search icon
என் மலர்tooltip icon

    மற்றவை

    • கனவு காணும்பொழுது உங்களுக்கு எந்தச் சந்தேகமும் வராது.
    • முழு புண்ணிய ஆத்மாக்களுக்கும் தகுந்த பெற்றோர்கள் கிடைப்பது கடினம்.

    ஓஷோ, இரண்டு பிறவிகளுக்கிடையே உள்ள காலமற்ற இடைவெளியில் இந்த ஆன்மாவுக்கு என்ன நேரிடுகிறது ?

    ஒரு பிறவிக்கும் , மறுபிறவிக்கும் இடையில் ஏற்படும் அனுபவங்கள் ஒரு கனவுபோலத்தான்.

    அப்பொழுது அது உண்மையைப்போலத் தோன்றும் .

    ஆனால் புலன்களுக்கு வேலை இல்லை .

    ஏனெனில் உடல் இல்லை .

    அப்படிக் கனவு காணும்பொழுது உங்களுக்கு எந்தச் சந்தேகமும் வராது .

    ஆகவே , அந்த இடைவெளியில் நடப்பவை அனைத்தும் உண்மை போலவே தோன்றும் . அப்பொழுது தோன்றும் தோற்றங்கள் மிகவும் அசாதாரணமானவையாகக்கூட இருக்கக்கூடும் .

    ஆத்மா சொர்கத்தை அடைவது அல்லது நரகத்தை அனுபவிப்பது என்பது இந்தக் கனவு நிலையைக் குறிப்பிடுவதுதான் .

    உண்மையில் சொர்க்கமும் இல்லை , நரகமும் இல்லை ! 

    ஆனால் இது ஒருவித கனவு நிலை , அவ்வளவுதான்.

    முழுமையான பாப ஆத்மாக்களுக்குத் தகுந்த தாய், தகப்பன் கிடைப்பது மிகவும் கஷ்டம் .

    முழு புண்ணிய ஆத்மாக்களுக்கும் தகுந்த பெற்றோர்கள் கிடைப்பது கடினம் !

    இந்த இரண்டுக்கும் இடையில் உள்ள ஆன்மாக்கள் நல்லதும் , கெட்டதும் கலந்திருக்கின்றன .

    ஆனால் அடுத்த பிறவியில் இதில் எதுவும் ஞாபகம் இருக்காது .

    இந்த இடைப்பட்ட காலத்தில் அதாவது ஆன்மா மறுபிறவி எடுப்பதற்கு முன்பு அந்த ஆன்மா நிலையாகவும் இல்லை, அது அங்கும், இங்கும் அலைந்துகொண்டும் இல்லை. அது ஒரு இரண்டுங்கெட்டான் நிலையில் இருக்கிறது.

    இதை தர்க்கரீதியாகப் புரிந்துகொள்ள முடியாது . இந்த ஆன்மாவில் முற்பிறவியில் ஏற்பட்ட அனுபவங்கள் கருத்துக்கள் , தீய மற்றும் நல்ல செயல்களின் பலன்கள் அனைத்தும் கரு வடிவில் அப்படியே பதிந்திருக்கின்றன.

    அது மீண்டும் உடலை எடுக்கும்பொழுது அவை அனைத்தும் மெல்ல செயல்புரிய ஆரம்பித்துவிடுகின்றன.

    • லேகியத்திற்கு வேண்டிய அளவு வெல்லத்தை எடுத்து பாகு காய்ச்சவும்.
    • இரவு உணவிற்குப் பிறகு சாப்பிடலாம்.

    தீபாவளி விருந்தாலும், பலகாரங்களாலும் ஏற்படும் வயிற்று உப்புசம், அஜீரணக் கோளாறு, திடீர் ஏப்பங்கள், வாந்தி, வயிற்று வலி, அசதி போன்றவற்றுக்கு லேகியம் நிவாரணம் கொடுக்கும். கூடவே பனிக்காலத்தில் வரக்கூடிய சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றிற்கும் இது அருமருந்தாகும்.

    தேவையான பொருள்கள்:

    சுக்கு - 50 கிராம்

    மிளகு - 50 கிராம்

    திப்பிலி - 50 கிராம்

    சதகுப்பை - 30கிராம்

    சிறுநாகப்பூ - 50 கிராம்

    வாய்விடங்கம் - 50 கிராம்

    கருஞ்சீரகம் - 50 கிராம்

    சீரகம் - 50 கிராம்

    இலவங்கப்பட்டை - 50 கிராம்

    கோரைக் கிழங்கு - 50 கிராம்

    கொத்தமல்லி - 30 கிராம்

    சித்தரத்தை - 30 கிராம்

    ஓமம் - 30 கிராம்

    அதிமதுரம் - 20 கிராம்

    கிராம்பு - 20 கிராம்

    வெல்லம்- 300 கிராம்

    தேன் - 100 கிராம்

    நெய் - 100 மில்லி

    செய்முறை

    * அடுப்பில் பாத்திரம் வைத்து, மேலே குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு பொருளையும் தனித்தனியாக சிறு தீயில் வைத்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

    * வறுத்து வைத்த ஒவ்வொரு பொருளையும் தனித்தனியாக நன்றாக அரைத்து, சலித்துக்கொள்ளவும்.

    * லேகியத்திற்கு வேண்டிய அளவு வெல்லத்தை எடுத்து பாகு காய்ச்சவும். பாகு கம்பி பதம் வந்தவுடன் அடுப்பில் இருந்து எடுக்காமல் தீயை கொஞ்சம் குறைத்து, அரைத்து வைத்திருக்கும் பொடிகளை ஒன்றன் பின் ஒன்றாக சிறிது சிறிதாகச் சேர்த்து கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.

