search icon
என் மலர்tooltip icon

    மடகாஸ்கர்

    • கல்லுரியில் சேர இயலாமல் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏராளமான மாணவர்கள் உள்ளனர்.
    • வங்கிகளைப் பொறுத்து 8 சதவீதம் முதல் தனி வட்டியாக வசூலிக்கப்படுகிறது.

    கடந்த வாரங்களில் வெளிநாடுகளில் சென்று மருத்துவக்கல்வி (M.B.B.S) பயில்வது குறித்து மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள், தேசிய மருத்துவ ஆணைய விதிமுறைகள் மற்றும் அட்மிஷன் நடைமுறைகள் குறித்து பார்த்தோம். தற்போது மாணவர்கள் வங்கிகளில் கல்வி கடன் பெறுவது எப்படி? மற்றும் வெளிநாடுகளில் மருத்துவக் கல்வி முடித்து இந்தியாவில் மருத்துவராக பதிவு செய்வது எப்படி? என்பது குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

    வங்கிகளில் கல்விக் கடன்: மாணவர்களுக்கு வெளிநாடுகளில் மருத்துவக்கல்விக்கான சேர்க்கை கிடைத்தும், கல்லுரியில் சேர இயலாமல் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏராளமான மாணவர்கள் உள்ளனர். அவர்களின் நலனை கருத்தில் கொண்டு நமது அரசாங்கங்கள் எடுத்த சிறப்பான முன்னெடுப்பு கல்விக் கடன் திட்டமாகும்.

    முதன்முதலில் பாரத ஸ்டேட் வங்கியால் 1995-ல் துவங்கப்பட்ட கல்விக்கடன் திட்டமானது பின்பு 28-04-2001ல் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவால் முறைப்படுத்தப்பட்டு நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டது. தற்போது மாணவர்கள் மிக எளிதாக கல்விக்கடன் பெறும் நோக்கில் இந்தியாவில் உள்ள சுமார் 240 வங்கிகள் (அரசு மற்றும் தனியார்) சேர்ந்த இந்திய வங்கிகள் சங்கம்

    மூலம் கல்விக் கடன் பெறுவதற்கான நடைமுறைகள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    கல்விக்கடன் வழிமுறைகள்:

    1) அதன்படி மாணவர்கள் எங்கும் அலையாமல் வீட்டில் இருந்தபடியே இணையதளம் வாயிலாகவே தேவையான ஆவணங்களுடன் www.vidyalakshmi.co.in என்ற ஒருங்கிணைந்த முகவரியில் பதிவு செய்து கல்விக்கடன் பெற விண்ணப்பிக்க வேண்டும்.

    2)மாணவர்களின் விண்ணப்பத்தை பரிசீலிக்கும் வங்கிகள் online வாயிலாகவே ஒப்புதல் வழங்கும். அதிகபட்சம் 30 நாட்களுக்குள் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும்.

    3) அதன்பின் மாணவர்கள் நேரில் வங்கியை அணுகி தேவைப்படும் சான்றிதழ்களை சமர்ப்பித்து கடன் அனுமதி கடிதத்தை பெற்றுக் கொள்ளலாம்.

    4) தற்போது பெரும்பாலான வங்கிகள் மாணவர்களின் கல்லூரி கட்டணத்தை நேரடியாக வெளிநாட்டு கல்லூரிகளின் வங்கிக் கணக்கிலே SWIFT என்ற பன்னாட்டு பரிவர்த்தனை மூலம் செலுத்தி விடுகின்றன.

    5) மாணவர்களுக்கு கடன் அனுமதி (Loan Sanction) செய்யப்படும் மொத்த தொகையை 6 வருடங்களுக்கு சமமாகப் பிரித்து ஒவ்வொரு கல்வி ஆண்டின் துவக்கத்திலும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

    மாணவர்களின் தகுதி மற்றும் ஆவணங்கள்

    1) மாணவர்கள் 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.

    2)10, பிளஸ்2 முறையில் தேர்ச்சி பெற்று அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு கல்லூரியில் அட்மிஷன் பெற்றிருக்க வேண்டும்.

    அனிதா காமராஜ்

    அனிதா காமராஜ்

    3)மாணவன் மற்றும் பெற்றோரின் அடையாளச் சான்று மற்றும் முகவரி சான்று.

