search icon
என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • ரெயில் ஓட்டுநரின் சாதுரியமான செயல்பாட்டால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
    • தீ அணைக்கப்பட்டதை தொடர்ந்து மாற்று எஞ்சின் வரவழைக்கப்பட்டு ராமேஸ்வரத்துக்கு விரைவு ரெயில் புறப்பட்டது சென்றது.

    புதுக்கோட்டை அருகே சென்று கொண்டிருந்த ராமேஸ்வரம் விரைவு ரெயில் புகை போக்கியில் தீ விபத்து ஏற்பட்டது. எஞ்சின் புகை போக்கியில் உள்ள டியூப் வெடித்ததால் பற்றி எரிந்த நெருப்பால் பயணிகள் பீதியில் உறைந்தனர்.

    உடனடியாக விரைவு ரெயிலை நிறுத்தி சாதுரியமாக செயல்பட்ட ரெயில் ஓட்டுநரின் செயல்பாட்டால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    தீ அணைக்கப்பட்டதை தொடர்ந்து மாற்று எஞ்சின் வரவழைக்கப்பட்டு ராமேஸ்வரத்துக்கு விரைவு ரெயில் புறப்பட்டது சென்றது. 

    • மறியலால் வேட்டனூர் பகுதியில் சென்ற வாகனங்கள் அரை மணி நேரம் தாமதமாக சென்றது.
    • மக்கள் துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்ததாகக் கூறப்படுகிறது.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியம் வேட்டுனூர் சாலையானது நாகுடியிலிருந்து மாணவநல்லூர், வேட்டனூர் வழியாக நிலையூர், செல்லப்பன் கோட்டை, பானாவயல், தண்டலை உள்ளிட்ட கிராமங்களை கடந்து மணமேல்குடி கிழக்கு கடற்கரைச் சாலையை சென்றடைகிறது.

    சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கும் இணைப்புச்சாலையில் தினம்தோறும் அறந்தாங்கி, நாகுடி மற்றும் மணமேல்குடி வரை 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பள்ளி கல்லூரிக்கும், பொதுமக்கள் வேலைக்கும் சென்று வருகின்றனர்.

    இந்நிலையில் வேட்டனூர் கிராமத்தில் சுமார் 1 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை மிகவும் மோசமாக குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனை சரி செய்து தர வலியுறுத்தி அப்பகுதி மக்கள் துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்ததாகக் கூறப்படுகிறது.

    ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து சிறிது நேரம் மறியலில் ஈடுபட்ட அவர்கள் பேருந்தில் குழந்தைகள், பெண்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் இருந்ததால் அவர்களின் பணிகள் மற்றும் நலன் கருதி பொதுமக்கள் தாங்களாகவே சாலை மறியலை கைவிட்டனர்.

    மறியலால் வேட்டனூர் பகுதியில் சென்ற வாகனங்கள் அரை மணி நேரம் தாமதமாக சென்றது.

    • ஆன்லைன் வர்த்தகத்தால் வணிகர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.
    • தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசனை.

    புதுக்கோட்டை:

    வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மின்கட்டண உயர்வு, சொத்து வரி, தொழில் வரி, கட்டிட வரைபட அனுமதி கட்டண உயர்வு மற்றும் ஆன்லைன் வர்த்தகத்தால் வணிகர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.

    இதுதொடர்பாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு ஆலோசனை நடத்தி வருகிறது

    ஆன்லைன் வர்த்தகத்தால் வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல் கூறியுள்ளார். அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கிறோம் என்று உறுதி அளித்துள்ளார்.