    * பின்னர் வாணலியை இறக்கி வைத்து நெய் விட்டு நன்றாகக் கிளறி சிறிது ஆறிய பின் சிறிது சிறிதாக தேன் விட்டுக் கிளறி வேறு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    * ஆறிய பின்னர் வயதுக்கு ஏற்றவாறு 3 - 12 வயது வரை 5 கிராம் காலை மற்றும் இரவு உணவிற்குப் பிறகு எடுத்து சப்பிச் சாப்பிடலாம். 13 வயதுக்கு மேற்பட்டோர் 10 கிராம் அளவு எடுத்து காலை மற்றும் இரவு உணவிற்குப் பிறகுச் சப்பிச் சாப்பிடலாம்.

    -சித்த மருத்துவர் காமராஜ்.

    • எடிசன் எனும் விஞ்ஞானி இங்குதான் உருவானான்.
    • பல விஷயங்களை தொடங்கி வைத்தவர் எடிசன் என்பவரே.

    இந்த உலகில் எத்தனையோ விஞ்ஞானிகள் வந்தாலும் எடிசனுக்கு தனி இடம் உண்டு.

    அவர் அளவு சோதனையினை சந்தித்தவனுமில்லை, அவர் அளவு சாதித்தவருமில்லை. அப்படிபட்ட வாழ்வு அவருடையது

    சிறுவயதில் நோயாளி, பள்ளி செல்லவே 8 வயது ஆனது. அங்கு சென்றாலும் காது கேட்காது, கூடவே படிப்பில் மந்தம். ஆனால் ஏகபட்ட கேள்விகள் எழுப்பினார், பூராவும் படிப்பிற்கு சம்பந்தமில்லா விஷயம்.

    ஆசிரியர் இவன் மூளை கோளாறு பிடித்தவன் என கழுத்தை பிடித்து தள்ள, எடிசனின் அம்மா ஆசிரியர் ஆனார், அவருக்கு வாசிக்க கற்றுகொடுத்தார், அப்பா மரவியாபாரி கணக்கு பார்க்க கற்றுகொடுத்தார் இவ்வளவுதான் படிப்பு.

    அவர் வாசித்ததெல்லாம் நியூட்டனும், பாரடேயும். ஆயினும் பிழைக்க வேண்டுமே ரெயில் நிலையத்தில் தந்தி அடிக்கும் வேலைக்கு சென்றார், அங்கும் ஆய்வு செய்கின்றேன் என எதனையோ அமிலத்தை கொட்டிவிட அந்த வேலையும் போனது.

    பின் அதேரெயில் நிலையத்தில் நொறுக்கு தீனி விற்றார். அதன் பின் காய்கறி விற்றார், சலூன் கூட நடத்தினார் என்கின்றார்கள்.

    அந்த எடிசன் பிற்காலத்தில் உலகை மாற்றுவான் என கடவுளே நம்பி இருக்கமாட்டார்.

    பல வேலைகளை செய்த எடிசன் பின்பு பங்கு சந்தை அலுவலகத்தில் வந்தபொழுதுதான் அவர் வாழ்க்கை மாறியது, பங்கு தகவல்களை அனுப்பும் தந்தி முறையில் வேலைக்கு சேர்ந்தார்.

    ஏன் என்றால் காது கேட்காதவன் நிலைக்கு அதுதான் சரி. தந்தி புள்ளிகளாக வரும், கோடுகளாக வரும். அதை வைத்து சிலவற்றை எழுத வேண்டும், இதற்கு காது கேட்கும் அவசியமில்லை.

    இதனால் அப்பணி எளிதாக கிடைத்தது, அதில் இருந்த எடிசன் அதன் சிக்கல்களை கண்டு எளிதாக்க எண்ணிணான்.

    எடிசன் எனும் விஞ்ஞானி இங்குதான் உருவானான், கோடுகளாக வரும் தந்தியினை அதுவரை மனிதன் மொழிபெயர்க்க வேண்டும், எடிசன் அந்த கோடுகளை எந்திரமே எழுதினால் என்ன என யோசித்தார், அதை செயல்படுத்த முனைந்தார். அதுவரை ஒற்றை வழியாக இருந்த தந்திமுறையினை இருவழியாக்கினார்.

    ஆய்வு என்பது அபின் போன்றது, உள்ளே இழுத்துவிட்டால் விடாது. எடிசனும் தொடர்ந்து கருவிகளை உருவாக்கி கொண்டே இருந்தார்.

    அதில் மாபெரும் வெற்றிதான் மின்விளக்கு, மானிட குலத்திற்கு அவர் காட்டிய மாபெரும் ஒளி அது.

    நியூயார்க் நகரம் இரவில் விளக்கு பெற்றதும் அது உலக நாடுகளுக்கு அதிசயமாக விளங்கி வழிகாட்டியதும் எடிசன் என்பவராலே.

    இருட்டில் இருந்த உலகம் எடிசனால் இன்று இரவு நாம் காணும் வர்ண ஜாலத்திற்கு மாறியது.

    எப்படியப்பா இப்படி எல்லாம் மனிதனால் முடிகின்றது என உலகம் வியக்கும் பொழுது மின்மோட்டாரை உருவாக்கினார் எடிசன்.

    ஆம் இன்று பம்புசெட், கார் முதல் வீட்டு பேன், தொழிற்சாலை வரை இயங்கும் மோட்டார், அது அன்றி அமையாது தொழில் உலகு.

    அதுதான் இன்றைய கிரைண்டர், மிக்ஸிக்கும் அடிப்படை. அவை இன்றி இன்றைய சமையல் கூடங்களும் இல்லை, அதற்கு அடிப்படை கொடுத்தது எடிசன்.

