search icon
என் மலர்tooltip icon

    சீனா

    • கப்பலில் கடல் பரப்பை கண்காணிக்கும் திறன் கொண்ட அனைத்து வசதிகளும் உள்ளன.
    • இந்திய பெருங்கடல் பகுதியில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    நமது அண்டை நாடான மாலத்தீவில் புதிய அதிபராக முகமது முய்சு பதவி ஏற்றதில் இருந்து இந்தியாவுடனான மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. சீனாவுக்கு ஆதரவானவர் என்று கருதப்படும் முகமது முய்சு இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

    இந்தியாவின் எதிர்ப்பை மீறி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சீன உளவு கப்பலை மாலத்தீவு கடற்பகுதியில் நிறுத்த அனுமதி வழங்கியது. சுமார் 6 நாட்கள் முகாமிட்டு இருந்த அந்த கப்பல் பின்னர் திரும்பி சென்றது.

    இந்த நிலையில் 4,500 டன் எடையுள்ள சியாங்- யாங்-ஹாங்-3 என்ற சீன உளவு கப்பல் மீண்டும் மாலத்தீவு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கப்பல் மாலத்தீவின் மாலேவுக்கு மேற்கு சுமார் 7.5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திலாபுஷி என்ற துறைமுகத்தில் நிலை நிறுத்தப்பட்டு உள்ளது.

    லட்சத்தீவில் உள்ள மினிசாங் தீவில் இருந்து 70 கடல் மைல் தொலைவில் இந்த துறைமுகம் அமைந்து உள்ளது. இங்கிருந்தபடி மிக எளிதாக இந்தியாவை வேவு பார்க்க முடியும்.

    இது சாதாரண ஆய்வு கப்பல் என சீனா கூறினாலும் அதிநவீன தொழில் நுட்ப வசதியுடன் கூடிய உளவு கப்பல் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கப்பலில் கடல் பரப்பை கண்காணிக்கும் திறன் கொண்ட அனைத்து வசதிகளும் உள்ளன. இந்த கப்பல் மாலத்தீவு கடற் பகுதியில் எந்தவித ஆராய்ச்சி பணியிலும் ஈடுபடாது என அந்நாட்டு வெளியுறவு துறை தெரிவித்துள்ளது.

    ஆனால் எதற்காக இந்த உளவு கப்பல் மாலத்தீவு வந்துள்ளது, எத்தனை நாட்கள் இக்கப்பல் மாலத்தீவில் நிறுத்தி வைக்கப்படும் என்பது தொடர்பாக எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. மாலத்தீவின் இந்த நடவடிக்கை அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளதால் இந்திய கடற்படை உஷார் படுத்தப்பட்டுள்ளது. இந்திய பெருங்கடல் பகுதியில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    • சீனாவில் உலகக் கோப்பை வில்வித்தை போட்டிகள் நடைபெற்று வருகிறது
    • காம்பவுண்ட் பிரிவில் இந்திய அணிகள் 3 தங்கப் பதக்கங்களை வென்று அசதியுள்ளனர்

    சீனாவில் உலகக் கோப்பை வில்வித்தை போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதில், காம்பவுண்ட் பிரிவில் இந்திய அணிகள் 3 தங்கப் பதக்கங்களை வென்று அசதியுள்ளனர்.

    ஜோதி சுரேகா, அதிதி ஸ்வாமி, பர்ணீத் கௌர் ஆகியோர் அடங்கிய மகளிர் அணி இத்தாலியை 236-225 என்ற புள்ளிகளில் வீழ்த்தி தங்கம் வென்றனர்.

    அபிஷேக் வர்மா, பிரயன்ஷ், பிரதமேஷ் ஆகியோர் அடங்கிய ஆடவர் அணி நெதர்லாந்தினை 238-231 என்ற புள்ளிகளில் வீழ்த்தி தங்கம் வென்றனர்.

    கலப்பு அணி பிரிவில் அபிஷேக் வர்மா, ஜோதி சுரேகா ஜோடி எஸ்டோனியாவை 158-157 புள்ளிகளில் வென்று தங்கம் வென்றனர்.