    தமிழகத்தில் ஆட்கள் பற்றாக்குறை இருப்பதால் வடநாட்டு தொழிலாளர்களை நம்பி தான் வணிகர்கள் உள்ளனர். அவர்கள் வரும்போது பான் மசாலா, குட்கா ஆகியவற்றோடு தான் வருகிறார்கள். இதனை தமிழகத்திற்குள் வரும் போதே அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

    ஆன்லைன் வர்த்தகம் இனியும் தொடருமானால் 10 கோடி வணிகர்கள் காணாமல் போய்விடுவார்கள். விரைவில் பிரதமரை சந்திக்க உள்ளோம்

    இதேபோல் தமிழகத்தில் உயர்த்தப்படும் மின் கட்டண உயர்வு சொத்து வரி கட்டிட வரைபட கட்டண உயர்வு தொழில் வரி ஆகியவற்றை திரும்ப பெற வேண்டும் என முதலமைச்சரை சந்தித்து வலியுறுத்து உள்ளோம்.

    வணிக வரித்துறை, உணவு பாதுகாப்பு துறை ஆகிய அதிகாரிகளால் வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரு சில தவறான அதிகாரிகள் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு லஞ்சம் பெறுவதற்காக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது மாற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மந்திரி சபை மாற்றப்படுவது அதிசயமான நிகழ்வு அல்ல, வாடிக்கையான ஜனநாயக நிகழ்வுதான்.
    • முதலமைச்சர் எடுக்கின்ற நிர்வாக முடிவு, இதில் விமர்சனம் செய்வது என்னை பொறுத்தவரையில் சரியானது அல்ல.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

    முதலமைச்சரின் அதிகாரத்திற்கு உட்பட்டு உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது முதலமைச்சர் எடுக்கின்ற நிர்வாக முடிவு, இதில் விமர்சனம் செய்வது என்னை பொறுத்தவரையில் சரியானது அல்ல. ஒரு முதலமைச்சருக்கோ பிரதம மந்திரிக்கோ முழு அதிகாரம் உண்டு, யாரை வேண்டுமானாலும் அவர்கள் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளலாம்.

    மந்திரி சபை மாற்றப்படுவது அதிசயமான நிகழ்வு அல்ல, வாடிக்கையான ஜனநாயக நிகழ்வுதான். இந்திய அளவில் குடும்பங்களை மையமாக வைத்துதான் அரசியல் கட்சிகள் இயங்குகின்றன. காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும் சரி மாநில கட்சிகள் பலவாக இருந்தாலும் சரி இது புரிவதில்லை. கட்சியில் இருப்பவர்கள் ஒருவரை தலைவராக ஏற்றுக் கொண்டு விட்டால் அதனை கட்சிக்கு வெளியே உள்ளவர்கள் விமர்சனம் செய்வது என்னை பொறுத்தவரையில் உகந்ததாக இருக்காது.

    செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர எந்த விதமான தடையும் கிடையாது, தண்டனை பெற்றால் மட்டுமே அமைச்சர் பதவியை ஏற்க முடியாது. அப்படி வழக்கு போட்டவர்கள் எல்லாம் அமைச்சராக முடியாது என்றால் பாஜக நினைத்தால் எல்லோர் மீதும் வழக்கு போட்டு யாரையுமே அமைச்சராக பதவி ஏற்க விடாமல் செய்துவிடும். கூட்டணி என்ற முறையில் நாங்கள் (காங்கிரஸ்) திமுகவோடு தோலோடு தோலாகதான் நிற்கின்றோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காருக்குள் கிடந்த 5 பேரும் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • தற்கொலை செய்த தொழில் அதிபர் புதுக்கோட்டை சிப்காட் பகுதியில் தொழில் செய்து வந்ததாக தெரிகிறது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அருகே உள்ள நமுன சமுத்திரம் பகுதியில் நகர சிவ மடம் உள்ளது. இதன் காவலாளியாக அடைக்கலம் என்பவர் உள்ளார்.

    இந்த மடத்தில் இறந்தவர்களுக்கு ஒரு சமூகத்தைச் சேர்ந்த உறவினர்கள் இறுதி காரியங்கள் செய்து வருகின்றனர். இங்கு நேற்று மாலை டி.என். 77 எம். 1705 எண் கொண்ட ஒரு கார் வந்தது. அதில் மூன்று பெண்கள் உட்பட 5 பேர் இருந்தனர்.

