search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாக்குச்சாவடியில் பெண் தன்னார்வலர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
    X

    வாக்குச்சாவடியில் பெண் தன்னார்வலர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

    • சாந்தி திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
    • குழந்தைகளுக்கு அரசு உதவி வழங்கி வேலை வழங்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்த குஞ்சார்வலசை பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 10 மற்றும் 11 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மீன்பிடி தொழிலுக்காக வெளிநாட்டிற்கு சென்ற சங்கர் கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார். இதனையடுத்து தனது மகள்களுடன் குஞ்சார்வலசையில் சாந்தி தனியாக வசித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலுக்காக வேதாளை அரசு மேல் நிலைப்பள்ளியில் தேர்தல் பணிகள் உதவிக்காக ஊராட்சி மன்றம் சார்பில் சாந்தி தன்னார்வலராக நியமிக்கப்பட்டு நேற்று காலை 6 மணி முதல் மாலை 5.30 மணி வரை தொடர்ந்து வேதாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்கு பதிவு மையம் ஒன்றில் பணி செய்து வந்தார்.

    இந்நிலையில் மாலை 6 மணிக்கு தேர்தல் முடிவடைய இருந்த நிலையில் தனது வாக்கை பதிவு செய்வதற்காக அதே பள்ளியில் உள்ள மற்றொரு வாக்குப்பதிவு மையத்தில் தனது வாக்கை பதிவு செய்துவிட்டு அறைக்கு வெளியே வந்தபோது சாந்தி திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

    இதனையடுத்து வாக்குச்சாவடி மையத்தில் இருந்த மருத்துவர்கள் சாந்தியை பரிசோதனை செய்து பார்த்தபோது சாந்தி உயிரிழந்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து உடலை கைப்பற்றிய மண்டபம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

    கணவரை இழந்து தனியாக தனது குழந்தைகளுடன் வாழ்ந்து உயிரிழந்ததால் குழந்தைகளின் எதிர்காலம் கேள்வி குறியாகி உள்ளது. எனவே குழந்தைகளுக்கு அரசு உதவி வழங்கி வேலை வழங்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×