    நடப்பு ஆசிய விளையாட்டு சாம்பியன் ஜோதி சுரேகாவுக்கு இது இரட்டை தங்கப் பதக்கமாகும். மேலும் தனிநபர் பிரிவில் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள அவர் அரையிறுதிப் போட்டியில் தென் கொரியாவை எதிர்கொள்ள இருக்கிறார். .

    கலப்பு பிரிவில் தனி நபர் பதக்கத்திற்கான போட்டியில் பிரயன்ஷ் உள்ளார். ரீகர்வ் பதக்க சுற்றுகள் நாளை நடைபெறுகின்றன. இதில் 2 தங்கங்களை இந்தியா வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய ஆடவர் அணி தங்கப் பதக்க மோதலில் ஒலிம்பிக் சாம்பியனான தென் கொரியாவை எதிர்கொள்கிறது. அதே நேரத்தில் தீபிகா குமாரி பெண்கள் ரிகர்வ் பிரிவின் அரையிறுதியில் தென் கொரியாவை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.

    • . மழை பாதிப்பால் ஏராளமான மக்கள் வீடுகளின் மேல் தளங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
    • மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரப்பர் படகு மூலம் சென்று உணவு வழங்கப்படுகிறது.

    தெற்கு சீனாவில் தற்போது கனமழை பெய்து வருகிறது. குவாங்டாங் மாகாணத்தின் தலைநகரான குவாங்சோவில் 60.9 செ.மீ மழை பெய்துள்ளது.

    குவாங்டாங்கின் ஷென்சென் மெகாசிட்டி பகுதிகளுக்கு 'ரெட் அலர்ட்' மழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இப்பகுதியில் தொடர்ந்து பெய்த கனமழையால் திடீர் வெள்ள அபாயம் ஏற்பட்டு உள்ளது.




    ஷாவோகிங் நகரில் மழைக்கு 4 பேர் பலியாகி உள்ளனர்.குவாங்டாங் மாகாணத்தில் 2 நகரங்கள் தொடர் மழையால் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது.

    மழையால் பாதிக்கப்பட்ட மக்களை ரப்பர் படகுகளில் சென்று மீட்டு வருகின்றனர். மழை வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான கடை வீதிகள் , குடியிருப்பு பகுதிகள் மூழ்கின. மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 459 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். மழை வெள்ளத்தில் 1,500 ஹெக்டேர் விளைநில பயிர்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.

    இங்குள்ள நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. சில கிராமங்களில் நெல் மற்றும் உருளைக்கிழங்கு வயல்கள் மூழ்கின. பல இடங்களில் 2 வது மாடி வீடுகள் வரை மழை நீர் சூழ்ந்துள்ளது.




    மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரப்பர் படகு மூலம் சென்று உணவு வழங்கப்படுகிறது. மழை பாதிப்பால் ஏராளமான மக்கள் வீடுகளின் மேல் தளங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

    புவி வெப்பமடைதல் காரணமாக சீனாவில் வானிலை நிகழ்வுகள் மிகவும் தீவிரமானதாகவும் கணிக்க முடியாததாகவும் மாறியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறி உள்ளனர்.

    • மருமகள் குழந்தையுடன் வீடு திரும்பிய நிலையில், அவரை 7-வது மாடியில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து செல்ல லிப்ட் வசதி இல்லாததால் வாங் கவலை அடைந்தார்.
    • புதிதாக பிறந்த குழந்தையையும் பத்திரமாக ஏற்றி 7-வது மாடியில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

    மாமியார்- மருமகள் இடையேயான உறவு பெரும்பாலான குடும்பங்களில் எப்போதும் சண்டையாகவே இருக்கும். விதிவிலக்காக சில குடும்பங்களில் மட்டுமே மருமகள் மீது மாமியார் அதிக அன்பு காட்டுவார்.

    அந்த வகையில், சீனாவில் குழந்தை பெற்று வீடு திரும்பிய மருமகளை, லிப்ட் வசதி இல்லாததால் 7-வது மாடிக்கு அழைத்து செல்வதற்காக கிரேனை வாடகைக்கு எடுத்த மாமியாரின் செயல் இணையத்தில் பேசு பொருளாகி உள்ளது.

    சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள சென்யாங் நகரை சேர்ந்தவர் வாங். இவரின் மருமகள் கர்ப்பம் அடைந்த நிலையில், சமீபத்தில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்துள்ளது. இதனால் வாங்கின் குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்நிலையில் மருமகள் குழந்தையுடன் வீடு திரும்பிய நிலையில், அவரை 7-வது மாடியில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து செல்ல லிப்ட் வசதி இல்லாததால் வாங் கவலை அடைந்தார். இதைத்தொடர்ந்து வீட்டு உபயோக பொருட்களை எடுத்து செல்ல பயன்படுத்தப்படும் ராட்சத கிரேனை வாடகைக்கு வரவழைத்து அதில் மருமகளையும், புதிதாக பிறந்த குழந்தையையும் பத்திரமாக ஏற்றி 7-வது மாடியில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

    இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், பயனர்கள் பலரும் மாமியாரின் செயலை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • மலை ஏறுவதற்கு பயணிகள் படும் கஷ்டங்கள் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
    • வீடியோக்கள் 80 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

    சீனாவின் தைஷான் பகுதியில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தலமான தாய் மலை உள்ளது. 1,545 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த மலை கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்தது. மலையின் உச்சியை அடைவதற்கு 6,600 படிக்கட்டுகள் ஏற வேண்டும்.

    இங்குள்ள கோவிலை தரிசிக்கவும், கலாச்சார சின்னங்களை பார்ப்பதற்காகவும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் செல்கிறார்கள். ஆனால் படியில் ஏறுவதற்குள் அவர்களின் கால்கள் வலுவிழந்து சாதாரணமாக ஏற முடிவதில்லை. எனவே மலை ஏறுவதற்கு பயணிகள் படும் கஷ்டங்கள் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

    அதில் சில வீடியோக்களில், படிகள் ஏற முடியாமல் சுற்றுலா பயணிகள் ஊர்ந்து செல்லும் காட்சிகளும் உள்ளது. சில பயணிகள் பாதி படி ஏறிய நிலையில், அவர்களின் கால்கள் நடுங்கியதால் அவர்களை ஸ்ட்ரெச்சர் மூலம் தூக்கி செல்லும் காட்சிகள் எக்ஸ் தளத்தில் வெளியாகின. இந்த வீடியோக்கள் 80 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

    • இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒரு நாளைக்கு ஏழு மணிநேரம் வேலை நேரமாகும்
    • இந்நிறுவனத்தில் ஊழியர்களுக்கு 30 முதல் 40 நாள்கள் வரை வருடாந்திர விடுப்பு வழங்கப்படுகிறது

    சீனாவைச் சேர்ந்த சூப்பர் மார்க்கெட் நிறுவனமான `Fat Dong Lai' தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சோகமாக இருக்கும் நாள்களில் வருடத்தில் 10 நாட்கள் வரை கூடுதலாக விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

    இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒரு நாளைக்கு ஏழு மணிநேரம் வேலை நேரமாகும். மேலும், 30 முதல் 40 நாள்கள் வரை வருடாந்திர விடுப்பு வழங்கப்படுகிறது. சீன புத்தாண்டு காலத்தில் இந்நிறுவனம் ஐந்து நாள்களுக்கு மேல் மூடப்படுவதால் அப்போதும் ஊழியர்களுக்கு விடுமுறை தான்.

    இந்த நிறுவனத்தின் ஊழியர்களின் சராசரி மாதச் சம்பளம் 7,000 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 80,878) ஆகும்.

    "எல்லோருக்கும் அவர்கள் மகிழ்ச்சியாக இல்லாத நாட்கள் உள்ளன, எனவே நீங்கள் மகிழ்ச்சியாக இல்லாவிட்டால், வேலைக்கு வர வேண்டாம். இந்த மாற்றத்தின் மூலம், ஊழியர்கள் தங்களுடைய ஓய்வு நேரத்தை தீர்மானிக்க சுதந்திரமாக இருப்பார்கள். இந்த விடுப்பை நிர்வாகத்தால் மறுக்க முடியாது" என்று நிறுவனர் யூ டோங் லாய் கூறியுள்ளார்.