    இவர்கள் நேற்று மாலை அப்பகுதியில் நடமாடியதை சிலர் பார்த்துள்ளனர். பின்னர் வெளியே சென்றுவிட்டு திரும்பினர். இன்று காலை அந்தக் கார் வெகு நேரமாகியும் அங்கிருந்து புறப்படவில்லை.

    இதனால் அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் அருகில் சென்று பார்த்தபோது 5 பேரும் பேச்சு மூச்சு இல்லாமல் இருக்கைகளில் சாய்ந்து கிடந்தனர். உடனே காவலாளி அடைக்கலம் நமுன சமுத்திரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். அப்போது காருக்குள் கிடந்த 5 பேரும் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. தற்கொலை செய்தவர்கள் சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த தொழிலதிபர் மற்றும் அவரது குடும்பத்தை சார்ந்தவர்கள்.

    தற்கொலை செய்த தொழில் அதிபர் புதுக்கோட்டை சிப்காட் பகுதியில் தொழில் செய்து வந்ததாக தெரிகிறது. சேலத்திலும் அவர்கள் தொழில் நடத்தி வந்துள்ளனர். ஆனால் பெயர் விபரங்கள் குறித்து விசாரணை நடத்து வருகிறது.

    ஒரு தாய் மகள், தந்தை மகன் மாமியார் உறவு முறையாக இருக்கலாம் என கருதப்படுகிறது. காரில் போலீசார் சோதனை போட்டனர். அப்போது அங்கு ஒரு கடிதம் சிக்கியது. அதில் கடன் தொல்லை காரணமாக 5 பேரும் தற்கொலை செய்வதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

    சம்பவ இடத்துக்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் தடயங்களை சேகரித்தனர்.

    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் காருக்குள் விஷம் குடித்து பிணமாக கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூகவலைத்தளத்தை பயன்படுத்தி ஆன்லைன் மோசடி அரங்கேறி வருகிறது.
    • பொதுமக்கள் உஷாராக இருந்து செயல்பட விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை:

    இன்றைய நவீல உலகில் இணையதள பயன்பாடு அதிகமாக உள்ளது. சமூகவலைத்தளங்களை பார்வையிடுதல், அதில் பதிவேற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் பலரும் ஈடுபடுகின்றனர். இதற்கிடையில் வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூகவலைத்தளத்தை பயன்படுத்தி ஆன்லைன் மோசடியும் அரங்கேறி வருகிறது.

    இந்த சூழலில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மு.அருணா பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கப்பட்டிருந்தது. அந்த முகநூல் பக்கத்தில் இருந்த தகவல்கள் சந்தேகத்திற்கு இடமான வகையில் காணப்பட்டது. இதனால் பலரும் சந்தேகமடைந்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    இதை அறிந்த கலெக்டர் மு.அருணா இதுபற்றி சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதை தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் கலெக்டர் அருணாவின் பெயரில் போலி முகநூல் கணக்கை தொடங்கியது ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கும்பல் என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த போலி முகநூல் கணக்கை போலீசார் முடக்கினர்.

    சமூக வலைதளங்களில் உலாவரும் இதுபோன்ற மோசடிகளை தடுக்க சைபர் கிரைம் போலீசாரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். பொதுமக்கள் சிலரது பெயரில் போலி கணக்குகளை தொடங்கி அதன் மூலம் தற்போது பண மோசடி நடைபெறுவது அதிகரித்து வருகிறது. இதனால் போலி கணக்குகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

    உங்கள் நண்பரின் சுய விவரத்தை பயன்படுத்தி போலி சமூக ஊடக கணக்கை தொடங்கி உங்களின் தனிப்பட்ட தகவலை பெறுவதற்கும் அல்லது அவசர நிலையை காரணம் காட்டி பணம் கேட்கவும் நட்பு கோரிக்கை விடுப்பார்கள். இதனால் பொதுமக்கள் உஷாராக இருந்து செயல்பட விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    மேலும் இதுபோன்ற மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் சைபர் கிரைம் போலீசில் 1930 என்ற உதவிமைய தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம். மேலும் https://cybercrime.gov.in-ல் புகார் அளிக்கலாம் என போலீசார் தரப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    • தை பொங்கல் விழா மற்றும் புரட்டாசி மாதம் காய்கறி திருவிழா வெகு சிறப்பாக, கொண்டாப்படுவது வழக்கம்.
    • அனைவரும் ஒன்றாக இருக்கிறோம் என்பதை உணர்த்தவே இந்த பிரசாதம் வழங்கப்படுகிறது.