    4)கல்லூரியில் பெறப்பட்ட கல்லூரி கட்டண விவரத்துடன் கூடிய அட்மிஷன் லெட்டர்.

    5)மாணவனின் மதிப்பெண் சான்றிதழ் நகல்.

    6)கடவுச்சீட்டு நகல்.

    7)வங்கிகள் கேட்கும் ஜாமீன்தாரர் (ஜாமீன் சொத்து விவரங்கள்)

    மாணவர்களுக்கு 3 விதமான கல்விக் கடன் திட்டங்கள் தற்போது நடைமுறையில் உள்ளன. அதன் விவரங்கள் பின்வருமாறு:

    ரூ.4 லட்சம் வரையிலான கல்விக் கடன் பெற மாணவர்கள், பெற்றோருடன் சேர்ந்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு எந்தவிதமான ஜாமீனும் தேவையில்லை. மாணவர்களின் அடிப்படை ஆவணங்களை மட்டுமே வைத்து இது செயல்படுத்தப்படுகிறது.

    ரூ.7.5 லட்சம் வரையிலான கல்விக் கடன் பெற பொருத்தமான ஜாமீன் சமர்ப்பிக்க வேண்டும். அதாவது அரசுப் பணியில் உள்ள மாணவர்களின் பெற்றோரோ அல்லது வேறு அரசுப் பணியில் உள்ள உறவினர்களோ அவர்களின் சம்பள சான்றிதழுடன் ஜாமீன்தாரராக கையெழுத்திட வேண்டும். அவ்வாறு செய்தால் மேற்படி கல்விக்கடனை எளிதாகப் பெற இயலும்.

    ரூ.7.5 லட்சத்திற்கு அதிகமான முழு படிப்பிற்கும் தேவையான கல்விக்கடன்:

    வெளிநாடுகள் மற்றும் கல்லூரிகளை பொறுத்து மாணவர்களின் முழு கல்விக்கும் தேவையான கல்விக் கடன் பெற மாணவர்கள் கண்டிப்பாக கடன் தொகைக்கு ஈடான அசையா சொத்துக்கள் ஏதேனும் (பெற்றோருடையதோ அல்லது உறவினர்களுடையதோ) வங்கியில் ஜாமீனாக சமர்ப்பிக்க வேண்டும். பெரும்பாலும் தற்போதைய நடைமுறையில் சமர்ப்பிக்கப்படும் சொத்து மதிப்பில் 75 சதவீதம் கடனாக வழங்கப்படுகிறது.

    மாணவர்கள் கல்லூரி கட்டணம் மற்றுமின்றி உணவு, தங்குமிடம், புத்தகம், பயண கட்டணம் மற்றும் இதர செலவுகள் என கல்விக்கான முழுமைக்குமான செலவுகளும் கல்விக்கடன் மூலம் வழங்கப்படுகிறது.

    வட்டி விவரம்: கல்விக்கடனாக இருந்தாலும் வங்கிகள் அவ்வப்போது நிர்ணயிக்கும் வட்டி விகிதம் இதற்கும் பொருந்தும். வங்கிகளைப் பொறுத்து 8 சதவீதம் முதல் தனி வட்டியாக வசூலிக்கப்படுகிறது.

    திருப்பி செலுத்தும் காலம்: கல்வி காலம் முடிந்ததில் இருந்து ஒரு வருடம் கழித்தோ அல்லது வேலை பார்க்க ஆரம்பித்ததில் இருந்து ஆறு மாதத்திற்கு பிறகோ, (இதில் எது முன்னதாக வருகிறதோ அதன்படி) திருப்பி செலுத்தலாம்.

    இந்தியாவில் மருத்துவராக பதிவு செய்தல்:

    பல்வேறு வெளிநாடுகளில் மாணவர்கள் மருத்துவக்கல்வி முடித்து பட்டம் பெற்றாலும், அவர்கள் இந்தியாவில் மருத்துவராக பதிவு செய்ய வேண்டுமானால் இங்கு நடத்தப்படும் FMGE எனப்படும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதாவது தற்போது வரை இந்தியாவை தவிர வேறு எந்த வெளிநாடுகளில் சென்று மருத்துவக் கல்வி படித்து முடித்தாலும், அவர்களுக்கு இந்தியாவில், முந்தைய "Medical Council of India" ன் 2002 தகுதி தேர்வு விதிமுறைகளின் படி FMGE எனப்படும் FOREIGN MEDICAL GRADUATE EXAMINATION தேர்வானது நடத்தப்படுகிறது.