    அதன் பின்னும் மனிதர் சும்மா இருந்தாரா? இன்றைய சிடி, டிவிடி வகையாறாகளுக்கு முன்னோடியான கிராம்போனை கண்டுபிடித்தார்.

    அதாவது ஒலியினை பதிவு செய்யும் கருவி அது. பாடல்கள் இப்படித்தான் முதலில் பதிவு செய்யபட்டது. மனிதன் பாடியதை எந்திரம் திருப்பி பாடும் அதிசயத்தை செய்து காட்டினார் எடிசன்.

    ஒலியினை பதிந்து காட்டியாயிற்று.. இதை போல ஒளிபடங்களை உருவாக்கினால் என்ன எனும் அவரின் சிந்தனையில் உதித்ததுதான் திரைப்பட படபிடிப்பு கருவி.

    ஆம் அவரின் அந்த கண்டுபிடிப்புதான் சினிமா எனும் உலகினை தொடங்கி வைத்தது, உலகில் பெரும் மாற்றத்தை அது கொடுத்தது.

    இன்று காணும் ஒளிவிளக்கு, தகவல் தொடர்பு, பிரிண்டர், சிடி, டிவிடி, சினிமா கேமரா என பல விஷயங்களை தொடங்கி வைத்தவர் எடிசன் என்பவரே.

    நாம் அனுபவிக்கும் இந்த விஞ்ஞான வசதிகளுக்கெல்லாம் காரணம் அவரே, மறுக்க மறைக்க முடியாது

    கிட்டதட்ட 1400 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை வாங்கி இருந்தார், வாங்காமல் விட்டவை இன்னும் ஏராளம்.

    எப்படி அம்மனிதனால் இப்படி சாதிக்க முடிந்ததென்றால், அவனின் சுயநலத்திலே பொதுநலமும் கலந்திருந்தது.

    மக்களின் வசதிக்காக, அவர்களின் வாழ்க்கை முறையினை எளிதாக்க என்ன செய்யலாம் என சிந்தித்தான், இறைவன் அவனுக்கு அந்த அளவு ஞானத்தையும் கொடுத்தான்!

    -பிரம்ம ரிஷியார்

    • உற்பத்திப் பொருள்களைக் கொண்டு செல்ல ரெயிலும் மோட்டார் வாகனங்களும் உருவாயின.
    • மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் எல்லாமே மாறிப்போனது.

    18 ஆம் நூற்றாண்டின் மத்தியில் (கி. பி. 1750) இங்கிலாந்தில் தொடங்கிய பஞ்சாலைகளே தொழிற்புரட்சிக்கு வித்திட்டன.

    இன்று நாம் காணும் ஒட்டுமொத்த அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும் பொருளாதார அரசியல் நிர்வாக மேம்பாடுகளுக்கும் தொடக்கப்புள்ளி பஞ்சாலைகளே காரணமாக அமைந்தது என்பதை நினைத்துப் பார்க்கப் பார்க்க வியப்பு ஏற்படுகிறது.

    பஞ்சாலைகளுக்குத் தேவையான கட்டுமானப் பொருள்கள், இயந்திரங்கள் ஆகியவற்றுக்கு இரும்பு தேவையாக இருந்ததால் சுரங்கத் தொழில் விரிவடைந்தது.

    நீராவி எஞ்சின் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு நிலக்கரி தேவைப்பட்டது.

    உற்பத்திப் பொருள்களைக் கொண்டு செல்ல ரெயிலும் மோட்டார் வாகனங்களும் உருவாயின.

    அவற்றுக்குத் தேவையான சக்கரங்கள், பெட்ரோல்-டீசல், பணிமனைகள், சாலைகள் என்று ஒவ்வொன்றாக அல்லது எல்லாமும் காலப்போக்கில் கண்டுபிடிக்கப்பட்டன.

    மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் எல்லாமே மாறிப்போனது!

    இவை அத்தனைக்கும் ஆதாரமாக இருந்தது பஞ்சாலைத் தொழில்தான்!

    இங்கிலாந்தின் மான்செஸ்டர் என்ற இடம் பஞ்சாலைக்குப் பெயர் பெற்ற இடமாக இருந்தது.

    கோயம்புத்தூர் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்பட்டது வெறும் வரலாறாக சுருங்கி விட்டது!

    -மா. பாரதிமுத்துநாயகம்.

    • முற்காலத்தில் எல்லாம், நீர்நிலைகளைப் பராமரிப்பது என்பது மிக முக்கியமான ஒரு வேலையாகும்.
    • பயன் தராது எந்த வேலை செய்தாலும் அது வெட்டிவேலை என்றாகிவிட்டது.

    நாம பயன்படுத்துற சில சொற்களை எதன் அடிப்படையில் அப்படிப் பயன்படுத்துகிறோம் என்று எண்ணிப்பார்த்திருப்போமா? அப்படி சில சொற்களை இங்கே பார்ப்போம்..

    வெட்டிவேலை:

    பயனில்லாமல், எந்தவொரு வேலையையும் செய்யாமல் இருந்தால் வெட்டியாக இருப்பதாகவும், பயனில்லாத ஒரு வேலையைச் செய்வதை வெட்டிவேலை என்றும் குறிப்பிடுகிறோம்.