    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே மெய்வழிச்சாலையில் மறலி கைதீண்டா சாலை ஆண்டவர்கள் மெய்மதம் என்னும் ஒரு மதத்தினர் உள்ளனர். இவர்கள் தங்கள் பெயருக்கு முன்பாக சாலை என சேர்த்துக்கொள்வார்கள்.

    இந்த மெய்வழி மதத்தில் 69 ஜாதிகளை சேர்ந்தவர்கள் ஒன்றாக உள்ளனர். இங்கு ஆண்டு தோறும் கார்த்திகை, தை பொங்கல் விழா மற்றும் புரட்டாசி மாதம் காய்கறி திருவிழா வெகு சிறப்பாக, கொண்டாப்படுவது வழக்கம்.

    அதன்படி மெய்வழி தலையுக ஆண்டு புரட்டாசி மாதம், பிச்சை ஆண்டவர் திருவிழா கொண்டாடப்பட்டது. இதில் மெய்வழி ஆலய வளாகத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து காய்கறிகள், அரிசி, பருப்பு ஆகியவற்றை வைத்துக்கொண்டு வரிசையாக நின்றனர்.

    அப்போது மெய்வழி சபைக்கரர் சாலை வர்க்கவான் வந்து அனைவரிடமும் காய்கறிகள், அரிசி, பருப்புகளை பெற்றுக்கொண்டு ஆசீர்வாதம் வழங்கினார். பின்னர் அனைவரிடம் பெறப்பட்ட காய்கறிகள், அரிசி, பருப்பை கொண்டு சமையல் செய்து, அனைவருக்கும் சபைக்கரசர் வர்க்கவான் பிரசாதமாக வழங்கினார்.

    அனைவரும் ஒன்றாக இருக்கிறோம் என்பதை உணர்த்தவே இந்த பிரசாதம் வழங்கப்படுகிறது. இவ்விழாவில், தமிழகம் மற்றும் வெளிமாநிலம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு காய்கறிகளை படைத்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

    • ஒற்றைக் கட்சி ஆட்சி முறை என்பதுதான் கொடிய சனாதனம்.
    • ஆட்சியில் பங்கு தர முடியாது என்று சொல்லும் கட்சிகள் தனித்து நின்று தேர்தலில் சந்தித்து வெற்றி பெற வேண்டும்.

    புதுக்கோட்டை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. 100 ஆண்டு ஆட்சியில் இருக்கும் என்கிறார்கள். தமிழ்நாடு இருக்குமா? மாநில சுய ஆட்சி என்று வெற்று வார்த்தையே தவிர வேறு எதையும் வைக்கவில்லை, வசனத்தையும் திரைக்கதையையும் மாற்ற வேண்டும்.

    விஜய் அம்பேத்கருக்கும், பெரியாருக்கும் மாலை அணிவித்ததை வரவேற்கிறேன். அதேபோல் முத்துராமலிங்க தேவர், இரட்டை மலை சீனிவாசன், வேலுநாச்சியார், திரு.வி.க. உள்ளிட்டோருக்கும் தொடர்ந்து மாலை அணிவிக்க வேண்டும்.

    பெரியாரை தமிழ் தேசியத்தின் எதிரியாக நான் பார்க்கவில்லை. ஆனால் பெரியார் மட்டும் தான் எல்லாம் செய்தார் என்பதை ஏற்க முடியாது. பெரியாரும் போராடினர் என்பது தான் என் கருத்து. ஆனால் இங்கு பெரியார் தான் எல்லாம் என்று சொல்வதை நான் ஏற்கவில்லை.