    இந்த தேர்வானது தேசிய மருத்துவக் கல்விக்கான தேசிய தேர்வு வாரியத்தின் (National Board of Examination) மூலமாக ஆண்டிற்கு இருமுறை அதாவது 6 மாதங்களுக்கு ஒருமுறை ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் இந்தத் தேர்வானது நடத்தப்படுகிறது.

    FMGE தேர்வு முறை தேர்வு கட்டணம்:

    மேற்கண்ட FMGE தேர்வானது 300 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. 300 கேள்விகள் MCQ எனப்படும் ஒரு வார்த்தை கேள்விகளைக்கொண்ட தேர்வானது இரு பகுதிகளாக நடத்தப்படுகிறது. இதில் 150 மதிப்பெண்கள் எடுத்தாலே மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக கருதப்படுகிறது. இதில் எதிர்மறை மதிப்பெண்கள் எதுவும் கிடையாது.

    தற்போது தேர்வு கட்டணம் சுமார் ரூ.6,000/- ஆக உள்ளது.

    INTERNSHIP - பயிற்சி மருத்துவர்:

    FMGE தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தேசிய மருத்துவ ஆணையத்தில் பதிவு செய்து, அதன் வழிகாட்டுதலின்படி இந்தியாவில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் 12 மாதங்கள் கண்டிப்பாக பயிற்சி மருத்துவராகப் பணிபுரிய வேண்டும். அதன் பின்னர் அவர்கள் விரும்பும் மாநிலங்களில் மருத்துவராக பணிபுரிய அந்தந்த மாநிலங்களில் உள்ள மருத்துவ ஆணையத்தில் (Medical Council) பதிவு செய்து மருத்துவராகப் பணிபுரியலாம்.

    இந்தியாவின் M.B.B.S. மற்றும் வெளிநாடுகளின் M.D:

    இந்தியா, பங்களாதேஷ், நேபாளம் போன்ற ஒரு சில நாடுகளைத் தவிர்த்து பெரும்பாலான நாடுகளில் இளங்கலை மருத்துவப் படிப்பிற்கு M.D.(Medical Doctor) என்னும் பட்டம் வழங்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் M.D. என்பது M.B.B.S.க்குப் பிறகான முதுகலை மருத்துவப்படிப்பு ஆகும். எனவே இதனால் ஏற்படும் குழப்பங்களை தவிர்க்கும் பொருட்டு வெளிநாடுகளில் வழங்கப்படும் M.D.பட்டம் இந்திய M.B.B.S-க்கு இணையானது என MCI-ம் தற்போது தேசிய மருத்துவ ஆணையமும் விளக்கமளித்துள்ளது.

    விலக்கு அளிக்கப்பட்ட வெளிநாடுகள்:

    FMGE தேர்வானது எல்லா வெளிநாடுகளில் மருத்துவக்கல்வி முடித்த மாணவர்களுக்கும் பொதுவான நிலையில், சில நாடுகளுக்கு மட்டும் இந்திய தேசிய மருத்துவ ஆணையம் விலக்கு அளித்துள்ளது.

    ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா, USA, UK போன்ற 5 நாடுகளில் மருத்துவக்கல்வி முடித்த மாணவர்களுக்கு மட்டும் FMGE தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் மேற்கண்ட நாடுகளில் மருத்துவக்கல்வி முடிவதற்கு அவர்களுக்கு அங்கேயே பல கட்ட கடுமையான தேர்வுமுறைகள் உள்ளன.

