search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஸ்ரீரங்கம் கோவில் தைத்தேரோட்டம்: கோவிந்தா கோஷம் முழங்க வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்
    X

    பக்தர்கள் வெள்ளத்தில் வெள்ளை கோபுரத்தை கடந்து தேர் அசைந்தாடி வந்த காட்சி.

    ஸ்ரீரங்கம் கோவில் தைத்தேரோட்டம்: கோவிந்தா கோஷம் முழங்க வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

    • 5-ந்தேதி நம்பெருமாள் உத்திர வீதிகளில் வலம் வருகிறார்.
    • நாளை சப்தாவரணம் நிகழ்ச்சி நடக்கிறது.

    பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் பூபதித் திருநாள் எனப்படும் தை தேர்த்திருவிழா 11 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டிற்கான தை தேர்த்திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் காலை, மாலை வேளைகளில் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் உத்திர வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    சிறப்பு நிகழ்ச்சிகளாக கடந்த 29-ந்தேதி தங்க கருட வாகனத்தில் வீதி உலா வந்தார். நேற்று மாலை நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் உத்திர வீதிகளில் உலா வந்து, தைத்தேர் அருகில் வையாளி கண்டருளினார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி உற்சவர் நம்பெருமாள் அதிகாலை 3.45 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு 4.30 மணிக்கு தைத்தேர் ஆஸ்தான மண்டபம் வந்து சேர்ந்தார். காலை 4.30 மணி முதல் காலை 5.15 மணி வரை ரதரோஹணம் (தனுர் லக்னத்தில்) நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் எழுந்தருளினார்.

    பின்னர் காலை 6 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேர் தெற்கு உத்திர வீதியிலிருந்து புறப்பட்டு மேற்கு உத்திர வீதி, வடக்கு உத்திர வீதி மற்றும் கிழக்கு உத்திரவீதிகளில் வலம் வந்து மீண்டும் காலை 10.00 மணிக்கு நிலையை அடைந்தது. வழிநெடுகிலும் தேரின் முன்பாக பக்தர்கள் தேங்காய் உடைத்தும், நெய் விளக்கு, சூடம் ஏற்றியும் வழிபட்டனர்.

    நாளை சப்தாவரணம் நிகழ்ச்சி நடக்கிறது. தைத்தேர் திருவிழாவின் நிறைவு நாளான வருகிற 5-ந்தேதி நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் எழுந்தருளி உத்திர வீதிகளில் வலம் வருகிறார்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் செ.மாரிமுத்து, அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×