search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    ராட்சசி பட பாணியில் அரசு பள்ளியில் ஒரு நாள் தலைமை ஆசிரியராக பணியாற்றிய மாணவி
    X

    தலைமை ஆசிரியர் இருக்கையில் மாணவி மெய்வர்சிதா அமர்ந்திருந்ததையும், சக மாணவிகள் மத்தியில் பேசியதையும் படத்தில் காணலாம்.

    ராட்சசி பட பாணியில் அரசு பள்ளியில் ஒரு நாள் தலைமை ஆசிரியராக பணியாற்றிய மாணவி

    • பள்ளியின் தலைமை ஆசிரியை தமிழரசி, அந்த மாணவியை அழைத்து தனது இருக்கையில் அமர வைத்து, வாழ்த்தினார்.
    • தற்போது நிஜத்திலும் சில இடங்களில் ஒரு நாள் கலெக்டர், ஒரு நாள் போலீஸ் அதிகாரி என உயர் பதவிகளில் சிலர் அமர வைக்கப்படும் சம்பவமும் நடந்து வருகிறது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் ராணியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளின் படிப்பு மட்டுமில்லாமல் திறமையை ஊக்குவிப்பதற்காகவும், தலைமை பண்பை உருவாக்கும் வகையிலும் அவர்களில் சிறந்த மாணவி ஒருவரை தேர்ந்தெடுத்து அவரை பள்ளியின் தலைமை ஆசிரியையாக ஒரு நாள் பணியமர்த்த ஆசிரியர்கள் திட்டமிட்டனர். இதில் அந்த பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு உயிரியியல் பாடப்பிரிவில் ஆங்கில வழியில் படித்து வரும் மாணவி மெய்வர்சிதா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இந்த பள்ளியில் அவர் 6-ம் வகுப்பு முதல் படித்து வருகிற நிலையில், படிப்பு மற்றும் தனித்திறமையில் சிறந்து விளங்கியதாக அவரை ஆசிரியர்கள் தேர்வு செய்தனர். மேலும் நேற்று பள்ளியின் ஒரு நாள் தலைமை ஆசிரியராக மாணவி மெய்வர்சிதா பணியமர்த்தப்பட்டார்.

    பள்ளியின் தலைமை ஆசிரியை தமிழரசி, அந்த மாணவியை அழைத்து தனது இருக்கையில் அமர வைத்து, வாழ்த்தினார். மேலும் ஆசிரியர், ஆசிரியைகளும் சக மாணவிகளும் அவரை பாராட்டி வாழ்த்தினர். தலைமை ஆசிரியர் இருக்கையில் அமர்ந்த மாணவி மெய்வர்சிதா, ஆசிரியர்கள் வருகைப்பதிவேடு மற்றும் தலைமை ஆசிரியர் மேற்கொள்ளும் அன்றாட பணிகளை பார்வையிட்டார்.

    அதன்பின் வகுப்பறைகளுக்கு சென்று மாணவிகள் மத்தியில் அவர் பேசினார். அப்போது மாணவி மெய்வர்சிதா பேசுகையில், ``ஒரு நாள் தலைமை ஆசிரியையாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். மாணவிகள் அனைவரும் நம்மிடம் உள்ள தனித்திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

    பள்ளியோடு மாணவிகள் படிப்பை நிறுத்திவிடாமல் உயர்கல்வி படிக்க வேண்டும். ஆசிரியர், நீதிபதி உள்ளிட்ட பணிகளுக்கு வர வேண்டும். வாழ்க்கையில் முன்னேறி சாதிக்க வேண்டும். நீங்களும் ஒரு நாள் தலைமை ஆசிரியராக பணியாற்றக்கூடிய வகையில் திறமையை வளர்க்க வேண்டும்'' என்றார்.

    தமிழ் திரைப்பட நடிகர் அர்ஜூன் நடித்த `முதல்வன்' திரைப்படத்தில் ஒரு நாள் முதல்-அமைச்சராக அவர் பதவியேற்று செயல்படுவது போல காட்சிகள் இடம்பெற்றிருக்கும். இந்த காட்சி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. `ஒரு நாள் முதல்-அமைச்சர்' என இன்றளவும் பேசும்பொருளாக உள்ளது. இதேபோல நடிகை ஜோதிகா நடித்த `ராட்சசி' திரைப்படத்தில் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக அவர் பணிபுரிவது போலவும், அந்த பள்ளியை சிறந்த பள்ளியாக மாற்றும் முயற்சியில் பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்வது போன்றும், மாணவ-மாணவிகளை சுழற்சி முறையில் ஒரு நாள் தலைமை ஆசிரியராக பணியில் இருப்பது போன்றும், அந்த மாணவ-மாணவிகள் பள்ளியை வழி நடத்துவது போலவும் காட்சிகள் இடம்பெற்றிருக்கும். இந்த காட்சிகளும் மக்களிடம் வரவேற்பை பெற்றது.

    தற்போது நிஜத்திலும் சில இடங்களில் ஒரு நாள் கலெக்டர், ஒரு நாள் போலீஸ் அதிகாரி என உயர் பதவிகளில் சிலர் அமர வைக்கப்படும் சம்பவமும் நடந்து வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டையில் அரசு பள்ளியில் ஒரு நாள் தலைமை ஆசிரியராக மாணவி ஒருவர் பணியாற்றியது மற்ற மாணவிகளிடம் ஊக்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்தது.

    Next Story
    ×