    அரசு மருத்துவராகும் வாய்ப்புகள்:

    வெளிநாட்டில் மருத்துவக்கல்வி பயின்ற மாணவர்கள் இந்தியாவில் FMGE தேர்வில் தேர்ச்சி பெற்று, ஓர் ஆண்டு உள்ளுறை பயிற்சியை இந்தியாவில் முடித்து விட்டால் அவர்கள் இந்தியாவில் மருத்துவக்கல்வி பயின்ற மருத்துவர்களுக்கு இணையானவர்கள் என்று இந்திய மருத்துவ ஆணையம் தெரிவிக்கின்றது. எனவே அவர்களும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற தகுதி பெற்றவர்கள் ஆவர். இதுபோன்று ஏற்கனவே ஏராளமான மருத்துவர்கள் அரசு மருத்துவமனைகளில் தற்போது பணிபுரிந்து வருகின்றனர்.

    தேசிய மருத்துவ ஆணையத்தின் தற்போதைய முன்னெடுப்புகள்:

    இந்தியாவில் மருத்துவக் கல்வியின் தரம் மற்றும் மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வரும் உயர் அதிகார அமைப்பான தேசிய மருத்துவ ஆணையம், இந்தியா மற்றும் பல்வேறு வெளிநாடுகளில் மருத்துவக்கல்வி முடித்த இந்திய மாணவர்கள் என அனைத்து மருத்துவ மாணவர்களுக்கும் பொதுவான ஒரு தகுதி தேர்வை கொண்டு வரும் நோக்கத்தில் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி அந்த தேர்வானது NEET நுழைவுத் தேர்வை போல NEXT என்ற பெயரில் மருத்துவக்கல்வி முடித்த அனைத்து இந்திய மாணவர்களுக்கும் இந்தியாவில் மருத்துவராகப் பணிபுரிய தகுதித் தேர்வாக (Licence Exam) இருக்கும் விதமாக அதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்கி வருகிறது. அவ்வாறு நடக்கும் பட்சத்தில் FMGE என்னும் தேர்வுமுறை நீக்கப்பட்டு எல்லோருக்கும் பொதுவான ஒரே தேர்வுமுறை கொண்டு வரப்படும்.

    வரும் வாரத்தில் பல்வேறு வெளிநாடுகளின் கல்விமுறை, கல்லூரி விவரம், காலநிலை, மாணவர்களுக்கான உயர் மருத்துவக் கல்விக்கான வாய்ப்புகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

    செல்: 94980 88890

    • உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 50 சதவீதம் தமிழ்நாடு பயன்படுத்துகிறது.
    • சின்னஞ்சிறு தொழில்கள் உருவாகின்றன. பெரிய தொழிற்சாலைகள் அமைவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன.

    ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு பல காரணிகள் அடிப்படையாக அமைந்தாலும் சில முக்கியமான காரணிகள் அவசியமாக தேவைப்படுகின்றன.

    அரசியல், பொருளாதாரம், சமூகம், தொழில்கள், தொழில்நுட்பம், என பல காரணிகள் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன.

    பல ஆண்டுகளாக தரிசு நிலங்களாகவும், தொழில் வளர்ச்சியற்ற பகுதியாகவும், கருதப்பட்ட தென் தமிழகம், தற்போது நாட்டின் வளர்ச்சிக்கும் மக்களின் மேம்பாட்டுக்கும் உறுதுணையாய் அமைகிறது. கடந்த சில ஆண்டுகளாக, தென் தமிழகத்தில் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    குறிப்பாக, மின்சார தேவைக்கு அதிகமாக பயன்படும் கூடங்குளம் அணுமின் நிலையம், விஜயநாராயணம் ஐ என் எஸ் கட்டபொம்மன், உடன்குடி அனல் மின் நிலையம், குலசேகரப்பட்டணம் ஐ.எஸ்.ஆர்.ஓ ஸ்பேஸ் போர்ட் போன்றவை தென் தமிழக வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    இந்திய அரசும் சோவியத் அரசும் இணைந்து உருவாக்கிய அணுமின் நிலையம் கூடங்குளம் அணுமின் நிலையம். 1988-ம் ஆண்டு நவம்பர் மாதம் 20-ம் நாள் இந்த அணுமின் நிலையம் உற்பத்திக்கான உடன்படிக்கை கையெழுத்தானது. அப்போதைய இந்திய பிரதம மந்திரி ராஜீவ் காந்தி மற்றும் சோவியத் நாட்டின் தலைமை பொறுப்பில் இருந்த மிக்ஹைல் கோர்பச்சேவ் ஆகியோர் இணைந்து இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டார்கள்.

