search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோப்பநாய்கள் மூலம் சிறுத்தையை தேடும் பணி தீவிரம்
    X

    மோப்பநாய்கள் மூலம் சிறுத்தையை தேடும் பணி தீவிரம்

    • சிறுத்தையை பிடிக்க கூண்டுகள் அமைப்பதற்கு வேறு இடம் தேர்வு செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.
    • சிறுத்தை பிடிப்படாததால் சித்தர்காடு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு செம்பங்குளம் பகுதியில் கடந்த 2-ம் தேதி இரவு சிறுத்தை நடமாட்டம் இருந்ததை பொதுமக்கள் பார்த்தனர். சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறையினர் உறுதி செய்தனர்.

    சிறுத்தையின் நடமாட்டத்தால் கடந்த 3,4,5 தேதிகளில் ஆரோக்கிய நாதபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது, கடந்த 5-ந்தேதி 10-ம் வகுப்பு பொது தேர்வை பலத்த பாதுகாப்புடன் மாணவ, மாணவிகள் எழுதினர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் சித்தர் காடு பகுதியில் ஒரு ஆடும், நேற்று மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் ஒரு ஆடும் கடிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்து கிடந்தது. இது சிறுத்தை தான் அடித்து கொன்றததா? என கண்டறிய ஆடுகளின் உடல் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவில் தான் சிறுத்தை ஆடுகளை அடித்து கொன்றதான என தெரிய வரும்.


    இந்நிலையில் சிறுத்தையை பிடிக்க 30- க்கும் மேற்பட்ட வனத்துறை குழுக்கள் அமைத்து, ஆனைமலை புலிகள் காப்பத்தில் இருந்து வந்த வன காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் உள்ளிட்டோர் ஒன்றிணைந்து சித்தர்காடு, ஆரோக்கியநாதபுரம், அசிக்காடு, மறையூர் சுற்று வட்டார பகுதியில் முழுவதையும் கண்காணித்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். மேலும் மோப்பநாய்கள் வரவழைக்கப்பட்டு தேடுதல் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    16 இடங்களில் தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. தெர்மல் ட்ரோன் கேமரா மூலம் தொடர்ந்து இன்று 5-வது நாளாக தேடுதல்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் வைக்கப்பட்டுள்ள 9 கூண்டுகளை இன்று காலை வனத்துறையினர் ஆய்வு செய்தனர். அதில் எதிலும் சிறுத்தை சிக்கவில்லை. இந்த கூண்டுகளில் உயிருடன் ஆடுகள் வைக்கப்பட்டுள்ளது.

    அதன் சத்தம் கேட்டு சிறுத்தை வரும் என வனத்துறையினர் எதிர்பார்த்த நிலையில் சிறுத்தை சிக்காதது வனத்துறையினருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. தொடர்ந்து இன்றும் வனத்துறையினர் தேடுதல் வேட்டையை தீவிரபடுத்தியுள்ளனர்.

    மயிலாடுதுறை சித்தர்காடு ரெயில் தண்டவாளம் பாலத்தில் இன்று வனத்துறையினர் கழிவுகளை சேகரித்தனர். அது சிறுத்தையின் கழிவாக? என சோதனை செய்து வருகின்றனர்.

    முன்னதாக சென்னையில் இருந்து வந்த கூடுதல் முதன்மை தலைமை வனக்காளர் நாகநாதன் சிறுத்தை தேடும் பணியை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சிறுத்தையை பிடிக்க கூண்டுகள் அமைப்பதற்கு வேறு இடம் தேர்வு செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.

    எனினும் 5 நாட்களாகியும் சிறுத்தை பிடிப்படாததால் ஆராக்கியநாதபுரம், சித்தர்காடு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

    Next Story
    ×