search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நாடு முழுவதும் கோர்ட்டுகளில் 5 கோடிக்கும் அதிகமான வழக்குகள் தேக்கம்- மத்திய அரசு
    X

    நாடு முழுவதும் கோர்ட்டுகளில் 5 கோடிக்கும் அதிகமான வழக்குகள் தேக்கம்- மத்திய அரசு

    • பணிபுரியும் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்குவதை கட்டாயமாக்கும் பரிந்துரை எதுவும் அரசிடம் இல்லை.
    • நாடு முழுவதும் 6 வயதுக்கு உட்பட்ட 8.57 கோடி குழந்தைகளை ஆய்வு செய்ததில் 35 சதவீதம் பேர் வளர்ச்சி குன்றியவர்களாக கண்டறியப்பட்டு உள்ளனர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது பல்வேறு துறை தொடர் பாக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அந்தந்த துறை மந்திரிகள் பதிலளித்தனர்.

    இதில் முக்கியமாக கோர்ட்டுகளில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் தொடர்பாக சட்டத்துறை மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால், எழுத்து மூலம் பதிலளித்து இருந்தார்.

    அதில் அவர், 'நாடு முழுவதும் உள்ள கோர்ட்டுகளில் 5 கோடிக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் சுப்ரீம் கோர்ட்டில் 84,045 வழக்குகளும், பல்வேறு ஐகோர்ட்டுகளில் 60.11 லட்சம் வழக்குகளும் நிலுவையில் இருக்கின்றன' என்று குறிப்பிட்டு இருந்தார்.

    மாவட்ட மற்றும் துணை கோர்ட்டுகளில்தான் 4.53 கோடிக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவித்த மேக்வால், இதில் 1.18 கோடிக்கும் அதிகமான வழக்குகள் உத்தரபிரதேச கோர்ட்டுகளில் உள்ளதாகவும் கூறினார்.

    இந்த நிலுவைக்கான பின்னணியில் உள்கட்டமைப்பு வசதி குறைபாடு, ஊழியர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    ஐகோர்ட்டு நீதிபதி நியமனங்கள் தொடர்பாக ஐகோர்ட்டு கொலீஜியம் அனுப்பியுள்ள 205 பரிந்துரைகள் அரசின் பரிசீலனையில் இருப்பதாகவும் அர்ஜுன் ராம் மேக்வால் கூறினார்.

    இதைப்போல ஆயுஷ்மான் பாரத் தொடர்பான கேள்விகளுக்கு சுகாதாரத்துறை இணை மந்திரி பிரதாப் ராவ் ஜாதவ் பதிலளித்தார்.

    அவர் கூறும்போது, 'ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களை இணைக்கும் வகையில் நிபுணர் குழு எதையும் அமைக்கவில்லை. இதைப்போல பிரீமியம் பங்களிப்பின் அடிப்படையில் தற்போதுள்ள பயனாளிகளுக்கு மேல் திட்டத்தை விரிவுபடுத்தும் பரிந்துரை எதுவும் இல்லை' என்று தெரிவித்தார்.

    அனைத்து பணியிடங்களிலும் பணிபுரியும் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்குவதை கட்டாயமாக்கும் பரிந்துரை எதுவும் அரசிடம் இல்லை என பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி அன்னபூர்ணா தேவி மக்களவையில் பதிலளித்தார்.

    10 முதல் 19 வயதுக்குட்பட்ட இளம்பெண்களிடையே மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டத்தை அரசு செயல்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

    நாடு முழுவதும் 6 வயதுக்கு உட்பட்ட 8.57 கோடி குழந்தைகளை ஆய்வு செய்ததில் 35 சதவீதம் பேர் வளர்ச்சி குன்றியவர்களாக கண்டறியப்பட்டு உள்ளதாக கூறிய அன்னபூர்ணா தேவி, 17 சதவீதம் பேர் எடை குறைவாகவும், 6 சதவீதம் பேர் கடுமையான ஊட்டச்சத்து குறைவுடன் காணப்பட்டதாகவும் தெரிவித்தார்.

    வளர்ச்சி குன்றிய குழந்தைகளில் அதிகபட்சமாக 46.36 சதவீதம் பேர் உத்தரபிரதேசத்தில் கண்டறியப்பட்டதாகவும், லட்சத்தீவுகள், மராட்டியம், மத்திய பிரதேசம் போன்றவை அடுத்தடுத்த இடங்களில் இருப்பதாகவும் கூறினார்.

    கடந்த 5 ஆண்டுகளில் 633 இந்திய மாணவர்கள் பல்வேறு காரணங்களால் வெளிநாடுகளில் இறந்திருப்பதாக வெளியுறவு இணை மந்திரி கீர்த்திவர்தன் சிங் தெரிவித்தார். இதில் அதிகபட்சமாக 172 பேர் கனடாவில் மரணித்ததாகவும் அவர் கூறினார்.

    இதற்கிடையே மாநிலங்களவையில் ரெயில்வே தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் எழுத்து மூலம் பதிலளித்தார்.

    அப்போது அவர், 22 பெட்டிகளை கொண்ட மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 12 பெட்டிகள் ஏ சி அல்லாத பொது மற்றும் படுக்கை வசதி கொண்டவையாகவும், 8 பெட்டிகள் பல்வேறு நிலையிலான ஏ சி பெட்டிகளாவும் இருக்கும் என தெரிவித்தார்.

    உஞ்சாகர்-அமேதி ரெயில் வழித்தடம் தொடர்பாக மறுஆய்வு செய்ய இருப்பதாக கூறிய அஸ்வினி வைஷ்ணவ். ஏற்கனவே திட்டமிடப்பட்ட வழித்தடம் சலோன் தொழில்துறை பகுதி வழியாக செல்வதால் சாத்தியமில்லை என கண்டறியப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

    Next Story
    ×