    இந்தியாவில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் மிகப்பெரியது திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் அமைந்துள்ள அணு மின் நிலையம் ஆகும்.


    இந்து அணுமின் நிலையத்தின் கட்டுமான பணிகள் 2002-ம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி தொடங்கப்பட்டாலும் பல்வேறு எதிர்ப்புகளால் இதன் கட்டுமான பணிகள் நிறைவேற தாமதமானது. இருந்த போதும் 2013-ம் ஆண்டு அக்டோபர் 22ஆம் நாள் யூனிட் 1 ஆரம்பிக்கப்பட்டு ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது.

    ரஷிய நாட்டோடு இணைந்து தொடங்கப்பட்ட இந்த அணுமின் நிலையம் 2015-ம் ஆண்டு யூனிட் 2 செயல்பட ஆரம்பித்தது. 2017ஆம் ஆண்டு யூனிட் 3மற்றும் யூனிட் 4 மின் உற்பத்தி அலகுகள் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் செயல்பட ஆரம்பித்தன. தற்போது யூனிட் 5 மின் உற்பத்தி அலகு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. 2026-ம் ஆண்டு டிசம்பர் மாதம் யூனிட்-5 மின் உற்பத்தி அலகு செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 60 ஆண்டுகள் தடையில்லா மின்சாரத்தை வழங்கும் வசதி கூடங்குளம் அணு மின் நிலையம் மூலம வழங்கப்படுகிறது.

    இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 50 சதவீதம் தமிழ்நாடு பயன்படுத்துகிறது. 35 சதவீத மின்சாரம் அருகில் உள்ள மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது. மீதமுள்ள 15% மின்சாரம் மத்திய அரசு தேவைகளுக்காகவும், அவசர தேவைகளுக்காகவும் பயன்படுத்தும் விதத்தில் மின்சார பங்கீடு செய்யப்படுகிறது. இதேபோல் யூனிட் 6 மின் உற்பத்தி கட்டுமான பணிகள் 2027-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவு பெற உள்ளது.

    ஐ என் எஸ் கட்டபொம்மன்: திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் என்னும் ஊரில் சுமார் 3000 ஏக்கர் நிலப்பரப்பில் ஐஎன்எஸ் கட்டபொம்மன் என்னும் பெயர் கொண்ட விஎல்எப் ட்ரான்ஸ்மிஷன் ஃபெசிலிட்டி இந்திய கப்பற்படையால் உருவாக்கப்பட்டுள்ளது.

    1984-ஆம் ஆண்டு ஐஎன்எஸ் கட்டபொம்மன் என்னும் அமைப்பின் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டாலும் 1996-ம் ஆண்டு அக்டோபர் 20-ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்டு செயல்பட ஆரம்பித்தது. இந்திய தேசிய சுதந்திரத்திற்காக பாடுபட்ட மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனின் பெயரில் இது அமைக்கப்பட்டுள்ளது.

    ரஷியாவுக்கு அடுத்ததாக இந்தியாவில் தொடங்கப்பட்ட பாதுகாப்பு அமைப்பு இது ஆகும்.

    உடன்குடி அனல் மின் நிலையம்: 2012-ஆம் ஆண்டு உடன்குடி பவர் கார்ப்பரேஷன் என்னும் அமைப்பு தொடங்கப்பட்டது. பின்னர் 2018-ம் ஆண்டு இந்த அனல் மின்சார உற்பத்தி திட்டம் நடைமுறைப்படுத்துவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது.

    நெல்லை கவிநேசன்

    நெல்லை கவிநேசன்

    2019-ம் ஆண்டு பணிகள் நடைபெறும் போதே ஏற்பட்ட மழை வெள்ளத்தால் கட்டுமான பணிகள் தாமதமானது. தற்போது மிக வேகமாக இந்த பணிகள் நடைபெற்று வருகிறது.

    நிலக்கரியின் துணையோடு இயங்க வசதியாக இந்த குலசேகரபட்டினம் அனல் மின் நிலையம் அமைந்துள்ள இடத்திலிருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவில் கடற்கரையில் நிலக்கரியை கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்த அனல் மின் நிலையம் தமிழ்நாட்டின் மின்சார தேவையை பூர்த்தி செய்யவும் ரெயில்வே போக்குவரத்தை ஏற்படுத்தவும், மேம்படுத்தப்பட்ட சாலை வசதிகளை உருவாக்கவும் மிகவும் உதவியாய் அமைகிறது.