    ஒற்றைக் கட்சி ஆட்சி முறை என்பதுதான் கொடிய சனாதனம். கட்சியிலிருந்து விலகுபவர்கள் அவர்களாக போகிறார்கள். அவர்களை நாங்கள் நீக்கல் கடிதம் கொடுத்து நீக்கவில்லை. அவர்கள் குற்றச்சாட்டை மட்டும் தான் வைக்கிறார்கள். பட்டுப்போன சறுகு கீழ விழுந்தால் சத்தம் கேட்க தான் செய்யும்.

    தேசிய இனத்திற்கு தலைமை ஏற்று இருக்க வேண்டும் என்றால் திரைத்துறை மட்டும் பற்றாது, துணிவு வேண்டும். நமது வரலாறு, மொழி உள்ளிட்டவற்றை கற்றுக்கொண்டு விஜய் வரவேண்டும். வருவார் என்ற நம்பிக்கை உள்ளது. விஜய் செய்தியாளர்களை சந்திக்கும்போது தனித்து நிற்பாரா அல்லது சீமானோடு கூட்டணி வைப்பாரா என்று கேட்க வேண்டும்.

    நிதிஷ் குமாரும் சந்திரபாபு நாயுடுவும், பா.ஜ.க. ஆதரவை விட்டு விலகினால் தி.மு.க. 22 பாராளுமன்ற உறுப்பினர்களோடு நிச்சயம் பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளிக்கும்.

    ஆட்சியில் பங்கு தர முடியாது என்று சொல்லும் கட்சிகள் தனித்து நின்று தேர்தலில் சந்தித்து வெற்றி பெற வேண்டும். 2026 தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டி. விஜய் அரசியலுக்கு வந்ததால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. எங்களால் தான் மற்றவர்களுக்கு பாதிப்பு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக நம் தமிழர் கட்சியுடன் விஜய் கூட்டணி வைப்பாரா? என்ற கேள்விக்கு சீமான் பதில் அளிக்கையில், என்னுடன் கூட்டணிக்கு யாரும் வருவார், போவார் என்று நான் எதிர்பாரக்கவில்லை. விஜய் வந்த பிறகு தான் அவர் கொள்கை என்ன சொல்கிறார் என்று பார்க்க வேண்டும். நான் தமிழ் தேசிய தத்துவத்தில் உள்ளேன் என்றார்.

    • கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் விசாரணை.
    • அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னகரம் மீனவ கிராமத்தில் இருந்து நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். சுமார் 9 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கே அடையாளம் தெரியாத, 50 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் நாட்டுப்படகு ஒன்றில் மிதந்து கொண்டிருந்தது. அதனை பார்த்த மீனவர்கள் உடனடியாக அந்த படகு மற்றும் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் சம்பவம் குறித்து கடலோர பாதுகாப்பு குழுமத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் உடலை கைப்பற்றி மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் சம்பவம் குறித்து விசாரித்ததில், கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு ராமேஸ்வரம் ஓலைக்குடா பகுதியை சேர்ந்த பன்னீர்ச்செல்வம் என்பவரின் காணாமல்போன நாட்டுப்படகு என்பது தெரிய வந்துள்ளது.

    அதனை தொடர்ந்து பன்னீர் செல்வத்திடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காணாமல் போன நாட்டுப்படகில் ஆண் உடல் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • முதலமைச்சர் அமெரிக்கா சென்று 17 நாட்கள் தங்கி 7500 கோடி முதலீடு திரட்டியதாக சொல்கின்றனர்.
    • சந்திரபாபு நாயுடு ஏழு நாட்கள் மட்டும் அமெரிக்கா சென்று 33,000 கோடி தொழில் முதலீட்டை திரட்டினார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் தே.மு.தி.க. முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் கலந்து கொண்டார். முன்னதாக பழைய பேருந்து நிலையத்தில் கட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாமை அவர் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:-

    தே.மு.தி.க. 20-வது ஆண்டு எட்டிபுள்ளதை முன்னிட்டு கட்சியில் முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது. தேமுதிக கட்சி 20வது ஆண்டு விழா மற்றும் கேப்டன் விஜயகாந்திற்கு பத்மபூஷன் வழங்கியதற்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா நடைபெறுகிறது. தேமுதிக நான்கு சட்டமன்றத் தேர்தல், நான்கு பாராளுமன்றத் தேர்தல், மூன்று உள்ளாட்சித் தேர்தல் சந்தித்து வலுவான கட்சியாக உள்ளது. 2026 தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி தொடரும்.