    முற்காலத்தில் எல்லாம், நீர்நிலைகளைப் பராமரிப்பது என்பது மிக முக்கியமான ஒரு வேலையாகும். ஏனெனில், நம் நாட்டில் பெரும்பாலான இடங்கள் வானம் பார்த்த பூமிதான். அது காரணமாக அவரவர் ஊர்களில் இருக்கும் கண்மாய்கள், குளங்கள், கால்வாய்களை வெட்டி, தூர்வாரி, ஆழப்படுத்தி பராமரித்துக் கொள்வார்கள். இதற்கென அந்தந்த ஊர் மக்களே அந்த வேலைகளைச் செய்வார்கள். இதற்கென ஊதியம் எதுவும் பெறமாட்டார்கள். அதாவது வெட்டி வேலை செய்வதற்கு எந்தப் பயனும் எதிர்பார்க்க மாட்டார்கள். அதுவே வெட்டி வேலை எனப்படும். நாளடைவில், பயன் தராது எந்த வேலை செய்தாலும் அது வெட்டிவேலை என்றாகிவிட்டது.

    மணி:

    நேரம் எவ்வளவு என்று கேட்பதற்கு நாம் மணி என்ன, மணி எத்தனை, மணி எவ்வளவு என்றுதான் கேட்கிறோம்.

    கடிகாரம் கண்டு பிடிப்பதற்கு முன்னர், நாம் நேரத்தினைக் கணக்கிட மணிக்கூண்டு கட்டி வைத்து அதில் ஒரு மணியினை ஒலிக்கச் செய்தே நேரத்தினைத் தெரிந்து கொண்டு வந்ததால், எத்தனை மணி ஒலித்தது என்பதைக் கொண்டு நேரத்தை அறிந்து வந்தோம். அது சமயம் எத்தனை மணி அடித்தது என்று கேட்பதைப் போல் இன்றும் நேரத்தினை மணியோசையின் எண்ணிக்கையின்படியே கேட்டுக்கொண்டிருக்கிறோம்.

    -பி.கே. பாபு

    • மகிழ்ந்து போன கவிஞர் அந்தக் காரை தன்னுடைய கார் போலவே எண்ண துவங்கினார்.
    • மெல்லிசை மன்னர்களின் இசையில் அமைந்த சாகாவரம் பெற்ற பாடல்களில் இப்படி தான் பிறந்தது.

    கவியரசர் கண்ணதாசனிடம் ஏற்கனவே ஒரு அம்பாஸிடர் கார் இருந்தும், தன் நண்பர் வைத்திருந்த வெளிநாட்டு கார் மீது விருப்பம். அந்த நண்பரும் அதை விற்கப் போகிறார் என்பதை தெரிந்துகொண்ட கவிஞர், அதை தரவேண்டுமென்று விலையும் பேசி முடித்து விட்டார்.

    முழு தொகையும் தர கண்ணதாசனிடம் பணமில்லை. அப்போது மூன்றில் ஒரு பங்கு பணம் தருவதாகவும், பின்னர் மீதியை விரைவில் தருவதாகவும் சொல்ல, நண்பரும் சரி என்று சொல்லிவிட்டார். மகிழ்ந்து போன கவிஞர் அந்தக் காரை தன்னுடைய கார் போலவே எண்ண துவங்கினார்.

    அடுத்த நாள் காலை நண்பரிடம் இருந்து வெளிநாட்டுக் காரை எடுத்து கொள்ள எண்ணினார். இதற்கிடையே அந்த நண்பரிடம் சிலர் , 'கவிஞர் கடன் விசயத்தில் ரொம்ப மோசமென்றும், எனவே மீதி பணம் வருவது கஷ்டம்'என்றும் சொல்ல நண்பர் பீதியானார்.

    அடுத்தநாள் காலை கவிஞர் வண்டியை எடுத்து வர ஓட்டுனருடன் நண்பர் வீட்டுக்குபோக, அந்த நண்பரோ அந்த கார் தனக்கு மிகவும் ராசியானது என்றும், அதை விற்க தன் மனைவி மற்றும் குடும்பத்தாருக்கும் விருப்பமில்லை' என்றும் சொல்ல, கவிஞர் ஏமாற்றத்துடன் திரும்பினார்.

    தான் மிகவும் விரும்பி தன்னுடயதாகவே எண்ணி இருந்த கார் தனக்கு கிடைக்கவில்லையே என்ற மனவருத்தம் இருந்தபோது அன்று மதியம் இயக்குனர் ராமண்ணா இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடித்து வரவிருந்த 'பணக்கார குடும்பம்' படத்துக்கு சோகப் பாடலின் பல்லவியை இப்படி எழுதினார். " பல்லாக்கு வாங்கப்போனேன் ஊர்வலம் போக – நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக" என்று. மெல்லிசை மன்னர்களின் இசையில் அமைந்த சாகாவரம் பெற்ற பாடல்களில் இப்படி தான் பிறந்தது.

    -சந்திரன் வீராசாமி

    • அச்சம் கொள்வதும் துரோகம்தான்..
    • அது உங்கள் உயிருக்கு நீங்கள் செய்யும் துரோகம்..!

    கோபம் கொள்வதும்

    துரோகம்தான்..

    கவலைக் கொள்வதும்

    துரோகம்தான்..

    பெருமைக் கொள்வதும்

    துரோகம்தான்..

    அச்சம் கொள்வதும்

    துரோகம்தான்..

    அவ்வப்போது

    துக்கம் கொள்வதும்கூட

    துரோகம்தான்..

    யாருக்கான

    துரோகமென்றால்?..

    அது உங்கள் உயிருக்கு

    நீங்கள் செய்யும் துரோகம்..!

    உங்கள் உயிர்மீது

    அக்கறை இருக்குமானால்..

    உங்கள் உணர்ச்சிகளின்மீது

    கவனம் கொண்டிருங்கள்..!

    உணர்ச்சிகள் உங்களுக்கு

    கட்டுப்படுகிறவரைதான்..

    நீங்கள் ஆரோக்கியமாக

    இருப்பதாக அர்த்தம்..!

    அவை உங்களைக்

    கட்டுப்படுத்திக் கொண்டிருந்தால்..

    நீங்கள் குணமாக்கப்பட

    வேண்டியவர்..!