    இந்தியாவில் ஐ.எஸ்.ஆர்.ஓ. எனப்படும் இந்தியன் ஸ்பேஸ் ரிசர்ச் ஆர்கனைசேஷன் இரண்டாவதாக உருவாக்கிய ஸ்பேஸ் போர்ட் ஆகும். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் சாலையில் சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சுமார் 2350 ஏக்கர் நிலத்தில் இந்த ஸ்பேஸ் போர்ட் உருவாக்கப்படுகிறது.

    ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஸ்பேஸ் சென்டர் 1971-ம் ஆண்டு இந்தியன் ஸ்பேஸ் ரிசர்ச் ஆர்கனைசேஷன் ஆல் உருவாக்கப்பட்டது.


    நாட்டின் பாதுகாப்புக்காக தொடங்கப்பட்ட இந்த அமைப்பு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான செயல் திட்டங்களை வகுத்து வங்காள விரிகுடாவில் சிறந்த பாதுகாப்பை உருவாக்கியது.

    கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ம் நாள் பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பாதுகாப்பை அதிகப்படுத்த தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தாலுகாவில் உள்ள குலசேகரப்பட்டினம், மாதவன் குறிச்சி, பள்ளக்குறிச்சி, படுக்கப்பத்து போன்ற கிராமங்களை உள்ளடக்கிய சுமார் 2,223 ஏக்கர் பரப்பளவில் ஐ.எஸ்.ஆர்.ஓ. தொடங்க அடிக்கல் நாட்டினார்.

    ரேடார் லாஞ்சஸ் மற்றும் எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் ஆகிய வசதிகளோடு ஐ.எஸ்.ஆர்.ஓ. புதிதாக ரோகினி சவுண்டிங் ராக்கெட் ஆர் ஹெச் 200 என்னும் புதிய பாதுகாப்பு வசதியை உருவாக்கியுள்ளது.

    ஸ்பேஸ் போர்ட் என அழைக்கப்படும் முதல் விமானம் 2024-ம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதிஅனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

    ஐ.எஸ்.ஆர்.ஓ. என அழைக்கப்படும் இந்தியன் ஸ்பேஸ் ரிசர்ச் ஆர்கனைசேஷன் சாட்டிலைட்களை உருவாக்கி அதனை விண்ணுக்கு அனுப்பி இந்த மண்ணுலகம் செழித்து வாழ பல்வேறு வகையில் உதவி வருகிறது.

    ஐ.எஸ்.ஆர்.ஓ. தொழில்நுட்பம் தற்போது குறிப்பாக வேளாண்மை வளர்ச்சிக்கு மிகவும் உதவியாய் அமைகிறது.

    வானிலை முன்னறிவிப்பின் மூலம் வேளாண் பயிர்களை சரியான காலத்தில் பயிரிடவும் அதன் மூலம் அதிக பலன் பெறவும் உதவுகிறது. கோதுமை, சணல், பருத்தி, நெல், கரும்பு, பயறு வகைகள் போன்ற பல்வேறு பயிர்கள் பயிரிட உதவும் சரியான காலத்தை திட்டமிட்டு முன்கூட்டியே வேளாண் விவசாயிகளுக்கு கணித்துச் சொல்லுகிறது.

    ரெயில்வே துறையிலும் கடந்த சில ஆண்டுகளாக ஸ்பேஸ் டெக்னாலஜி பெருமளவில் உதவி வருகிறது. ரெயில் தண்டவாளங்களில் ஏற்படும் தடைகளை முன்கூட்டியே கணித்து அறிவிக்கிறது. ஆளில்லா லெவல் கிராஸிங் விபத்துகளைத் தடுப்பதற்கு இது உதவுகிறது.