    தொல். திருமாவளவன் நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தால் அது குறித்து ஆலோசனை செய்யப்படும். சிறுவர்களுக்கான வன்கொடுமை தமிழகத்தில் அதிகரித்துள்ளது. அனைத்து சிறு கிராமங்களில் கூட கஞ்சா விற்பனை உள்ளது. இதை போல் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும். மேற்கு வங்காளத்தில் இயற்றியது போல் கடுமையான சட்டம் இயற்ற வேண்டும். முதலமைச்சர் அமெரிக்கா சென்று 17 நாட்கள் தங்கி 7500 கோடி முதலீடு திரட்டியதாக சொல்கின்றனர். ஆனால் சந்திரபாபு நாயுடு ஏழு நாட்கள் மட்டும் அமெரிக்கா சென்று 33,000 கோடி தொழில் முதலீட்டை திரட்டினார். ஏற்கனவே போர்டு நிறுவனம் தமிழகத்தில் இருந்தது தான். அதை மீண்டும் கொண்டு வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், நகரச் செயலாளர் பரமஜோதி உட்பட பலர் இருந்தனர்.

    • அ.தி.மு.க ஆட்சியில் நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் தரப்பட்டது.
    • உள்ளாட்சி தேர்தல் என்றாலும், சட்டமன்ற தேர்தல் என்றாலும் அதனை சந்திக்க அ.தி.மு.க. தயாராக உள்ளது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் முத்துபேட்டையில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திருச்சியில் இருந்து கார் மூலம் புதுக்கோட்டை வந்தார். மாவட்ட எல்லையில் அவருக்கு புதுக்கோட்டை அ.தி.மு.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பின்னர் அவர் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அதனை தொடர்ந்து புதுக்கோட்டைக்கு வந்த அவர் நிருபர்ளை சந்தித்தார்.

    அரசு பள்ளியில் படித்த மாணவ, மாணவிகளுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு என்பது அ.தி.மு.க. அரசு காலத்தில் கொண்டு வரப்பட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள அரசு பள்ளியில் பயின்றவர்களில் 3 ஆயிரம் பேரின் டாக்டர் கனவு ஆண்டு தோறும் நனவாகி வருகிறது. இதற்கு காரணம் அ.தி.மு.க. அரசுதான்.

    2018-19ம் ஆண்டில் அரசு பள்ளியில் பயின்ற 30 பேர் மட்டுமே மருத்துவ படிப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்ட பிறகு அதிக அளவிலான மாணவ, மாணவிகள் மருத்துவ படிப்பிற்கு வருகின்றனர்.

    அ.தி.மு.க ஆட்சியில் நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. இதன் காரணத்தால்தான் காவிரி-குண்டாறு திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. இதற்காக 14 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டு, முதற்கட்டமாக 70 கோடி ஒதுக்கப்பட்டு திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால் இதனை தி.மு.க. அரசு கிடப்பில் போட்டு உள்ளது. நான் ஒரு விவசாயி என்பதால் விவசாயத்திற்கு நீர் மேலாண்மை அவசியம் குறித்து நன்கு அறிவேன். எனவே அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் மீண்டும் இந்த திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும். ஏனெனில் இத்திட்டம் நிறைவுற்றால் புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகள் பலன் பெறுவார்கள்.