    உள்ளார்ந்த நோய்த்தன்மை

    ஆரம்பத்தில் உணர்ச்சிகளின்

    வழியாகத்தான் வெளிக்காட்டும்..

    அதன் அடுத்த நிலைதான்..

    உடல் உபாதைகளாக உணர்வது..!

    நோய்

    உணர்ச்சிகள் வடிவத்தில்

    உள்ளபோதே..

    உங்களை நீங்கள்

    தற்காத்துக்கொள்ள முடியும்..!

    -அன்பு வேல்முருகன்

    • தேன் என்பதற்கு அமிர்தம் என்ற ஒரு பெயரும் உண்டு.
    • தேன் சாப்பிட்ட 5 மணி நேரத்தில் ஜீரணமாகிவிடும்.

    தேனைவிட இனிய பொருள் ஒன்று இல்லை! தேன் என்பதற்கு அமிர்தம் என்ற ஒரு பெயரும் உண்டு.

    மரம், செடி, கொடிகளில் உள்ள அமிர்தம் எனப்படும் மகரந்தத்தை பருகி தன் உடம்பிலுள்ள பையில் சேகரித்து வைத்துக்கொள்ளும். அது மாறுதலடைந்த பிறகு தேனீக்கள் உமிழ்ந்து அறைகளில் சேர்த்து வைக்கின்றன. இதுதான் தேன் என்னும் அமிர்தமாகிறது.

    தேனில் வைட்டமின் சத்துக்களும், உலோக சத்துக்களும் நிறைந்துள்ளன. தேன் சாப்பிட்ட 5 மணி நேரத்தில் ஜீரணமாகிவிடும். ஆகவேதான் அது உடம்புக்கு உடனடி பலனை, பலத்தை கொடுக்கிறது.

    குழந்தைகளுக்கு இருமல் வந்தால் 50 மில்லி தேனுடன் அதே அளவு எலுமிச்சை பழரசம் சேர்த்து கலந்து குடிக்க கொடுத்து வந்தால் இருமல் குணமாகும்.

    பார்லி அரிசி கஞ்சியின் தெளிந்த நீருடன் தேன் சேர்த்து குடிக்க கொடுத்து வந்தால் செரியாமை, இருமல், தொண்டைப்புண், நுரையீரல் தொடர்பான நோய்கள் குணமாகும்.

    வயதானவர்களுக்கு வரக்கூடிய கோழையை அகற்றுவதற்கும், உடம்பில் வெப்பத்தை உண்டுபண்ணுவதற்கும், தெம்பு கொடுப்பதற்கும் தேன் நல்லதொரு நிவாரணியாகும்.

    பெண்களின் மார்பக காம்புகளில் வரக்கூடிய ரத்தக்கட்டு, புண் மற்றும் பால் கட்டி போன்றவற்றுக்கு தேனை அதன்மீது பூசி வருவதால் குணமாகும்.

    முகத்தில் கருமை நிறம் மற்றும் கோடு, புள்ளி ஆகியவற்றின்மீது தேனை தடவி வெந்நீரால் கழுவினால் குணமாவதோடு நல்ல வசீகரம் கிடைக்கும்.

    -மரிய பெல்சின்

    • அறியாமையே விதியின்‌ கைப்பாவை.
    • நம்‌ மூதாதையர்‌ சூட்டிய பெயரே விதி.

    ஒரு ஞானி பிரகதீஸ்வரர் திருக்கோவிலுக்கு விஜயம் செய்தார்.

    கல்மண்ட பத்தின் வடக்கில், அவருக்காக மேடை அலங்கரிககப்பட்டது.

    எதிரே ஆண்களும் பெண்களும் கணக்கிலடங்காது கூடியிருந்தனர்.

    வேதங்கள் பற்றியும், புராணங்களைப் பற்றியும் விளக்கிக் கொண்டே வந்த ஞானியார் "யாரும் கேள்விகள் கேட்கலாம். பதில் சொல்லப்படும்" என்று தெரிவித்தார்.

    மண்டபத்தின் மேற்கு மூலையிலிருந்து ஓர் உருவம் மெதுவாக எழுந்து நின்றது.

    சபையில் இருந்த எல்லோரும் அவரையே திரும்பிப் பார்த்தார்கள்.

    "தாங்கள் என்ன கேட்க விரும்புகிறீர்கள்? " என்று ஞானியார் கேட்டார்.

    அவர் சொன்னார்: "சுவாமி! விதியையும் மதியையும் பற்றி வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு சர்ச்சைகள் தோன்றி முடிவுக்கு வராமல் முடிந்து இருக்கின்றன.

    விதியை மதியால் வெல்லலாம் என்றும், மதியை விதி வென்றுவிடும் என்றும், இரண்டு கருத்துகள் இன்னும் இருநது கொண்டிருக்கின்றன. எது முடிவானதோ சாமிக்கு தெரிந்தால் சொல்லுங்கள். "

    கேள்வி பிறந்ததும், ஞானியார் லேசாகச் சிரித்தார்.

    மண்டபத்தில் இருந்த எல்லோரையும் பார்த்து, எல்லோரும் எழுந்து வெளியே செல்லுங்கள்; நான் கூப்பிட்ட பிறகு வாருங்கள்" என்றார்.

    மண்டபம் காலியாயிற்று.

    இரண்டு நிமிஷங்கள் கழித்து, "எல்லோரும் வாருங்கள்" என்றழைத்தார்.

    திபுதிபுவென்று எல்லோரும் ஓடிவந்து அமர்ந்தார்கள்.

