என் மலர்
இந்தியா

145 நாட்களில் இல்லாத அளவில் அதிகரிப்பு- கொரோனா தினசரி பாதிப்பு 1,590 ஆக உயர்வு
- கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 910 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 62 ஆயிரத்து 832 பேர் குணமடைந்துள்ளனர்.
- ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
புதுடெல்லி:
இந்தியாவில் இன்று காலை 8 வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,590 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பாதிப்பு நேற்று முன்தினம் 1,300 ஆகவும், நேற்று 1,249 ஆகவும் இருந்த நிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது.
கடந்த அக்டோபர் 30-ந் தேதி நிலவரப்படி பாதிப்பு 1,604-ஆக இருந்தது. அதன்பின்னர் 145 நாட்களில் இல்லாத அளவில் அதிகபட்ச தினசரி பாதிப்பாக இன்று ஏற்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 343 பேர், குஜராத்தில் 241 பேர், கேரளாவில் 223 பேர், டெல்லியில் 152 பேர், கர்நாடகாவில் 131 பேர், இமாச்சலபிரதேசத்தில் 100 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 47 லட்சத்து 2 ஆயிரத்து 257 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 910 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 62 ஆயிரத்து 832 பேர் குணமடைந்துள்ளனர்.
ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி 8,601 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது நேற்றைவிட 674 அதிகமாகும்.
கொரோனா பாதிப்பால் நேற்று முன்தினம் 2 பேர் பலியாகி இருந்தனர். இந்நிலையில் நேற்று பலி எண்ணிக்கை சற்று அதிகரித்து உள்ளது.
அதாவது மகாராஷ்டிராவில் 3 பேர், கர்நாடகா, ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீரில் தலா ஒருவர் என நேற்று ஒரே நாளில் 6 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,30,824 ஆக அதிகரித்துள்ளது.