    40 மாத கால தி.மு.க. ஆட்சியில் தினந்தோறும் கொலை, கொள்ளை, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்டவைகள் நடைபெற்று சட்ட, ஒழுங்கு மிகவும் சீர்கெட்டு, சந்தி சிரித்துக்கொண்டிருக்கிறது. நாங்கள் தேர்தலை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவெடுப்போம். 2026 வலுவான கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டு அ.தி.மு.க. ஆட்சியை கைப்பற்றும். தொழிற்சாலை நிறைந்த மாநிலமாக மாறினால்தான் பொருளாதாரம் மேன்மை அடையும். 2015ம் ஆண்டு ஜெயலலிதா தொழில் முதலீட்டு மாநாட்டை நடத்தினார். 2019ம் ஆண்டு எனது தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் 3 லட்சம் கோடி தொழில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு, பூர்வாங்க பணி ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அதற்குள் ஆட்சி மாற்றம் வந்து விட்டது.

    தற்போதைய தி.மு.க. ஆட்சியில் அதிக அளவில் புரிந்துணர்வு ஒப்பந்தம், தொழில் முதலீட்டை ஈர்த்து வருவதாக கூறுகிறார்கள். நான் உள்பட எதிர்கட்சிகள் கேட்பதை போல இது குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்.

    விஜய் கட்சி மாநாட்டிற்கு அனுமதி மறுப்பது கண்டிக்கத்தக்கது. எங்கள் ஆட்சியில் மாநாடு, பொதுக்கூட்டம் நடத்தினாலும் அனுமதி அளித்து, போலீஸ் பாதுகாப்பும் கொடுப்போம். ஆனால் தற்போது அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடத்த கூட தி.மு.க. அரசு அனுமதி அளிக்க மறுக்கிறது. நீதிமன்றம் சென்று அனுமதி பெறக்கூடிய நிலைஉள்ளது.

    உள்ளாட்சி தேர்தல் என்றாலும், சட்டமன்ற தேர்தல் என்றாலும் அதனை சந்திக்க அ.தி.மு.க. தயாராக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசுப்பள்ளிகளில் சனாதன சக்திகளில் ஊடுருவல் அதிகரித்துள்ளது.
    • அறிவியலுக்கு புறம்பான கருத்துக்களை பரப்புபவர்களை அடையாளம் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னையில் சைதாப்பேட்டை மற்றும் அசோக் நகரில் உள்ள அரசுப் பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரம்பொருள் பவுண்டேஷன் அமைப்பைச் சேர்ந்த மகாவிஷ்ணு ஊக்கப்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்துவதாகக் கூறி உரையாற்றினார்.

    கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டு இருக்கிறது என்று மாணவர்கள் மத்தியில் அவர் பேசினார். மாணவிகள் அழகாக இல்லாததற்கும், மாற்றுத் திறனாளிகள், ஏழைகள் ஆகியோரது நிலைக்கும் முன் ஜென்ம பாவம் தான் காரணம் என்று மகாவிஷ்ணு பேசியிருந்தார்.

    இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி அனைத்து தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய மகாவிஷ்ணுவை போலீசார் விமான நிலையத்தில் வைத்தே கைது செய்தனர். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதனையடுத்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மகாவிஷ்ணுவை வருகிற 20 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர் இப்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், "அரசுப்பள்ளிகளில் சனாதன சக்திகளின் ஊடுருவல் அதிகரித்துள்ளது. தன்னம்பிக்கை ஊட்டும் பேச்சாளர் என்ற பெயரில் பலர் அரசு கல்வி நிறுவனங்களில் ஊடுருவி தமது கருத்துக்களை திணித்து வருகின்றனர்.

    சென்னை அசோக் நகர், சைதாப்பேட்டை அரசுப்பள்ளிகளில் மாணவர்களிடம் அறிவியலுக்கு புறம்பான கருத்துக்களை ஆன்மிகம் என்ற பெயரில் பேசிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அறிவியலுக்கு புறம்பான கருத்துக்களை பரப்புபவர்களை அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மாற்றுத்திறனாளிகளாக இருப்பவர்கள், அழகில்லாமல் இருப்பவர்கள் போன பிறவியில் பாவம் செய்தவர்கள் என்று அவர் பேசியுள்ளார். ஆகவே அவரை போலீசார் கைது செய்தது சரியான நடவடிக்கை தான்" என்று பேசியுள்ளார்.

    ×