    ஞானியார் கேட்டார்:

    "இந்த மண்டபத்தில் உட்கார்நதிருந்தவர்கள் வெளியே போய் மீண்டும் உள்ளே வந்திருககிறீர்கள். உங்களில் போன தடவை உட்கார்ந்த அதே இடத்தில் உட்கார்நீதிருப்பவர்கள் எத்தனை பேர? "

    எல்லோரும் விழித்தார்கள்.

    நாலைநீது பேர் மட்டும் பழைய இடத்தில் அமர்ந்திருந்தார்கள். மற்ற எல்லோரும் இடம் மாறி இருந்தார்கள். கேள்வி கேட்டவரைப் பார்த்து, ஞானியார் சொன்னார்:

    "பாருங்கள், இந்தச் சின்ன விஷயத்தில்கூட இவர்கள் மதி வேலை செய்யவில்லை.

    கொஞ்சம் நிதானமாக யோசித்தால், இவர்கள் மெதுவாக வந்து, அவரவர் இடங்களில் அமர்நீதிருப்பார்கள்! இவர்கள் மதியை மூடிய மேகம் எது? "

    கேள்வியாளர் கேட்டார்:

    "இது அவர்கள் அறியாமையைக் குறிக்கும்; இதை விதி என்று எப்படிச் சொல்கிறீர்கள்? "

    ஞானியார் சொன்னார்:

    "அறியாமையே விதியின் கைப்பாவை.

    அறிவு எல்லோருக்குமே தெளிவாக இருந்துவிட்டால், விதியும் இல்லை, விதித்தவனும் இல்லை. "

    கேள்வியார் கேட்டார்:

    "மனிதனின் அறியாமையே விதி என்றால், விதிக்கு தனி நியமங்கள் இல்லையா? "

    ஞானியார் சொன்னார்:

    இருக்கின்றன! இந்த உருவத்தில், இந்த இடத்தில் பிறக்கவேண்டும் என்று நீங்கள் நினைக்கவில்லை. உங்களைப் பிறக்க வைத்தது விதியின் பிரவாகம்.

    இப்படித்தான் வாழவேண்டும் என்று நீங்கள் திட்டமிடுகிறீர்கள்; அப்படி வாழ விடாமல் செய்வது விதியின் பிரவாகம்.

    எப்போது நீங்கள் நினைத்தது நடக்கவில்லையோ அப்போது உங்கள் நினைவுக்கு மேல் இன்னொன்று இருக்கிறது என்று அர்த்தம். அதற்கு நம் மூதாதையர் சூட்டிய பெயரே விதி."

    விதியை மாற்ற முடியாதா ?

    உங்கள் வினைப் பதிவுக்கு ஏற்ப சில இறைவனின் விருப்பம்.

    அவரை சரணாகதி அடைவதின் மூலம் மாற்ற வாய்ப்புண்டு.

    விதியை மதியால் வெல்லலாம்.

    -கவியரசு கண்ணதாசன்.

    • கம்பெனியில் இருந்து வார நாட்களில் முன்பணம் வாங்கிக்கொள்கின்றனர்.
    • தமிழ்நாட்டின் இதர பகுதிகளிலும் தொழிலாளர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.

    தமிழ்நாட்டிலேயே அதிகம் குடிப்பது திருப்பூரில்தான். வருடத்துக்குக் கிட்டத்தட்ட 1,100 கோடி ரூபாய்க்குக் குடிக்கிறார்கள்.

    ஏன் இப்படி?....

    ஏனென்றால், திருப்பூரில் தொழிலாளர்கள் அதிகம். அவர்களின் கைகளில் பணப்புழக்கமும் அதிகம். குறிப்பாக வார இறுதிகளில் திருப்பூரின் குடி எகிறுகிறது. அதிகபட்ச நிறுவனங்களில் சனிக்கிழமைதோறும் சம்பளம் போடுகின்றனர்.

    வாரச் சம்பளத்தை வாங்கிக்கொண்டு குடிக்க ஆரம்பித்தால், ஞாயிறு முழுக்கக் குடிதான். திங்கட்கிழமை வரையிலும் இந்தக் குடி நீள்கிறது. பெரும்பாலான தொழிலாளர்கள் குடித்துவிட்டு திங்கட்கிழமைகளில் வேலைக்கு வருவது இல்லை. அன்றும் விடுமுறை போலவே இருக்கிறது என்பதால், திங்கட்கிழமைக்கு 'சின்ன ஞாயித்துக்கிழமை' என்று திருப்பூரில் பெயர்.

    'இதை ஞாயிறு, திங்கள்னு பார்க்கிறதைவிட, கையில காசு தீர்ந்துபோற வரைக்கும் குடிப்பாங்கன்னு புரிஞ்சுக்கலாம். அதுக்காக வார சம்பளத்தைப் பத்திரமா வெச்சுக்கிட்டு வாரம் முழுக்கக் கொஞ்சம் கொஞ்சமா குடிக்கிறது இல்லை. அந்த ரெண்டு நாள்ல வெறியோட குடிச்சுட்டு செவ்வாக்கிழமை வேலைக்குப் போறது... அடுத்த அஞ்சு நாளைக்கு வேலை பார்த்துட்டு மறுபடியும் குடி. அதாவது இவங்க வேலை பார்க்கிறதே குடிக்கத்தான்னு ஆயிடுச்சு...' என்கிறார் பனியன் நிறுவனம் ஒன்றின் மேலாளர்.