    2021 ஆம் ஆண்டு சீனாவில் பணியிட கவலை குறித்த கணக்கெடுப்பின்படி, 65 சதவீதத்திற்கும் அதிகமான ஊழியர்கள் வேலையில் சோர்வாகவும் மகிழ்ச்சியற்றவர்களாகவும் உணர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ரெயில் நிலையத்தின் வடிவமைப்பு தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டனர்.
    • வடிவமைப்பை பிளம் பிளாசம் போல் இருக்கிறது என்று சொல்வது வெட்கமாக உள்ளது என நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.

    சீனாவின் நான்ஜிங் வடக்கு ரெயில் நிலையத்தில் புதிய வடிவமைப்பு தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது. இந்த ரெயில் நிலையத்தின் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.

    மரக்கூரைகள் மற்றும் ஜன்னல் வடிவங்கள் போன்ற பாரம்பரிய சீன கட்டிடக்கலை அம்சங்களை கொண்டு நவீனத்துவம் கலந்து இந்த ரெயில் நிலைய கட்டிடம் கட்டப்பட உள்ளது. இந்திய மதிப்பில் சுமார் 23 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட உள்ள இந்த ரெயில் நிலையம் சீன கட்டிடக்கலையின் தனித்துவத்தை பின்பற்றும் வகையில் இருக்கும் என கருதப்படுகிறது.

    இந்நிலையில் இந்த ரெயில் நிலையத்தின் வடிவமைப்பு தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டனர். பிளம் மலர்களால் ஈர்க்கப்பட்டு இந்த ரெயில் நிலையத்தின் வடிவமைப்பு இருப்பதாக சிலர் பதிவிட்டனர். அதே நேரம் இந்த ரெயில் நிலையத்தின் தோற்றம் ராட்சத சானிட்டரி பேட் போல தெரிகிறது. இந்த வடிவமைப்பை பிளம் பிளாசம் போல் இருக்கிறது என்று சொல்வது வெட்கமாக உள்ளது என நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.

    • 2024-ல் உள்நாட்டு மொத்த உற்பத்தி 5 சதவீதம் வளர்ச்சியை இலக்காக நிர்ணயித்துள்ளது சீனா.
    • முதல் காலாண்டில் 4.8 சதவீதமாக இருக்கும் என ஆய்வாளர்கள் கணித்திருந்தனர்.

    உலகப் பொருளாதாரத்தில் சீனா 2-வது இடத்தில் உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று தாக்கத்திற்குப் பிறகு சீனாவின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்தது. தற்போது மெல்லமெல்ல அதன் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருகிறது.

    இந்த நிலையில் இந்த ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டில் பொருளாதாரம் 5.3 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளது. 4.8 சதவீதமாக இருக்கும் என ஆய்வாளர்கள் கணித்திருந்த நிலையில், அதையும் தாண்டியுள்ளது. கடந்த காலாண்டு வளர்ச்சியை காட்டிலும் 1.6 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

    முந்தைய ஆண்டைவிட மார்ச் மாதத்தில் சீனாவில் ஏற்றுமதி 7.5 சதவீதமாக சரிந்துள்ளதாகவும், அதேவேளையில் இறக்குமதியும் குறைந்துள்ளதாகவும் சீனா தெரிவித்திருந்த நிலையில் இந்த சிறந்த தகவல் வெளியாகியுள்ளது.

    தொழில்துறையின் வளர்ச்சி கடந்த ஆண்டு இந்த காலஅளவில் இருந்ததை விட 6.1 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. சில்லறை விற்பனை 4.7 சதவீதமாக உள்ளது.