    சாட்டிலைட் இமேஜிங் மூலம் வெளிநாட்டவர்களுடைய ஆக்கிரமிப்பை தடுக்கவும் நமது இந்திய நாட்டின் எல்லைகளை கண்காணித்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தவும் இது உதவுகிறது. இன்று நாம் அனுபவிக்கும் பல்வேறு வசதிகள் ஐ.எஸ்.ஆர்.ஓ. அனுப்பிய சேட்டிலைட் மூலம் தான் நமக்கு கிடைத்திருக்கிறது.

    இன்டர்நெட் வசதிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை உடனுக்குடன் பார்க்கும் வசதி, செல்போன் இயங்கும் வசதி, போன்ற மனித உலகிற்கு பயன் தரும் வசதிகள் இன்டர்நெட் மூலம் தான் உருவாக்கப்பட்டிருக்கிறது.

    டெலி எஜுகேஷன், டெலி ஹெல்த் கேர், லேண்ட் அண்ட் வாட்டர் ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட், இண்டராக்டிவ் அட்வைசரி சர்வீசஸ், டெல பிஷ்ஷரி, இ கவர்னன்ஸ் சர்வீசஸ், வெதர் சர்வீசஸ், டிசாஸ்டர் மேனேஜ்மென்ட் சப்போர்ட், ரிமோட் சன்சிங் அப்ளிகேஷன்ஸ் போன்ற பல்வேறு சேவைகளை சேட்டிலைட் மூலம் பெறுவதற்கு ஐ.எஸ்.ஆர்.ஓ. துணை நிற்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக நாட்டின் பாதுகாப்புக்கு அடித்தளமாக ஐ.எஸ்.ஆர்.ஓ. அமைகிறது. கடல் வழியிலும், வான் வெளியிலும், பாதுகாப்பை பலப்படுத்த குலசேகரப்பட்டினத்தில் இந்த ஐ.எஸ்.ஆர்.ஓ. நிறுவப்பட்டுள்ளது.

    இதன் மூலம் வேலை வாய்ப்புகள் அதிகமாக உருவாக்கப்படுகிறது. ஐ.எஸ்.ஆர்.ஒ.வை சுற்றியுள்ள பகுதிகளில் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படுகின்றன. குறிப்பாக பல்வேறு கட்டடங்கள் கட்டப்பட்டு நகர்ப்புறத்திற்கு ஈடாக அந்த பகுதி வளர்ச்சி பெறுகிறது. போக்குவரத்து வசதிகள் அதிகப்படுத்தப்படுகின்றன.

    இசிஆர் என அழைக்கப்படும் ஈஸ்ட் கோஸ்ட் ரோடு கிழக்கு கடற்கரை சாலையில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை அமைக்கப்படும். இதனால் போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப் பட்டு குறைந்த பயண நேரத்தில் பயணம் செய்யும் வசதி உருவாக்கப்படும்.

    அரசுத் துறையிலும் தனியார் துறையிலும் பல்வேறு வேலை வாய்ப்புகள் உருவாவதால், குலசேகரப்பட்டினம் சுற்றியுள்ள பகுதிகள் வளர்ச்சி பெற்று வருகின்றன. நிலங்களின் விலைமதிப்பு அதிகமாகின்றது. சின்னஞ்சிறு தொழில்கள் உருவாகின்றன. பெரிய தொழிற்சாலைகள் அமைவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன.

    தொடர்புக்கு: nellaikavinesan25@gmail.com

    Cell:94438 72528

    • தலைநகர் அன்டனானரிவோவில் பரியா மைதானம் அமைந்துள்ளது.
    • மைதானத்தில் சுமார் 50,000 பார்வையாளர்கள் திரண்டிருந்தனர்.

    அன்டனானரிவோ:

    மடகாஸ்கர் நாட்டின் தலைநகர் அன்டனானரிவோவில் பரியா மைதானம் அமைந்துள்ளது. அங்கு நேற்று விளையாட்டு போட்டி ஒன்றின் தொடக்க விழா நடைபெற்றது. இதைக் காண சுமார் 50,000 பார்வையாளர்கள் திரண்டிருந்தனர்.

    அப்போது, மைதானத்தில் திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர் என்றும், 80 பேர் வரை காயம் அடைந்துள்ளனர் என்றும், பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அந்நாட்டு பிரதமர் கிறிஸ்டியன் என்ட்சே தெரிவித்துள்ளார்.

    கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை.

    மைதானத்தில் திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×