    அப்படியானால் ஞாயிறு, திங்கள் தவிர்த்த மற்ற நாட்களில் குடிப்பது இல்லையா? அப்படியும் சொல்ல முடியாது. அந்த இரண்டு நாட்களிலும் அதி தீவிரக் குடி; மற்ற நாட்களில் தீவிரக் குடி. அவ்வளவுதான் வித்தியாசம். இதற்காக கம்பெனியில் இருந்து வார நாட்களில் முன்பணம் வாங்கிக்கொள்கின்றனர். முன்பணம் வாங்காத தொழிலாளர்கள் மிகமிகக் குறைவு. ஒவ்வொரு நாளும் 100 ரூபாய் முன்பணம் வாங்கி, மரணத்தை நோக்கி தவணைமுறையில் நகர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

    தமிழ்நாட்டின் இதர பகுதிகளிலும் தொழிலாளர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். திருப்பூரில் மட்டும் ஏன் இப்படி குடித்துத் தீர்க்க வேண்டும்? முதல் காரணம், இங்கு இருக்கும் பெரும்பான்மைத் தொழிலாளர்கள் வெளியூரைச் சேர்ந்தவர்கள். இங்கு உதிரிகளாகத்தான் வாழ்கின்றனர். 'இப்படி வாங்குற சம்பளத்தை எல்லாம் குடிச்சே அழிச்சியன்னா, பொண்டாட்டி, புள்ளைங்களை யார் பார்க்குறது?' என்று கேள்வி கேட்க நெருங்கிய உறவுகள் யாரும் அருகில் இல்லை.

    கசக்கிப் பிழியும் வேலையின் காரணமாக நண்பர்கள்கூட இவர்களுக்கு இருப்பது இல்லை. ஒரு மனிதன் சமூகத்துடன் இணையும் புள்ளி எதுவும் கிடையாது.

    இரண்டாவது, வேலை கிடைப்பது குறித்த அச்சம் தொழிலாளர்களுக்கு இல்லை. இந்த வாரம் ஒரு கம்பெனி, அடுத்த வாரம் ஒரு கம்பெனி என்று போய்க் கொள்ளலாம். எங்கும் எப்போதும் வேலை தயாராக இருக்கிறது. இது அவர்களுக்கு ஒரு குருட்டுத்தனமான நம்பிக்கையைத் தருகிறது. இப்போது கையில் இருப்பதைக் குடித்து அழித்தாலும், நாளையே சம்பாதித்துவிட முடியும் என எதிர்மறையான நம்பிக்கை கொள்கின்றனர்.

    -பீனிக்ஸ் கண்ணன்

    • முந்திகாலத்தில் சட்டை எல்லாம் கிடையாது. துண்டுதான் சட்டை.
    • பொருளாதாரத்துடன் நெருங்கிய தொடர்புடையது துண்டு.

    இன்று வேட்டி, சட்டையே கல்யாணம், தீபாவளி, பொங்கலன்று அணியும் யூனிபாரம் மாதிரி ஆகிவிட்டிருக்கிறது. இதில் துண்டை யார் நினைவு வைத்திருக்க போகிறார்கள்?

    துண்டு என்பது வெறும் ஒரு முழ துணியல்ல. கிராம கலாசாரத்தில் அது மிக முக்கிய இடத்தை வகிக்கிறது. துண்டு இல்லாமல் பெருசுகள் வெளியே கிளம்பவே மாட்டார்கள்.

    துண்டு தோளில் அமர்ந்தால் நமக்கு மரியாதை. தோளில் துண்டை போட்டுக்கொண்டு கோவிலுக்கு போகிறவர்கள், போனதும் துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொள்வார்கள். சாமிக்கு மரியாதை.

    துண்டை எடுத்து தலையில் கட்டினால் களத்தில் இறங்கி புகுந்து விளையாட தயாராகிட்டோம்னு அர்த்தம்.

    முந்திகாலத்தில் சட்டை எல்லாம் கிடையாது. துண்டுதான் சட்டை.

    உட்காரும் முன் துண்டை எடுத்து திண்னையை சுத்தம் செய்யாமல் பெருசுகள் உட்கார மாட்டார்கள்.

    கோபம் வந்தால் துண்டை முறுக்கி சிறுசுகளை அடிக்கவும் அடிக்கலாம். அடிச்சது மாதிரியும் இருக்கும், அவர்களுக்கும் வலிக்காது.

    கோபம் வந்து வெளியேறினா அதற்கான சொற்றொடரே "துண்டை உதறி தோள்ல போட்டுட்டு போயிட்டாரு" என்பதுதான்.

    யாரும் வேண்டாம் என சொல்லி வீட்டை விட்டு வெளியேறுபவன் கூட துண்டை உதறி தோள்ல போட்டுகிட்டு தான் போவான். காரணம் "துண்டில் எதுவும் இல்லை. ஒளிச்சு வெச்சுட்டு எதையும் எடுத்துட்டு போகலை. பார்த்துக்க" என்பதற்கான அடையாளம்.

    தவிர வீட்டை விட்டு போகும் வழியில் மரத்தடியில் தூங்கவேண்டுமெனில் இன்ஸ்டன்டா துண்டு படுக்கையாகும். குளிரடிச்சால் மேலே போர்த்தி தூங்க உதவும் போர்வையாகும். சளி பிடிச்சால் துண்டு இன்ஸ்டன்டா கர்ச்சிப் ஆகும். வெய்யிலடிக்குதா துண்டுதான் தொப்பி, ஊதல்காற்றில் வேட்டியே பறக்கும் ரிஸ்க்கா? துண்டை பெல்ட் ஆக இடுப்பில் கட்டிக்கலாம்.

    அடி உதை வாங்கி துண்டை கீழே போட்டுவிட்டு தப்பித்து ஓடினால் அதற்கான சொற்றொடர் "துண்டை காணோம், துணியை காணோம்" என ஓடினான் என்பதே.

    சோகமான விஷயம் நடந்தால் துண்டை தலையில் முக்காடா போட்டுகிட்டு உட்காரலாம். அப்படி உக்காந்தா பெரிய சோகம் நடந்துருச்சுனு அர்த்தம், வர்ரவங்க எல்லாம் "என்னப்பா கப்பல் கவுந்துருச்சா"னு கேப்பாங்க.

