுத்திக் கொண்டு அவை புணர்நிர்மானம் செய்து கொள்ள முடியும்.
இதய அடைப்புகளில் என்னைப் பார்ப்பதால் நான் தான் அடைப்புக்கு காரணம் என்று கருதுகிறீர்கள்.
தீ பற்றிய வீதியில் தீயணைப்பு வண்டிகள் நிற்பதால் தீயணைப்பு வண்டிகளால் தான் தீ பற்றியது என்று எப்படி கூறமாட்டீர்களோ அதே நியாயம் எனக்கும் உண்டு.
பாதிப்பு நடந்த இடத்தில் அதை சரிசெய்யும் பொருட்டு வந்த என்னை குற்றவாளியாக்குகிறீர்கள்.
பாதிப்பை தொடர்ந்து செய்யும் அதிக க்ளூகோஸ் எனும் திருடனை நேக்காக தப்பிக்க வைத்து விடுகிறீர்கள்.
உங்களில் யாருக்கேனும் க்ளூகோஸ் அதிகமாகி சர்க்கரை நோய் வந்தாலும் முதலில் நான் இருக்கும் மாமிசத்தை நிறுத்துமாறு தான் பணிக்கப்படுகிறீர்கள்.
சர்க்கரை நோயாளி டீ காபியில் சீனியை நாட்டு சர்க்கரையை நிறுத்துவது நியாயம் அதை விடுத்து என்னை உண்பதை முற்றிலுமாக நிறுத்தி கிடைப்பது என்ன?
ரத்தத்தில் எப்படி ஹீமோகுளோபின் முக்கியமோ, எப்படி சரியான அளவில் க்ளூகோஸ் முக்கியமோ, அதே போல நானும் முக்கியமானவன்.
என்னை பகைவனாக நீங்கள் நினைத்தாலும் நான் எந்நாளும் உங்களுக்கு உற்ற தோழன் தான் என்று கூறி இந்த மடலை நிறைவு செய்கிறேன்.
இப்படிக்கு,
பாசமுள்ள உற்ற தோழன் கொலஸ்ட்ரால்.
-டாக்டர். ஃபரூக் அப்துல்லா
- வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை மிகவும் பாதிப்பு அடையச் செய்யக்கூடும்.
- சாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளக்கூடாது.
சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. அது கெடுதியானது. காரணம் உடனே அது காற்றினை வயிற்றுக்குள் அனுப்பி வயிறு உப்புசத்திற்கு ஆளாக்கும் நிலையை உருவாக்குகிறது. எனவே சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன்பே பழம் சாப்பிடுங்கள் அல்லது சாப்பிட்டு ஒரு மணி அல்லது 2 மணி நேரத்திற்குப் பின்பு பழங்களைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர். ஏனெனில் தேநீர் இழையில் ஆசிட் உள்ளது. இது உணவில் உள்ள புரதச் சத்தினை கடினமாக்கி செரிமானத்தைக் கஷ்டமாக்கும் வாய்ப்பு ஏராளம் உண்டு.
சாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளக்கூடாது. ஏனெனில் குளிக்கும் போது உடல் மற்றும் கை, கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். வயிற்றுக்குச் செரிமானத்திற்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்பு உள்ளது. வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை மிகவும் பாதிப்பு அடையச் செய்யக்கூடும்.
சாப்பிட்ட பின்பு நடப்பது நல்லது என்று சிலர் சொல்வது உண்டு. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு உடனே சர்க்கரை உருவாகாமல் தடுக்க அந்த உடனடி நடை உதவும் என்று கூடச் சிலர் சொல்ல கேட்டிருப்பீர்கள்.
சாப்பிட்ட பின் நடந்தால் செரிமான உறுப்புகளுக்கு உணவு போய்ச் சேர்ந்து, உணவை நன்கு செரிக்கச் செய்வதைத் தடுத்து, இரத்த ஓட்டம் உணவின் சத்துகளை ஈர்த்து இரத்தத்தில் சேர்க்காமல் செய்யவே அந்நடைப் பழக்கம் பயன்படும். எனவே இந்தத் தவறான பழக்கம். யாருக்காவது இருந்தால் அதனை உடனே கைவிடுவது நல்லது.
மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே படுத்து உறங்கும் பழக்கம் கூடாது. உணவு உண்ட பின் அரை மணி நேரம் கழித்தே உறங்கச் செல்ல வேண்டும்.
சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால், அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப் பெரிய கெடுதலை விளைவிக்கும்.
-ரேகா ஸ்ரீ
- ஹோவி பிரபு தீவில் மக்கள் தொகை 400 தான்.
- ஹோவி தீவு ஆஸ்திரேலியாவுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையே உள்ளது.
ரொம்ப கஸ்டமான ஒரு சுற்றுலா போகணுமா? ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு ஒரு விமானத்தை பிடிங்க. அங்கிருந்து நியூஸிலாந்து போகும் வழியில் 700 கிமி தொலைவில் லார்ட் ஹோவி தீவு உள்ளது.
"இதெல்லாம் ஒரு அதிசயமா? சிட்னிக்கு போறது கிட்னியை விற்கும் அளவு கஸ்டமா?"னு டென்சன் ஆகக்கூடாது.
ஹோவி பிரபு தீவில் மக்கள் தொகை 400 தான். தீவிலும் அதே எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் தான் இருக்கமுடியும். அதனால் அங்கிருந்து ஒரு சுற்றுலா பயணி கிளம்பினால் தான் உங்களுக்கு அங்கே போக டிக்கட் கிடைக்கும்.
எதுக்கு இப்படி எண்ணிக்கையை மட்டுப்படுத்துகிறார்கள்?
ஹோவி தீவு ஆஸ்திரேலியாவுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையே உள்ளது. மனித நடமாட்டமே இல்லை என்பதால் இறகுகள் இல்லாத நிறைய பறவை இனங்கள் ஜாலியாக வசித்து வந்தன. அவற்றை உண்ண பாம்புகள் இல்லை, முட்டைகளை திருட எலிகள் இல்லை, பூனைகள் இல்லை, கழுகுகள் இல்லை. சொர்க்கம் மாதிரியான வாழ்க்கை.
தீவின் அகலம் 2 கிமீ, நீளம் 14 கிமீ. அழகான பீச்சுகள், உலகில் எங்கேயும் காணமுடியாத வித்தியாசமான மரம், செடிவகைகள்...அங்கே கிடைக்கும் கென்டியா எனும் ஒரு வகை பனை ஐரோப்பாவெங்கும் வெகு பிரபலம். உலகிலேயே இங்கே மட்டும் தான் அவை கிடைக்கும். தீவின் மிக முக்கிய ஏற்றுமதிப்பொருள்.
ஆனால் மனிதன் காலடி எடுத்து வைத்தான். தொல்லைகள் துவங்கின. பல பறவை இனங்கள் அழிந்தன. சுற்றுலா பயணிகள் குவிந்தார்கள். தீவெங்கும் எலிகள் பெருகின.
2015ம் ஆண்டு தீவுவாசிகள் விழித்துக்கொண்டார்கள். இயற்கையை காப்பாற்றவேண்டுமெனில் முதலில் சுற்றுப்பயணத்தை கட்டுபடுத்தனும் என முடிவு செய்து ஒரு சமயத்துக்கு 400 பயணிகள் தான் என மட்டுப்படுத்தினார்கள். டீசல் ஜெனெரேட்டர் மூலம் தீவுக்கு கிடைத்த மின்சாரம் சோலார் பேனலுக்கு மாறியது. தீவின் இயற்கை கழிவுகள் முழுக்க காம்போஸ்ட் செய்யபட்டு உரமாக்கபட்டன.
சுற்றுலா பயணிகளுக்கு கார்கள் கிடையாது. சைக்கிள்தான். தீவின் சுற்றளவு மிக குறைவு என்பதால் அவர்களும் சரி என சொல்லிவிட்டார்கள். ஓட்டல் அறைவாடகைகள் மிக அதிகரிக்கபட்டன. உணவகங்களில் விலையும் கூட்டபட்டது. சீசனுக்கு போனால் ஒரு நாள் வாடகை ரூ 32,000 வரும். அதனால் வசதியான நபர்கள் தான் சுற்றுலா போகமுடியும்.
இவர்களின் முயற்சியின் விளைவால் யுனெஸ்கோ அமைப்பு அந்த தீவுக்கு "உலக பாரம்பரிய தீவு" எனும் அங்கீகாரத்தை வழ்ங்கியுள்ளது
- நியாண்டர் செல்வன்