    தொழிற்சாலைகள் மற்றும் உபகரணங்களில் நிலையான முதலீடு, முந்தைய ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 4.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

    2024-ல் உள்நாட்டு மொத்த உற்பத்தி 5 சதவீதம் வளர்ச்சியை இலக்காக நிர்ணயித்துள்ளது சீனா. இத்தகைய வலுவான வளர்ச்சி பொதுவாக பிராந்தியம் முழுவதும் பங்கு விலைகளை உயர்த்தும். ஆனால் செவ்வாயன்று, வால் ஸ்ட்ரீட்டில் பங்குகள் பின்வாங்கியதை அடுத்து ஆசிய பங்குகள் கடுமையாக சரிந்தன.

    • டியான்டாங்-1 என்ற செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பி 2016 -ம் ஆண்டு முதல் சோதனையை நடத்தி வந்தது.
    • ஆசியா - பசிபிக் பிராந்தியம் முழுவதும் மொபைல் செயற்கைக்கோள்கள் வழியாகவே ஸ்மார்ட்போன்களில் பேச முடியும்.

    பிஜிங்:

    செல்போன் டவர்கள் இல்லாமல் நேரடியாக செயற்கை கோள் மூலமாக ஸ்மார்ட் போன்களில் பேசும் வசதியை கொண்டு வர சீனா ஆய்வு மேற்கொண்டது.

    இதற்காக டியான்டாங்-1 என்ற செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பி 2016 -ம் ஆண்டு முதல் சோதனனையை நடத்தி வந்தது. இந்த சோதனை வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி தரையில் செல்போன் கோபுரங்கள் இல்லாமல் செல்போன்களில் பேசலாம் என்று கூறப்படுகிறது. ஸ்மார்ட் போன் தகவல் தொடர்பு அமைப்பில், செயற்கைக் கோள் இணைப்பை அடைவதில், சீன விஞ்ஞானிகள் புதிய சாதனை படைத்துள்ளதாக தெரிவித்தனர். இதன்மூலம் ஆசியா - பசிபிக் பிராந்தியம் முழுவதும் மொபைல் செயற்கைக்கோள்கள் வழியாகவே ஸ்மார்ட்போன்களில் பேச முடியும்.

    தரையில் உள்கட்டமைப்பு இன்றி நேரடியாக செயற்கை கோள் மூலமாகவே பேச முடியும் என்பதால், நிலநடுக்கம், சூறாவளி போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படும் போது கூட எந்த இடையூறும் இன்றி தொலை தொடர்பு இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இதனால் இத்திட்டம் உலகம் முழுவதும் பிரபலம் ஆகும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    • சூ மெங் கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் சீனா இன்டர்நேஷனல் போட்டியில் 4-வது இடத்தை பிடித்த அழகி ஆவார்.
    • திருமண செய்தி இணையத்தில் வைரலான நிலையில், பயனர்கள் பலரும் சூ மெங்கை விமர்சித்து பதிவிட்டனர்.

    சீனாவை சேர்ந்த பிரபல ஓவியர் பேன் ஜெங். 85 வயதான இவருக்கு 3 முறை திருமணம் ஆகி உள்ளது. மூன்றாவது மனைவியான ஜாங் குய்யுன் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார்.

    இந்நிலையில் பேன் ஜெங் அந்த நாட்டை சேர்ந்த முன்னாள் மாடல் அழகியான சூ மெங் (வயது 35) என்பவரை நான்காவதாக திருமணம் செய்து கொண்டதாக அறிவித்திருப்பது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி உள்ளது.

    பேன் ஜெங் ஏற்கனவே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். பின்னர் அதில் இருந்து மீண்டார். அவரது ஓவியங்கள் ஒவ்வொன்றும் பல கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. சீனாவின் கோடீஸ்வரர்களில் ஒருவராக திகழும் பேன் ஜெங் சமீபத்தில் ஓவியம் வரைவதை போன்ற ஒரு படத்தையும், நீண்ட கருப்பு முடியுடன் ஒரு இளம்பெண் அதனை பார்ப்பது போன்ற படத்தையும் இணையத்தில் வெளியிட்டிருந்தார். அதனுடன் அவரது பதிவில், சூ மெங்கின் உன்னிப்பான கவனிப்பு என்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் முழுமையாக மீட்டெடுக்க உதவியது என்று கூறி இருந்தார்.

