search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    தைப்பூச திருவிழா: பழனி கோவிலில் இன்று திருக்கல்யாணம் நடக்கிறது

    • நாளை தேரோட்டம் நடைபெறுகிறது.
    • ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனி நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.

    தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் குடிகொண்ட பழனி, அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாகும். இங்கு தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய திருவிழாக்கள் ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா கடந்த 29-ந்தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பழனி தைப்பூச திருவிழாவில் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்வது தனிச்சிறப்பு ஆகும்.

    ஏனெனில், தமிழகத்தில் மற்ற கோவில்களை காட்டிலும் பழனியில் முருகப்பெருமானை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர்.

    இதில் பல பக்தர்கள் அலகு குத்தியும், மயில் காவடி, பால்காவடி, இளநீர் காவடி என பல்வேறு காவடியை தூக்கி வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அதன்படி விழா தொடங்கியது முதலே, பழனிக்கு வருதை தரும் பாதயாத்திரை பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது.

    10 நாட்கள் நடைபெறும் தைப்பூச திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான முத்துக்குமார சுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு 9 மணிக்கு சுவாமி மணக்கோலத்தில் வெள்ளிரத புறப்பாடு நடைபெறுகிறது.

    நாளை (சனிக்கிழமை) தைப்பூச நாளன்று மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு முருகனை தரிசிக்க பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனி நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.

    குறிப்பாக திண்டுக்கல் சாலை, தாராபுரம் சாலை, உடுமலை சாலைகளில் வழிநெடுகிலும் பக்தர்கள் சாரை சாரையாக வருகிறார்கள். இவ்வாறு வருகிற பக்தர்கள் முருகனை நினைத்து பாட்டு பாடியும், ஒயிலாட்டம், கோலாட்டம் ஆடியும் வருகின்றனர்.

    பழனிக்கு வந்ததும் பக்தர்கள் இடும்பன்குளம், சண்முகநதி ஆகியவற்றில் புனித நீராடுகின்றனர். தொடர்ந்து பெரியநாயகி அம்மன் கோவில், திருஆவினன்குடி, மலைக்கோவில் சென்று வழிபடுகின்றனர்.

    Next Story
    ×