search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருப்பூர் காப்பகம் மூடப்படும்- அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி

    • காப்பகம் பாதுகாப்பற்ற முறையில் உள்ளது. இரவு நேரத்தில் வார்டன் உடன் இல்லை.
    • காப்பகத்தின் நிர்வாகியின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி அருகே உள்ள விவேகானந்தா சேவாலயம் காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட மூன்று சிறுவர்கள் நேற்று உயிரிழந்தனர். மேலும் 11 சிறுவர்களுக்கு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், அமைச்சர் மு.பி.சாமிநாதன் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி மணிவாசன், சமூக நலத்துறை இயக்குனர் வளர்மதி, திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் மற்றும் அதிகாரிகள் மாணவர்கள் தங்கி இருந்த காப்பகத்தில் ஆய்வு செய்தனர். இப்போது மாணவர்கள் தங்கி இருந்த அறை, சமையல் கூடம் மற்றும் உணவு அருந்தும் இடம், இடங்களை ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மாணவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்கள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

    பின்னர் தி.மு.க. கட்சி சார்பில் உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1லட்சம் பணமும் சிகிச்சை பெறும் மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிதி உதவியாக அமைச்சர்கள் வழங்கினார்கள்.

    ஆய்வுக்கு பின்னர் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    3 மாணவர்கள் பலியான சம்பவம் அறிந்து தமிழக முதல்வர் மிகவும் வருத்தப்பட்டார்.

    உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து இன்று சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டோம். அப்போது காப்பகம் பாதுகாப்பற்ற முறையில் உள்ளது. இரவு நேரத்தில் வார்டன் உடன் இல்லை. நிர்வாகத்தின் மெத்தன போக்கால் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. எனவே காப்பகத்தின் நிர்வாகியின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    மாணவர்கள் தங்குமிடம் குறுகலான தகர கொட்டகையாக உள்ளது. இதனை முறையான ஆய்வு செய்யாத மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மாணவர்களின் உயிரிழப்புக்கு காரணமான காப்பகம் மூடப்படுகிறது. காப்பகத்தில் உள்ள மாணவர்கள் ஈரோட்டில் உள்ள காப்பகத்தில் பராமரிக்கப்படுவார்கள்.

    காப்பகத்தில் மாணவர்களுடன் தங்கியிருந்த நபர் வேறு அறையில் தங்கி இருந்துள்ளார். இவர்களின் அஜாக்கிரதை காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அஜாக்கிரதை கண்கூடாக தெரிகிறது.

    தயாரிக்கப்பட்ட வெளி உணவுகளை வாங்குவது சட்டப்படி தவறு. அதிலும் தவறு செய்துள்ளார்கள். நிர்வாகி செந்தில்நாதன் மீது வழக்கு பதிவு செய்யப்படும்.

    அனைத்து காப்பகங்களிலும் ஆய்வு நடத்தப்படும். வெளியில் தயாரிக்கப்பட்ட உணவுகளை காப்பகங்களில் பெறக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×