    சூ மெங் கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் சீனா இன்டர்நேஷனல் போட்டியில் 4-வது இடத்தை பிடித்த அழகி ஆவார். பல சர்வதேச நிறுவனங்களுக்கு சர்வதேச பிராண்ட் மாடலாக இருந்த இவர் தற்போது தன்னை விட சுமார் 50 வயது அதிகமான கோடீஸ்வரரை திருமணம் செய்துள்ளார். இவர்களது திருமண செய்தி இணையத்தில் வைரலான நிலையில், பயனர்கள் பலரும் சூ மெங்கை விமர்சித்து பதிவிட்டனர்.

    • பெண் தன்னை காதலிக்க வெட்கப்படுவதாக நினைத்து லியு தனது மனதை சாந்தப்படுத்தி உள்ளார்.
    • மாணவருக்கு விசித்திர நோயின் அறிகுறி இருப்பது அறிந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்கும் 20 வயதான மாணவர் லியு. இவர் பல்கலைக்கழகத்தில் மிகவும் அழகான மனிதர் என்று தன்னை கருதி உள்ளார். மேலும் அங்குள்ள பெண்கள் அனைவரும் தன்னை விரும்புவதாக கருதி உள்ளார். இந்த விசித்திரமான காதல் நோய் அறிகுறி முற்றி உள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் ஒரு மாணவியிடம் காதல் வார்த்தைகளை பேசிய போது அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எனினும் அந்த பெண் தன்னை காதலிக்க வெட்கப்படுவதாக நினைத்து லியு தனது மனதை சாந்தப்படுத்தி உள்ளார்.

    பின்னர் தான் அவருக்கு விசித்திர நோயின் அறிகுறி இருப்பது அறிந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் அனைவரும் தன்னை விரும்புவதாக லியு நினைப்பதை கண்டுபிடித்தனர். அவரது இந்த விசித்திர நோய் பாதிப்பு காரணமாக இரவு முழுவதும் விழித்திருப்பது, வகுப்பில் கவனம் சிதறுவது, பணத்தை வீண் விரையம் செய்வது உள்ளிட்ட பிரச்சனைகளை அவர் சந்தித்து வருவதும் கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    • உயர் கசாஸ் வண்டு, ஆரஞ்சு முதுகு வண்டு, அட்லஸ் வண்டு உள்பட 11 வகையான வண்டுகள் அடையாளம் காணப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
    • வண்டுகள் அனைத்தும் சீனாவில் பூர்வீக வாழ்விடம் இல்லாத அன்னிய இனங்களாக கருதப்படுகின்றன.

    சீனாவில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் கவுங்டாங்க் மாகாணத்தில் உள்ள பையூன் விமான நிலையமும் ஒன்று. நாட்டிலேயே 3-வது பெரிய விமான நிலையமான இங்கு பயணிகள் கொண்டு வரும் பொருட்கள் அனைத்தும் சுங்கத்துறையினரால் தீவிர பரிசோதனை செய்யப்படுகிறது.

    இந்நிலையில் சம்பவத்தன்று அங்கு ஒரு பெண் பயணிக்கு சொந்தமான பெட்டியை அதிகாரிகள் சோதனை செய்த போது அதில், பிளாஸ்டிக் தாள்களும், சந்தேகத்திற்கிடமான பொருட்களும் கண்டறியப்பட்டன. தொடர்ந்து நடந்த சோதனையில் கணிசமான எண்ணிக்கையில் வண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில், உயர் கசாஸ் வண்டு, ஆரஞ்சு முதுகு வண்டு, அட்லஸ் வண்டு உள்பட 11 வகையான வண்டுகள் அடையாளம் காணப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இந்த வண்டுகள் அனைத்தும் சீனாவில் பூர்வீக வாழ்விடம் இல்லாத அன்னிய இனங்களாக கருதப்படுகின்றன. உரிய அனுமதியின்றி உயிருள்ள விலங்குகள் மற்றும் தாவரங்களை நாட்டுக்கு கொண்டு வருவது சட்ட விரோதமானது என கூறி அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி உள்ளது.

    ×