    பஞ்சாயத்தில் பிரச்சனை வந்தால் துண்டை போட்டு தாண்டி சத்தியம் செய்யலாம். அந்த அளவு தன்மானம், மரியாதையுடன் தொடர்புள்ள விசயம் துண்டு. இன்னமும் கிரமங்களில் 'நான் சொல்வது உண்மை,. வேணும்னா துண்டை போட்டு தாண்டறேன்" என்பார்கள்

    பொருளாதாரத்துடன் நெருங்கிய தொடர்புடையது துண்டு. சந்தையில் பேரம் பேசும்போது விரல்களை துண்டால் மூடிகிட்டு பேரம் பேசலாம். அதுக்குனு தனி மொழியே இருக்கு.

    காய்கறிவிக்கறவங்க துண்டை எடுத்து சும்மாடா தலையில் கட்டி அதுக்கு மேல தான் கூடையை வெப்பாங்க.

    இப்பேர்ப்பட்ட துண்டை இப்ப யாரும் கட்டறதே கிடையாது.

    அதனால இப்படி எல்லாம் துண்டு புராணத்தை பதிவு பண்ணி வெச்சா தான் வருங்கால தலைமுறைக்கு துண்டின் மகிமை தெரியும்.

    - நியாண்டர் செல்வன்

    • வாரியார் சுவாமிகள் நிதானமாக, “அப்படியா…. சரி, என் தலைவர் இருக்கட்டும்.
    • எல்லோரும் தலைவருக்கு மாலை வாங்கிப் போடுவதற்காக, போட்டிபோட்டு வாங்கிட்டு போயிடுவாங்க….” என்றார்.

    ஒருமுறை மதுரை மீனாட்சியம்மன் கோவில் வளாகத்தில் திருநாவுக்கரசரின் பெருமை பற்றி சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தார் வாரியார் சுவாமிகள்.

    நாவுக்கரசர் புகழ் ஓங்கியதை பொறுக்காத சமணர்கள் மன்னர் மகேந்திரவர்ம பல்லவனிடம், நாவுக்கரசரைப் பற்றி, பொய்யான செய்திகள் சொல்லி, அவரை கொல்ல வேண்டுமென்னு தூபம் போட்டனர்.

    திருநாவுக்கரசரை கல்தூணில் சங்கிலியால் பிணைத்து, நடுக்கடலில் கொண்டபோய் மூழ்கடிக்குமாறு காவலர்களை ஏவினான் அரசன். அவர்களும் அப்படியே செய்தார்கள்.

    "சொற்றுணை வேதியன் சோதியானவன்……"

    என்று பதிகம் பாட அவர் பக்தியின் சக்தியால் இரும்பு சங்கிலிகள் மலர் சரங்களாக மாறின. கல்தூண் கனமற்ற தக்கையாகி, பின் படகாக உருவெடுக்க, அதில்ஏறி கரை ஒதுங்கினார். என்னே என் திருநாவுக்கரசரின் பக்தி! என்று வாரியார் சுவாமிகள் மனம் மகிழ்ந்து சொல்லிக் கொண்டிருக்கையில்,

    நாத்திக இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் எழுந்து,"சரி உங்க தலைவர் மாதிரி, உங்களையும் கல்லோடு சேர்த்து கட்டி, இந்த கோவில் பொற்றாமரை குளத்திலே தூக்கி போட்டுடலாம்.. உங்க தலைவர், திருநாவுக்கரசர் மாதிரி அவர் தொண்டர் நீங்க தப்பித்து வர்றீங்களான்னு பார்க்கலாமா….?" என்று கேட்க, சபையோர் திடுக்கிட்டுப் போயினர்.

    ஆனால், வாரியார் சுவாமிகள் நிதானமாக, "அப்படியா…. சரி, என் தலைவர் இருக்கட்டும்;

    உன் தலைவர் யாரு? அவர் மதுரைக்கு வந்திருக்காரா…. அவர் வந்தா, அவருக்கு நீ என்ன செய்வே?" என்று கேட்டார்.

    அந்த நாத்திக அன்பர், "எங்க தலைவர் மதுரைக்கு வந்தால் அவருக்கு மாலை மரியாதை செய்வதுதான் என் முதல் வேலை. அன்றைக்கு பூக்கடையிலே மாலையே கிடைக்காது; எல்லோரும் தலைவருக்கு மாலை வாங்கிப் போடுவதற்காக, போட்டிபோட்டு வாங்கிட்டு போயிடுவாங்க…." என்றார்.

    "தலைவருக்கு மாலை மரியாதை செய்கின்றனரே…. அவர் தொண்டனான உனக்கு யாரும் மாலை மரியாதை செய்ய மாட்டார்களா?" என்று கேட்டார் வாரியார்.

    "அதெப்படி…..? தலைவருக்குத்தான் மாலை மரியாதை செய்வாங்க; அதெல்லாம் தொண்டனுக்கு எப்படி கிடைக்கும்….?" என்றார் அந்த அன்பர்.

    உடனே வாரியார், "எப்படி மாலை மரியாதையெல்லாம் உன் தலைவரைத் தவிர, தொண்டரான உனக்கில்லையோ, அதுபோலத்தான் அற்புத சக்தி, அருமை, பெருமையெல்லாம் என் தலைவர் திருநாவுக்கரசருக்கு மட்டும்தான் உண்டு; அவர் தொண்டனான எனக்கு அந்த சக்தி கிடையாது……" என்று சொல்லவும், அந்த அன்பர் வாயடைத்துப்போய் உட்கார்ந்து விட்டார்.

    -செல்வகுமார்

    ×