search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    தமிழகத்தில் புதிய திட்டம் அறிமுகம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வை தொடங்கினார்

    • வேலூரில் சத்துவாச்சாரி பாரதி நகரில் கட்டப்பட்டு வரும் சுகாதார நல மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
    • பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்க செய்யப்பட்ட சிற்றுண்டியைச் சாப்பிட்டு தரத்தை ஆய்வு செய்தார்.

    வேலூர்:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "கள ஆய்வில் முதல்வர்" என்ற புதிய திட்டத்தை தொடங்கி உள்ளார். இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக சென்று பல்வேறு திட்ட பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்கிறார்.

    தமிழ்நாட்டில் முதன் முறையாக வேலூரில் கள ஆய்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்ட ஆய்வு பணியை தொடங்கி உள்ளார். இதற்காக ரெயில் மூலம் சென்னையில் இருந்து நேற்று காட்பாடி சென்றார்.

    காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த விழாவில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 36 மாவட்டங்களில் 2,381 ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிக்கு ரூ.784 கோடி மதிப்பில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்ட அடிக்கல் நாட்டினார்.

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கள ஆய்வுத் திட்டத்தின் முதல் ஆய்வுக் கூட்டம் நேற்று மாலை நடந்தது.

    இதில் வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினார். அப்போது போலீஸ் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

    இதனை தொடர்ந்து விவசாயிகள் மற்றும் வணிகர் சங்க நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்.

    இரவு புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஓட்டலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்கினார். இன்று காலையிலேயே மு.க. ஸ்டாலின் தனது வாகனத்தில் சென்று ஆய்வு பணியை தொடங்கினார்.

    முதலில் வேலூர், சத்துவாச்சாரி, பாரதி நகரில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சுகாதார நல மையத்தின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இம்மையத்தில் மருத்துவம் சார்ந்த தனிநபர் கண்காணிப்பு, மனநலம் சார்ந்த ஆலோசனை போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.

    தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் ஏழை எளிய மக்களுடைய குழந்தைகளின் கற்றல் இடைநிற்றலைத் தவிர்க்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டினை போக்கவும், வருகையை அதிகரிக்கவும், வேலைக்கு செல்லும் தாய் மார்களின் பணிச்சுமையை குறைக்கவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை 15.9.2022 அன்று தொடங்கி வைத்தார்.

    இத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கிட வேலூர் மாநகராட்சியில் முதற்கட்டமாக 48 தொடக்கப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, அப்பள்ளியில் பயிலும் 3249 மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இத்திட்டம் மேலும் விரிவுப்படுத்தப்பட்டு வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட 34 அரசுப் பள்ளிகளில் பயிலும் 3701 மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

    முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ், ஒரு குழந்தைக்கு ஒரு நாளைக்கு வழங்கப்படும் காலை உணவுக்கான மூலப்பொருட்களின் அளவு 50 கிராம் அரிசி, ரவை, கோதுமை ரவை, சேமியா, உள்ளூரில் விளையும் சிறுதானியங்கள் மற்றும் சாம்பாருக்கான பருப்பு 15 கிராம் மற்றும் உள்ளுரில் கிடைக்கக்கூடிய காய்கறிகள்.

    ஒரு வாரத்தில் குறைந்தது 2 நாட்களாவது உள்ளூரில் கிடைக்ககூடிய சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவு வழங்கப்படுகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று வேலூர், சத்துவாச்சாரி, சி.எம்.சி. காலனியில் செயல்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் மைய சமையற் கூடத்திற்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு மாணவர்களுக்கு உணவு தயாரிக்கும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், அங்கு உள்ள ஒவ்வொரு சமையல் அறைகளுக்கும், உணவு ஏற்றும் பகுதிக்கும் சென்று பார்வையிட்டார். உணவு தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வரும் ஊழியர்களிடம் உணவினை சுகாதாரமான முறையில் தரமாகவும், சுவையாகவும் தயாரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    பின்னர், சத்துவாச்சாரி, காந்தி நகரில் உள்ள ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளிக்கு நேரில் சென்று, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட காலை சிற்றுண்டி உணவினை உண்டு தரத்தினை ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து, அலமேலு மங்காபுரத்தில் 132 மாணவ, மாணவியர்கள் பயிலும் ஆதிதிராவிடர் நலப் பள்ளிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேரில் சென்று முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவினை உண்டு தரத்தினை ஆய்வு செய்து, மாணவர்களுக்கு உணவு பறிமாறினார்.

    இந்த ஆய்வின் போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி திங்கட்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் காய்கறி சாம்பாருடன் கூடிய உப்புமா வகைகளும், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கிச்சடி வகைகளும், வெள்ளிக்கிழமை மட்டும் இனிப்பு கேசரியும், புதன்கிழமை காய்கறி சாம்பாருடன் கூடிய பொங்கல் வகைகளும் வழங்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    மேலும், உணவினை காலை 6.30 மணிக்குள் தயாரிக்க வேண்டும். காலை 7.30 மணிக்கு பள்ளிகளில் உணவு பரிமாறப்பட வேண்டும். மாணவர்களை காத்திருக்க வைக்காமல் உடனுக்குடன் உணவு பரிமாற வேண்டும். உணவு உண்ணும் மாணவர்களின் பதிவேடு சரியான முறையில் பராமரிக்கப்பட வேண்டும். சத்தான மற்றும் தரமான உணவினை மாணவர்களுக்கு வழங்கிட அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் உணவு தயாரிக்கும் ஊழியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

    காலை உணவு நன்றாக இருக்கிறதா என குழந்தைகளிடம் கேட்டார். மேலும் பள்ளியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என அங்கிருந்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வுக்கு வந்ததை அறிந்த அந்த பகுதி மக்கள் அங்கு திரண்டனர். அவர்களது அருகில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் குறைகள் ஏதேனும் உள்ளதா என கேட்டறிந்தார். மு.க.ஸ்டாலினை பார்த்து நெகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் அவரிடம் நலம் விசாரித்ததாகவும் கூறப்படுகிறது.

    அப்போது பொதுமக்கள் சிலர் அவரிடம் மனுக்கள் அளித்தனர். இந்த ஆய்வின் போது, வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    Next Story
    ×